Thursday, 18 July 2019

ஜெ.பி-யிலே ஒரு நாள்!

முன்பெல்லாம் ஏப்ரல் மாதத்திலேயே கோடை மழை பெய்யும். இப்பொழுதெல்லாம் வெப்பச் சலனத்தையும் காணோம்; மேலடுக்குச் சுழற்சியையும் காணோம். கோடையில் வெப்பம் ஏன் சலனப்படுவதில்லை என்பதற்கான காரணத்தைச் சொல்லாமலேயே பணி ஓய்வு பெற்றுச் சென்றுவிட்டார் இரமணன். தனக்குச் சலனம்1 என்றாலும் பிறர்க்குதவும் பண்பால்தான் கதிரவன் போற்றப்படுகிறானோ!

முன்பெல்லாம் சித்திரை முதல் தேதியில் மானாவாரி நிலத்தில் பொன் ஏர் கட்டுவார்கள். தேங்காய் உடைத்துக் கற்பூரம் கொளுத்தி எளிமையான வழிபாட்டுக்குப் பிறகு பச்சரிசியில் வெல்லம் கலந்து தேங்காய்ச் சில்லுடன் கொடுக்கும் அந்தத் தின்பண்டத்தை நினைத்தாலே இன்றும் நாவில் எச்சில் ஊறும்.

அதைப் பண்டம்2 என்று சொல்வதைவிட தீனி என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். இங்கே தயாரிக்கப்படும் வெல்லம் கலந்த பச்சரிசி பரிமாற்றத்திற்கு உரியதல்லவே!

சித்திரையில் உழுத நிலம் அவ்வப்பொழுது மறு உழவால் புரட்டப்பட்டு வேர்க்கடலை, கம்பு, சோளம், துவரை, மொச்சை என மண்ணுக்கு ஏற்ப ஆனியிலே விதைப்பும் முடிந்து விடும். முளைவிட்டு விரிந்த பயிர் பசுமையுடன் துளிர்க்கையிலே நம் நெஞ்சமெலாம் நனைந்துவிடும்.

மொச்சைக்கும் துவரைக்கும் நடுவிலே கொஞ்சம் ‘பிச்சை’3யையும் போட்டு வைப்பார்கள் பின்னாளிலே ருசி பார்க்க.

இதோ சித்திரை போய் வைகாசி – ஆனி கடந்து ஆடியும் வந்தாச்சு. இது தென்மேற்குப் பருவ மழைக்காலம். வேர்க்கடலைச் செடிகள் பூவிரித்து மண்நோக்கி பிஞ்சிறக்க காத்திருக்கும் காலமிது.

கேரளச் சீமையிலே கொட்டித் தீர்த்த மழை மிச்சம் மீதி ஏதும் இருப்பின் அதுவே மேலெழுந்து மலைதாண்டி மேலடுக்குச் சுழற்சியாய் இங்கொன்றும் அங்கொன்றுமாய் விசிறிவிட்டு காற்றாய் கலைந்து போகும். மண் நனைந்து ஈரம் பூக்கும். கடலைச் செடியின் பிஞ்சுக் காம்புகள் மண்ணுக்குள்ளே காயாய் முதிரும். மழை ஏதும் இல்லை என்றால் கடலைச் செடியின் பிஞ்சுக் காம்புகள் மண்ணைத் தொடாமலேயே மலடாகிப் போகும்.

பொன் ஏரும் பச்சரிசி வெல்லமும் வெறும் கனவாய் நினைவில் ஓட ஆடி முதல் நாளில் சென்னைக்குப் பயணமானேன் ஜெ.பி-யிலே.

வாலாசா ரோடு இரயில் நிலையத்தில் காலையிலேயே பெருங்கூட்டம். சென்னைக் கடற்கரைவரை செல்லும் உள்ளூர் மின்தொடர் வண்டிக்காகவும் அதைத்தொடர்ந்து சென்னை சென்ட்ரல்வரை செல்லும் சோலையார்ப்பேட்டை விரைவு வண்டிக்காகவும்4 காத்திருக்கும் கூட்டம் அது.

சென்ட்ரலோடு எம்.ஜி.ஆரையும் சேர்த்து சுமக்கும் பயணச் சீட்டை பாக்கெட்டில் சொறுகிய போது ஏதோ வேண்டாத சுமையை சுமப்பதாக உணர்ந்தேன்.

