Wednesday, May 25, 2022

அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்!-6

  X

காதல்

மனு: 8-266: உயர்குலத்துப் (பிராமண-சத்திரிய-வைசிய) பெண்ணை  ஒரு சூத்திரன் காதலித்தால் சாகும் வரையில் அவனுக்குக் கசையடி கொடுக்க வேண்டும்.

(பட்டியல் இனச் சாதியைச் சார்ந்த இளைஞன் ஒருவன், தனக்கு மேலே உள்ள சாதிப் பெண்ணைக் காதலித்தால், அவனைக் கொலை செய்யவும் இன்று ஆதிக்கச் சாதியினர் துணிகிறார்கள் என்றால் அதற்கு மனு வகுத்த நீதான் அடிப்படை-ஊரான்).

மனு: 8-373: திருமணமான ஒரு பார்ப்பனப் பெண்ணுடன் ஒரு சூத்திரன் சோரம் போனால், அவன் தனது சொத்துக்களை இழப்பதுடன் அவனது ஆண் குறியும் வெட்டப்பட வேண்டும். 

மனு: 8-385: திருமணமான ஒரு பறையர் சாதிப் பெண்ணுடன் ஒரு பிராமணன் சோரம் போனால் அவனுக்கு ஆயிரம் பணம் அபராதம் விதிக்க வேண்டும்.

(இப்படி காதல் செய்வதிலும், சோரம் போவதிலும் வருணத்திற்கு ஏற்ப தண்டனை முறையில் மிகப்பெரிய பாகுபாடுகளை வைத்திருக்கிறான் மனு-ஊரான்)

XI

பல வகைக் குற்றங்கள்

மனு: 8-379: ஒரு பிராமணன் மரண தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்த போதிலும், அவனைக் கொல்லக் கூடாது‌. அவனுக்கு மொட்டை அடிப்பதே மரண தண்டனைக்கு ஒப்பானதாகும். ஆனால் மற்றவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்.

மனு:8-380: ஒரு பிராமணன் எத்தகையப் பாவத்தை செய்தபோதிலும் அவனை கொல்லக் கூடாது.  ஊரை விட்டுத் துரத்த வேண்டும்.

மனு:8-381: பிராமணனைக் கொல்வதைவிட உலகத்தில் பெரியதொரு பாவம் வேறு இல்லையாதலால், பிராமணனைக் கொல்வது பற்றி அரசன் மனதளவில் கூட நினைக்கக்கூடாது.

(இப்பொழுது புரிகிறதா, எச்.ராஜாவையோ, எஸ்.வி.சேகரையோ, சின்ன சங்கரனையோ, தேவநாதனையோ ஏன் தண்டிக்க முடியவில்லை என்று?- ஊரான்)

இந்து சட்ட முறைகளுக்கும், இந்து அல்லாத சட்ட முறைகளுக்குள்ளேயும் எத்துனை வேறுபாடு! குற்றவியல் சட்டத்தில் சமமின்மை எவ்வாறு ஆழமாகப் பதிக்கப்பட்டுள்ளது! நீதி முறைப்படி அமைந்த குற்றவியல் சட்டத்தில், இரு கூறுகளை நாம் காணலாம்.

குற்றத்தின் இலக்கணத்தை வகுப்பது ஒரு பிரிவு; அதை மீறுவோருக்கு அறிவுக்குப் பொருத்தமான தண்டனை விதிப்பது மற்றொரு பிரிவு. எல்லாக் குற்றவாளிகளுக்கும் ஒரேவிதமான தண்டனையே.

ஆனால், மனுவில் நாம் காண்பது யாது? அறிவுக்குப் பொருத்தமற்ற தண்டனை முறை. குற்றத்துடன் சம்பந்தப்பட்ட உறுப்பைத் துண்டித்தல்‌, வயிறு, நாக்கு, மூக்கு, கண்கள், காதுகள், பிறப்பு உறுப்புகள் போன்றவற்றிற்க்குத் தனித்தன்மை உண்டு என்பது போலவும், உடலோடு உடன் வாழ்வன போலவும், கருதி தண்டனை அளித்தல்.

