Friday, 1 May 2026

நமது நம்பிக்கையின் வேர் எது?

நமக்கு ஏன் ஒருவரைப் பிடிக்கிறது?

சிறுவயதில் எனக்கு சிவாஜி கணேசனின் நடிப்பு பிடிக்கும், எம்.ஜி.ஆரைப் பிடிக்காது. ஏன் என்று அப்போது தெரியவில்லை, இப்போதும் தர்க்கரீதியாகச் சொல்லத் தெரியவில்லை.

ஒருவேளை, அந்தக் காலத்தில் நான் வாழ்ந்த சூழலில் சந்தித்த சிக்கல்களுக்குச் சிவாஜி கணேசனின் நடிப்பு ஒருவித ஆறுதலைக் கொடுத்திருக்கலாம்.

விளையாட்டுத் துறையில் அன்று ஃபெடரரை எனக்குப் பிடிக்கும், ஆனால் அவரைத் தோற்கடிக்கும் நடாலையோ, ஜோகோவிச்சையோ பிடிக்காது. இன்று அல்கராஸைப் பிடிக்கும், சின்னரைப் பிடிக்காது. காரணம் அவர்களுடைய உடல் மொழி, நடத்தையாக இருக்கலாம். 


இப்படி நாம் ஒவ்வொருவரும் ஒருவரை ரசிக்கிறோம், இன்னொருவரை ஒதுக்குகிறோம்.  அதற்கான காரணம் நடிப்பாகவோ அல்லது ஆட்டத்திறனாகவோ மட்டும் இருப்பதில்லை; அந்த மனிதர் வெளிப்படுத்தும் ஏதோ ஒரு பாணி, நம் மனதிற்கு நெருக்கமாக இருக்கிறது. இது தர்க்கத்தைத் தாண்டிய ஒருவித ஈர்ப்பு.


கடவுளை நம்புவதற்கான அடிப்படை


சித்ரா பௌர்ணமியில் திருவண்ணாமலையில் சிவனைத் தேடி ஓடும் லட்சக்கணக்கான மக்களில் நாமும் ஒருவராக இருக்கலாம். கள்ளழகர் ஆற்றில் இறங்குவதைப் பார்க்கும் கூட்டத்தில் முண்டியடிக்கும் ஒருவராக இருக்கலாம். எல்லா கடவுள்களும் நல்லவர்கள் என்று சொல்லிக்கொண்டே, ஒரு குறிப்பிட்ட கடவுளை மட்டும் நாம் ஏன் தேடி ஓடுகிறோம்? அந்த நம்பிக்கைக்கு ஏதேனும் அறிவியல் ஆதாரம் உண்டா? இல்லை. ஆனால், அந்த நம்பிக்கை நமக்குக் கொடுக்கும் மன அமைதி, ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. நம் வாழ்க்கையில் வரும் இழப்புகளின் போது, "கடவுள் என்னைக் காப்பார்" என்று நாம் நம்புகிறோம். இது ஒரு தனிப்பட்ட நம்பிக்கை.

நாமே உணராத உளவியல்

சினிமா, விளையாட்டு, கடவுள் நம்பிக்கை, அரசியல் - இவை நான்கும் வெவ்வேறானவை போலத் தோன்றினாலும், மனித உளவியலில் இவை அனைத்தும் ஒரே புள்ளியில்தான் இணைகின்றன. இவை எல்லாமே நம் வாழ்வின் ஆசை, பயம், தனிமை மற்றும் பாதுகாப்பின்மையை நிரப்ப நாம் தேடும் ஒருவகை 'ஆறுதல்' அல்லது 'நம்பிக்கை' தரும் வெவ்வேறு வடிவங்கள்.

ஒரு திரைப்படத்தில் நாம் ஹீரோவை ரசிக்கிறோம், விளையாட்டு வீரரின் ஸ்டைலை ரசிக்கிறோம், கடவுளிடம் நம் துன்பங்களை ஒப்படைக்கிறோம், அரசியல் தலைவரிடம் நம் சமூக எதிர்காலத்தை ஒப்படைக்கிறோம். இந்த நான்கு இடங்களிலும் நாம் தர்க்கத்தைத் தாண்டி, உணர்ச்சிகரமான ஒரு பிம்பத்திடம் (Image) சரணடைகிறோம். நமக்குத் தேவைப்படுவது அந்தத் தலைவரோ, கடவுளோ அல்ல; மாறாக, நமது விருப்பத்தை, ஆசையை, நம் பிரச்சினைகளை அவர் தீர்த்துவிடுவார் என்கிற அந்த நம்பிக்கை தரும் மனநிம்மதிதான்.

ஒரு நடிகரை ஏன் நம்புகிறார்கள்?

இன்று அதே மக்கள், ஒரு தலைவரை அல்லது நடிகரை நம்பும்போது மட்டும், அதை முட்டாள்தனம் என்று வசைபாடுகிறார்கள். கடவுள் நம் சிக்கல்களைத் தீர்ப்பார் என்று நம்புவது 'பக்தி' என்றால், தங்களுக்குப் பிடித்த தலைவர் நம் சிக்கல்களைத் தீர்ப்பார் என்று நம்புவது ஏன் 'அறிவின்மை' ஆகிறது? உண்மையில், கடவுள் மீது வைக்கும் நம்பிக்கையும், நடிகர் மற்றும் தலைவர்கள் மீது வைக்கும் நம்பிக்கையும் ஒரே ஊற்றிலிருந்துதான் வருகின்றன.
இரண்டுக்கும் அடிப்படை உளவியல் ஒன்று தான்; ஆனால் விளைவுகள் வேறுபடும்அடிப்படையற்ற இந்த நம்பிக்கையை, கடவுள் விஷயத்தில் ஏற்பவர்கள், அரசியல் விஷயத்தில் மட்டும் ஏன் நிராகரிக்கிறார்கள்?

