Wednesday, February 15, 2012

பள்ளி மாணவன் தனது வகுப்பு ஆசிரியரை குத்திக் கொன்றது அதிர்ச்சியான செய்தியா?

15 வயது பள்ளி மாணவன் ஒருவன் தனது வகுப்பு ஆசிரியரையே குத்திக் கொலை செய்கிறான். இச்செயல் சென்னையில் நடந்திருந்தாலும் இதன் 'அதிர்ச்சி' அலைகள் தமிழகத்தைத் தாண்டி இந்தியாவைவே உலுக்கியதாக ஊடகங்கள் ஓயாது செய்திகள் வெளியிட்டன. உளவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் இதன் காரண காரியங்களைக் கண்டறிய பெரும் பாடுபட்டு வருகிறார்கள். இனி இது போன்ற சம்பவங்கள் நிகழக்கூடாது என பலரும் ஆலோசனைகளை அள்ளி இறைக்கின்றனர்.

"ஆசிரியரைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதற்காக இரண்டு பள்ளி மாணவர்கள் கைது செய்யப்டுகிறார்கள். 

"சிறப்பு வகுப்புக்கு வரவழைத்து தொடர்ந்து ஆறு மாதங்களாக தன்னைக் கற்பழித்ததால் தான் கர்ப்பம் அடைந்ததாக பள்ளி மாணவி கொடுத்த புகாரின் பேரில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்படுகிறார்.

"வீட்டுப் பாடம் எழுதவில்லை என்பதங்காக பள்ளிச் சிறுவனை ஆசிரியர் பிரம்மால் அடித்ததால் அச்சிறுவனின் ஒரு கண் பறி போகிறது.

"செய்யாத குற்றத்திற்காக தன்மீது திருட்டுப் பட்டம் சூட்டி தன்னை நிர்வாணப்படுத்தி சோதித்ததால் அவமானத்தால் மனமுடைந்த மாணவி தற்கொலைக்கு முயல்கிறாள்.

"நண்பர்களோடு சேர்ந்து தனது காதலியையே கும்பலாக கற்பழிக்கிறார்கள் கல்லூரி மாணவர்கள்.

"பெற்ற மகளையே வீட்டில் சிறை வைத்து மாதக் கணக்கில் கற்பழிக்கிறான் ஒரு தந்தை. 

"சொந்த சித்தி மகளை அதாவது தனது தங்கையையே காதல் மணம் புரிகிறான் ஒருவன்.

"உயிருக்கு உயிராய் நேசித்த நண்பனுடன் தனது மனைவி தகாத உறவு வைத்துள்ளதைக் கண்டு அதிர்ந்து போகிறான் ஒருவன்.

"கள்ளக் காதலனோடு சேர்ந்து கட்டிய கணவனையே கொலை செய்கிறாள் ஒருத்தி.

"தான் வேறு ஒரு பெண்ணுடன் கொண்டுள்ள கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த மனைவியையே தீர்த்துக் கட்டுகிறான் ஒருவன்.

"செலவுக்குப் பணம் கேட்டு தொல்லை செய்ததால் சொந்த மகனையே கொலை செய்கிறாள் ஒரு தாய்.

"வயலுக்கு நீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகறாரில் சொந்த அண்ணனையே வெட்டிக் கொலை செய்கிறான் ஒரு விவசாயி.

"தொழில் தொடங்க பெற்றோர்கள் பணம் தர மறுத்ததால் சொந்த வீட்டிலேயே நண்பர்கள் உதவியுடன் பணம் நகைகைளைக் கொள்ளையடிக்கிறான் ஒரு மகன்.

"மாமியார் வீட்டு விசேசத்திற்கு வந்த மருமகன், எட்டு பவுன் தங்க நகையை மாமியார் வீட்டு பீரோவிலிருந்து கபளீகரம் செய்கிறான்.

இப்படி நம் வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் எங்கு நோக்கினும் 'அதிர்ச்சி' தரக்கூடிய செயல்கள் அன்றாடம் அரங்கேறி வருகின்றன. இது போன்ற சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளன என்று சொல்லாலாமேயொழிய ஏதோ திடீர் என இப்போது மட்டும் நடப்பவை அல்ல.

ஆதிகால சமூகத்தில் பல்வேறு இனக்குழுக்குள் தங்களுக்குள் அடித்துக் கொள்கிறார்கள். போருக்குப் பின் அரசுகள் தோன்றுகின்றன. தோற்றவர்கள் அடிமைகளாகிறார்கள்.பொருளோடு சிறைபிடிக்கப்பட்ட பெண்களும் மன்னனின் உடைமைகளாகின்றனர். பெண்கள் அனுபவிப்பதற்கான போகப் பொருளாக ஆக்கப்பட்டதால்தான் அன்று அந்தப் புறங்கள் உருவாகின.

அதன் நீட்சியாகத்தான் இன்றும் பெண்கள் போகப் பொருளாக பார்க்கப்படுகின்றனர். போதாக் குறைக்கு முதலாளிகள் பணம் ஈட்டுவதற்காக திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் பெண்களை போகப் பொருளாகவே சித்திக்கின்றனர். பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் மேலும் அதிகரிக்க இவை வழி வகுக்கின்றன.

மாணவனோ-ஆசிரியரோ, விவசாயியோ-தொழிலாளியோ,  பண்ணையாரோ-முதலாளியோ, ஆணோ-பெண்ணோ இவர்களின் மேற்கண்ட குற்றங்கள் யாவும் ஒன்று பணம்-பொருளுக்காகவோ அல்லது காமத்துக்காகவோதான் நடக்கின்றன.

இச்சமூகத்தில் தனக்கும் - தன் சந்ததியினருக்கும் உத்தரவாதமான எதிர்காலம் இல்லை எனக் கருதுகிறான் பணம் பொருளுக்காக குற்றமிழைப்பவன்.  பொருள் ஈட்டுவதில் வெற்றி பெற முடியாத போதும் அல்லது ஈட்டிய பொருளை பாதுகாக்க முடியாதோ என அஞ்சும் போதும் குரூரமாகவும் குறுக்கு வழியிலும் செயல்படத் துணிகிறான். அதன் விளைவு குற்றச் செயலில் முடிகிறது.

இத்தகைய குற்றச் செயல்களிலிருந்து மக்களைக் காக்க பல மகான்கள் உலகெங்கிலும் அவதாரம் எடுத்தார்கள். போதனைகளை வாரி வாரி இறைத்தார்க்ள். மதங்களையும் -மார்க்கங்களையும் தோற்றுவித்தார்கள். புத்தனையும் - ஏசுவையும் - வள்ளுவனையும் - நபிகளையும் பின்பற்றினால் நல்ல சமுதாயம் அமையும் என்று ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் ஓயாமல் போதித்து வருகிறார்கள். ஆனால் சமூகம் மேலும் சீரழிகிறதேயொழிய அவர்களின் போதனைகள் எதுவும் எடுபடவில்லை. மொத்தத்தில் இத்தகைய மகான்களின் போதனைகள் அனைத்தும் தோற்றுப் போயின என்றுதான் சொல்ல வேண்டும்.

உடைமை மாறாத வரை இனி எத்தனை மகான்கள் அவதாரமெடுத்தாலும், ஒழுக்க நெறிகளை ஓயாமல் போதனை செய்தாலும் குற்றங்கள் ஒரு போதும் குறையப் போவதில்லை. 

1 comment: