Monday, 27 August 2012

பொறாமை!


பழனியப்பனுக்கு வயது 54. சென்னை-கொரட்டூரில் உள்ள தனியார் காகித உற்பத்தி ஆலையில் பணிபுரிபவர்அம்பத்தூருக்கு அருகில் உள்ள கருக்கு கிராமத்தில் தனது மனைவி நாகவள்ளியுடன வசித்து வருகிறார். நாகவள்ளிக்கு வயது 50. முப்பது வயதிலேயே விவாகரத்து வாங்கிக் கொண்ட மகள் ராஜேஸ்வரியும் இவர்களோடுதான் தங்கியுள்ளார்.

சென்னைவாசி என்றாலும் பழனியப்பனுக்கு வாழ்க்கை வெறுத்துவிட்டது. சென்னையின் விலைவாசியோபோக்குவரத்து நெரிசலோஜெயாவின் பேருந்து கட்டண உயர்வோ இவரது வெறுப்புக்குக் காரணமில்லை. நிரந்தரமான வருவாய் இருந்தும் வாழ்க்கையில் நிம்மதி இல்லை. நிம்மதியைத் தேடி இவர் அடிக்கடி கோவில் கோவிலாக வெளியூருக்கு யாத்திரை சென்றுவிடுவார்.

பக்தி முத்தியதாலோ அல்லது ஆன்மீக நாட்டத்தாலோ இவர் யாத்திரை செல்வதில்லை. பக்கத்து வீட்டுக்கார்களுடன்  தனது மனைவி அடிக்கடி சண்டை போடுவதை சகிக்க முடியாமல்தான் பழனியப்பன் யாத்திரை சென்றுவிடுகிறார்

இப்படி ஒரு முறை யாத்திரை முடிந்து வீட்டிற்குள் நுழைந்தாரோ இல்லையோ தனது சண்டைக்கு ஆதரவாகப் பேச வேண்டும் என வலியுத்துகிறார் நாகவள்ளி. அதற்கு பழனியப்பன் மறுக்கிறார். அது மட்டுமல்ல, அண்டை வீட்டுக்காரர் தனது மனைவி மீது புகார் கொடுக்க காவல் நிலையம் சென்ற போது பழனியப்பனும் உடன் சென்றதாகத் தகவல். அதனால் ஆத்திரம் அடைந்த நாகவள்ளி கணவனைத் திட்டித் தீர்க்கிறார்

பழனியப்பனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை; ஆத்திரமடைகிறார். வீட்டில் இருந்த கடப்பாரையால் மனைவியின் மண்டையைப் பிளக்கிறார். பலத்த அடிபட்ட நாகவள்ளி சற்று நேரத்தில் மாண்டு போகிறார். பிறகு தனது மகள் ராஜேஸ்வரியையும் பழனியப்பன் கொலை செய்கிறார்

இது கதையல்ல. சென்னையில் நடந்த உண்மைச் சம்பவம்.

இங்கே கொலை செய்கிற அளவுக்குச் செல்வது அசாதாரணமானதுதான். ஆனால் அக்கம் பக்கத்து வீட்டாருடன் சண்டை என்பது இச்சமூகத்தில் மிகச் சாதாரணமானது.

இத்தகைய சண்டை-சச்சரவுகளுக்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது பொறாமை

"Neighbour's envyOwner's Pride" இது ஒனிடா (ONIDA) நிறுவனத்தின் பிரபலமான விளம்பரம். அதாவது ஒனிடா நிறுவனத்தின்  தொலைக்காட்சி உள்ளிட்ட எந்தப் பொருளை ஒருவர் வைத்திருந்தாலும் அது "அண்டை வீட்டுக்காரரின் பொறாமை; (பொருளின்) சொந்தக்காரரின் பெருமை" என பறை சாற்றிக் கொள்ளலாம் என்பது அதன் பொருள்.

இந்தப் பொறாமை அண்டை வீட்டாரோடு நிற்பதில்லை.

Neighbour என்ற ஆங்கிலச் சொல்லிற்கு -
அயலவர்
அருகிலுள்ளவர்
அக்கம் பக்கத்திலுள்ளவர்;
அண்டை வீட்டார்
அடுத்திருப்பவர்
அடுத்த தெருவினர்;
பக்க ஊரினர்
அண்டை நாட்டினர்
என சென்னை பல்கலைக்கழக "ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியம்" பொருள் கூறுகிறது.

இதில் அண்டை மாநிலத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், இதே Neighbour க்கு அதே சொற்களஞ்சியத்தில்
நட்புணர்ச்சியுடையவர்:
பாசமுடையவர்
பாசத்துக்குரியவர்
என்றும் பொருள் கூறப்பட்டுள்ளது.

மொத்தத்தில் Neighbour யாராக இருந்தாலும் நட்போடும், பாசத்தோடும் இருக்க வேண்டும் என பொருள் கொள்வதே பொருத்தமானதாக இருக்க முடியும்.
பாசத்தோடும் நட்போடும் பழக வேண்டியவர்களை ஒனிடா வந்து பொறாமை கொள்ள வைத்துவிட்டதோ!  ஆனால் ஒனிடா பொருள் இல்லாத போதும் பொறாமை குடி கொண்டுள்ளதே,  அண்டை வீட்டாருடன் சண்டை சச்சரவுகள் நீடிக்கின்றனவே! என்ன காரணம்?

மண்ணும் – நீரும், விதைத்திருக்கிற நெல்லும் ஒன்றே ஆனாலும் அண்ணனின் நிலத்தில் அதிக விளைச்சல் என்றால் தம்பிக்குப் பொறாமை.

தான் வளர்க்கும் பசு சினைகூட பிடிக்காத போது பங்காளியின் பசு இரண்டு கன்றுகளை ஈன்றால் அங்காளிக்குப் பொறாமை.

கோயில் - குளம் எனச் சுற்றித் திரிந்தாலும் தன் வயிற்றில் ஒரு புழு - பூச்சிகூட தங்காத போது நாத்தனாருக்கு மட்டும் பத்து மாதத்தில் அழகியக் குழந்தை - அதுவும் ஆண் குழந்தை பிறந்து விட்டால் மதனிக்குப் பொறாமை.

நேற்றுவரை நட்பாய் இருந்த பள்ளித் தோழன் திடீரென தொடர்பைத் துண்டித்துக் கொள்கிறான். இருவரும் வேறு வேறு கல்லூரிகளில் படித்திருந்தாலும் பள்ளிக்கூட நட்பை விடாமல் தொடர்ந்தவர்கள். இருவருக்குமே வேலை கிடைக்காத வரை நட்பு தொடர்கிறது. ஒருவனுக்கு மட்டும் வேலை கிடைத்துவிட்டால் மற்றவனுக்கு பொறாமை. பள்ளிக்கூட நட்பும் அத்தோடு முடிவுக்கு வருகிறது.
ஒரே படிப்பு; ஒரே நிறுவனத்தில் வேலை. ஆனால் பதவி உயர்வில் தன்னை மிஞ்சும் சக ஊழியன் மீது பதவி உயர்வு கிடைக்காதவனுக்குப் பொறாமை.

வேலைக்குச் சேர்ந்து முப்பது ஆண்டுகள் ஆனாலும் சொந்தமாய் ஒரு வீடு இல்லையே என ஏங்கிக் கொண்டிருக்கும் ஆலை ஊழியருக்கு வேலைக்குச் சேர்ந்த மூன்றே ஆண்டுகளில் உடன் பணிபுரியும் சக தொழிலாளி சொந்தமாய் ஒரு வீடு வாங்கி விட்டால் சொந்த வீடு கனவு காணும் ஆலைத் தொழிலாளிக்குப் பொறாமை.

தனது மகன் நாற்பது மதிப்பெண்கள் பெறுவதற்கே திண்டாடும் போது பக்கத்து வீட்டுப் பையன் எண்பது மதிப்பெண்கள் எடுத்தால் அவன் மீது நாற்பது மதிப்பெண்கள் பெற திண்டாடும் மாணவனின் தாய்க்குப் பொறாமை.

தான் ஒருதலையாய் காதலிக்கும் கல்லூரி மாணவி வேறு ஒருவனை நேசிக்கிறாள் என்று தெரிந்தவுடன் அவன் மீது இவனுக்குப் பொறாமை.

