Monday, July 31, 2023

பாட்டி ஊருக்கு ஒரு பயணம்! "மாடுகளின் மனங்கவர்ந்த தீனி!" தொடர் - 3

தங்கையின் நிலத்தில் ஏற்கனவே ஒரு கொல்லையில் காய்கள் பறிக்கப்பட்ட கடலைக் கொடிகள் போர் போடுவதற்குத் தயாராய் காய்ந்திருந்தன. 

ஆடிக் காற்றில் அம்மியே நகரும் என்பார்கள்.  அப்படித்தான் இருந்தது இந்த ஆண்டு ஆடிக் காற்று. வெயில் வேறு வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. காற்று மற்றும் வெயிலினால் காய்ந்த கடலைக் கொடிகளிலிருந்து இலைகள் உதிர்ந்து கொண்டிருந்தன. கடலைக் கொடிகள் மாடுகளின் மனம் கவர்ந்த தீனி என்பதால் அவற்றைப் பக்குவமாய் இலைகளோடு பதப்படுத்தி போர் போட வேண்டும். இலைகள் அற்ற வெறும் கடலைத் தண்டுகளை மட்டும் மாடுகளுக்குத் தீனியாய்த் தருவது வெள்ளைச் சோற்றை வெறுமனே தின்பது  போலாகிவிடும்.

மாலை நேரம், காற்று சற்றே குறைந்திருந்தது. மேற்கே அடிவானம் கருமேகங்களால் சூழப்பட்டு எந்நேரமும் மழை வரலாம் என்று அறிகுறி தெரியவே, மனிதர்களுக்கான கடலையைக் காப்பதைவிட மாடுகளுக்கான கடலைக் கொடிகளைக் காப்பதே முக்கியம் என்பதால், குவிந்து கிடந்த கடலைக் கொடிகளை கட்டுக் கட்டத் தொடங்கினார் எனது மைத்துனர். நல்ல வேலை அன்று மழை வரவில்லை. மாலை நேர கருமேகங்களைக் கண்டு, மழை வருமா வராதா என்பதை துல்லியமாய்ச் சொல்லும் வல்லமை பெற்றிருந்தனர் நம் மூதாதையர்கள். எல்லாம் பட்டறிவுதான்.

ஒரு அடி உயரத்திற்கு பெரிய கற்களை வைத்து அதன் மீது குறுக்கும் நெடுக்குமாக கழிகளைப் போட்டு, அதற்கு மேலே தென்னை ஓலைகளைப் பரப்பி, கடலைக் கொடி போர் போடுவதற்கான அடித்தளம் தயாரிக்கப்பட்டது. நேரடியாக தரையிலே போர் போட்டால் ஈரம் கோர்த்து  மண்ணில் உருவாகும் செல்கள், கொடிகளை அரித்து வீணாக்கி விடும். 

கடலைக் கொடிகளை ரசித்து ருசித்து மாடுகள்  உண்ணுவதற்கு ஏற்ப, போர் போடும் போது இடையிடையே கல் உப்பையும் தூவி வைக்க வேண்டும். மேலிருந்து கீழ், அரை வட்டம் வரும் வரை போரை நன்றாகத் தட்டி அதன் மீது வைக்கோலையோ தார்ப்பாலினையோ போர்த்தி மழை நீர் உள் இறங்காமல் பாதுகாக்க வேண்டும்.


காய்ந்த கடலைக் கொடிகளை போர்முனைக்கு சுமக்க அன்று வைக்கோல் பிரிகள் இருந்த இடத்தில் இன்று உடுத்த முடியாத அளவுக்கு வெளுத்துப் போன சேலைகளே உதவுகின்றன. அம்மியும் பறக்கும் காலம் அல்லவா? போர் கலையாமல் சிதையாமல் இருக்க இச்சேலைகளே கச்சைகளாய்  இருக்கிக் காக்கின்றன.

மறுநாளிலிருந்து அடுத்து தொடர்ந்து மூன்று நாட்களாக மோடம் பிடித்தார் போல சாரல் மழை. ஆனால் மழையையும் பொருட்படுத்தாமல் கடலை பிடுங்குவதும் பறிப்பதுமாக வேலைகள் தொடர்ந்தன. ஒரிரு நாட்களில் முடிய வேண்டிய வேலை, ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கக் காரணம், கூலிக்கு ஆள் வைக்காமல் குடும்பமே கடலையைப் பிடுங்கிப் பறித்ததுதான். கூலிக்கு ஆள் வைத்தால், பறித்ததில் ஆறில் ஒரு பங்கு கூலியாக அளக்க வேண்டும்; குடும்பமே பறித்தால் அது சேமிப்புதானே என்பதுதான் இன்றைய சிறு விவசாயிகளின் நிலை. கடலை பறிப்பது மட்டும்தான் வேலை என்றால் அதை மூன்று நாட்களில்கூட இவர்களால் முடிக்க முடியும்.

ஆனால் இவர்கள் பாடோ......?

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

பாட்டி ஊருக்கு ஒரு பயணம்! 'அட நன்றி கெட்டவனே!' தொடர் - 2

செங்கத்திலிருந்து சாத்தனூர் செல்லும் நகரப் பேருந்தில் பயணித்து, 19 ஜூலை, மாலை நேர வேளையில் கல்தாம்பாடி கூட்ரோட்டில் இறங்கி சுற்று முற்றும் பார்த்தேன். மேற்கே பறந்து விரிந்த காடுகளும், கிழக்கே பசுமை நிறைந்த வயல்களும் என்னை வசீகரித்தன. 