மனுவின் குற்றவியல் சட்டத்தின் இரண்டாம் கூறுபாடு குற்றத்தின் கடுமையை மீறிய, மனிதத்தன்மையற்ற தண்டனை விதித்தல். 

மனுவில் குற்றவியல் சட்டத்தில் மிக வெளிப்படையான கூறுபாடு, ஒரே விதமான குற்றத்திற்குப் பல சமமற்ற தண்டனைகளை விதித்தல் அப்பட்டமாகத் தெரிகிறது. 

குற்றவாளியைத் தண்டிப்பதற்கு மட்டுமன்றி, நீதி கேட்டு மன்றத்திற்கு வருபவருக்குள்,  சிலருடைய கண்ணியம் காக்கவும், சிலரைத் தாழ்த்தி வைக்கவும் திட்டமிட்ட இச்சமமின்மைச் செயல் மனுவின் திட்டத்தின் அடிப்படையானதும் சமூகச்சமமின்மையை நிலைநாட்டுவதேயாகும்.

சமூக சமமின்மையை மனு எவ்வாறு நிலைநாட்டியுள்ளார் என்பதைக் காட்டுவதற்குரிய சான்றுகளை இதுவரை எடுத்துக் காட்டியுள்ளேன். அடுத்து மத சமத்துவமின்மையை நிலைநிறுத்துவதற்கு மனு விதித்திருக்கும் சான்றுகளைப் பார்ப்போம்.

-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு:தொகுதி - 6, பக்கங்கள் 43-46.

தொடரும்,.

தொகுப்பு: ஊரான்

தொடர்புடைய பதிவுகள்


அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்! - 1


Friday, May 13, 2022

அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்!-5

 IX

சாட்சிகள் விசாரணை

சாட்சிகளை எப்படி விசாரிக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

மனு: 8-88: பிராமணனிடத்தில் "கூறுக' என்றும், சத்ரியனிடத்தில் 'உண்மையைக் கூறுக' என்றும், வைசியனிடத்தில் அவனுடைய 'பசுக்கள், பொன், தானிங்கள் மேல் ஆணையிட்டுக் கூறுக' என்றும், சூக்கிரனாய் இருப்பின் 'தலை மீது ஆணையிட்டு, பொய் கூறினால் வரும் கேடுகளைக் கூறி, அச்சுறுத்திக் கூறுக' என்றும் பிரமாணம் செய்க.

பொய்ச் சாட்சி

பொய்சாட்சி அளிப்பதை ஒரு குற்றமாக கருதி விதிக்கும் தண்டனை வருமாறு.

மனு: 8-123: சத்திரியன் முதலான மூவகை கீழ் வருணத்தார் பொய்ச் சாட்சி கூறினால் அரசன் முதலில் அபராதம் விதித்து விட்டு, பிறகு அவர்களை நாடு கடத்த வேண்டும். ஆனால் பிராமணராயின் நாடுகடத்தல் மட்டுமே செய்ய வேண்டும்.

மனு:8-112: ---பிராமணரைக் காப்பாற்றுவதற்காக பொய்ச் சாட்சி சொல்வது பெரும் பாவமன்று! 

முக்கிய குற்றங்களுக்கான தண்டனை

அவதூறு

மனு: 8-267: பிராமணனை அவதூறு செய்யும் சத்திரியனுக்கு 100 பணமும், வைசியனுக்கு 150 அல்லது 200 பணமும், சூத்திரன் தவறிழைத்தால் கசையடியும் விதித்தல் வேண்டும்.

திட்டுதல்

மனு:8-270: சூத்திரன், இருபிறப்பாளரை-அதாவது பிராமணன்-சத்திரியன்-வைசியன்-ஆகியோரைக் கடுஞ்சொற்களால் திட்டினால் அவன் நாக்கை அறுக்க வேண்டும்.

மனு:8-271: பெயர் மற்றும் ஜாதியைச் சொல்லி ஒரு பிராமணனை, ஒரு சூத்திரன் திட்டினால்,  பத்து விரல் நீளமுள்ள பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியை சூத்திரன் வாயில் நுழைத்தல் வேண்டும்.