மடிப்புச் சட்டைகளையும் மடிசார்களையும் மட்டுமே சுமந்து சென்ற இரயில்கள் இப்பொழுதெல்லாம் ஆயிரம் மடிப்புகளைக் கொண்ட அழுக்குச் சட்டைகளையே அதிகம் சுமக்கின்றன. உண்டி சிறுத்த அழகியப் பெண்டிரும், மடித்துக் கட்டிய லுங்கியரும் சென்னை நோக்கி பயணிப்பது இப்பொழுதெல்லாம் வழமையாகிவிட்டது. லுங்கி கட்டினால் ஏளனப் பார்வைக்கு ஆளாக நேரிடும் என்பதனாலேயே இளவட்டமெல்லாம் பேண்டுக்குத் தாவுகிறார்கள். 

வேளாண்மை பொய்த்து கிராமங்கள் வாழ வழி அற்றுப் போனதால் நேற்று வரை நிலக்கிழாராய் நிலைத்திருந்தவன் இன்று பிழைப்பு தேடி கூலியாய் ஓடுகிறான் நகரை நோக்கி.

“முதலாளியம், நகரங்களின் ஆளுகைக்குள் நாட்டுப்புறத்தைக் கொண்டு வந்துவிட்டது. அது விரிந்து பரந்த பெரு நகரங்களை உருவாக்கியுள்ளது. அது, நகரங்களைச் சார்ந்து நாட்டுப்புறம் இருக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது” என இன்றைய நடப்பைத்தான் மார்க்சும் ஏங்கெல்சும் 170 ஆண்டுகளுக்கு முன்பே முன்னறிந்து கம்யூனிஸ்ட் அறிக்கையில் உரைத்தனரோ!

உற்பத்திக் கருவிகள் வளர்ச்சி காணும் போது உழவு மாடும் ஏர் கலப்பையும் அற்றுப் போய், அவ்விடத்தில் டிராக்டர்கள் நுழைவதை யாரால் தடுக்க முடியும்? உழவு மாடும் ஏர் கலப்பையும் இருந்த இடத்தை இன்று டிராக்டர்கள் பிடித்துக் கொண்டாலும் உற்பத்தி என்னவோ சிறுவீத அளவிலேதான் தொடர்கிறது. வேளாண்மை ஒரு தொழிலாய் உருவெடுத்து பெருவீத உற்பத்திக்கு மாறாதவரை நகரை நோக்கி ஓடுவதும் குறையப் போவதில்லை.

வாலாசா ரோடு, சோளிங்கர், சித்தேரி, அன்வர்திகான்பேட்டைகளில் நின்ற கூட்டத்தை வாரிச் சுருட்டி விரைந்தது ஜெ.பி. சூப்பர் பாஸ்ட் இல்லை என்றாலும் தான் சுமக்கும் மக்களை காலதாமதத்திற்கான ஏளனத்திலிருந்து காக்கலாமே என அரக்கோணத்தைத் தாண்டியவுடனே சூப்பர் பாஸ்ட்டாய் வேகமெடுத்தது ஜெ.பி.

காலை ஜெ.பியும் மாலை ஜே.பியும் இல்லை என்றால் நிலக்கிழார்கள் எல்லாம் ‘நினைவில் வாழும்’ விதர்பாக்களாகி இருப்பார்கள். சினிமாவிலே சிக்குபுக்கு ரெயிலைப் பார்த்தவர்களுக்கு இன்று ரெயிலே வாழ்க்கையாகிப் போனது.

தொடரும்

குறிப்பு

1.சலனம் - கலக்கம், தும்பம்

2.பரிமாற்றத்திற்காக உருவாக்கப்படும் எதுவுமே பண்டம்தான். பண்டம் பயன்பாட்டிற்காக மட்டும் உருவாக்கப்படுவதில்லை. பரிமாற்றத்திற்காகவும் உருவாக்கப்படுகிறது. பண்டம் என்பது வெறும் பொருள் மட்டுமே அல்ல, அதற்கான விலையுடன் கூடியபொருளாக இருக்கிறது. இங்கே பச்சரியும் வெல்லமும் பயன்பாட்டுகுரிய ஒன்றுதான் என்றாலும் அது பரிமாற்றத்திற்காக, விற்பனைக்காக உருவாக்கப்படவல்லை என்பதால் அது பண்டமாகாது.