‘அழகாய்’ இருக்கும் சக மாணவி மீது ‘அழகில்லாத’ கல்லூரி மாணவிக்குப் பொறாமை.

கேசவர்த்தினிகளைத் தேய்த்துத் தேயத்து கூந்தலை வளர்க்க முயன்று தோற்றுப் போனவர்கள் நீண்ட கூந்தல் உள்ளவர்களைப் பார்த்து பொறாமை.

மீசை வளராத காளைகளுக்கு அரும்பு மீசைக்காரனைப் பார்த்தால் பொறாமை.

தங்களது தெருவுக்கு கிடைக்காத சாலை-மின்விளக்கு-ரேசன் கடை-குடிநீர்க் குழாய் உள்ளிட்ட வசதிகள் அடுத்தத் தெருக்காரனுக்கு கிடைக்கும் போது வசதிகள் கிடைக்காத தெருக்காரனுக்குப் பொறாமை.

பொங்கல் விழாவையொட்டி தங்களது ஊரில் நடந்த கபடிப் போட்டியில் அடுத்த ஊர்க்காரர்கள் கோப்பையைத் தட்டிச் சென்றால் போட்டி நடத்திய ஊர்க்காரர்களுக்கு கோப்பையை தட்டிச் சென்ற ஊர்க்காரர்கள் மீது பொறாமை.

அண்ட வந்த அடுத்த மாநிலத்துக்காரன் வசதியில் தன்னை விஞ்சும் போது மண்ணின் மைந்தனுக்குப் பொறாமை.

கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றுவிட்டால் பாகிஸ்தான் மீது இந்தியனுக்குப் பொறாமை.

பொறாமை என்று வந்துவிட்டால்……

சளித்தொல்லையால் அவதிப்படும் பக்கத்து வீட்டுக் குழந்தையின் இருமலும் தும்மலும் கூட இவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.

எங்கோ இருந்து காற்றில் மிதந்து வரும் தலைமுடிகூட இது மேல்வீட்டுக்காரி வேண்டும் என்றே நம்மீது போட்டது என முடிவு செய்து கீழ் வீட்டுக்காரி மேல்வீட்டுக்காரியை சண்டைக்கு இழுக்கிறார்.

பள்ளத்தை நோக்கி வழிந்தோடும் மழை நீர் தன்வாசல் பக்கம் எப்படி வரலாம் என பக்கத்து வீட்டுக்காரரை சண்டைக்கு இழுப்பவர்களும் தெருவுக்குத் தெரு இருக்கிறார்கள்!

காற்றில் கரைந்து காணாமல் போகும் அடுப்புப் புகைகூட அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் தன்னை காரணமாக வைத்து சண்டையிட்டுக் கொள்வதைப் பார்க்கும் போது வழி தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது.

மேல் வீட்டுக்காரனின் பிஞ்சுக் குழந்தையின் மெல்லிய காலடிகள்கூட கீழ் வீட்டுக்காரனுக்கு பேரிடியாய் எதிரொலிக்கிறது.

தற்செயலாய் கை தவறி விழும் தேனீர்க் குவலையின் ஓசைகூட கீழ்வீட்டுக்காரனின் காதுகளை செவிடாக்கி விட்டதாக மாடியில் குடியிருப்பவனிடம் கூப்பாடு போடுகிறான்.

எங்கு நோக்கினும் பொறாமை…..

அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை, மாமியார்-மருமகள், நாத்தனார்கள் என எந்த உறவையும் இந்தப் பொறாமை விட்டு வைக்கவில்லை.

பக்கத்து வீடு - எதிர் வீடு,  மேல்வீடு - கீழ்வீடு, அடுத்த தெரு - அடுத்த ஊர், அண்டை மாநிலம் - அண்டை நாடு என சமூகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஊடுருவி இருக்கிறது இந்தப் பொறாமை.

பாமரன் முதல் படித்தவன் வரை,  ஏழை முதல் பணக்காரன் வரை, சிறுவர் முதல் முதியவர் வரை இப்படி ஆண் - பெண் பால் வேறுபாடின்றி எங்கும் இந்தப் பொறாமை வியாபித்திருக்கிறது.

பள்ளி - கல்லூரி மாணவர்கள்,  தொழிலாளி - முதலாளி, அதிகாரி - ஊழியர், விவசாயி - வியாபாரி என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைவரையும் ஆட்டிப் படைக்கிறது இந்தப் பொறாமை.

இப்படி அயலவர்அருகிலுள்ளவர்அக்கம் பக்கத்திலுள்ளவர்; அண்டை வீட்டார்அடுத்திருப்பவர்அடுத்தத் தெருவினர்; அடுத்த ஊரினர்அண்டை நாட்டினர் என யாராக இருந்தாலும் ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொள்வது ஆகப் பெரும்பாலானோரிடம் நிலவுகிறது. இத்தகையப் பொறாமை மனதளவில் மட்டும் நில்லாமல் சண்டை - சச்சரவுகளுக்கு இட்டுச் செல்கிறது.

இத்தகைய பொறாமையின் காரணமாக பக்கத்து வீட்டுக்கார்களுடன்  தனது மனைவி அடிக்கடி சண்டை போடுவதை சகிக்க முடியாமல்தான் பழனியப்பன் தனது மனைவி நாகவள்ளியை கொலை செய்கிறார்.

பொறாமைக்கு ஆட்படாதவர்கள் சொற்பமே. ஆகப் பெரும்பாலானோரை ஆட்டிப் படைக்கும் இந்தகையப் பொறாமை குணம் மக்களிடையே எப்போதிருந்து குடி கொண்டிருக்கிறது?

கலி முத்திவிட்டது; அதனால்தான் கேடுகளும் அதிகரித்துவிட்டன என்று பேசுவதை இன்றும் நாம் கேட்க முடிகிறது. பழங்காலத்தில் அதாவது கலி முத்தாத காலத்தில் குற்றங்கள் குறைவாக நடந்தன; இன்று அவைகள் அதிகரித்துவிட்டன என்பதுதான் அதன் பொருள். பழங்கால புராணங்களையும், நீதி போதனைகளையும்,  மதக் கோட்பாடுகளையும் புரட்டினால்தான் எது உண்மை என்பது விளங்கும்.

மகாபாரதத்தில் பொறாமை

பொறாமை குணம் பல்வேறு தீய செயல்களுக்கும் பல்வேறு குற்றங்களுக்கும் அடிப்படையான காரணமாக இருக்கிறது. “புள்ளத்தாச்சியப் பாத்து புள்ள இல்லாதவ தன் வயித்த உலக்கையால் இடித்துக் கொள்வாளாம்”  இது இன்றும் கிராமப்புறங்களில் நிலவும் பிரபலமான வழக்கு மொழி. பொறாமையின் ஒருவகை வெளிப்பாடு இது. இவளுக்குப் பிள்ளை இல்லை என்பதற்காக அடுத்தவள் பிள்ளை பெறுவதைப் பார்த்து ஏன் உலக்கையால் தன் வயிற்றை இடித்துக் கொள்ள வேண்டும்? இந்த எண்ணம் எதனால் வருகிறது? யார் இப்படி எல்லாம் செய்யச் சொல்லி தூண்டினார்கள்? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.

பாண்டு மன்னன் தன் மனைவி குந்தியுடன் வேட்டையாட வனத்திற்குச் செல்கிறார். சில காலம் அவர்கள் காட்டிலேயே வேட்டையாடி வருகின்றனர். அஸ்தினாபுரத்தில் ஆட்சி செய்து வரும் திருதராட்டிரனின் மனைவி கருவுற்றிருந்தாலும் இரண்டு ஆண்டுகளாக குழந்தை பிறக்கவில்லை. அதே வேளையில் வனத்தில் இருந்த குந்திக்கு குழந்தை பிறக்கிறது. இதைக் கேள்விப்பட்டு பொறாமை கொண்ட காந்தாரி தன் வயிற்றை ஓங்கி குத்துகிறாள். அப்பொழுது தன் வயிற்றிலிருந்து மாமிசப் பிண்டம் ஒன்றை பெற்றெடுக்கிறாள். இந்தப் பிண்டத்திலிருந்துதான் துரியோதனன்,  துச்சாதனன் என அண்ணன் தம்பிகள் நூறு பேர் வந்தார்கள் என்பது தனிக்கதை.