மனு: 8-272: கர்வத்தால் 'நீ இதைச் செய்யவண்டும் என்று ஒரு பிராமணனை, ஒரு சூத்திரன் கட்டளையிட்டால், சூத்திரனின் வாயிலும் காதிலும் காச்சிய எண்ணையை ஊற்ற வேண்டும்.

மனு:8-276: ஒரு பிராமணனும் ஒரு சத்திரியனும்  ஒருவருக்கொருவர் சண்டையிட்டு திட்டிக் கொண்டால், பிராமணனுக்கு 250 பணமும் சத்திரியனுக்கு 500 பணமும் தண்டம் விதிக்க வேண்டும்.

தாக்குதல்/அடித்தல்

மனு: 8-279: ஒரு சூத்திரன் ஒரு பிராமணனை தாக்கினாலோ அல்லது புண்படுத்தினாலோ, எந்தெந்த அவயங்களைத் தாக்கினானோ, அதற்கேற்ப சூத்திரனின் அந்தந்த அவயங்களைத் துண்டித்து விட வேண்டும்.

மனு: 8-281: ஒரு பிராமணனுடன் ஒரு சூத்திரன் சரிசமமாக உட்கார்ந்தால், அந்த ஆணவச் செயலுக்காக, சூத்திரன் இடுப்பில் சூடு போடுதல் வேண்டும் அல்லது நாடு கடத்தப்படுதல் வேண்டும் அல்லது அவனது ஆசனத்தில் அதாவது குண்டியில் ஒரு வெட்டுப் புண் ஏற்படுத்திட வேண்டும்.

(குறிப்பு: சங்கராச்சாரியைப் பார்க்கச் செல்லும் சூத்திரப் பெரும்புள்ளிகள் ஏன் தரையில் உட்காருகிறார்கள் என்பதற்கான காரணம் புரிகிறதா?-ஊரான்)

மனு: 8-282: ஒரு பிராமணன் மீது ஒரு சூத்திரன் காரித்துப்பினால், சூத்திரனின் இரண்டு உதடுகளையும் வெட்டிவிட வேண்டும்‌. ஒரு பிராமணன் மீது ஒரு சூத்திரன் சிறுநீர் கழித்தால் அவனது ஆண்குறியை வெட்டி விட வேண்டும். ஒரு சூத்திரன் ஒரு பிராமணன் மீது குசு விட்டால் அவனது ஆசனத்தை வெட்டிவிட வேண்டும்.

8-283: ஒரு பிராமணனின் முடியை ஒரு சூத்திரன் பிடித்து இழுத்தாலோ, காலை வாரினாலோ, தாடியை, கழுத்தை, விதையைப் பிடித்து இழுத்தாலோ சூத்திரனின் கையை வெட்டி விட வேண்டும்.

(குறிப்பு: இவை எல்லாம் மிகையாக ஒரு சிலருக்குத் தோன்றலாம். ஆனால், இன்றைய காலகட்டத்திலும் பார்ப்பனர்கள் செய்கிற குற்றங்களுக்கான தண்டனையையும், பிற சாதியினர் குறிப்பாக கீழ்சாதி மக்கள் செய்கிற குற்றங்களுக்கான தண்டனையையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே மேற்கண்ட கூற்று எந்தளவுக்கு உண்மை என்பது புரியும்.-ஊரான்)

ஊரான்

தொடரும்

தொடர்புடைய பதிவுகள்

அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்!-4



அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்! - 1

Tuesday, May 10, 2022

அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்!-4

VII

அடிமைத்தனம்

அடிமைத்தனத்தை மனு அங்கீகரித்தார். ஆனால், அதனை சூத்திரர்களுக்கு மட்டுமே என்று வரையறுத்துள்ளார். மூன்று உயர் சாதி அமைப்பினராலும் சூத்திரர்கள் மட்டுமே அடிமைப்படுத்தப்பட முடியும். ஆனால் உயர் சாதியினர் சூத்திரர்களுக்கு அடிமைகளாக முடியாது.