பள்ளிப் பருவ காலங்களில், பாட்டி வீட்டில் கோடை விடுமுறையை கழித்தபோது, காடுகளில் கலாப் பழம் பறித்த காட்சிகளும், அண்ணன் பாலுவோடு சேர்ந்து கொல்ல மேட்டில் கன்னி வைத்து புறா பிடித்த காட்சிகளும், சிற்றோடையில் பெருக்கெடுத்து ஓடும் நீரில் பறிவைத்து மீன்பிடித்த காட்சிகளும் கண்முன்னே வந்து போயின.

சாலையோரம் புதிதாய் முளைத்திருந்த பெட்டிக் கடையில் பத்து ரூபாய் ஸ்பிரிட் ஒன்றை சில்லென தொண்டையில் இறக்கி எனது தங்கையின் நிலம் நோக்கி நடக்கலானேன். செல்லும் வழியில் பால்ய நண்பனும் உறவினருமான பாலகிருஷ்ணனின் இணையர் எதிர்பட்டு வரவேற்க, 'இப்பத்தான் தெரிஞ்சதா ஊருக்கு வழி?' என்று வினவிய போது, அதன் பொருள் புரிந்ததால் நான் குருகித்தான் போனேன். 

2018 பிப்ரவரியில், ஒரு பாதி செயல் இழந்து நடக்க முடியாமல், சைகை மொழி பேசி, பச்சிளம் குழந்தை போல படுக்கையில் கிடந்த எனது தாயை, நான் உடனிருந்து பராமரிக்க இயலாத ஒரு இக்கட்டான சூழலில், நம்பியவர்களும் கைவிட, எனது அன்னையின் அண்ணன் மகன் நேசக்கரம் நீட்ட, அன்னையின் மூன்றாம் மகள் அரவணைக்க தான் பிறந்த இம்மண்ணிலே பத்து மாதம் தவழ்ந்து, 2019 சனவரியில் மரணத்தைத் தழுவினாள் எனது தாய். 

அவள் மறைந்து நான்கு ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், ஓரிரு முறை மட்டுமே அங்கு சென்றுள்ளேன். அதன் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் எட்டிக் கூடப் பார்க்கவில்லை‌. 'அட நன்றி கெட்டவனே!' என ஈட்டி போல எனது நண்பனின் இணையர் கேட்ட கேள்வி என் நெஞ்சைத் துளைத்ததன் பொருள் இதுதான். 'நன்றி மறப்பது நன்றன்று' என்று சும்மாவா சொன்னான் வள்ளுவன்?

எதிர்பாராத எனது வரவைக் கண்டு கொல்லையில் கடலைக்காய் பறித்துக் கொண்டிருந்த எனது தங்கை 'வாண்ணே!'என வாஞ்சையாய் அழைத்த போது என் நெஞ்சுக்கூடு சற்றே லேசாகியது.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Sunday, July 30, 2023

பாட்டி ஊருக்கு ஒரு பயணம்! தொடர் - 1

அத்திமூரான் கொட்டாயிலிருந்து நான்கு கிலோமீட்டர் நடந்து சென்று நாகப்பாடியில் பேருந்தைப் பிடித்து பாட்டி ஊருக்குப் பயணித்த காலம் நினைவில் நிழலாட இந்த ஆண்டு, ஆடியிலே ஒரு நாள் வாலாஜாவிலிருந்து பாட்டி ஊருக்குப் பேருந்தில் பயணமானேன்.  

செங்கத்துக்கு முன்னால் செய்யாறு. அன்று ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கிடையாது, தரைப்பாலம் மட்டும்தான். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் மழைக்காலங்களில் பேருந்துகள் அக்கரைக்குச் செல்ல முடியாது என்பதால் இக்கரையிலேயே இறக்கி விடுவார்கள். அக்கரைக்குச் சென்றால்தான் அடுத்தப் பேருந்தைப் பிடித்து அய்வேல் (பாட்டி ஊரின் பெயர்) செல்ல முடியும். 

எனக்கு 7-8 வயது இருந்த போது ஒரு முறை, ஆற்றில் இடுப்பளவு தண்ணீர். அம்மா இடுப்பில் மூட்டை முடிச்சு, நானோ சிறுவன்.  நாலனாவோ எட்டனாவோ - சரியாக நினைவில்லை - பெற்றுக் கொண்டு எங்களை அக்கரையில் சேர்த்துவிட்டார் ஒருவர். ஆற்றைக் கடக்க இது ஒன்றுதான் அன்றைய வழிமுறை.

அம்மா கொண்டு வந்த சுமையை அவர் தனது வலது தோளில் வைத்துக் கொண்டார். இடது கையால் எனது இடுப்பைப் பிடித்துக் கொண்டார்.  எனது கால்களோ வெள்ளத்தில் மிதக்கின்றன. அவரது பிடி விலகினால் நான் ஆற்றில் அடித்துச் செல்லப்படுவது நிச்சயம் என்பதால் அவர் என்னை இறுக்குமாய்ப் பிடித்துக் கொள்ள, எனது தாய் அவருக்கு மேல்பக்கமாய் உடன் வர பாதுகாப்பாய் மறுகரை சேர்ந்தோம். 

