Friday, September 27, 2024

ஷேர் ஆட்டோவும் பூக்கார அம்மாவும்!

புறவழிச்சாலைகள் வந்த பிறகு பெரும்பாலான ஊர்களுக்குள் தொலைதூரப் பேருந்துகள் நுழைவதே இல்லை. எல்லாம் பைபாஸ்கள்தான்.

வேலூர்-பெங்களூரா, வாணியம்பாடிக்குள் நுழையாது. நல்ல வேளை, வேறு வழி இல்லாததால் ஆம்பூர் மட்டும் தப்பியது.

வேலூர்-சென்னையா, விஷாரம், ஆற்காடு, இராணிப்பேட்டை, வாலாஜா-விற்குள் நுழையாது. ஆரணி-சென்னைகூட இராணிப்பேட்டை, வாலாஜாவை ஓரங்கட்டுகிறது.

புறக்கணிப்படும் இந்த ஊர்கள் எல்லாம் என்ன சிற்றூர்களா? எல்லாமே நகராட்சிகள்தான். பல்லாயிரக்கணக்கானோர் வசிக்கும் இவ்வூர்களிலிருந்து, பிற ஊர்களுக்கு அன்றாடம் நூற்றுக்கணக்கானோர் பயணித்தாலும், போகும் போது பைபாசுக்குப் போக வேண்டும், வரும் போது பைபாசில் இறங்கிக் கொள்ள வேண்டும்.  
கோப்புப் படம்

நகரிலிருந்து பைபாசுக்கும் பைபாசிலிருந்து நகருக்கும் போக-வர ஷேர் ஆட்டோக்களை விட்டால் வேறு நாதி இல்லை? பகல் என்றால் இருபது ரூபாயில் முடிந்து விடும். இரவென்றால் அதுவே நூறைத் தாண்டும்.
 
அதே போல, சாலைகள் மேம்படுத்தப்பட்டதால், நகரங்களை இணைக்கும் பேருந்துகள் எதுவும் சிற்றூர்களில் நிற்பதில்லை.
 
முன்பெல்லாம், பள்ளி-கல்லூரி செல்வோர், வேலைக்குச் செல்வோர், கடைகளுக்குச் செல்வோர் என பலரும் பேருந்துகளை நம்பி இருந்ததால் நகரப் பேருந்துகள் கணிசமாக இயக்கப்பட்டன. இன்று இருசக்கர வாகனங்கள் அதிகரித்துவிட்டதால் சொற்பமானோரே நகரப் 
பேருந்துகளில் பயணிக்கின்றனர். பெருநகரப் பேருந்துகள் இதில் விதிவிலக்கு.
 
அந்த சொற்பமானோரில் பலர், ‘பிங்க்மகளிர் என்பதாலும், மற்றும் வேறு வழியின்றி பயணிக்கும் என்னைப் போன்ற ஒரு சில ஆண்கள் மட்டும்தான் என்பதாலும், நகரங்களையும் கிராமங்களையும் இணைக்கும் பேருந்துகளைக் கணிசமாகக் குறைத்துக் கொண்டு விட்டனர்.
 
இதனால், நகரிலிருந்து சிற்றூர்களுக்குச் செல்லும் நகரப்பேருந்துகளும் அத்திப் பூக்களாகிவிட்டன. அதனால், இங்கேயும் ஷேர் ஆட்டோக்களைத்தான் நாடவேண்டும்.
 
இப்படித்தான், கடந்தவாரம் ஒரு நாள், கிராமம் செல்வதற்காக ஷேர் ஆட்டோவை நாடினேன். ‘கத்திலி, கந்திலி என ஆட்டோ ஓட்டுநர் கூவிக்கொண்டிருந்தாரே ஒழிய, கூட்டம் சேர்ந்த பாடில்லை. பத்து பேருக்கு மேல் இருந்தால்தான் ஆட்டோ நகரும் என அவர் நங்கூரம் போட்டுவிட்டார்

அரை மணிநேரம் ஆச்சு. ஒவ்வொருவராகச் சேரச்சேர ஏழு பேர் ஆச்சு.  எடுக்க மாட்டாரா?’ என எனக்குள் ஒரு ஏக்கப் பெருமூச்சு!
 
நம்மைக் காக்க வைப்பது டெல்லிக்காரனா, இல்லை இந்த ஆட்டோக்காரரா என்றெல்லாம் யோசிப்பதற்கு யாருக்கும் நேரம் இல்லை என்பதால், ‘இதெல்லாம் வேலைக்கு ஆகாதுஎன, சேர்ந்த ஏழுபேரில் நான்குபேர் நடையைக் கட்ட, ‘ஏழு பேர் இருக்கும் போதே எடுத்திருக்கலாமே?’ என ஓட்டுநரிடம் நான் குரல் கொடுக்க, ‘அதெல்லாம் கட்டாதுங்க, டீசல் விக்கிற வெலையில என்றார்.
 
ஒரு மணி நேரமாச்சு. மூத்திரம் வேறு முட்டிக் கொண்டிருந்தது. நகரம் என்றால் நவ துவாரங்களில் சிலவற்றை கட்டுக்குள் வைத்திருக்கத் தெரிந்திருக்க வேண்டும். இல்லையேல் பொழப்பு நாரிடும். அதுவும் நரை தட்டியவர்களுக்கு இது ஒரு பெரும்பாடு.
 
ஒரு மணி‌நேரம் கழித்து, ஒரு வழியாய் பத்து பேருக்கு மேல் சேர்ந்த பிறகு ஆட்டோ வேகமெடுத்தது.
 
ஒரு மணி நேரம் எப்படி கழிந்தது எனக்கு? கொஞ்ச நேரம் ஆட்டோவில் உட்கார, கொஞ்ச நேரம் எழுந்து நடமாட, இப்படியாக நேரம் ஓடியதுவந்த உடனேயே அருகில் உள்ள கடையில் ஒரு தேநீரை இறக்கியதால் அடுத்த தேனீருக்கு நாட்டம் இல்லை. நாம் என்ன இளவட்டமா எகிறி விழ, அறுபந்தைத் தாண்டிய பழமாச்சே? அதனால் இதெல்லாம் பழகிப் போச்சு!
 
ஆனாலும், சாலை ஓரம் பூக்கடையில் இருந்த பூக்கார அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
 
தொடரும்.
 
ஊரான்

No comments:

Post a Comment