மனுவும் அவரது வழி வந்தவர்களும், அடிமைத்தனத்தை அதிகரித்தபோது வருண அமைப்பில், தலைகீழ் வரிசையில் அது அங்கீகரிக்கப்பட மாட்டாது என்று விதித்தனர். 

அதன் பொருள், ஒரு பிராமணன் மற்றொரு பிராமணனுக்கு அடிமையாகலாம்; ஆனால், அவன் சத்திரிய, வைசிய, சூத்திர அல்லது ஆதி சூத்திரன் ஆகிய இதர வருணத்தைச் சார்ந்தவனுக்கு அடிமையாக மாட்டான்.

மாறாக ஒரு பிராமணன், நான்கு வருணங்களில், எந்த வகுப்பினைச் சேர்ந்தவரையும் தனது அடிமையாக்கிக் கொள்ளமுடியும்.

ஒரு சத்திரியர், வேறொரு சத்திரியரையோ, வைசியரையோ, சூத்திர மற்றும் ஆதி சூத்திரரையோ தனது அடிமையாகக் கொள்ளலாம்‌. ஆனால், ஒரு பிராமணனை அவ்வாறு அடிமையாகக் கொள்ள முடியாது.

ஒரு வைசியர், ஒரு பிராமணனையும், சத்திரியனையும் தவிர, வேறொரு வைசியரையோ, சூத்திரரையோ, ஆதி சூத்திரரையோ தனது அடிமையாக்கிக் கொள்ளலாம்.

ஒரு சூத்திரன், வேறொரு சூத்திரரையும், ஆதி சூத்திரர் மற்றொரு ஆதி சூத்திரரையும் அடிமைகளாகக் கொள்ளலாம்‌. ஆனால், ஒரு பிராமணரையோ, சத்திரியரையோ, வைசியரையோ,  சூத்திரரையோ-ஆதி சூத்திரர் அடிமையாக்க முடியாது.

VIII

கலப்பு மணங்கள்

பல்வேறு வகைப்பட்ட வருணத்தாருக்கு இடையே நடைபெறும் கலப்பு மணங்கள் பற்றி மனு விதித்துள்ள விதிகள் பின்வருவன.

மனு:3-12: இருபிறப்பாளர்களுக்கு (பிராமண-சத்திரிய-வைசிய வருணத்தார்) திருமணம் செய்யும்போது தன் வருணத்திலேயே திருமணம் செய்வது உயர்ந்தது. இரண்டாவது திருமணம் செய்வதாக இருந்தால் மேற்சொல்லப் போகிறபடி செய்து கொள்ள வேண்டியது.

மனு:3-13: சூத்திரனுக்குத் தன் சாதியிலும், வைசியனுக்குத் தன் சாதியிலும்-சூத்திர சாதியிலும், சத்திரியனுக்குத் தன் சாதியிலும்-வைசிய சூத்திர சாதியிலும், பிராமணனுக்குத் தன் சாதியிலும் மற்ற மூன்று சாதியிலும் திருமணம் செய்து கொள்ளலாம்.

மனு கலப்பு மணத்தை எதிர்ப்பவர்‌. ஒவ்வொருவரும் தமக்குள்ளேயே மணம் புரிதல் வேண்டும். குறித்த வருணத்திற்கு வெளியே நடக்கும் திருமணத்தை மனு பொதுவாக அங்கீகரித்தாலும், பிராமணன் எந்த ஒரு பெண்ணையும் மணக்கலாம். சத்திரியன் தன்வருணம், தன் கீழ் வருணமான வைசிய-சூத்திர வருணங்களிலும் பெண் கொள்ளலாம். ஆனால், மேல் வருணமாகிய பிராமணப் பெண்களை மணக்கக்கூடாது.

வைசியன் தன் வகுப்பிலும், சூத்திர சாதியிலும் பெண் கொள்ளலாம். ஆனால் சத்ரிய-பிராமணப் பெண்களை மணத்தல் தடை செய்யப்பட்டுள்ளது.

ஏன் இந்த பாரபட்சம்? அவரது வழிகாட்டு நெறியாக அமைந்துள்ள சமத்துவமின்மையை அப்படியே கட்டிக் காக்க வேண்டும் என்ற மிகுந்த ஆர்வத்தின் விளைவுதான் இது.

-பக்கம் 38, 39, 40: பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி-6

ஊரான்


தொடரும்

தொடர்புடைய பதிவுகள்


அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்!-3

அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்! - 2


அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்! - 1




Thursday, May 5, 2022

அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்!-3

VI

"சமத்துவத்தை இந்துமதம் அங்கீகரிக்கிறதா?

இந்தக் கேள்வி, உடனடியாக ஒருவரது சிந்தனையில் சாதி அமைப்பு முறையைக் கொண்டு வருகிறது. பல்வேறு சாதிகளும், ஒரே தரத்தில் கிடைமட்ட வரிசையில், அருகருகே அமர்த்தப்படவில்லை என்பது சாதி அமைப்பின் ஒரு முனைப்பான அம்சமாகும். பல்வேறு சாதிகளும், ஒன்றன் மீது ஒன்றாக, செங்குத்தான வரிசையில் அமர்த்தப்பட்டுள்ளதொரு அமைப்பு அது‌. சாதிகளைத் தோற்றுவித்ததில் மனுவுக்கு பொறுப்பு இல்லாதிருக்கலாம். வருணத்தின் புனிதத்துவத்தை மனு போதித்தார்;  நான் எடுத்துக் கூறியுள்ளபடி வருணமே, சாதி அமைப்பின் தாய். அந்தவகையில் சாதி அமைப்பின் மூலவராக இல்லையெனினும், அதன் தோற்றத்திற்கான கர்த்தாவாக மனு விளங்கினார் என்று குறை கூறலாம். எது எப்படியாயினும், சாதி அமைப்பைப் பொறுத்து மனுவில் குற்றம், அவர் தரப்படுத்தி,  படிமப்படுத்தும் கோட்பாட்டினை உயர்த்திப் பிடித்ததில் பொறுப்பு வகித்தார் என்பதில் ஐயமில்லை.

மனுவின் திட்டப்படி, பிராமணன் முதல் தளத்தில் வைக்கப்பட்டான்‌. அதற்கு அடுத்து சத்திரியர்; சத்திரியருக்குக் கீழே வைசியர்கள்; அவர்களுக்குக் கீழ் சூத்திரர்கள்; சூத்திரர்களுக்கும் கீழே ஆதி சூத்திரர்கள் (தீண்டாதார்). இந்தத் தரவரிசை அமைப்பானது சமத்துவமற்ற கோட்பாட்டினை எடுத்துரைப்பதாகும்; எனவே, இந்து மதம் சமத்துவத்தை அங்கீகரிக்கவில்லை என்று மெய்யாகவே கூறலாம். அந்தஸ்தில் சமத்துவமற்ற இந்த நிலையானது, ஏதோ மன்னரின் அரசவை கூடத்தின் விழா கூட்டத்திற்காக வரிசைப்படுத்திய முன்னுரிமைப் பட்டியல் ஆணை அல்ல அது. மக்களினத்தவரிடையே கடைபிடிக்க வேண்டிய - எல்லாக் காலத்திலும், எல்லா இடங்களிலும், எல்லா நோக்கங்களிலும் அமலாக்கப் படவேண்டிய, ஒரு நிரந்தர, சமுதாய உறவாகும். வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும், மனு இந்த வேறுபாட்டினை எவ்வாறு புகுத்தியுள்ளார் என்பதை விவரித்துக்கூறின், அது பெரிதும் நீண்டு விடும்; அவர், சமத்துவமின்மையை வாழ்வின் ஜீவசக்தியாக்கினார். ஆனால், அடிமைத்தனம், திருமணம், சட்டவிதிகள் போன்ற சில உதாரணங்களை எடுத்துக் கொண்டு அதை விளக்க முற்படுகிறேன்."

-பக்கம்-38, பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி - 6.