அன்று வெண் திரைகளில் மட்டுமே நாயகர்களைக் காண முடிந்தது. திரைகளைக் காண வாய்ப்பு இல்லாத அன்றைய சிறுவர்களுக்கு நாயகர்களைத் தெரியாது. ஆனால் இன்று, வெண் திரைகள் மென்திரைகளாகக் கைக்குள்ளேயே அடங்கி விடுவதால், அன்று எந்த உளவியலால் நாம் நாயகர்களை நேசித்தோமா, அதே உளவியல்தான் இன்று சிறுவர்களையும் ஈர்க்க வைக்கிறது.


வசைபாடுவதால் மாறிவிடுமா?

ஒரு நடிகரின் ரசிகர்களையோ, அல்லது பிற தீவிர ஆதரவாளர்களையோ ‘தற்குறிகள்’ என்று திட்டுவதால் அவர்களின் நம்பிக்கை மாறிவிடாது. அதனால் அவர்களின் நம்பிக்கை மேலும் வலுவாகுமே தவிர, குறையாது. அவர்கள் மாற வேண்டும் என்று விரும்பினால், நாம் செய்ய வேண்டியது என்ன?


ஏளனம் செய்யாதீர்கள்:  அவர்களின் நம்பிக்கையை அவமதிக்காதீர்கள். அது அவர்களின் 'கடவுள்' மீது வைக்கும் நம்பிக்கைக்குச் சமமானது.


கேள்வி கேளுங்கள்: அவர்களுக்குப் புரியும்படி, "புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவார் உங்கள் தலைவர் என்று நீ நம்புகிறாய், சரி. ஆனால், உங்கள் தலைவர் இதை எப்படி நிறைவேற்றுவார்?” என்று மென்மையாகக் கேளுங்கள்.

சிந்திக்கத் தூண்டுங்கள்: நியாயமான கேள்விகளால் அவர்கள் தர்க்கரீதியாகச் சிந்திக்கத் தொடங்கும் போதுதான், அவர்களின் நம்பிக்கை, பிம்பத்திலிருந்து எதார்த்தத்தை நோக்கி நகரும்.


முடிவு

“கடவுளை நம்புவது முட்டாள்தனம்” என்று திட்டுவதை விட, கடவுள் அவர்களது விருப்பத்தை எப்படி நிறைவேற்றுவார் என்று கேட்பதே அவர்களைச் சிந்திக்கத் தூண்டும்.

அதேபோல அரசியலில், நாம் யாரை நம்புகிறோம் என்பது முக்கியமல்ல, எதனால் நம்புகிறோம் என்பதுதான் முக்கியம். கடவுளை நம்புவதற்கும், தலைவரை நம்புவதற்கும் அடிப்படை ஒன்றுதான். எனவே, பிறரின் நம்பிக்கையை ஏளனம் செய்வதை விடுத்து, அந்த நம்பிக்கைக்குப் பின்னால் இருக்கும் 'ஏன்?', 'எப்படி?' என்ற கேள்விகளை அவர்களுக்குள் விதைப்போம்.

அவர்கள் தானாகவே சிந்திக்கத் தொடங்கும் போது, பிம்பங்கள் மெல்ல உடைந்து, உண்மையான தெளிவு பிறக்கும். இதற்கு வசைபாடுதல் குறுக்கு வழி; உரையாடலே உண்மைக்கான வழி.

ஊரான்

குறிப்பு: இந்த உளவியல் ரீதியான பிணைப்புகளுக்குச் சமூக அறிவியலில் வலுவான ஆதாரங்கள் உள்ளன. மனிதர்கள் எதிர்கொள்ளும் வாழ்வின் நிச்சயமற்ற தன்மையிலிருந்து விடுபட ஒரு 'மீட்பரை' நாடுவதை 'பய மேலாண்மைக் கோட்பாடு' (Terror Management Theory) விளக்குகிறது. 

நாம் நேரில் சந்திக்காத தலைவர்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருப்பதாக உணர்வதை 'பாரா-சமூக உறவுகள்' (Parasocial Relationships) என்றும், ஒரு குறிப்பிட்ட குழுவின் அடையாளத்தோடு நம்மை இணைத்துக்கொண்டு நம் சுய மதிப்பைக் கூட்டிக்கொள்வதை 'சமூக அடையாளக் கோட்பாடு' (Social Identity Theory) என்றும் உளவியல் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். 

சுருக்கமாக, வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளத் தயங்கும் நிலையில், தர்க்கத்தைத் தாண்டி ஒரு பிம்பத்திடம் நம் பொறுப்புகளைச் 'சரணடைவது' (Delegation of Agency) என்பது, மனிதன் தன்னைத் தானே பாதுகாத்துக்கொள்ளத் தேர்ந்தெடுத்த ஒரு பரிணாம உளவியல் உத்தியாகும்.