3.பிச்சை – தர்ப்பூசணியை ‘பிச்சைக்காய்’ என்பார்கள் திருவண்ணாமலை மாவட்ட வேளாண் மக்கள்

4.சோலையார்ப்பேட்டையிலிருந்து (Jolarpet) சென்னை வரை செல்லும் விரைவு வண்டியைத்தான் ஜெ.பி (JP) என்பார்கள்.

தொடர்புடைய பதிவுகள்




கம்யூனிஸ்ட் அறிக்கையின் பொருத்தப்பாடு குறித்து பெரியார்


வேலையின்மை, வறுமை, பசி, பஞ்சம், பட்டினிச் சாவுகள், தற்கொலைகள், ஏமாற்று, பித்தலாட்டம், உழைப்புச் சுரண்டல், இயற்கை வளங்கள் சூறையாடல், சுற்றுச் சூழல் கேடு, பாலியல் வன்கொடுமைகள், சாதி-மத மோதல்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் என பல்வேறு துன்ப துயரங்களை நாம் அனுபவித்து வருகிறோம். இத்துன்ப துயரங்களிலிருந்து விடுபட முடியாதா என்ற ஏக்கப் பெருமூச்சோடு நமது அன்றாட வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. 

விடுதலையைத் தேடி……. 

“கம்யூனிட் அறிக்கை எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்றுவரை உலக நிலைமையில் அதிசயிக்கத்தக்க பல மாறுதல்கள் ஏற்பட்டு இருந்தாலும் அவ்வறிக்கையின் தத்துவமானது இன்றைய நிலைமைக்கு மிக்கப் பொருத்தமானதாகவே இருந்து வருவது அவ்வறிக்கையின் விசேசத்திற்கு ஒரு காரணமாகும்”. – தந்தை பெரியார், குடியரசு தலையங்கம் 04.10.1931.

“உலகத்தில் பொதுவாக யாவருக்கும் ஒரு சமாதானமும் சாந்தி நிலையும் ஏற்பட வேண்டுமானால் இந்த முறையைத்தான் – சமதர்மம் - கடைசி முயற்சியாக ஏதாவதொரு காலத்தில் கையாளப்பட்டே தீரும் என்பதில் நமக்குச் சிறிதும் சந்தேகம் இல்லை” - தந்தை பெரியார், குடியரசு தலையங்கம் 04.01.1931.

கம்யூனிட் அறிக்கை எழுதப்பட்டு சுமார் 80 ஆண்டுகளுக்குப் பிறகு கம்யூனிட் அறிக்கையின் பொருத்தப்பாடு மற்றும் பொதுவுடைமைச் சமூகத்தின் அவசியம் குறித்து பெரியார் மிகத் துள்ளிமாக கூறியிருக்கிறார்.

கம்யூனிட் அறிக்கை 1848-ல் வெளியாகி தற்போது 170 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

இந்த 170 ஆண்டுகளில் அதிசயிக்கத்தக்க பல மாறுதல்கள் மேலும் ஏற்பட்டு இருந்தாலும் கம்யூனிஸ்ட அறிக்கையின் பொருத்தப்பாடு குறித்து கிரீஸ் நாட்டின் முன்னாள் நிதி அமைச்சர் யானிஸ் வரௌஃபாகிஸ் அவர்கள் 2018-ல் கம்யூனிஸ்ட அறிக்கை நூலுக்கு எழுதிய முன்னுரையில்

“ஒட்டு மொத்த மானிடச் சமூகத்தையும் இரண்டு கடும் பகை முகாம்களாகப் பிளவு படுத்தும், திருட்டுக் கொள்ளைச் செயல்களில் ஈடுபடும் மூலதன முதலாளியம், 21-ம் நூற்றாண்டில் உலகமயமாக்கல் வடிவத்தில் நிலவுவது பற்றி கம்யூனிஸ்ட் அறிக்கை முன்னுணர்ந்து எடுத்துரைத்தது. அதே வேளையில், ஒரு சிறப்பு மிக்க உலகை உருவாக்கும் ஆற்றலை நாம் நம்மிடத்தே கொண்டுள்ளோம் என்பதையும் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் நமக்குச் சுட்டிக்காட்டுகிறார்கள்”.