ஊரான்

தொடரும்

தொடர்புடைய பதிவுகள்

அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்! - 2


அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்! - 1


Wednesday, May 4, 2022

அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்! - 2

 II

"இந்துக்களின் மத, ஆசார, சமுதாய வாழ்வினை ஆளும் விதிகளை எடுத்துரைக்கும் ஒரு தெய்வீக நெறிமுறைதான் மனுஸ்மிருதி. அதனை இந்துக்களின் விவிலியம் என்று கருதலாம். இந்து மதத் தத்துவமே அதில் அடங்கியுள்ளது" 

- பக்கம் 12, பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர், நூல் தொகுப்பு, தொகுதி-6

III

"ஒரு இந்துவின், வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் மதம் கட்டுப்படுத்துகிறது‌. வாழ்வில் அவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்றும், செத்த பின்பு அவனது உடல் எவ்வாறு கழித்துக் கட்டப்பட வேண்டுமென்றும் அவனுக்கு ஆணையிடுகிறது. சிற்றின்ப வேட்கையில் அவன் எப்படி, எப்பொழுது ஈடுபட வேண்டுமென்பதையும் அது அவனுக்குக் கூறுகிறது. ஒரு குழந்தை பிறந்தவுடன் என்னென்ன சடங்குகள் செய்ய வேண்டும், குழந்தைக்கு எப்படிப் பெயரிட வேண்டும், அதன் தலையில் உள்ள முடியை  எவ்வாறு கத்தரிக்க வேண்டும், அதற்கு முதல் ஆகாரம் எப்படிக் கொடுக்க வேண்டும் என்பனவற்றை மதம் அவனுக்கு எடுத்துரைக்கிறது. அவன் எந்தத் தொழிலில் ஈடுபட வேண்டும், எந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதையும் அது கூறுகிறது. யாருடன் உணவருந்துவது, என்ன உணவை உட்கொள்வது, எந்தெந்த காய்கள் அனுமதிக்கப்பட்டவை, எவை தவிர்க்கப்பட வேண்டியவை என்பதையும், ஒரு நாளை அவன் எவ்வாறு கழிக்க வேண்டும், எத்தனை முறை உணவருந்துவது, எத்தனை முறை தொழுவது என்பதையும் அவனுக்கு உரைக்கிறது. மதம் தழுவாத அல்லது அதனால் ஆணையிடப்படாத எந்த ஒரு செயலும், இந்துவின் வாழ்வில் கிடையாது. விருப்பு வெறுப்பற்ற ஒரு சகஜ விஷயமாக, படித்த இந்துக்கள் அதை எடுத்துக் கொள்கிறார்கள் என்பது விந்தையே" 

- பக்கம் 34, பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர், நூல் தொகுப்பு, தொகுதி 6

IV

"எல்லா மதங்களும் நல்லவை மற்றும் உண்மையானவை என்று கருதுவது தவறான நம்பிக்கையாகும். ... மதங்களிடையே பாகுபாடு காண்பது தேவையற்றது என்ற கருத்தும் மிகவும் தவறானதாகும்..... மதம் என்பது ஓர் அமைப்பு அல்லது ஓர் ஆதிக்க விளைவு; சமுதாயத்திற்கு அது உதவலாம் அல்லது தீங்கு பயக்கலாம்....இந்து மதம் எந்த லட்சியத்திற்கு உதவுகிறது, எத்தகைய சமூக லட்சியத்தை முன்வைக்கிறது என்கிற பரிசீலனைக்குச் செல்லாமல் மதங்கள் பலவாயினும் அவை அனைத்துமே சிறந்தவைதான் என்று இந்துக்கள் கூறுவதன் மூலம் இந்து மதத்தை பரிசோதனைக்கு உட்படுத்துவதை தவிர்க்க முயலுகின்றனர் இந்துக்கள்.

இந்து மதத் தத்துவப் பிரச்சினையை மூடி மறைக்க எவ்வளவுதான் ஒரு இந்து முயன்றாலும் அதிலிருந்து தப்பிக்க முடியாது."