அந்தக் காட்சி இன்றும் என்னுள் நேர்க்காட்சியாய் நிலவுகிறதே, ஏன்? அது ஒரு கண்டம் என்பதாலா? 

ஒரு முறை, எனக்கு நீச்சல்  தெரியாத காலத்தில் கிணற்றில் விழுந்து தத்தளித்த போது, என்னை எனது அக்கா காப்பாற்றிய  காட்சியும் அதே போல  இன்றும் என்னுள் நேர்க்காட்சியாய் நிலவுகிறது. மரண பயம்தான் எத்துனை வலுவானது?

இன்றோ நேர்த்தியான சாலைகள்; நெடுஞ்சாலைகளில் பாலங்களுக்குப் பஞ்சமில்லை. குறுக்கே வரும் சாலைகளைக் கடக்கவே மேம்பாலங்கள் கட்டும் காலமல்லவா இது! 

கோடை மழையால் ஈரமான நிலங்கள் சித்திரை-வைகாசியில் ஆழ உழுது பண்படுத்தப்பட்டு, ஆனியிலே விதை விதைத்து, முளைவிட்டு மண் பிளந்து செடியாய் மலர்ந்து, இதழ் விரித்து, ஆடியிலே பூக்கும் மானாவாரி கடலைச் செடிகளின் கண்கொள்ளாக் காட்சிகளை இன்று அதிகமாகக் காண முடியவில்லை. 

கடந்த நான்கு ஆண்டுகளாக நல்ல மழை பொழிவு, நீர் வளம் காரணமாக பயணித்த வழி நெடுகிலும் வேர்க்கடலைக்குப் பதிலாக, பரவலாக நெல்லும், ஆங்காங்கே கரும்பு-மரவள்ளி-முல்லைகளையேக் காண முடிந்தது. 

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

ஊர்ப் பயணம்! காலை நேர அனுபவம்!

ஊர்ப் பயணம்! கலைஞருக்கு 'ஓட்டு' விழுமா?

ஊர்ப் பயணம்! ஐயர் வந்தார். அள்ளிச் சென்றார்!

மார்கழி மழை: கர்ப்பத்தைக் கலைக்குமா? - தொடர் - 1

மார்கழி மழை: கர்ப்பத்தைக் கலைக்குமா? - தொடர் - 2

மார்கழி மழை: கர்ப்பத்தைக் கலைக்குமா? ... தொடர் - 3

மார்கழி மழை:கர்ப்பத்தைக் கலைக்குமா? ---இறுதிப் பகுதி

Tuesday, July 25, 2023

வெண்ணெய்க் கூட்டம்!

'டிராக்டர்களின்' பயன்பாட்டால்
ஏர் மாடுகள் 
அற்றுப் போயின!
ஏர் கலப்பைகளும் 
காட்சிப் பொருளாயின.

இனவிருத்திக்காக 
எங்கோ,
சில காளைகள் மட்டுமே 
வாட்டமாய் வளர்க்கப்படுகின்றன!
எஞ்சிய காளைகள் 
கறிக்குப் பலியாக
பசுக்கள் மட்டுமே 
பராமரிக்கப்படுகின்றன
பாலுக்காக!

அன்று,
தவிடும் புண்ணாக்கும்
தவிர்க்க முடியா தீவனமாய்!
இன்று,
SKM, கௌ கேர் - என
சந்தையில்
எண்ணற்ற தீவனங்கள் 
கல்லா கட்ட!

என்னதான்,
பசும்புல்லும் 
வைக்கோலும்
வயிற்றை நிரப்பினாலும்
காய்ந்த
மொறுமொறுப்பான
மல்லாட்டக் (1) கொடிகளே
மாடுகளின் 
மனங்கவர்ந்த தீனியாகும்!

கல்லக்காயைப் (1) பறித்தெடுத்து 
இலைகள் உதிராமல்
கொடிகளைப் (செடிகளை)
பக்குவமாய்க் காய வைத்து - பின்
போராக்கி
உச்சியிலே பர்தா (2) போட்டு 
மூடுகின்றான்
மழையில் நனையாமல்
பாதுகாக்க!



அடிக்கும் காற்றில் 
பர்தாவும் 
பறக்காமல் இருக்க - சேலையால்
இருக்கமாய் 
இழுத்துக் கட்டி 
காக்கின்றான் போரை,
கரந்த பாலை 
அப்படியே
நமக்களிக்கும்
நம்மவன்!

ஆனால்,
பசுக்களுக்கு - ஒரு 
புல்லும் புடுங்காத
வெண்ணெக் கூட்டமொன்று
'கோமாதா பாரத்மாதா'வென 
ஓயாமல் ஓலமிட்டு 
இந்தியத் தாய்களைத் 
துகிலுரித்துக் கெக்கலிக்கும் 
கேடுகெட்ட 'தேசமடா' இது!

ஊரான்

குறிப்பு: 

1. வேர்க் கடலையை, கல்லக்கா (கடலைக் காய்), மல்லாட்ட (மணிலாக் கொட்டை) என்றழைப்பது ஊர்வழக்கு. 

2. மழையில் நனையாமல் இருக்க தார்ப்பாலின் அல்லது வைக்கோல் போட்டு போரை மூடுவார்கள். அதைத்தான் இங்கே பர்தா எனக் குறிப்பிட்டுள்ளேன். 

தொடர்புடைய பதிவுகள்

Monday, July 24, 2023

குடிப்பவனும் திருந்த மாட்டான்! கொடுப்பவனும் மாற மாட்டான்!