என புதிய ஒரு சமூக அமைப்பை – அது சோசலிசம் மட்டுமே - உருவாக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.

பிள்ளை வளர்ப்பு, சமையல் வேலை, துணி துவைத்தல் உள்ளிட்ட வீட்டு வேலைகளிலிருந்து முதலில் பெண்களை விடுவிக்க வேண்டும் என்கிறார் பெரியார். அதற்கு ஒரேவழி ரசிய சோசலிச சமுதாயத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த சமுதாய உணவுக்கூடங்கள், சமுதாய சலவைக் கூடங்கள் மற்றும் குழந்தைகள் காப்பகங்கள் போன்று உருவாக்கப்பட வேண்டும்; பெண்களுக்கானத் தீங்குகள் எல்லாம் காரணமாயமைந்த தனியுடைமை ஒழியும் வரை பெண்ணடிமையும் நீங்காது என பொதுவுடைமைச் சமூகத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறார். (திருப்பத்தூர் 15.09.1946 சொற்பொழிவு – குடிஅரசு 21.09.1946, ஈரோடு 4.11.1933 சொற்பொழிவு – குடிஅரசு 12.11.1933 மற்றும் சென்னை 30.09.1948 விக்டோரியா மண்டபம் சொற்பொழிவு – குடிஅரசு 11.10.1948)

பெல், இராணிப்பேட்டையில் செயல்படும் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் 12.07.2019 அன்று மாலை நடைபெற்ற 21-வது சந்திப்பில் கம்யூனிஸ்ட் அறிக்கை குறித்தும் பெரியாரின் பெண்ணிய சிந்தனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கம்யூனிஸ்ட் அறிக்கையின் இன்றைய பொருத்தப்பாடு குறித்து தோழர் அ.வில்சன் மற்றும் பெரியாரின் பெண்ணிய சிந்தனைகள் குறித்து தோழர் அ.கிருபா ஆகியோர் உரையாற்றினர்.  தோழர் கோ.இளங்கீரன் வாசகர் வட்ட நிகழ்வை நெறியாளுகை செய்தார். தோழர் வெ.கோவிந்தசாமி வரவேற்புரை நிகழ்த்த தோழர் தி.வீரபாண்டியன் நன்றி உரை கூறினார். தோழர் பொன்.சேகர் தொகுப்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் தோழர் தமிழ்க்கனல் பாடல் பாடினார்.

இது போன்ற சந்திப்புகள் வாசகர்களிடையே புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்துவதோடு சமூகப் பிரச்சனைகளை பரிசீலிக்கவும் உதவுகிறது என்பதை பார்வையாளர்கள் ஆர்வத்தோடு பங்கேற்பதிலிருந்து உணர முடிகிறது.


 

 




 தொடர்புடைய பதிவுகள்






 
 
 







Friday, 28 June 2019

அரசியல் எனக்குப் பிடிக்கும்!


பெல்,  இராணிப்பேட்டை “அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தின்” 20- வது சந்திப்பு 22.06.2019 அன்று நடைபெற்றது. இந்த சந்திப்பில் ச.தமிழச்செல்வன் எழுதிய “அரசியல் எனக்குப் பிடிக்கும்” நூல் குறித்து தோழர் ஆ.கலைவாணன் மற்றும் அழகிய பெரியவன் எழுதிய “தேனீர் மேசை” நூல் குறித்து தோழர் கோ.இளங்கீரன் ஆகியோர் உரையாற்றினர். இருவருமே அந்நூல்களை ஆழமாகப் படித்து வந்து விளக்கினர்.

தோழர் அ.கிருபா வரவேற்புரை நிகழ்த்தினார். தோழர் பொன்.சேகர் கூட்டத்திற்கு தலைமை ஏற்று நெறிப்படுத்தினார். இறுதியில் தோழர் ரெ.மேகநாதன் நன்றி கூறினார்.

மின்வெட்டு மற்றும் மழையின் குறுக்கீடுகளைப் புறந்தள்ளி திறளான வாசகர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்பித்தனர்.