- பக்கங்கள் 35, 36, 37-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி-6

V

"இந்து மதத் தத்துவத்தை நிர்ணயிக்க நியாயச் சோதனை, பயனீட்டுச் சோதனை (test of justice and test of utility) என்ற இரண்டு சோதனைகளையும் பிரயோகிக்க நான் எண்ணியுள்ளேன். முதலில் நான் நியாயப் பரிசோதனையை நடத்துகிறேன். அவ்வாறு செய்வதற்கு முன்பு நியாயம் அல்லது நீதி என்ற கொள்கைக்கு நான் எவ்வாறு பொருள் கொள்கிறேன் என்பதை விளக்க விரும்புகிறேன்.

நியாயம் என்பது எப்போதுமே சமத்துவம், வீதாச்சாரம், "சமன் செய்தல்" என்ற கருத்துக்களைத் தூண்டுகிறது. நடுநிலை, நேர்மை என்பது சமத்துவத்தைக் குறிக்கிறது. விதிகளும், கட்டுப்பாட்டு முறைமைகளும், நேர்மையையும், மதிப்பின் சமத்துவத்தைப் பொறுத்தது‌. எல்லா மனிதர்களும் ஒரே சாராம்சத்தைக் கொண்டவர்களே; அந்தப் பொதுவான சாராம்சம், அவர்களுக்கு ஒரே சீரான அடிப்படை உரிமைகளையும், சமமான சுதந்திரத்தையும் பெற்றுத் தருகிறது.

சுருங்கக் கூறின், நீதி என்பது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் மற்றொரு பெயரே. இந்து மதத்தை மதிப்பிடுவதில், நான் இந்தப் பொருளில்தான் நீதியை உரைகல்லாக பயன்படுத்துகிறேன்.

இவற்றில் எந்தக் கூற்றினை இந்துமதம் அங்கீகரிக்கிறது? இந்தக் கேள்வியை ஒன்றன்பின் ஒன்றாக ஆராய்வோம்!"

- பக்கம் 37, பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி-6

ஊரான்

தொடரும்

தொடர்புடைய பதிவுகள்








Tuesday, May 3, 2022

அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்! - 1

I

எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்பதற்காகப் பார்ப்பன இந்துத்துவாக் கும்பல் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பிற்படுத்தப்பட்டவர்களைத் தமிழக பாஜக தலைமைப் பொறுப்புக்குக் கொண்டுவருவதன் மூலம் பிற்படுத்தப்பட்ட சாதி மக்களை தன் பக்கம் இழுக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. 

அதேபோல பட்டியலின மக்கட்பிரிவினரில் பிரபலமாக உள்ளவர்களை இழுக்க பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறது பாரதிய ஜனதா கட்சி. அந்த வரிசையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி, திரைத்துறை பிரபலங்களான இளையராஜா, கங்கை அமரன் உள்ளிட்ட ஒரு சிலரை ஏற்கனவே ஆர்எஸ்எஸ் இந்துத்துவாக் கும்பல் தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டு விட்டது. 

பிரபலமான தலித்துக்களை மட்டும் தங்கள் பக்கம் இழுத்தால் மட்டும் போதாது, பெருவாரியான தலித் மக்களையும் தங்கள் பக்கம் இழுக்கவேண்டும் என்பதற்காக அம்பேத்கரை ஒரு இந்துத்துவா ஆதரவாளராகக் காட்டுவதற்குப் பார்ப்பன பாஜக கும்பல் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்காகத்தான் பார்ப்பன சனாதன இந்து மதத்தின் நேரடிப் பிரதிநிதியான மோடியை, இந்து மதத்தையும் அதன் தத்துவத்தையும் தனது இறுதி மூச்சு வரை மிகக் கடுமையாகச் சாடியும், எழுதியும், போராடியும் வந்த அம்பேத்கரோடு ஒப்பிட்டு பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளையராஜாவைக் கொண்டே முகவுரை எழுத வைத்தனர். இது தமிழக அரசியல் களத்தில் மிகப்பெறும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கங்கை அமரன் இந்துத்துவாவிற்கு ஆதரவாக் காட்டுக் கூச்சல் போடும் அளவிற்கு அது தற்போது வேகம் எடுத்துள்ளது. 