காலை வேளை, 
ஜூலையிலும்
மோடம் பிடித்தது போல் 
சாரல் மழை.
காட்டோர கூட்ரோடு
பகலில் 
பயணிகளின் நிழற்குடை,
இரவில் 
குடிகாரர்களின் வாழ்விடம். 


பேருந்துக்காகக் காத்திருக்கும் 
பள்ளி மாணவர்களின்
கனவுகளை சிதைக்கும்
காலி பாட்டில்கள்!

குடிப்பவனும் திருந்த மாட்டான்
கொடுப்பவனும் மாற மாட்டான்.
வெஞ்சீற்றத்துடன்
ஊர் நோக்கிப் பயணிக்கிறேன்.

ஊரான்

Sunday, July 23, 2023

புருவத்தை நெறி!

பாட்டாளிகளின் 
பாடுகளில் பங்கேற்காமல், 
தம் பேச்சாற்றல், 
எழுத்தாற்றல் திறமைகளை 
புகழுக்கும் பணத்திற்கும் 
விற்பனை செய்யும் 
விற்பன்னர்கள் நிறைந்த 
உலகமடா இது! 

நீயோ 
வாய் பிளந்து நிற்கின்றாய், 
இரசிக்கின்றாய்; 
சிரிக்கின்றாய்!
உன்,
கண நேர சிரிப்பே
அவர்களின் மூலதனம்!
பிறருக்காய் 
சிரித்தது போதும்
உன் 
வாழ்வின் மகிழ்ச்சிக்கு 
வழி காண 
புருவத்தை நெறி!

ஊரான்


Friday, July 21, 2023

அடி வயிற்றை நனைக்கும் மென் பூக்கள்!

பருவம் பார்த்து 
நிலம் உழுது 
உரமிட்டு பண்படுத்தி 
பக்குவமாய் 
நாற்றூன்றி 
நீர்ப்பாய்ச்சி 
கோடை என்றால் 
குடம் சுமந்து- பெரு
மழை என்றால் 
நீர் வடித்து
செடிகளைக் காக்க 
மண் கிளறி 
களை எடுத்து 
நோய் கண்டால் மருந்தடித்து,

சில பூக்கும் தருவாயில் 
சில பூத்த பிறகு
முல்லை மல்லி 
கனகாம்பரம் ரோசாவென.....
சேவல்கள்கூட ஆழ்ந்துறங்கும்
பின்னிரவு அதிகாலை வேலைகளில்
கால் கிலோ ஒரு கிலோ 
பறிப்பதற்குள்
கால்கடுத்து முதுகொடிந்து
பெரும் உழைப்பை உள்வாங்கி
இருள் நீக்கும் நெற்றி 
டார்ச் லைட்டின்- சிறு 
ஒளிவட்டத்தில்
மாந்த விரல்களின் ஸ்பரிசத்தோடு
செடிகளை 
கொடிகளை விட்டேகி,




நாற்திக்கிலிருமிருந்து 
நகர் நோக்கி 
பக்குவமாய் 
பைகளில் பயணித்து
பூ மார்க்கெட்டில் சங்கமித்து -அங்கே எடைபார்த்து - பின் 
சில்லரையில் ஊர் பரப்பி,

சரங்களாய் 
மாலைகளாய் உருமாறி
பெண்களை 
பிணங்களை
படங்களை 
சிலைகளை.....
அலங்கரித்து - பின் 
காய்ந்து சருகாகி 
குப்பையில் குவியும் போது 
மனித உழைப்பு 
அர்த்தமற்றதாய் ஆகிறதே?
ஆதங்கம் ஒரு பக்கம்!
ஆனாலும் - இங்கே
பல வேளாண் குடிகளின் 
அடிவயிற்றை 
நனைக்கிறதே இம் மென் பூக்கள்
என்கிற தேறுதல் மறுபக்கம்!

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

தண்ணீரின் காதல் கதை!

முகநூல் நண்பர் ஒருவரின் பதிவு ஒன்றில் நான் எழுதிய பின்னூட்டத்தை இங்கே தனிப் பதிவாக உங்களோடு பகிர்கிறேன்:

தண்ணீரின் காதல் கதை!

தனிமங்கள்னு (elements) சொல்ற ஆளுங்க பூரா ஒத்த பயலா இருந்தா பெரும்பாலும் எதுக்கும் பிரயோஜனப்பட மாட்டாங்க. எலக்ட்ரான்கிற (electron) காதல் அம்புகள் இந்த பயலுகள சுத்தி வட்டமடிச்சிட்டு இருப்பாங்க. மொதவட்டத்தில ரெண்டு, இரண்டாவது வட்டத்தில 8, மூணாவது வட்டத்தில் 16‌,,, என்கிற எண்ணிக்கையில இருந்தாதான் நிதானமா இருப்பாங்க. வெளிவட்டத்துல ஒன்னு ரெண்டு கொறஞ்சா பக்கத்தில யாராவது சுத்திட்டு இருந்தா லபக்குனு இழுத்துக்குவானுங்க. குறைவா இருக்கிறதுக்கு பேரு வேலன்ஸ் (valence electron) எலக்ட்ரான்னு சொல்லுவாங்க.

