Monday, 7 January 2013

சிரிக்க வைக்கிறீங்களா? இல்லை சீரழிக்கிறீங்களா?

மத்திய அரசின் வரவு செலவு திட்டத்தில் திரைப்படத்துறையினருக்கு சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறும் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோர் 12.3 சதவீதம் சேவை வரி கட்ட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை முதல் இது அமலுக்கு வந்துள்ளது. இச்சேவை வரி விதிப்புக்கு திரையுலகினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் சேவை வரி விதிப்பை எதிர்த்து சென்னையில் இன்று (07.01.2013) உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்றுள்ளது. ரஜினி முதல் நளினி வரை என நடிகர் நடிகைகள் பட்டாளமும், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் எஸ்..சந்திரசேகரன் முதல் வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதி என திரைத்துறை முதலாளிகளும் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

பத்து ரூபாய்க்கு மயிரை மழிச்சாலே சேவை வரி கட்டுவது உட்பட சுமார் 119 வகையான சேவை வரி மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது உங்களுக்குத் தெரியுமா? ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறும் நீங்கள் சேவை வரி செலுத்த மாட்டோம் என்கிறீர்கள்.


போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கொடுத்த பேட்டிதான் கேலிக்கூத்தாக இருந்தது. “உங்களை சிரிக்க வைப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வேலை எதுவும் தெரியாதே. நாங்க எப்படி பிழைப்பது?” என ஆதங்கப் படுகிறார் நடிகர் விவேக். நீங்கள் திரைப்படங்கள் மூலம் எங்களை சிரிக்க மட்டுமா வைக்கிறீர்கள்? நீங்கள் ஊட்டும் காமத்தால் அன்றாடம் அரங்கேறும் பாலியல் – வன்புணர்ச்சிகளால் எங்கள் தமிழகம் அல்லவா சிரிப்பாய் சிரிக்கிறது.

அது சரி! உங்களுக்கு வேறு தொழில் தெரியாட்டி என்ன? வங்கக் கடலில் முங்கிப்போங்களேன். தமிழகமாவாவது உருப்படும். ஆனால் இதில்கூட ஆபத்து இருக்கிறது. கடலுக்குள் நீங்கள் மூழ்கிப் போனாலும் அங்கே சும்மாவா இருப்பீர்கள்? கடல் கன்னிகளை எல்லாம் துகில் உரித்துவிடுவீர்களே!

வேறு என்ன செய்யலாம்? அப்படியே பஸ்பமாக்கி விண்ணுலகம் அனுப்பலாமா? மண்ணுலக இரம்பாக்களையே துகிலுத்தவர்கள் விண்ணுலக இரம்பாக்களை சும்மாவா விடுவீர்கள்?

ஆமா.. நீங்க கலைச்சேவை செய்வதாகத்தானே அடிக்கடி சொல்லிக் கொள்கிறீர்கள். அதற்காகத்தானே ஆண்டுதோறும் அரசாங்கமும் உங்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது. நீங்களே சேவை செய்வதை ஒப்புக் கொண்ட பிறகு சேவை வரி செலுத்த மாட்டேன் என்று போராடுவது செய்கிற தொழிலுக்கே துரோகம் செய்வதாகத் தோன்றவில்லையா?
 
சின்னத்திரையிலும் வண்ணத்திரையிலும்தான் ஆடை அவிழ்ப்புகளை அரங்கேற்றுகிறீர்கள்.போராட்டத்தில் கூடவா உள்ளாடையை மேலாடையாக்குவது? உங்கள் நமீதாக்களால் “போராட்டம்” கூட முக்காடிட்டுக் கொண்டதே!

ஆல்ககால்கூட சில வேலைகளில் சீக்காளிகளை சீர் படுத்துகிறது. என்பதற்காக ஊரெல்லாம்  ஓடவிட்டால் என்னவாகும் என்பதைத்தான் தமிழகம் அனுபவித்து வருகிறதே!

நீங்கள் அள்ளிக் கொட்டும் குப்பைகளால் “வழக்கு எண்:18/9” போன்ற வைரங்களைகூட புதையுண்டு போகிறதே!.

அப்பா! போதுமடா சாமி! நீங்கள் சேவையும் செய்ய வேண்டாம். சேவை வரியையும் செலுத்த வேண்டாம். எங்கள் தமிழகத்தை குப்பை மேடாக்காமல் விட்டு வைத்தால் போதும். உங்களுக்கு கோடி புண்ணியமாகும்!

ஊரான்

2 comments:

KARUPPIAH S said...

ஊரான் ! ம் ம் ம் .... பிரயோசனமில்லை ! அவர்கள் வெல்வார்கள் !

sekar said...

கலீல்: Not at all possible they will never change ..it is very big industry with lot of block money .. as well converting block to white . There are the service providers to Crack the business to thier favour