இளவரசனாக வேண்டும் என்பது துரியோதனனின் ஆசை. ஆனால் வயதில் மூத்தவன் தருமன். அவனே அப்பதவிக்கு உரியவன். அதனால் தான் இளவரசனாக முடியாது என்பதாலும் பீமன் முரடனாக இருப்பதாலும் இவர்கள் மீது துரியோதனன் வெறுப்பையும் பொறாமையையும் வளர்த்து வந்தான்.

ஒரு குறிப்பிட்ட நாளில் தருமனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைக்கிறான் திருதராட்டிரன். பாழடைந்து கிடக்கும் காண்டவப் பிரஸ்தம் அவனுக்கு ஒதுக்கப்படுகிறது. பிறகு காண்டவப் பிரஸ்தம் புதுக்பிக்கப்பட்டு இந்திரப் பிரஸ்தம் எனும் புதிய பெயர் பெற்று மிளிர்வதைக் கண்ட கௌரவர்களுக்கு பாண்டவர்கள் மீது வெறுப்பும் பொறாமையும் உருவெடுக்கலாயின.

வில்வித்தை கற்பதற்கு கீழ்சாதிக்காரனுக்குத் தகுதி கிடையாது என துரோணாச்சாரியால் ஏகலைவன் விரட்டப்படுகிறான். ஆனால் எப்படியாவது வில்வித்தை கற்க வேண்டும் என்கிற ஆவலால் துரோணாச்சாரி பாண்டு மற்றும் திருததாட்டிரனின் புதல்வர்களுக்கு கற்றுக் கொடுப்பதை மறைவிலிருந்து பார்த்தே கற்றுக் கொண்ட ஏகலைவனின் திறமை கண்டு பொறாமை கொண்ட துரோணாச்சாரி ஏகலைவனின் கட்டை விரலை குருதட்சணையாகப் பெற்றுக் கொண்டு அவனை முடமாக்குகிறான்.

பாண்டவர்களை ஓர் ஆண்டு வனத்திற்கு அனுப்ப துரியோதனன் செய்த சதித்திட்டத்திற்கு திருதராட்டிரன் அனுமதி வழங்கியதே பாண்டு புதல்வர்கள் மீது திருதராட்டிரன் வைத்திருந்த பொறாமையே காரணம்.

இராமாயணத்தில் பொறாமை

கோசல நாட்டு ‘சக்ரவர்த்தி’ தசரதனுக்கு 350 மனைவிகள் இருந்ததாக கதைகள் சொல்கின்றன. அவர்களில் கௌசல்யாவுக்கு இராமனும் கைகேயிக்கு பரதனும் சுமித்ராவுக்கு இலட்சுமணன்-சத்ருக்கன என்கிற இரட்டையர்களும் பிள்ளைகள். இராமனுக்கு முடிசூட்டப்படக்கூடாது என்று பொறாமை கொண்ட கைகேயி தசரதனிடம் வரங்களைப் பெற்று இராமனை வனவாசத்திற்கு அனுப்பியதால் தனது மகன் பரதனுக்கு முடிசூட்டப்படுகிறது.

பொறாமை படைத்துள்ள தம்பி ஒருவன் நெருக்கடியான நேரத்தில் ஆக்கம் படைத்துள்ள தன்னுடைய அண்ணாவை  அடியோடு கவிழ்த்து விடுகிறான். விபீடணா, இப்பொழுது உன்னைச் சிதைத்துவிட எனக்கு இயலும். ஆயினும் உடன் பிறந்தவன் என்னும் ஒரே காரணத்தை முன்னிட்டு உன்னை நான் விட்டுவிடுகிறேன். என் காட்சியினின்று இக்கணமே மறைந்துபட்டுப்போ” இது இராவணன் விபீடணனைப் பார்த்துக் கூறியது.

இந்துக்களின் இதிகாசங்களாப் போற்றப் படும் இராமயணமும் மகாபாரதமும். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு இறுதி வடிவம் பெற்றதாகத் தெரிகிறது. இராமயணமும் மகாபாரதமும் நடந்த கதைகளா அல்லது கற்பனைகள் கலந்து புனையப்பட்ட கதைகளா என்கிற வாதங்கள் ஒரு புறம் இருந்தாலும் இவற்றில் சொல்லப்பட்டுள்ள பொறாமை உள்ளிட்ட பல கருத்துகள் அன்றைய சமூத்தில் நிலவியவை என்பதை நாம் கருத்தில் கொள்வதே இங்கு முக்கியம்.

பௌத்தத்தில் பொறாமை

இராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாச கதாபாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள பொறாமை குணம் அன்றைய சமூகத்தில் நிலவியவை என்பதை முன்னறே கண்டோம். அதேபோல பொளத்த இலக்கியங்களிலும் இத்தகைய பொறாமை மக்களிடையே நிலவியதைக் காணமுடிகிறது.

பேராசை, பகைமை, மயக்கம், செருக்கு, பொறாமை முதலிய தீய மனப்பான்மைகளை பௌத்த ஓவியக்கலைகளில் காணமுடிகிறது. பௌத்த ஓவியக்கலையில் இந்தக்காட்சிகளை ஓவியர்கள் அற்புதமாக வரைந்திருக்கிறார்கள். 

வள்ளுவத்தில் பொறாமை

பொறாமை இல்லாமல் வாழ்வதே சிறந்த ஒழுக்க நெறி எனவும்,

பொறாமை இல்லாமல் இருப்பதே பெரிய பேறு எனவும்,

பொறாமைப் படுவது தனக்கே தீங்கைத் தரும் எனவும்,

அறிவுடையோன் பொறாமை கொண்டு அறன் அல்லாதவற்றைச் செய்யமாட்டான் எனவும்,

பொறாமைதான் ஒருவனுக்கு மிகப் பெரிய பகை எனவும்,

பிறருக்குத் தரும் பொருளைக் கண்டு பொறாமைப் படாதே எனவும்,

பிறர் ஆக்கங் கண்டு பொறாமைப்பட்டால் அது உன்னை வறியவனாக்கிவிடும் எனவும்,

பொறாமை என்கிற பாவி உன்னை நரகத்தில் தள்ளிவிடும் எனவும்,

பொறாமைப் படுபவனின் செல்வமும் - பொறாமையற்றவனின் வறுமையும் / துன்பமும் எதனால் என ஆராயப்படும் எனவும்,

பொறாமைப்பட்டால் பெருமையடைய முடியாது எனவும்

அழுக்காறாமை என்கிற தலைப்பில் வள்ளுவன் பொறாமை குறித்து பேசியுள்ளதைப் பார்க்கும் போது பௌத்தத்தைத் தொடர்ந்து சமணம் கோலோச்சிய காலத்தில் அதாவது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் மக்களிடையே நிலவிய பொறாமை குணம் எந்த அளவுக்கு குடிகொண்டிருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

பைபிளில் பொறாமை:

“ஈசாக்கு பயிர்த்தொழில் மூலம் நூறு மடங்கு அறுவடை செய்து செல்வத்துக்கு மேல் செல்வம் சேர்த்து பெரும் செல்வந்தராகியதைப்பார்த்து பெலிஸ்தியர் அவர் மீது பொறாமை கொண்டனர். ஈசாக்கின் தந்தை அபிரகாம் காலத்தில் தோண்டிய கிணறுகளையெல்லாம் பெலிஸ்தியர் மண்ணால் நிரப்பித் தூர்த்துவிட்டனர்.” (தொடக்க நூல்: 26: 12-15)

“சினம் கொடியது; சீற்றம் பெருவெள்ளம் போன்றது; ஆனால் பொறாமையின் கொடுமையை எதிர்த்து நிற்க யாரால் இயலும்?” (நீதி மொழிகள்: 27: 4)

‘மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும். ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபச்சாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு, ஆகியவற்றைச் செய்யத்தூண்டும் தீய எண்ணெங்கள் வெளிவருகின்றன.” (மாற்கு: 7:21-22)

“வீண் பெருமையைத் தேடாமலும், ஒருவருக்கு ஒருவர் எரிச்சல் ஊட்டாமலும், ஒருவர் மீது ஒருவர் பொறாமைப்படாமலும் இருப்போமாக!” (கலாத்தியர்: 5:26)