இந்த ஆக்சிஜன் பயலுக்கு இரண்டாவது வட்டத்தில் (this is the outer most orbit for oxygen element) ஆறு எலக்ட்ரான்கள்தான் உண்டு. அவனுக்கு மேலும் இரண்டு எலக்ட்ரான்கள் இருந்தால்தான் ஸ்டெடியா (stable) இருப்பான். நம்ம ஹைட்ரஜன் பொண்ணு இருக்கே அது ஒரே ஒரு எலக்ட்ரான வச்சுக்கிட்டு ஒத்தையா அலஞ்சுகிட்டு திரியும் (firt orbit) அதுக்கு யாராவது ஒருத்தன் கிடைச்சா போதும் ஸ்டெடியாயிடும்.

அதனாலதான் இந்த ஆக்சிஜன் பய இரண்டு ஹைட்ரஜன் பொண்ணுங்கள சேர்த்துக்கிட்டு தண்ணியா மாறி ஸ்டெடியாயிடுரான். இப்போ அவன் ஒத்த ஆள் இல்ல. ரெண்டு பொண்டாட்டிகாரன்.

ரெண்டு ஹைட்ரஜன் பொண்ணும் ஒரு ஆக்சிஜன் பயலும் இரண்டறக் கலந்து மூலக்கூறா (molecule) மாறி ஸ்டெடியாயிடுறாங்க. பிறகுதான் அவங்கள நாம தண்ணீர்னு அழைக்கிறோம்.

நீரின்றி அமையாது உலகு என்றான். 
ஆனால், காதல் இன்றி அமையாது நீரன்றோ!

எல்லாம் பாலிடெக்னிக்ல படிச்சது. இப்படி ஏராளமான காதல் கதைகள் உண்டு ப்ரோ.

ஊரான்

Wednesday, July 19, 2023

மாங்கனியில் சாதியப் புழுக்கள்!

மாங்கனி - 
'சீசன்' முடியும் காலம்,
நேற்று,
ஐந்து கிலோ வாங்கினேன்,
பார்க்க
அழகாய்த்தான் இருந்தது.
மினுமினுப்பைப் 
பார்த்தேனே ஒழிய
தொட்டுப் பார்க்கவில்லை.
அதன் பயன்,
அறுக்க அறுக்க 
புழுக்கள் நெளிந்தன!

மீதி 
மூன்று கிலோவை 
திருப்பிக் கொடுத்தேன்!
"ஏங்க இப்படி?" என்றேன்!
எமக்கு மட்டும் 
எப்படித் தெரியும் என்றார்!
அவர் வியாபாரி
அப்படித்தானே பேசுவார்!
'உமக்கு மூளை எங்கே போனது?'
உள் மனது முணுமுணுத்தது.


சாதி கூட 
சிலருக்கு
அழகாய்த்தான் தெரியும்
மாங்கனி போல,
அதை அறுக்காதவரை!
குறுக்கும் நெடுக்குமாக
வகுத்துச் பார்,
அங்கே
ஓராயிரம் 
சாதியப் புழுக்கள் 
நெளிவது தெரியும்!

நெளியும் புழுக்களை 
சுமக்கும் கனிகளை
வீசத் தெரிந்த நீ,
சாதியப் புழுக்களைக்
காக்கும் மாங்கனியை 
என்ன செய்யப்......?
சீசன் முடியப் போகிறது 
விரைந்து முடிவெடு 
இல்லையேல் 
நீயும்
நெளிவாய்
புழுவாய்!

ஊரான்

Saturday, July 15, 2023

பெருந்தலைவர் காமராசர் ஏன் நினைவு கூறப்பட வேண்டும்?

சங்க காலம், சனாதன காலம் தொடங்கி அதன் பிறகு மன்னர் ஆட்சி, அந்நியர் ஆட்சி எனத் தொடர்ந்து, இன்றைய மக்களாட்சிக் காலகட்டம் வரை பல்வேறு புலவர்களையும், மன்னர்களையும், தலைவர்களையும் நாம் நினைவு கூர்ந்து வருகிறோம். அவ்வாறு நாம் நினைவு கூறும் போது, அவர்களுடைய நேர்மறை மற்றும் எதிர்மறை உள்ளிட்ட இரண்டு அம்சங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, இன்றைய காலகட்டத்திற்கு எது தேவையோ அதை மக்களிடையே உணர்த்த வேண்டும். அப்பொழுதுதான் அவர்களை நினைவு கூர்வதில் ஏதேனும் பொருள் இருக்க முடியும்.

மாறாக, தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்குதல் என்கிற அளவுக்கு மட்டும் நிறுத்திக் கொண்டால் அவர்களுடைய கருத்துக்கள் எதுவும் மக்களிடையே போய்ச் சேராது; மாறாக அது ஒரு சம்பிரதாய நிகழ்ச்சியாகவே கடந்து போகும்.

*****
அனைத்து மதத்தினர், அனைத்துச் சாதியினர், அனைத்துக் கட்சியினராலும் பெருந்தலைவர் என்று போற்றப்படும் முன்னாள் தமிழகத்தின் முதலமைச்சர் திரு.கு.காமராசர் அவர்களின் 121-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் எங்கும் பல்வேறு கட்சியினரால் கொண்டாடப்பட்டது. அன்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவராக இருந்ததோடு, இந்திய அரசியலை நிர்ணயிக்கும் மிகப்பெரிய ஆளுமையாக காமராசர் அவர்கள் இருந்ததனால் அவரை காங்கிரஸ் கட்சியினர் கூடுதல் மரியாதையோடு நினைவு கூறுகின்றனர். 