அழகிய பெரியவனின் தேநீர் மேசையில் 17 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அதில் ஒரு கட்டுரைதான் தேனீர் மேசை. தனது ஊரான பேரணாம்பட்டு மற்றும் தனது மாவட்டத்தில் உள்ள சில ஊர்கள் ஆறுகள் குறித்தும் அங்குள்ள மக்கள் குறித்தும் தனது அனுபவங்களை வாசகர்களோடு பகிர்கிறார் நூலாசிரியர்.  நேரடிக் காட்சிப் பதிவுகளை ஏற்படுத்தும் வல்லமை இக்கட்டுரைகளில் மிளிர்கிறது. கட்டுரைகள் எழுதப்பட்ட காலம் குறிப்பிட்டிருந்தால் காலத்தோடு பொருத்திப் பார்க்க உதவியாக இருந்திருக்கும்.

கடினமான அரசியலை மிக எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் ச.தமிழ்ச் செல்வனின் அரசியல் எனக்குப் பிடிக்கும் நூல் எழுதப்பட்டுள்ளது. அரசு என்றால் என்ன? அது யாருக்கானது? போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. மனித சமுதாய வளர்ச்சிப் போக்கில் அரசு எப்பொழுது தோன்றியது அது யாருக்குச் சேவை செய்தது  / செய்கிறது என்பதை ஆதிப் பொதுவுடைமை சமூகத்தில் தொடங்கி சோசலிச சமூகம் வரை சுறுக்கமாக அதே வேளையில் புரியும்படி விளக்கி உள்ளார். சமூக மாற்றத்தை விழைவோர் ஒரு தொடக்க நூலாகப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டிய அரசியல் நூல் என்றால் அது மிகை அல்ல.






 
தொடர்புடைய பதிவுகள் 



 
 
 


Saturday, 15 June 2019

அண்டகாசுரனும் அடுக்குமாடி குடியிருப்பும்!.......இறுதிப் பகுதி

அதிகாலை மூன்று மணி. சொந்தமெல்லாம் வந்தாச்சு. பசுவும் கன்றும் வண்டியிலே வந்து இறங்கியாச்சு. கணவனும் மனைவியும் வேட்டி புடவை அலங்காரத்துடன் முகூர்த்தத்திற்குத் தயார். ஆம். கணவனும் மனைவியும் இங்கே மீண்டும் ஒரு முறை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். எதுக்கு இதெல்லாம்? உஷ். வாயை மூடு!

எல்லாப் பொருளும் தயாரா என மீண்டும் ஒரு முறை சோதிக்கிறான். ஏதாவது ஒன்று குறைந்தாலும் இந்த நேரத்தில் எங்கே போய் தேடுவது என்பதைவிட அது இல்லாமல் பூஜை செய்தால் ஏதாவது ஆகிவிடுமோ என்கிற அச்ச உணர்வு அவனை துரத்துகிறது. பதட்டமடைகிறான். மணி நான்கு ஆகியும் ஐயர் வரவில்லை. நேரம் ஓடிக் கொண்டிருந்தது. ஐயர் வந்த பாடில்லை. மேலும் படபடப்பு. தொலைபேசியில் தொடர்பு கொண்டால் அவுட் ஆப் கவரேஜ் என்றது அலை பேசி. பதட்டம் மேலும்கூட அக்கம் பக்கம் நிற்பவர்கள்கூட யார் என்று அவனுக்குத் தெரியவில்லை. வேர்த்து விறு விறுத்துப் போனது. ஒரு வழியாக ஐந்து மணிக்கு ஐயர் வந்த போது பெரு மூச்சு விட்டு ஆசுவாசப் படுத்திக் கொண்டான்.

அக்கினி வளர்க்க செங்கற்களை அடுக்கி அடுப்பை தயார் செய்தார் ஐயர். அடுத்து வாழை இலையை விரித்து அரிசியைப் பரப்பி கழுத்துள்ள பித்தளைக் குவலையை வைத்து அதன் மேல் தேங்காயை குத்தி நிறுத்தி வெற்றிலையோடு குறுக்கும் நெடுக்குமாக நூலால் கட்டுப் போட்டார். நீங்கள் எல்லாம் நூலுக்கு கட்டுப்பட்டவர்கள்தான் என்பதை சொல்லாமல் உணர்த்தியது அவர் போட்ட கட்டு. எடுபிடி வேலைகளுக்கு ஒரு அப்ரண்டிஸ் ஐயரும் உடன் வந்து ஐயரின் ‘தொழிலை’ கச்சிதமாய்க் கற்றுக் கொண்டிருந்தார்.

ஹோம குண்டத்தில் தீ மூட்டினார் ஐயர். தவக்ளா தளதளா தவக்ளா தளதளா என ஐயர் மந்திரம் சொல்ல அதையே இவனும் சொல்ல முயற்சிக்க அடுத்த மந்திரத்திற்குத் தாவினார் ஐயர். அவன் சொல்வது இவனுக்குப் புரியவில்லை. இவன் சொல்வது அவனுக்குப் புரியவில்லை. ஒட்டு மொத்தத்தில் எவருக்கும் புரியாத ஒரு பாஷையில் மந்திரத்தை ஓதி ஆறு மணக்கு ஹோமத்தை முடித்தார். காலை 4-6 மணிதான் ஹோமத்திற்கான நேரம். அதை மீறினால்….பிறகு அண்டகாசுரன்தான்.

பசு கன்று இரண்டையும் வீட்டின் உள்ளே ஓட்டி வந்தனர். சாணியும் போடவில்லை. மூத்திரமும் போக வில்லை. ஏற்கனவே வண்டிப் பயணத்தின் போதே எல்லாவற்றையும் கழிந்திருக்கும் போல. வெளியில் கட்டச் சொல்லி வாயில் எதை எதையோ திணித்தார்கள்.

கணவன்-மனைவி இருவரும் ஜோடியாக அமர்ந்தனர். இருவருக்கும் கல்யாணத்தை செய்து வைத்தார். இதற்குள் ஒரு அரை மணி நேரம் ஓடிவிட்டது. மீண்டும் பசுவையும் கன்றையும் புட்டத்தில் குத்திக் கொண்டே உள்ளே ஓட்டி வந்தனர். சாணி-கோமியம் கான்டிராக்ட் கண்டிஷன் என்பதால் இவற்றைத் தருவது  மாட்டு ஏஜென்டின் கடமை. அய்யய்யோ! மாடு என்று சொல்லி விட்டேனே! ஏதேனும் தோஷம் வந்து விடுமோ! இதற்குப் பரிகாரம் செய்தாக வேண்டுமே!. ஐயருக்கான அடுத்த கலெக்சன் ரெடி.

மணி ஏழை நெருங்கும் நேரம். புட்டத்தில் குத்துன குத்தில் தர்..தர..தர..தர் என பசுவிடமிருந்து கோமியம் கொட்ட அதை ஒரு பாத்திரத்தில் நிரப்பிக் கொண்டனர். கோமியத்தோடு தட்தட்டென சாணம் போட ஏதோ பொண்டாட்டி பிரசவித்ததைப் போல பூரிப்படைந்தான் வீட்டுக்காரன். வீடு முழுக்க கோமியம் தெளிக்க முகூர்த்தமும் சரியாய் 7 மணிக்கு முடிந்தது. 6-7 மணிதான் முகூர்த்த நேரம். இதையும் மீறக்கூடாது என்பது பார்ப்பான் வகுத்த விதி. மீறினால்…. அண்டகாசுரன்தான். வீட்டைக் கட்டிப் பார். கல்யாணத்தைப் பண்ணிப் பார் என்பார்களே. அது இதுதானோ!

வந்தவர்களுக்கு பந்தி பரிமாறப்பட்டது. அட இவ்வளவு காலையிலேவா? என கேட்கக் கூடாது. வாஸ்து பசியோடு காத்துக் கிடக்கிறானல்லவா.
ஒரு வழியாய் கிரகப் பிரவேசம் பேஷா முடிந்தது.

ஏதோ வீட்டைக் கட்டினோமா. குடி போனோமா என்றில்லாமல் எதற்கு இவ்வளவு பூஜை புனஸ்காரங்கள்? இங்கே இரண்டு முக்கியமான நிகழ்வுகள் கவனிக்கப்பட வேண்டியவை. ஒன்று பசுமாட்டை வீட்டிற்கு உள்ளே ஓட்டி வருவது. மற்றொன்று வீடு முழுக்க கோமியம் தெளிப்பது. இவை இரண்டும் தீட்டுக் கழிப்பு நிகழ்வுகள். புது வீட்டில் எதற்காக தீட்டுக் கழிக்க வேண்டும் என நீங்கள் கேட்பது புரிகிறது. இந்த வீட்டைக் கட்டிய தொழிலாளர்களில் சண்டாளர்கள் அதாவது பறையர்கள் இருக்கலாம். வீடு வேலை நடக்கும் போது இவர்களில் யாராவது அங்கு வந்து போயிருக்கலாம். அப்படி அவர்கள் வந்து போனதினாலே வீடு அசுத்தமாகி விட்டது. அதாவது தீட்டாகி விட்டது. இதற்காகத்தான் இந்த நிகழ்வுகள். எனவே மேற்படி முறையில் புது மனை புகு விழா நடத்துவது என்பது ஒரு தீட்டுக் கழிப்பு நிகழ்வே!