”உங்கள் உள்ளத்தில் பொறாமையும், மனக்கசப்பும், கட்சி மனப்பான்மையும் இருக்குமானால் அதைப்பற்றிப் பெருமை பாராட்ட வேண்டாம், உண்மையை எதிர்த்துப் பொய் பேச வேண்டாம்” (யாக்கோபு: 3:14)

”ஆண்டவர் எத்துணை இனியவர் என்பதை நீங்கள் சுவைத்திருந்தால், எல்லா வகையான தீமையையும் வஞ்சகத்தையும் வெளிவேடம், பொறாமை, அவதூறு ஆகிய யாவற்றையும் அகற்றுங்கள்;” (பேதுரு: 2 1-3)
திருவிவிலியம் நெடுகிலும் இப்படி பொறாமை பற்றி ஏராளமான வசனங்கள் வருகின்றன. கி.மு 2000 லிருந்து கி.பி 95 வரையிலான காலகட்டத்தில் கிருத்தவம் பரவிய மத்திய தரைக்கடலையொட்டிய நாடுகளில் மக்களிடையே நிலவிய பொறாமை குறித்து நாம் அறிய முடிகிறது. இயேசுநாதரும் அதன்பிறகு வந்த பல்வேறு நற்செய்தியாளர்களும் இப்பொறாமை குணத்தை விட்டொழிக்குமாறு மக்களுக்கு போதித்தனர்; இன்றளவும் போதகர்கள் போதித்து வருகின்றனர்.

குர்ஆனில் பொறாமை

மற்றொருவன் தன்னைவிட அறிவாளியாக இருப்பதைப் பார்த்தோ அல்லது அவன் தன்னைவிட வசதியான வாழ்க்கை வாழ்வதைப் பார்த்தோ பொறாமை கொள்வது அல்லாவின் ஏற்பாட்டில் குறைகாண்பதாகும் எனவும், பொறாமை கொள்வது நல்வழிப் பெறுவதையும் தடுத்துவிடும் எனவும், பொறாமை கொள்பவனின் தீங்கைவிட்டு அல்லாவிடம் பாதுகாப்புத் தேடுவது குறித்தும் பல்வேறு வசனங்கள் குர்ஆனில் இடம் பெற்றுள்ளன.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் அரேபிய சமூகத்தில் மக்களிடையே பொறாமை குணம் நிலவியதை குர்ஆன் வசனங்கள் உறுதி செய்கின்றன.   

பொறாமை குறித்து விவேகானந்தர்

பகை, பொறாமை, ஆகியவற்றை நீ வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்! என்று விவேகானந்தர் குறிப்பிடுவது தற்காலத்திலும் பொறாமை குணம் நிலவுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.

உபதேசங்களால் பொறாமை அகலுமா?

புராண இதிகாச காலந்தொட்டு இன்று வரை பொறாமை குணம் மக்களிடையே வேரூன்றி உள்ளது. இந்து – பௌத்தம் - கிருத்தவம் – இஸ்லாம் உள்ளிட்ட மத போதனைகளாலும், திருக்குறள் உள்ளிட்ட நீதி நூல்களாலும் பொறாமை குணத்தை மக்களிடமிருந்து விரட்ட முடியவில்லை.

பொறாமை குணம் ஒரு குறிப்பிட்ட தனிமனிதனின் உள்ளத்திலிருந்து தானாக உருவாகும் குணம் அல்ல; பேராசை, பொறாமை, சோம்பல், உழைப்பில் வெறுப்பு ஆகிய அருவருக்கத்தக்க கெட்ட குணங்கள் உழைப்பாளி மக்களை தொற்றிக் கொள்ளச் செய்தது பூர்ஷ்வா சமுதாயம்தான் - அதாவது சொத்துடமைச் சமுதாயம்தான் என்பதை "நான் எவ்வாறு எழுதக் கற்றுக்கொண்டேன்" என்கிற நூலில் மாக்ஸிம் கார்க்கி அவர்கள் அழகாக சுட்டிக்காட்டுகிறார். எனவே ஏற்றத்தாழ்விற்கு வழி வகுக்கும் சொத்துடமைச் சமுதாயம் நீடிக்கும் வரை பொறாமை குணமும் நீடிக்கும். உபதேசங்களால் பொறாமை குணத்தை ஒழிக்க முடியாது என்பதைத்தான் வரலாறு நமக்கு உணர்த்துகிறது. மாறாக ஏற்றத்தாழ்வான இச்சொத்துடமைச் சமுதாயத்தை மாற்றியமைக்கும் போராட்டத்தினூடாகத்தான் பொறாமை குணத்தையும் மக்களிடமிருந்து அகற்ற முடியும்.

----------------------------------------------
குறிப்பு: "அண்டை வீட்டுக்காரரின் பொறாமை!" என்ற தலைப்பில் தொடராக வெளியிட்ட கட்டுரையை கடைசி பாராவில் சில திருத்தங்களைச் செய்து மறு வாசிப்பிற்காக இங்கே தொகுத்துக் கொடுத்துள்ளேன்.

ஊரான்


Tuesday, 24 July 2012

நாடற்றவர்களா பெண்கள்?

தேர்தல் என்று வந்துவிட்டால் தங்களது சாதிக்காரன் – மதத்துக்காரன்  என்று பார்த்துதான் பெரும்பாலும் மக்கள் வாக்களிக்கிறார்கள். அவனும் வெற்றி பெறுகிறான். ஆனால் தன்னை நம்பி வாக்களித்த மக்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. பதவியைப் பயன்படுத்தி தன்னை மேம்படுத்திக் கொள்கிறான். இது ஒவ்வொரு தேர்தலிலும் தொடரும் ஒரு அவலம்.

நாட்டின் கீழ்மட்ட பதவிகளிலிருந்து உயர் மட்ட பதவிகளுக்கு வரும் தன் சாதிக்கார நபர்கள் தம் சாதிமக்களுக்கு – மதத்து மக்களுக்கு ஏதாவது செய்வார்கள் என்ற கருத்தைதான் மக்கள் கொண்டுள்ளனர்.

ஏழ்மை-வறுமை உள்ளிட்ட பொருளாதாரக் கொடுமைகள் ஏழைகள் எல்லோருக்கும் உள்ள பொதுவான பிரச்சனை. ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள், இஸ்லாமியர்கள், பெண்கள் ஆகியோர் சந்திக்கும் வேறுபல கொடுமைகள் இவர்கள் மட்டுமே சந்திக்கும் பிரத்யேகமான பிரச்சனைகள்.

ஒரு தாழ்த்தப்பட்டவன்  ஜனாதிபதி ஆகிவிட்டால் தாழ்தப்பட்டவர்களின் நிலைமை தலைகீழாக மாறிவிடும் என்று நம்பினார்கள். நாராயணன்கள் வந்தார்கள். பதவியை அலங்கரித்தார்கள். ஆனால் தாழ்த்தப்பட்டவர்களின் நிலைமை மட்டும் அப்படியே நீடிக்கிறது. நீடிக்கிறது என்று சொல்வதைவிட மிகக்கேவலமாகி வருகிறது.

ஒரு இஸ்லாமியன் ஜனாதிபதியாக வந்துவிட்டால் இஸ்லாமியர்களெல்லாம் இனி இந்தியாவில் பாதுகாப்பாக வாழ வழி பிறக்கும் என கனவு கண்டார்கள். கலாமும் வந்தார். கனவு காணச் சொன்னார். ஆனால் இஸ்லாமியனின் கனவு மட்டும் கானல் நீராகிப்போனது.

ஒரு பெண் ஜனாதிபதியாகிவிட்டால் பெண்ணினத்திற்கே பெருமை; பெண்கள் இனி தலை நிமிர்ந்து வாழலாம் என நம்பச் சொன்னார்கள். பலர் நம்பவும் செய்தார்கள். பிரதிபா பாட்டிலும் ஜனாதிபதியானார். ஐந்து ஆண்டுகள் நாட்டையும் உலகையும் சுற்றி வலம் வந்தார். இவர் சிறகடித்துப்பறந்து முடித்தபோதுதான் கௌகாத்தியில் 17 வயது பள்ளி மாணவியின் சிறகுகள் ஒடிக்கப்பட்டன. ஐம்பதுக்கும் மேற்பட்ட காலிகள் அப்பெண்ணை இழுத்து வந்து உடைகளைக் களைந்து பாலியல் தொந்தரவு செய்து தாக்குகிறார்கள்.