கடந்த 30 ஆண்டுகளாக, தமிழகத்தில் சாதிய அரசியல் செல்வாக்கு செலுத்தத் தொடங்கிய பிறகு அனைவருக்குமான தலைவர்கள் எல்லாம் தங்களுடைய சாதிக்கான தலைவர்களாக சுருக்கப்பட்டு வருகின்றனர். அப்படித்தான் காமராசரையும் நாடாராக சுருக்கி விட்டார்கள். இதை சாதிய அரசியலின் உச்சம் என்றுகூட சொல்லலாம். 

*****
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாசாபேட்டை பேருந்து நிலையத்தில் இன்று காலை 10 மணி அளவில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாள் விழா நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் கொண்டாடப்பட்டது. இசைச்செல்வர் சீனி சம்பத் அவர்களின் பாடல்களோடு தொடங்கிய நிகழ்ச்சி சிறப்பு விருந்தினர் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் திரு. முனிரத்தினம் அவர்கள் வந்த பிறகு, அவரும் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் அவர்களும் சிறிது நேரம் உரையாற்ற, அதன் பிறகு பள்ளி சிறுவர்களுக்கு நோட்டு பேனா வழங்கி, அன்னதானம் வழங்கி நிகழ்ச்சி முடிக்கப்பட்டது.

வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் மட்டும் காமராசரின் சாதனைகள் சிலவற்றை எடுத்துக் கூறினார். ஆனால் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க உள்ளிட்ட சனாதன சக்திகள் ஆதிக்கம் செலுத்தி வரும் இன்றைய அரசியல் சூழலில், காமராசரைக் கொண்டு சனாதன சக்திகளை சம்மட்டியால் அடிக்கும் வகையில் காமராசரின் நேர்மறை கருத்துக்களை மக்களிடையே பதிவு செய்யும் போதுதான் அது காமராசருக்குப் பெருமை சேர்ப்பதாக அமையும்.





மூணு கதர் வேட்டிச் சட்டைகள் மற்றும் 150 ரூபாய் சொச்சப் பணம்; இதுதான் காமராசர் இறந்த போது அவர் விட்டுச் சென்ற சொத்து. காசு பணம் என்று கோடிகளில் புரளும் இன்றைய அரசியல்வாதிகளை ஒப்பிடுகையில் காமராசர் உண்மையிலேயே ஒரு ஏழைப் பங்காளன்தான்; மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் பெரும் தொழிலதிபராக இருப்பவர்களை வாழும் காமராசர் என்று வாய்கூசாமல் மேடையில் புகழும்போது அது காமராசரையே இழிவுபடுத்துவதாக அமைந்துவிடுகிறது. 

*****
மகாரத்தனா ஆலைகளில் ஒன்றான BHEL பாய்லர் ஆலை காமராசர் ஆட்சிக் காலத்தில்தான் திருச்சியில் தொடங்கப்பட்டது. தவிர, நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் (NLC), சென்னை மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, ஊட்டியில் இந்துஸ்தான் ஃபோட்டோ ஃபிலிம் ஆலை என அரசுத் துறை ஆலைகளும் இவரது ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டதால் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட எண்ணற்ற தமிழ் நாட்டு இளைஞர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற முடிந்தது.

1917 லெனின் தலைமையில் ரஷ்ய நாட்டில் ஏற்பட்ட சோஷலிச புரட்சி, அதைத் தொடர்ந்து லெனின் ஆட்சிக் காலத்திலும், ஸ்டாலின் ஆட்சிக் காலத்திலும் ஏற்படுத்தப்பட்ட பொதுத்துறைகளினால் அபார வளர்ச்சி கண்ட ருசிய நாட்டின் கொள்கைகளைத்தான் இந்தியாவிலே நேருவும் கடைபிடித்தார். அதன் தாக்கத்தினால்தான் இந்தியாவில் எண்ணற்ற பொதுத்துறை நிறுவனங்கள் அரசாங்கத்தினால் தொடங்கப்பட்டன.

12 மகாரத்னா, 12 நவரத்னா, 12 மினிரத்னா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பொதுத் துறை நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்கப்பட்டு மிக வெற்றிகரமாக செயல்பட்டு வந்தன. உலகமயம் தாராளமயம் தனியார் மையம் என்ற கொள்கைகளின் அடிப்படையில் 1990 களின் தொடக்கத்தில் இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்தத் தொடங்கிய காலம் தொட்டு பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது என்கிற நடைமுறை அமுலுக்கு வந்தது. 

ஆலைகளை நடத்துவது, அதாவது தொழில் செய்வது ஆட்சியாளர்களின் வேலை அல்ல; ஆட்சியை நடத்துவது அதாவது நிர்வாகம் செய்வது மட்டுமே ஆட்சியாளர்களின் வேலை என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட சனாதனக் கும்பல் ஆட்சிக்கு வந்த காலம் தொட்டு, வாஜ்பாய் காலத்திலும் அதைத் தொடர்ந்து மோடி காலத்திலும் பொதுத்துறை நிறுவனங்கள் படிப்படியாகத் தனியாருக்கு விற்கப்பட்டு வருகின்றன அல்லது மூடப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புப் பெற்று வந்த எண்ணற்ற பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்துக் கொண்டு விட்டது பாஜக அரசு. இப்பொழுது எஞ்சி இருப்பது கோவணம் மட்டுமே, அதாவது ஒரு சில பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே. மீண்டும் ஒரு முறை சங்பரிவாரக் கும்பல் ஆட்சிக்கு வருமேயானால், எஞ்சியிருக்கிற கோவணமும் உருவப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தப்படுவோம். 