இப்படித்தான் நடத்த வேண்டும் என்பது மனு வகுத்து வைத்த சட்டம். மனு சொல்கிறான்.

“வீடு முதலானவற்றிற்கு சண்டாளச் சாதிகளால் அசுத்தம் நேரிட்ட போது விளக்குதல், மெழுகுதல், கோமூத்திரம் தெளித்தல், கொஞ்சம் மேல்மண்ணையெடுத்தப்பாற் போடுதல், பசு மாட்டையொருநாள் வசிக்கும்படி செய்தல் இவ்வைந்தினாலும் அந்த பூமி பரிசுத்தப்படுகிறது”   (மனு 5-124)

மேற்கண்ட முறையில் கிரகப் பிரவேசம் செய்வது தீண்டாமையை கடைபிடிக்கும் ஒரு வன் கொடுமை. அதற்காக இதை ஏற்பாடு செய்த வீட்டு உரிமையாளரையும் செய்து வைத்த ஐயரையும் ஏன் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யக் கூடாது?

இன்று இந்தப் பூசை புனஸ்காரங்களை சண்டாளர்களே செய்வதுதான் ஆகக் கொடுமையிலும் கொடுமை.

முற்றும்.

ஊரான்

குறிப்பு: 1. சண்டாளன் என்பவன் தீண்டத்தகாத பறையன் என்கிறான் மனு. சூத்திர ஆணுக்கும் பார்ப்பன பெண்ணுக்கும் பிறந்தவன்தான் சண்டாளன் (மனு 10-30)

2. மனு 5-124 மிக ஆழமான, நுட்பமான பொருள் கொண்டது. அதை நடைமுறையில் இன்றும் நாம் காண முடியும். இது குறித்து வேறு ஒரு சமயத்தில் விரிவாகப் பேசலாம்.

3. இந்தக் கட்டுரைத் தொடர் நண்பர் ஒருவரின் இல்லத் திறப்பு விழாவில் உரையாற்றுவதற்காக தயார் செய்யப்பட்டது.

தொடர்புடைய பதிவுகள்:

Thursday, 13 June 2019

அண்டகாசுரனும் அடுக்குமாடி குடியிருப்பும்!..... தொடர்-3


மனை வாங்கி, பூமி பூஜை போட்டு, இடைக்கால மின் இணைப்புப் பெற்று, போர் போட்டு, கடைக்கால் எடுத்து, பிளிந்த் போட்டு, சுவர் எழுப்பி, லாப்ட் கட்டி, இங்கே லிண்டில் போட்டு, தளம் அமைத்து, மாடிப்படி அமைத்து, வாசக்கால் ஜன்னல் வைத்து, அவைகளுக்கு கதவுகள் போட்டு, கூடவே செப்டிக் டேங்க் கட்டி, சுற்றுச் சுவர் எழுப்பி, கேட் அமைத்து, ஒயரிங் வேலை முடித்து, தரைக்கு கிரானைட்டோ டைல்சோ போட்டு, பிறகு சுவர்களுக்குப் பட்டிப் பார்த்து, பிரைமர் அடித்து, மீண்டும் பட்டிப் பார்த்து, இறுதி வண்ணம் பூசி–கதவு ஜன்னல்களுக்கும் சேர்த்தே–மின் இணைப்பை நிரந்தரமாக்கினால் வீடு ரெடி. ஆனால் குடி போக முடியுமோ! கூடாது.

மனை வாங்கிய நாள் முதல் வீடு கட்டி முடிக்கப்படும் நாள் வரை இங்கே எத்தனையோ முன் பின் முகம் தெரியா தொழிலாளர்கள் வியர்வை சிந்தி இருப்பார்கள். அவர்களது உழைப்பை நீக்கி விட்டால் அங்கே எஞ்சி இருப்பது வெறும் மண் மட்டும்தான்.