கடந்த ஓராண்டில் பாலியல் துன்புறுத்தல், கணவன் மற்றும் உறவினர்களால் சித்திரவதை, கடத்தி விற்கப்பட்டது உள்ளிட்ட பெண்கள் மீதான குற்றச்செயல்கள்: 2 61 000 எனவும் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள்: 42 968 எனவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

1953 முதல் 2011 வரை கற்பழிப்புகள் 873% அதிகரித்துள்ளன. 22 நிமிடங்களுக்கு ஒரு கற்பழிப்பு நடந்துவருகிறது. வரதட்சணைக் கொடுமைக்காக 58 நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு பெண் எரிக்கப்படுகிறாள்.

கடந்த ஏழு நாட்களில்

ஜீலை 17: தனது வீட்டுச்சுவரை அசிங்கப்படுத்தியதைத் தட்டிக்கேட்ட ஒரு தாழ்த்தப்பட்ட பெண் ஒடிசாவின் ஐகத்சிங்பூரில் அடித்துக் கொல்லப்படுகிறாள்.

ஜீலை 17: கர்நாடகாவின் பெல்காமில் 33 வயது உஜ்வாலா ஜினப்பாவின் முகத்தில் சிலர் அமிலத்தைக்கொண்டு தாக்குகிறார்கள். அவர் முகம் சிதைந்து போகிறது.

ஜீலை 18: மும்பையில் ரவுடி ஒருவன் ஒரு பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சிக்கும் போது அப்பெண் தப்பிக்கிறாள். ஆனால் அந்த ரவுடி மேலும் இருவரைச் சேர்த்துக்கொண்டு சிவாஜிநகரில் உள்ள அப்பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து அவளது சகோதரனையும் தாயையும் தாக்குகிறான். மீண்டும் அப்பெண் தப்பிக்கிறாள்.

ஜீலை 20: கோவாவின் பனாஜி நகர் போன்டா காவல்நிலைய பெண்காலரைத் தாக்கியதற்காக சர்வேஷ் நாய்க் என்கிற கான்ஸ்டபிள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஜீலை 20: மாவெலி விரைவு ரயில் பேன்ட்ரியில் பணியாற்றும் ஒருவர் பெண் பயணியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததால் கேரளாவின் கொச்சியில் கைது செய்யப்படுகிறார்.


ஜீலை 22: உத்தரப்பிரதேசத்தில் காவல் நிலையத்திலேயே காவல் துறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒரு இளம் பெண்ணை கதறக் கதறக் கொத்திக் குதறியுள்ளனர்.

மேலும்....

முதல் கணவனை விவாகரத்து செய்யாமல் ஒரு இஸ்லாமியனை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் என்பதற்காக ரூமிநாத் என்கிற காங்கிரஸ் MLA அசாமின் கரீம்கஞ்ச்சில் ஒரு ஓட்டல் அறையில் நூற்றுக்கும் மேற்பட்ட கும்பலால் ஜீன் 29 அன்று தாக்கப்படுகிறார்.

2008 ல் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி ஒரு பப்பிலிருந்து வெளியே வந்த பெண்ணொருத்தியை 70 க்கும் மேற்பட்ட கும்பல் தாக்குகிறது. இன்று வரை அத்தாக்குதலுக்கு நீதி கிடைக்கவில்லை.

2009 ஜீன் 24 அன்று பப் ஒன்றில் சில பெண்கள் ஸ்ரீராம்சேனா காலிகளால் தாக்கப்படுகிறார்கள்.

இப்படி பெண்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன. பட்டியலிட பக்கங்கள்தான் போதாது.


உலகின் இரண்டாவது மிகப்பெரிய 'ஜனநாயக' நாடான இந்தியாவில்தான் இப்படியெல்லாம் நடக்கின்றன.

கா(லி)விகளின் கவலை

பெண்கள் மீதான இத்தகைய தாக்குதல்களுக்கு என்ன காரணம்? அவர்கள் உடைதான் என திருவாய் மலர்ந்துள்ளார் மத்தியப்பிரதேச  மத்திய பிரதேச மாநில தொழில்துறை அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா (பா.ஜ.க). குஜராத்தில் பர்தாபோட்ட பெண்களையே கதர வைத்தவர்கள்தான் இப்படிச் பேசுகிறார்கள்.

பாலியல் குற்றங்களுக்கு பெண்கள் அணியும் உடைதான் காரணம் என கூக்குரலிடும் இக்காவிகள் வரதட்சணை உள்ளிட்ட வேறுபல காரணங்களுக்காக பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு யார் காரணம் என்பதைப்பற்றி ஏன் பேசுவதில்லை?

பெண்கள் கண்ணியமான உடை அணிவதாலோ, கடுமையான சட்டங்கள் இயற்றுவதாலோ, சட்டத்தை மிகக் கறாராக அமுல்படுத்தும் கண்ணியமான அதிகாரிகள் மூலமாகவோ பெண்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படுமா? சதவீதக் கணக்கில் அல்லது புள்ளிவிவரக் கணக்கில் ஒன்றிரண்டு குறையலாமேயொழிய பொதுவாக தாக்குதலின் அளவு குறையப் போவதில்லை.

நாடற்றவர்களா பெண்கள்?

ஒரு பெண் ஜனாதிபதியாக ஐந்து ஆண்டுகள் காலம் தள்ளிய இந்தியாவில்தான் பெண்கள் மீதான இத்தகைய குற்றங்கள் அரங்கேரி வருகின்றன. ஒரு பெண் என்ற வகையில் பெண்கள் மீதான குற்றங்களைத் தடுக்கவோ அல்லது குறைக்கவோ பிரதீபா என்ன செய்தார்? என்ன செய்தார் என்பது ஒருபுறமிருக்கட்டும். குறைந்த பட்சம் பெண்கள் மீது இத்தகைய தாக்குதல்கல்கள் நடக்கின்றன என்பதாவது தெரியுமா? எப்படித் தெரியும். ஒரு ஐந்தாண்டு காலம் அரசின் செலவில் பாதுகாப்போடு இந்தியாவையும் உலகைத்தையும் தான் விரும்பியவாறு சுற்றிப்பார்க்க கிடைத்த வாய்ப்பைத் தவிர இந்த ஜனாதிபதி பதவி வேறென்ன செய்திருக்கிறது?

ஒரு பெண் ஜனாதிபதியாக இருந்தென்ன? நம் பெண்களுக்கு பாதுகாப்பான நாடொன்றில்லையே!

நன்றி: புள்ளிவிவர ஆதாரங்கள் 23.12.2012 டெக்கான் கிரானிகிள், சென்னை

Sunday, 22 July 2012

உபதேசங்களால் பொறாமை அகலுமா? அண்டை வீட்டுக்காரரின் பொறாமை! ---இறுதிப் பகுதி.