காமராசர் கடைப்பிடித்து வந்த பசுவதைத்  தடுப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு, சாதியக் கட்டமைப்பைப் பலகீனப் படுத்தும் சோசலிச சமத்துவக் கோட்பாட்டுக்கு ஆதரவு உள்ளிட்டவைகளால் காமராசர் மீது ஆத்திரம் கொண்ட சனாதனக் கும்பல் 1967 ஆம் ஆண்டு டெல்லியில் காமராசர் தங்கியிருந்த வீட்டுக்குத் தீ வைத்து அவரைக் கொலை செய்த முயன்றது என்பதை மனதில் கொண்டு, ஆட்சி அதிகாரத்திலிருந்து சங்பரிவாரக் கும்பலை அப்புறப்படுத்தவும், கருத்தியல் தளத்தில் இந்தக் கும்பலுக்கு எதிராகக் களமாடவும் நாம் உறுதி ஏற்பது ஒன்றுதான் காமராசருக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாகும். ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

ஊரான்

Tuesday, July 4, 2023

சுற்றுச்சுவர் : எட்டடிக்குமேல் என்றால் இடித்துத் தள்ளுங்கள்!

கோவை மாவட்டம் குனியமுத்தூர் சுகுணாபுரம் அருகே கிருஷ்ணா என்ஜினீயரிங் கல்லூரியில் சுற்றுச்சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது, சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இடுப்பாடுகளில் சிக்கி ஐந்து தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். 8 அடிக்கு மேல் சுற்றுச்சுவரின் உயரம் இருக்கக் கூடாது என விதி இருந்தும் இந்தக் கல்லூரியில் 10 அடி உயரத்திற்கு கட்டப்பட்டதால்தான் சுவர் இடிந்துள்ளதாகத் தெரிய வருகிறது. விதி மீறலில் ஈடுபட்ட கல்லூரி நிர்வாகத்தின் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதே சரியான சட்ட நடைமுறையாகும்.


2019 ஆம் ஆண்டு மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பலர் பலியானபோது அது குறித்து எழுதப்பட்ட கட்டுரையை இங்கே மீள் பதிவு செய்கிறேன். தற்போதைய கோயம்புத்தூர் சுற்றுச்சுவர் படுகொலையைப் புரிந்து கொள்ள இந்த கட்டுரை உதவும்.

******
மீள் பதிவு:
06.12.2019

சுற்றுச்சுவர் : எட்டடிக்குமேல் என்றால் இடித்துத் தள்ளுங்கள்!

கிராமம் என்றால் காலனி அல்லது சேரிகள் ஊருக்கு வெளியே இருக்கும். தாழ்த்தப்பட்டவர்களே இங்கு வசிக்கின்றனர். நகரம் என்றால் ‘சிலம்’ (Slum) அல்லது குடிசைப் பகுதிகள் இருக்கும். கிராமங்களில் வாழவழியற்று நகரில் தஞ்சம் புகுந்தவர்கள் வாழுகின்ற பகுதிதான் ‘சிலம்’. இங்கும் ஆகப்பெரும்பான்மையாக தாழ்த்தப்பட்டவர்களும், வறுமையால் பிழைப்பு தேடி நகரம் வந்த ஒருசில இடைநிலைச் சாதியினருமே வசிக்கின்றனர்.



மனு தரும சாஸ்திரத்தின் வரையறையின்படி, கிராமங்களில் சேரிப் பகுதி ஊரிலிருந்து தள்ளியே இருப்பதால் உயர்சாதியினரும் தாழ்த்தப்பட்டவர்களும் அருகருகே வசிப்பதற்கான சூழல் கிடையாது. எனவே அங்கு இந்த சுற்றுச்சுவர் பிரச்சனை பெரிதாக எழுவதில்லை என்றாலும் சேரிகளையொட்டி ஆலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களை அமைப்பது என்பது தற்காலத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் சுற்றுச்சுவர் பிரச்சனையும் எழுகிறது. ஆனால் நகரங்களில் ஆற்றோரங்களோ ஒதுக்குப்புறங்களோதான் ஏழைகளின் வாழ்விடங்கள். தனது வீட்டையொட்டி ‘சிலம்’ இருப்பதால் எவ்வளவு உயரத்துக்கு சுற்றுச்சுவரை உயர்த்தலாம் என கேள்வி எழுப்புகிறார். ஒரு மேட்டுக்குடி கனவான். ஆனால் இவரது வீட்டருகே ‘சிலம்’முக்குப் பதிலாக, இவரைப் போன்றே மற்றொரு மேட்டுக்குடி இருந்தால் அவருக்கு இத்தகைய கேள்வி எழுவதில்லை.

‘சிலம்’ என்றால் சுற்றுச்சுவரை உயர்த்த வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு ஏன் எழுகிறது? சுற்றுச்சுவரின் உயரத்தை அதிகரிப்பது, பாதுகாப்பு நலன் கருதி அல்ல; மாறாக அருகில் வாழுபவர்கள் சேரி மக்கள் என்கிற தீண்டாமை கண்ணோட்டமே முக்கியப் பங்காற்றுகிறது. மேட்டுப்பாளையமும் இதற்கு விதிவிலக்கல்ல.

