Tuesday, December 31, 2019

2020 - எழுந்து நில்!

2019 விடை பெற்று 2020 வந்து விட்டது. இது ஆங்கிலப் புத்தாண்டு,  நம்மை அடிமைப் படுத்தியவன் புகுத்தியது, இதை நாம் ஏன் கொண்டாட வேண்டும் எனக் கேள்வி எழுப்புவோரும், தமிழருக்குப் புத்தாண்டு சித்திரையே என்போரும் உண்டு. பிறப்பில் தொடங்கி இறப்பையும் நினைவூட்டி அனைத்திலும் நீக்கமற நிறைந்து விட்ட ஆங்கிலப் ஆண்டுக் கணக்கை அவ்வளவு எளிதில் ஒதுக்கி விட முடியாது. பழைமையை மட்டும் சுமந்து வரும் சித்திரை, தமிழரின் புத்தாண்டு இல்லை என்றாலும் ஆரியப் பண்பாட்டை தமிழன் உதறாதவரை சித்திரைக்கும் நித்திரை இல்லை.
கடைகளில் கழிக்கப்பட்டவை புதியனவாய் நம் இல்லங்களில் புகுவதுதான் “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்றாகி விட்டது. கழித்தவனின் கல்லாப்பெட்டிகளை பெற்றவனின் மணிபர்சுகள் நிரப்புவது வாடிக்கையாகி விட்டது. ஆண்டுப் பலன் தொடங்கி அன்றாட இராசிபலன் வரை அலசுகின்ற அரை அறிவாளிகளுக்கு ஆண்டு முழுக்க கொண்டாட்டம்தான். ஆனால் புத்தாண்டு பிறக்கிற போது வாழ்க்கைச் சுமையோடு வயது ஒன்று கூடுவதைத்தவிர வேறெதையும் கண்டதில்லை பலர்.

இனி வரும் வாழ்க்கை வளமாய், நலமாய், இனிமையாய் அமைய வேண்டும் என்கிற ஏக்கப் பெருமூச்சின் வெளிப்பாடாய்தான் பலரின் புத்தாண்டு வாழ்த்துகள் அமைகின்றன. ஏக்கப் பெருமூச்சுக்கு முடிவு கட்ட வேண்டாமா? எழுந்து நில்!

ஊரான்

2 comments:

Yarlpavanan said...

இனிய 2020 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

ஊரான் said...

நன்றி! வாழ்த்துகள்!