ஒரு வேளை விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய தலைவர் திருமா ஒருவர் இல்லையென்றால், ஒட்டுமொத்த பட்டியலின மக்களும் கிருஷ்ணசாமி, இளையராஜா, கங்கை அமரன் போன்ற பட்டியலின பிரபலங்களை அடியொற்றி இந்துத்துவாக் கும்பலுக்கு பலியாகி இருக்கக்கூடுமோ என்று அஞ்சத் தோன்றுகிறது. சனாதன தர்மத்தையும், அம்பேத்கரையும் பெரியாரையும், திராவிடக் கருத்தியலையும் திருமா மிகத்தெளிவாக உள்வாங்கி இருப்பதால்தான் அவர் இந்துத்துவாக் கும்பலுக்கு சிம்ம சொப்பனமாய்த் திகழ்கிறார். அவரது தொண்டர்களும் அவருடைய கருத்துக்களுக்கு செவிமடுத்து பார்ப்பன இந்துத்துவாக் கும்பலுக்கு எதிராகக் களமாடி வருகின்றனர்.

இன்றைய அரசியல் சூழலில் அம்பேத்கரின் கருத்துக்களை உள்வாங்கினால் மட்டுமே பார்ப்பனக் கும்பலை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியும்‌. அம்பேத்கரை கொண்டாடுவதற்கு அவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை என்பதை ஆணித்தரமாக நிறுவ முடியும். அம்பேத்கரின் எழுத்துக்களில் உள்ள ஒரு சில விவர முரண்களை எடுத்துக் கொண்டு அவரை இந்துத்துவா ஆதரவாளராகக் காட்ட முயற்சிப்பது மடமைத்தனம் மட்டுமல்ல, கயமைத்தனமும் ஆகும். 

பாரதிய ஜனதா கட்சியும், பார்ப்பன ஆர்எஸ்எஸ் இந்துத்துவாக் கும்பலும் நிலைநாட்ட விரும்பும் சனாதன தர்மம் எத்தகையது என்பதை, சனாதன தர்மத்தின் மூல நூலான மனுதர்ம சாஸ்திரத்தை, உலகில் வேறெவரையும் விட அம்பேத்கர் மட்டுமே மிக ஆழமாக அலசி, ஆராய்ந்து, இந்துமதம்  என்பது இந்து மக்களிடையே சுதந்திரம்-சமத்துவம்-சகோதரத்துவத்தை மறுக்கும் ஒரு மக்கள் விரோத மதம் என்பதை மிகவும் ஆணித்தரமாக, 'இந்து என்பது ஒரு மதமே அல்ல' என நிறுவியுள்ளார். 

எந்த அம்பேத்கரை தூக்கிப் பிடித்துக்கொண்டு பார்ப்பன ஆர்எஸ்எஸ் கும்பல் வருகிறதோ அதே அம்பேத்கரின் எழுத்தீட்டிகளைக் கொண்டே பார்ப்பனக் கும்பலின் குடலை உருவி இந்தியாவெங்கும் தொங்க விடுவோம். இனியும் தாமதிப்பது ஆபத்து. இந்துத்துவாவிற்கு எதிராகக் களமாட விரும்புவோரே! அம்பேத்கரைப் படியுங்கள்! பரப்புங்கள்!

இதன் ஒரு பகுதியாக "இந்து மதத் தத்துவம்" என்ற கட்டுரையில் (பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி-6, இயல் 1, இந்து மதத் தத்துவம், பக்கம்  1 முதல் 127 வரை) அம்பேத்கர் தொகுத்து வழங்கியுள்ளவற்றில் சில முக்கியப் பகுதிகளை மட்டும் அப்படியே உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முழுமையாகப் படிக்க விரும்புவோர், அம்பேத்கரின் முழு கட்டுரையையும் படியுங்கள். படிக்கும்போது மனுதரும சாஸ்திரத்தையும் சேர்த்துப் படியுங்கள்.

ஊரான்

தொடரும்