பைபிளில்  பொறாமை:

“ஈசாக்கு பயிர்த்தொழில் மூலம் நூறு மடங்கு அறுவடை செய்து செல்வத்துக்கு மேல் செல்வம் சேர்த்து பெரும் செல்வந்தராகியதைப்பார்த்து பெலிஸ்தியர் அவர் மீது பொறாமை கொண்டனர். ஈசாக்கின் தந்தை அபிரகாம் காலத்தில் தோண்டிய கிணறுகளையெல்லாம் பெலிஸ்தியர் மண்ணால் நிரப்பித் தூர்த்துவிட்டனர்.” (தொடக்க நூல்: 26: 12-15)

“சினம் கொடியது; சீற்றம் பெருவெள்ளம் போன்றது; ஆனால் பொறாமையின் கொடுமையை எதிர்த்து நிற்க யாரால் இயலும்?” (நீதி மொழிகள்: 27: 4)

‘மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும். ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபச்சாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு, ஆகியவற்றைச் செய்யத்தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன.” (மாற்கு: 7:21-22)

“வீண் பெருமையைத் தேடாமலும், ஒருவருக்கு ஒருவர் எரிச்சல் ஊட்டாமலும், ஒருவர் மீது ஒருவர் பொறாமைப்படாமலும் இருப்போமாக!” (கலாத்தியர்: 5:26)

”உங்கள் உள்ளத்தில் பொறாமையும், மனக்கசப்பும், கட்சி மனப்பான்மையும் இருக்குமானால் அதைப்பற்றிப் பெருமை பாராட்ட வேண்டாம், உண்மையை எதிர்த்துப் பொய் பேச வேண்டாம்” (யாக்கோபு: 3:14)

”ஆண்டவர் எத்துணை இனியவர் என்பதை நீங்கள் சுவைத்திருந்தால், எல்லா வகையான தீமையையும் வஞ்சகத்தையும் வெளிவேடம், பொறாமை, அவதூறு ஆகிய யாவற்றையும் அகற்றுங்கள்;” (பேதுரு: 2 1-3)

திருவிவிலியம் நெடுகிலும் இப்படி பொறாமை பற்றி ஏராளமான வசனங்கள் வருகின்றன. கி.மு 2000 லிருந்து கி.பி 95 வரையிலான காலகட்டத்தில் கிருத்தவம் பரவிய மத்திய தரைக்கடலையொட்டிய நாடுகளில் மக்களிடையே நிலவிய பொறாமை குறித்து நாம் அறிய முடிகிறது. இயேசுநாதரும் அதன்பிறகு வந்த பல்வேறு நற்செய்தியாளர்களும் இப்பொறாமை குணத்தை விட்டொழிக்குமாறு மக்களுக்கு போதித்தனர்; இன்றளவும் போதகர்கள் போதித்து வருகின்றனர்.

குர்ஆனில் பொறாமை

மற்றொருவன் தன்னைவிட அறிவாளியாக இருப்பதைப் பார்த்தோ அல்லது அவன் தன்னைவிட வசதியான வாழ்க்கை வாழ்வதைப் பார்த்தோ பொறாமை கொள்வது அல்லாவின் ஏற்பாட்டில் குறைகாண்பதாகும் எனவும், பொறாமை கொள்வது நல்வழிப் பெறுவதையும் தடுத்துவிடும் எனவும், பொறாமை கொள்பவனின் தீங்கைவிட்டு அல்லாவிடம் பாதுகாப்புத் தேடுவது குறித்தும் பல்வேறு வசனங்கள் குர்ஆனில் இடம் பெற்றுள்ளன.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் அரேபிய சமூகத்தில் மக்களிடையே பொறாமை குணம் நிலவியதை குர்ஆன் வசனங்கள் உறுதி செய்கின்றன.

பொறாமை குறித்து விவேகானந்தர்

"பகை, பொறாமை, ஆகியவற்றை நீ வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்! என்று விவேகானந்தர் குறிப்பிடுவது தற்காலத்திலும் பொறாமை குணம் நிலவுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது."

உபதேசங்களால் பொறாமை அகலுமா?

புராண இதிகாச காலந்தொட்டு இன்று வரை பொறாமை குணம் மக்களிடையே வேரூன்றி உள்ளது. இந்து – பௌத்தம் - கிருத்தவம் – இஸ்லாம் உள்ளிட்ட மத போதனைகளாலும், திருக்குறள் உள்ளிட்ட நீதி நூல்களாலும் பொறாமை குணத்தை மக்களிடமிருந்து விரட்ட முடியவில்லை.

பொறாமை குணம் ஒரு குறிப்பிட்ட தனிமனிதனின் உள்ளத்திலிருந்து மட்டும் தானாக உருவாகும் குணம் அல்ல; அது சமூகத்தில் நிலவும் அரசியல் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளிலிருந்து உருவாகும் குணமாகும். ஏற்றத்தாழ்வான சமூகம் நீடிக்கும் வரை பொறாமை குணமும் நீடிக்கும். வெறும் உபதேசங்களால் பொறாமை குணத்தை ஒழிக்க முடியாது என்பதைத்தான் வரலாறு நமக்கு உணர்த்துகிறது; இன்றைய நடைமுறையும் உணர்த்தி வருகிறது. எனவே ஏற்றத்தாழ்வான இச்சமூகத்தை மாற்றியமைக்கும் போராட்டத்தினூடாகத்தான் பொறாமை குணத்தை மக்களிடமிருந்து ஒழிக்க முடியும்.

முற்றும்.

Wednesday, 20 June 2012

அஷ்டமி, நவமி கெட்ட நாட்களா?

"சென்ற வாரம் நான் என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு உணவருந்தி ஓய்வெடுத்த பின் அவர்கள் நீண்ட நாட்களாக ஒரு வீட்டுமனை வாங்க வேண்டும் எனக் கூறி வந்ததை நினைவுபடுத்தினேன். எனக்குத் தெரிந்த ஒருவர் நல்ல இடத்தில் ஒரு வீட்டுமனை இருப்பதாகவும் விலையும் சற்று சகாயமாகவுள்ளதாகவும் கூறினார். அதைப் போய் இன்று பார்த்துவிட்டு வரலாம் என்று கூறினேன். உடனே என் சகோதரி இன்று வேண்டாம் அண்ணே என்றாள். நான் ஏன்? இன்று விட்டால் மனை கிடைக்காமல் போகலாம் வேகமாக விற்று வருவதாகக் கேள்விப் பட்டேன். இன்று ஏன் வேண்டாம் என்கிறாய்? எனச் சகோதரியைக் கேட்டேன். அவர் இன்று அஷ்டமி, நாளை நவமி என்றாள். ஆகையால் நாளை மறுநாள் போய் பார்க்கலாம் என்று சொன்னார்.


நான் அஷ்டமி, நவமி என்றால் என்ன? ஏன் கூடாது என்பதற்குக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு என் சகோதரி எனக்கு விளக்கம் தெரியாது அண்ணே, ஆனால் எல்லோரும் அவை நல்ல நாட்கள் இல்லை என்பதால் நானும் கூறினேன் என்று கூறினார்.

நான் சிரித்துக் கொண்டே அஷ்டமி, நவமியில் நீங்கள் சாப்பிடுவதில்லையா? ரயில், பஸ், விமானம் ஆகியவை ஓடுவதில்லையா? மருத்துவமனை, வங்கிகள் மற்றும் அலுவலகங்கள் செயல்படுவதில்லையா? அவசர அறுவை சிகிச்சையைத் தவிர்க்கிறோமா? என்று கேட்டேன்.

அதற்கு என் சகோதரி போங்க அண்ணா, நீங்க எப்போதும் இப்படித் தான் எடக்கு முடக்காகப் பேசுவீர்கள் என்று கேலி செய்தார். நான், இல்லையம்மா இதற்கு விளக்கம் கூறுகிறேன். நாம் ஓரளவு படித்தவர்கள் எதையும் அறிவுப்பூர்வமாக சிந்தித்துத் தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று கேட்டேன். மைத்துனரும், என் சகோதரியும் நீங்கள்தான் விளக்குங்களேன் என்றார்கள்.

நான் பின்வரும் விளக்கத்தைக் கூறினேன்.
ஒரு மாதத்திற்கு அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள். நாட்களைச் சுட்டிக்காட்ட அமாவாசையிலிருந்து அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள். பெயர் தமிழில் வைத்திருந்தால் விளங்கும். சமஸ்கிருதம் ஆதிக்கத்தில் இருந்தபோது தமிழ் வருடங்களின் பெயரை கூட பொருள் தெரியாத வடமொழியில் அல்லவா வைத்து விட்டார்கள்? நாமும் அதை மாற்ற மனமின்றி வைத்துக் கொண்டு திண்டாடுகிறோம். அதே போல் தான் நாட்களின் பெயர்களும் பின்வருமாறு வடமொழியில் உள்ளன என்று விளக்கினேன்.

1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை பிரதமர் என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.



2. துவிதை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச் சகர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும்.



3. திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று அல்லவா?



4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண் டது.



5. பஞ்சமி என்றால் அய்ந்தாம் நாள் பாஞ்ச் என்றால் அய்ந்து எனப் பொருள்.



6. சஷ்டி என்றால் ஆறாம் நாள்.



7. சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவதில்லையா?



8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம்.



9. நவமி என்றால் ஒன்பதாம் நாள் நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்.