அரையும் குறையுமாக, வெள்ளை அடிக்கும் போதே ஐயரைப் பார்த்து நாள் குறிக்க வேண்டும். ஞாயிற்றுக் கிழமை என்றால் சொந்த பந்தம், சுற்றம் நட்பு புடை சூழ எல்லோரையும் அரவணைக்க நீங்கள் விரும்பலாம். ஆனால் புரோகிதனுக்கு என்றைக்கு சாத்தியமோ அந்த நாளே உமக்கு ஷேமமான நாள் என்பதால் நீரும் அதற்குத் தலையை ஆட்டி, அட்வான்சை தட்டிலே வைத்து ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ள வேண்டும். முழுமையாக முடித்துவிட்டு கிரகப் பிரவேசம் செய்தால் பார்க்கிறவா கண்ணுட பட்டுடுமாம். ஆகவே குறையா இருக்கும் போதேதான் பிரவேசம் நடத்தனுமாம். குறைப் பிரசவத்தை ஜனங்களே ஏற்கும் போது நீர் ஏனய்யா இடையில் வம்புக்கு வருகிறீர்!

ஐயரைப் பார்த்தாச்சு. நாளும் குறிச்சாச்சு. பதட்டம் தொற்றிக் கொள்கிறது. வீட்டிற்காக உழைத்தவனை அழைக்கிறோமோ இல்லையோ சொந்த பந்தங்களில் ஒருவர்கூட விடுபட்டு விடக்கூடாது. நட்பில்கூட எதுவும் மிஸ் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். போட்ட மொய்யை குறைவில்லாமல் மீட்டெடுக்க வேண்டுமல்லவா?

ஐயர் கொடுத்தப் பட்டியலைக் கடைக்காரனிடம் நீட்டினால் ஒரு சிலவற்றை இல்லை என்கிறான். இருப்பதை வாங்கிக் கொண்டு மற்றவைகளையும் பிற கடைகளில் தேடிப் பிடித்து பேரம் பேசி சொஞ்சம் சில்லரைகளை மிச்சப்படுத்திய தெம்போடு திரும்புகிறான். ஐயருக்கு கட்ட வேண்டியதில் பேரம் பேசியிருந்தாலே சில நூறையாவது மிச்சப்படுத்தியிருக்கலாமே! அப்படி எல்லாம் யோசிக்கவே கூடாது. அதெல்லாம் தெய்வக் குத்தம்.

அன்றைய மாறுவேட போட்டிக்குத் தயாராக வேண்டும் என்பதால் வேட்டி ஒன்றையும் கக்கத்தில் இடுக்கிக் கொண்டான். பேண்ட்டோடு பூஜை செய்தால் அண்டகாசுரன் பெண்டு எடுத்து விடுவானல்லவா?

மஞ்சள், கும்குமம், மாவிலை, பூசனி, எலுமிச்சை, அரிசி, அகத்திக் கீரை, தேங்காய், மாங்காய், புளி, லொட்டு, லொசுக்கு என பூஜைக்குத் தேவையான அனைத்தும் ரெடி. கன்றும் பசுவும் வேண்டுமே. எங்கே தேடுவது? எப்படி அவைகளை ஓட்டி வருவது? கவலையே வேண்டாம். ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும். ஒரு தளமானாலும் அடுக்குமாடி குடியிருப்பானாலும் ஏற்றி இறக்க, சாணம் போட, கோமியம் பேய எல்லாவற்றிற்கும் சேர்த்து மொத்தமாய் ஒரு அமௌண்ட்டை கோமாதா அக்கவுண்ட்டில் சேர்த்துவிட்டால் போதும். அமௌண்ட் கொஞ்சம் அதிகம் என்றாலும் அட்ஜஸ்ட் பண்ணித்தான் ஆகணும். கோமாதா இல்லாமல் பூஜை போட்டால் அண்டகாசுரன் சும்மா விடுவானா?

தொடர்புடைய பதிவுகள்

அண்டகாசுரனும் அடுக்குமாடி குடியிருப்பும்!......தொடர்-2
அண்டகாசுரனும் அடுக்குமாடி குடியிருப்பும்!