மேட்டுப்பாளையத்தில் 20 அடி உயரமுள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் அப்பாவி மக்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர். சுற்றுச்சுவர் அருகே குடிசைகள் அமைத்ததால்தான் உயிரிழப்பு எனக் கதைப்போரும் உண்டு. சுற்றுச்சுவரையொட்டி நடைபாதையோ அல்லது சாலையோ இருந்தால் அதில் செல்வோர் பாதிக்கப்படமாட்டார்களா? அல்லது சுற்றுச்சுவர் கட்டும் போதோ அல்லது கட்டிய பிறகோ பழுதுபார்க்கும் வேலை நடைபெறும் போது அச்சுவர் இடிந்து விழுந்தால் அப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் பாதிக்கப்படமாட்டார்களா? எப்படி இருந்தாலும் சுற்றுச்சுவர் என்றால் அதில் பாதுகாப்பு அம்சம் மிக முக்கியமானது.

கருங்கல்லிலேயே கட்டப்பட்டிருந்தாலும் 20 அடி உயரத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்பலாமா? எவ்வளவு உயரத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்பலாம்? எத்தகையை கட்டுமானப் பொருட்களைக் கொண்டு சுற்றுச்சுவர் எழுப்பலாம்? இவற்றை வரைமுறைப்படுத்த சட்டங்களும் அவற்றைக் கண்காணிக்க அதிகாரிகளும் கிடையாதா? என்கிற கேள்வியே இங்கு முதன்மையானது.

வீடு உள்ளிட்ட கட்டடங்கள் எனில், சுற்றுச்சுவரின் உயரம் அதிகபட்சம் 1.5 மீட்டர் அதாவது 5 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதற்கு மேல் உயர்த்த வேண்டும் என்றால் கூடுதலாக 0.9 மீட்டர் அதாவது 3 அடி உயரத்துக்கு திறந்த வகை சுற்றுச்சுவரை சிறப்பு அனுமதி பெற்று அமைத்துக் கொள்ளலாம். திறந்த வகை என்பது கம்பிகளைக் கொண்டு அல்லது வேறு பொருட்களைக் கொண்டோ அமைப்பது; கற்களைக் கொண்டு அல்ல. ஆக ஒரு சுற்றுச்சுவரின் உயரம் மேற்கண்ட இரண்டையும் சேர்த்து 2.5 மீட்டர் அதாவது 8 அடிக்கு மேல் இருக்கக் கூடாது என்கிறது
இந்தியத் தரநிலைகள் பணியகம் (Bureau of Indian Standards – BIS) உருவாக்கிய தேசிய கட்டிடக் குறியீடு (National Building Code 2016). BIS என்பது இதற்கு முன்னர் ISI என்று அழைக்கப்பட்டு வந்தது.

தேசிய கட்டிடக் குறியீடு என்பது ஒரு விரிவான கட்டிடக் குறியீடு, இது நாடு முழுவதும் கட்டிட கட்டுமான நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறது. பொதுப்பணித் துறைகள், பிற அரசு கட்டுமானத் துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தனியார் கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.

கட்டிட வடிவமைப்பு, கட்டுமானப் பொருட்கள், பாதுகாப்புத் தேவைகள், பிளம்பிங் வேலைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி இக்குறியீடு உருவாக்கப்பட்டுள்ளது. முதன் முதலில் 1970-ல் உருவாக்கப்பட்ட இக்குறியீடு பல்வேறு திருத்தங்களுக்குப் பிறகு கடைசியாக 2016-ல் வெளியிடப்பட்டது.

துணை மின்நிலையங்கள், மின்மாற்றி நிலையங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், பள்ளி-கல்லூரி கட்டடங்கள் மற்றும் விடுதிகள், பொதுப்பயன்பாட்டுக் கட்டடங்கள் போன்ற இடங்களில் சுற்றுச்சுவரின் உயரத்தை 2.4 மீட்டர் அதாவது 8 அடி வரை உயர்த்திக்கொள்ள அனுமதிக்கலாம் என்கிறது தேசிய கட்டிடக் குறியீடு. ஆக எத்தகையக் கட்டடமாக இருந்தாலும் 8 அடிக்கு மேல் சுற்றுச்சுவர் எழுப்புவது விதி மீறலாகும். மேற்கண்ட விதியை மீறுவோர் மீது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்கிறது தேசிய கட்டிடக் குறியீடு.

விதியை மீறி 20 அடி உயரத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்பி 17 பேர் படுகொலைக்குக் காரணமான மேட்டுப்பாளையம் கட்டட உரிமையாளர் மற்றும் இந்த விதிமீறலை அனுமதித்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அரசு அதிகாரிகள் அனைவருமே இங்கு கொலைக் குற்றவாளிகள்.

மேட்டுப்பாளையங்கள் இனியும் நிகழக்கூடாது எனில் 8 அடிக்கு மேல் எழுப்பப்பட்டுள்ள சுற்றுச்சுவர்களை, அது எத்தகைய கட்டடமாக இருந்தாலும், அது எந்த நோக்கத்திற்காக எழுப்பப்பட்டிருந்தாலும் உடனடியாக இடித்துத்தள்ளுவோம்; இற்றுப்போன இந்த அரசு கட்டமைப்பையும் சேர்த்து.

– ஊரான்