10. தசமி என்றால் பத்தாம் நாள் தஸ் என்றால் பத்து அல்லவா? தாரம் என்று கடவுளின் அவதாரங்களைக் கூறக் கேட்டிருக்கிறோம்.



11. ஏகாதசி என்றால் பதினொன்றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.



12. துவாதசி என்றால் பன்னிரண்டாம் நாள் தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.



13. திரியோதசி என்றால் பதிமூன்றாம் நாள் திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று.



14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்.



சதுர்த்தசிக்கும் அடுத்தது பவுர்ணமி அல்லது அமாவாசை ஆகி விடும். இப்படி நாட்களைக் சுட்டிக் காட்ட வைத்த பெயர்களில் என்ன வேறுபாடு இருக்கிறது? அமாவாசை அல்லது பவுர்ணமிக்குப் பிறகு வரும் எட்டாம் நாளும் ஒன்பதாம் நாளும் கெட்டவை என்பதற்கு ஏதேனும் அறிவியல் பூர்வமான விளக்கம் இருந்தால் கூறுங்கள் என்று கேட்டேன். சகோதரியும் மைத்துனரும் வாயடைத்துப் போயினர். இந்த விளக்கம் கண்டு அவர்கள் மிகத் தெளிவு பெற்றனர்.



நான் மேலும் கூறினேன். அட்சய திரிதியையில் தங்கம் வாங்க அறியாத மக்கள் தங்கக் கடைக்கு ஓடுவதும் அறியாமையே என்றேன். என் சகோதரி மிகவும் ஆர்வமாக இதற்கும் விளக்கம் கூறுங்கள் அண்ணா என்று கேட்டுக் கொண்டாள். க்ஷயம் என்றால் தேய்வு (-க்ஷயரோகம் = எலும்புருக்கு நோய் அக்ஷயம் என்றால் வளர்ச்சி அதாவது வளர்பிறையில் அமாவாசையிலிருந்து மூன்றாம் நாள் திரிதியை என்று ஏற்கெனவே விளக்கிக் கொண்டோம். அதாவது வளர்பிறையில் மூன்றாம் நாள் இதில் என்ன சிறப்பு இருக்க முடியும்? இது தங்க வியாபாரிகள் சேர்ந்து செய்த விற்பனை உத்தியே ஆகும் என்று விளக்கம் கூறினேன்.



மக்கள் எப்படி அறியாமையில் மூழ்கிப் போயிருக்கிறார்கள் என்று அனைவரும் பரிதாபப்பட்டோம். பிறகு அன்றே மூவரும் சென்று வீட்டு மனையைப் பார்வையிட்டு இடம் பிடித்திருந்ததால் முன் பணம் செலுத்தி பத்திர நகல்களை வாங்கி வந்தோம். அஷ்டமி, நவமி பார்த்துத் தாமதம் செய்திருந்தால் இந்த வாய்ப்பு கிட்டுமா என்று மகிழ்ந்தோம்."

"A GOOD ONE FOR SUPERSTITIOUS PEOPLE" என்ற தலைப்பில் இன்று எனக்கு வந்த மின் அஞசல் செய்தி இது. அதற்கான இணைப்பு:

அதோடு மேலும் சில செய்திகளும் சொல்லப்பட்டிருந்தன.

“செய்யும் வேலைகளின் வெற்றி தன்னை நம்பி இல்லை, கடவுளை நம்பித்தான் இருக்கிறது“ என்று நினைத்து உருவாக்கப்பட்ட “நல்ல நேரம், கெட்ட நேரம்“ என்ற பயங்கள் உலகெங்கும் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. (நம் நாட்டில் கொஞ்சம் அதிகம்).

இந்திய அளவில் உள்ள பஞ்சாங்கங்களின்படி ஒரு மாதத்திற்கு எவ்வளவு கெட்ட நேரம் வருகிறது என்று கணக்கிட்டுப்பார்ப்போம்.

வாரத்தில் செவ்வாய், சனி நல்ல காரியம் துவங்கக்கூடாது (10 நாட்கள்). 

மாதத்தின் அஷ்டமி, நவமி நன்மைக்கு உகந்தது அல்ல (4 நாட்கள்).

பாட்டிமுகம் நாளில் நல்லது செய்வது நல்லதில்லை (2 நாட்கள்).

ஒரு மாதத்தில் வரும் ராகு காலம், எமகண்டம், குளிகை இவற்றின் கூட்டுத்தொகை (3 முக்கால்) தவிர கௌரி பஞ்சாங்கத்தின் படி நன்மை செய்ய தகாத நாட்கள் 2 நாட்கள்.

ஆக மொத்தத்தில் ஒரு மாதத்தில் 21 முக்கால் நாட்கள் நாம் நல்லது செய்ய பயந்தால் எப்படி உருப்பட...எப்படி முன்னேற...?

என்று தணியும் நம் மக்களிடம் நிரம்பியுள்ள அறியாமையின் மோகம்?"
அஷ்டமி, நவமி பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதுபற்றி அதிகமாகத் தெரியாது. மேற்கண்ட மின் அஞ்சல் செய்தியைப் படிதுவிட்டு இரண்டு பெண்களிடம் "அஷ்டமி, நவமி நல்ல நாட்களா, கெட்ட நாட்களா?" என்று கேட்டேன். 'கெட்ட நாட்கள் என சட்டென பதில் சொன்னார்கள். அப்பொழுதுதான் புரிந்தது எல்லா சகோதரிகளும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று. மேற்கண்ட செய்தியை பிரதி எடுத்துக் கொடுத்தேன். முழுமையாகப் படித்தார்கள். பிறகு மீண்டும் கேட்டேன் "அஷ்டமி, நவமி நல்ல நாட்களா, கெட்ட நாட்களா?" என்று. அவர்களால் சட்டென பதில் சொல்ல முடியவில்லை. மௌனமானார்கள். ஆனால் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பது மட்டும் தெரிந்தது.


பிறரை சிந்திக்கத் தூண்டும் நல்லதொரு செய்தியைப் பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி! நீங்களும் பிறருக்குப் பகிரலாமே!

Saturday, 19 May 2012

‘அம்மா’ இருக்க ‘அய்யன்’ எதற்கு?

பொதுவாக நமது நாளேடுகளில் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே தினமணியின் வெள்ளிமணி போல ஆன்மீக மலர்கள் வருவதுண்டு. பெரும்பாலும் இவை நான்கு பக்கங்களுக்கு மிகாது. ஆங்கில நாளேடுகளில் இப்படி தனியாக ஆன்மீக மலர் எதுவும் வருவதில்லை.


வாழ்க்கையில் ஏற்றம் பெற முடியாதவர்கள் இனி எந்த அம்பாளை வழிபட்டால் ஏற்றம் பெறலாம் என்பதை வழிகாட்டுவதற்காகவே இத்தகைய ஆன்மீக மலர்கள் வெளியிடப்படுகின்றன. செய்தித்தாள்கள் என்றைக்கு தோன்றினவோ அன்றைக்கே இவ் ஆன்மீக மலர்களும் வரத்தொடங்கின.


இவைகளைப் பார்த்து நாமும் பெரியபாளையத்தம்மன் - தேவி கருமாரியம்மன் - காஞ்சி காமாட்சி - பன்னாரி அம்மன் - படவேட்டம்மன் - அங்காள மரமேஸ்வரி - சமயபுரம் மாரியம்மன் - உறையூர் வெக்காளியம்மன் - மதுரை மீனாட்சி -  ‘கன்யா’ குமரிஅம்மன்......... என ஆயிரத்தெட்டு அம்மன்களையும் தரிசித்துவிட்டோம்.


ஆனாலும் இன்னும் நல்ல வேலை அல்லது அரசு வேலை கிட்டவில்லை; வெளிநாட்டுக் கனவு நனவாகவில்லை; நாற்பது வயதாகியும் நல்ல வரன் கிட்டவில்லை: சொந்தமாக ஒரு வீடு வாங்க முடியவில்லை; குடும்பத்தில் கணவன்-மனைவி பிரச்சனை தீரவில்லை; தொழிலில் முன்னேற்றம் இல்லை; தொட்ட நோய் விட்டபாடில்லை; கடன் தொல்லை தீரவில்லை.


ஸ்ரீ ஆயிரங்காளியம்மன்


தொல்லைகள் நம் வாழ்வில் ஒரு நெடுந்தொடராய் நீள்வதால்தான் ஒரு அம்மனுக்குப் பதிலாக ஓராயிரம் அம்மன்களை வழிபடுகிறோம் பரிகாரம் தேடி அலைகிறோம். செய்தித்தாள்களும் நமக்கு வழிகாட்டுதல்களை வாரி வாரி வழங்குகின்றன. நாம் கேட்டறியாத - பார்த்தறியாத புதப்புது அம்மன்களை அறிமுகப்படுத்திய வண்ணம் இருக்கின்றன. ஒரு அம்மன் போதாது என்பதால் ஓராயிரம் அம்மன்களும் ஒருங்கே உருவெடுத்த காரைக்கால் அருகில் உள்ள திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ஆயிரங்காளியம்மனை அறிமுகப் படுத்துகிறது தினமணி வெள்ளி மணி. (18.05.2012).


இந்த அம்மனோ ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் அவதரிப்பாளாம். அதுவும் மே 23, 24 ஆகிய இரண்டே நாட்கள்தானாம். ஐந்து ஆண்டுகள் காத்திருப்பதை தவிர்த்து இந்த ஆண்டே ஸ்ரீ ஆயிரங்காளியம்மனை வழிபட்டு ஆனந்தம் அடைய தினமணி வெள்ளிமணி அழைப்பு விடுத்திருக்கிறது. இந்த அம்மனை வழிபட்டால் ஆனந்தம் கிடைக்குமா என்பதற்கான உத்தரவாதம் உண்டா? தினமணி வெள்ளிமணியிடம்தான் கேட்க வேண்டும்.


அருள் சொரியும் ‘அம்மா’ளம்மன்


தன்னை நாடி வந்தவர்களுக்கு ஆனந்தத்தை மட்டுமே அளிக்கக்கூடிய ஒரு அம்மனின் சாதனைகள் பற்றி கடந்த இரண்டு நாட்களாக எல்லா செய்தி ஏடுகளிலும் புகழ் மாலைகள் குவிந்துள்ளன. ஸ்ரீ ஆயிரங்காளியம்மனைப் போல ஐந்து ஆண்டுகள் கழித்துதான் இந்த அம்மனும் அவதரித்துள்ளார். ஸ்ரீ ஆயிரங்காளியம்மன் இரண்டு நாட்கள் மட்டும்தான் எழுந்தருளியிருப்பார். ஆனால் இந்த அம்மனோ  ஐந்து ஆண்டுகளுக்கும் எழுந்தருளியிருப்பார். இவர் மீண்டும் அவதரித்து ஓராண்டாகிவிட்டது. இவரை துதிபாடிய பக்தர்கள் ஓராண்டிலேயே எண்ணிய பலன்களைப் பெற்றுவிடுகிறார்கள். அதனால்தான் “தங்களை வாழவைத்த” அம்மனுக்கு கோடானு கோடி நன்றியினை அம்மனின் பொற்பாதங்களில் காணிக்கையாக்குகிறார்கள். தனது உண்மை விசுவாசிகாளால் - உண்மைத் தொண்டர்களால் இவர் ‘அம்மா’ளம்மன் என்றே போற்றப்படுகிறார்.


பெரும்பாலும் அம்மன்கள் கிராமப்புற பாமர மக்களின் தெய்வங்களாகத்தான் கருதப்படுகிறார்கள். பெண்வழிச் சமுதாயம் நிலவிய காலகட்டத்தில் ஆதிக்கம் செய்தோரை எதிர்த்து போராடிய வீரமங்கைகளை தெய்வங்களாகக் கருதி மக்கள் வழிபட்டிருக்க வேண்டும். நாளடைவில் பார்ப்பனர்கள் இத்தகைய அம்மன்களை புராணக் கதைகளோடு இணைத்து தங்களின் வருவாயை பெருக்கிக் கொள்ள தலபுராணங்கள் எழுதி இருக்க வேண்டும்.


‘அம்மா’ளம்மனின் அவதாரமே ஆதிக்கத்தில்தான் தொடங்குகிறது. அதனால் இவரை யாரும் ஆதிக்கம் செய்ய முடியாது. தொண்டர்கள் தாங்களாகவே முன் வந்து இவரிடம் மண்டியிடுகிறார்கள். வீரதீரப் போர் எதுவும் புரியாமலேயே இவர் வீரத்தாய் என்ற பட்டம் பெற்றிருக்கிறார். நூறாண்டில் செய்ய வேண்டிய மகாத்மியங்களை ஓராண்டிலேயே செய்து முடித்த விட்டதால் இவருக்கு தலபுராணமெல்லாம் பொருந்தாது என்பதால்தான் நேரடியாக பெரியபுராணமே எழுதிக் கொண்டிருக்கிறார்கள் இவரை அண்டிப் பிழைக்கும் அடியார்கள்.


ஊராட்சி – பேரூராட்சி - ஒன்றியம் – வட்டம் – மாவட்டம் – நகராட்சி – மாநகராட்சி – சட்டமன்றம் – நாடாளுமன்றம் – மந்திரி – நல வாரியம் என அருள் அட்டை வைத்திருந்தால் ‘அம்மா’ளம்மனின் அருள் முழுமையாக கிடைக்கும். இல்லை என்றாலும் பரவாயில்லை! மேற்கண்டவர்களுக்கு அல்லக் கைகளாக இருந்தாலே ‘அம்மா’ளம்மனின் அருள் கிடைக்க வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.


மற்ற அம்மன்களை நீங்கள் எளிதில் ஏமாற்றி விடலாம். பலன் கிடைத்தாலும் காணிக்கை செலுத்த மறந்து விட்டால் பழி-பாவம் ஏதும் வராது. ஆனால் ‘அம்மா’ளம்மனை ஒழுங்காக வழிபடவில்லை என்றாலோ அல்லது காணிக்கையை முறையாக செலுத்தவில்லை என்றாலோ இவரது சாபத்திலிருந்து தப்பவே முடியாது. அம்மனின் அருளால் கிடைத்த பலன்கள் அனைத்தும் ஒரு நொடியில் பறிக்கப்படும். பிறகு நடுத் தெருவில்கூட நிற்க இடம் கிடைக்காது. வேலூர் அல்லது பாளையங்கோட்டையில் நான்கு சுவர்களுக்குள்தான் வாசம் செய்ய வேண்டும். ஒரு வேளை மீண்டும் 'அய்யன்' அவதாரம் எடுத்தால் ஐந்து ஆண்டுகள் கழித்து வேண்டுமானால் விமோசனம் கிடைக்கலாம்.


முன்பு 'அய்யன்' அவதாரம் எடுத்த போது 'அய்யனி'ன் அருளைப் பெற்று ஆதாயம் அடைந்தவர்கள் ஏராளம். இன்று 'அம்மா'ளம்மன் அவதாரம் எடுத்ததால் இவர்களில் சிலர் சோதனைக்கு உள்ளாகியுள்ளனர். இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு சோதனைகளை எதிர் கொள்வதா அல்லது பரிகாரம் வேண்டி 'அம்மா'ளம்மனிடமே சரணடைவதா? இது 'அய்யனி'ன் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பம். ஆனானப்பட்ட பகுத்தறிவின் 'மணி'களே அம்மா'ளம்மனின் அருளைப் பெறவில்லையா?


‘அம்மா’ இருக்க ‘அய்யன்’ எதற்கு?


‘அம்மா’ளம்மனே போற்றி! போற்றி!!


‘அம்மா’ளம்மனின் அருள் கிடைக்காதா என மற்றவர்கள் ஏங்குவதும் எனக்குப் புரிகிறது. நம்ம ஊரு அம்மனுக்கு எல்லோரும் சேர்ந்துதான் காணிக்கை செலுத்துகிறோம். ஆனால் அம்மனின் அருள் வேதம் ஓதுவோருக்கும் அறங்காவல் கூட்டத்துக்கும் மட்டும்தானே கிட்டுகிறது.


அம்மா'ளம்மன் அவதாரம் எடுக்க நீங்கள் எல்லோரும் வாக்கு காணிக்கை செலுத்தியிருக்கலாம். அதனால் என்ன? இங்கு மட்டும் அருள் மாறி கிட்டுமா என்ன?