“இராணிப்பேட்டை, பெல் வளாகத்தில் நான் வசித்தபோது பொன்னை ஆற்றில் (நீவாநதி) கால் நனைத்திருக்கிறேன், ஆனால் நீந்தியதில்லை. பெருவெள்ளமாய் பீறிட்டுப் பாயும் கவிப்பித்தனின் 'நீவாநதியில்' நீந்துவதற்காகக் காத்திருக்கிறேன்”
என, கவிப்பித்தனின் “பிணங்களின் கதை” சிறுகதைத் தொகுப்பைப் வாசித்த பிறகு கடந்த ஆண்டு அக்டோபரில் அவரின் “நீவாநதி” நாவலை வாசிக்க வேண்டும் என்கிற எனது அவாவை வெளிப்படுத்தி இருந்தேன்.
இந்த மாதத் தொடக்கத்தில், இரா.சுப்பிரமணி அவர்களின் “பெரியாரின் போர்க்களங்களைச்” சுற்றி வந்தபோது, இடையில் ‘நீவாநதி’யில் இறங்கி நீந்தத் தொடங்கி, அது ஓடிய திசை எங்கும் நானும் ஓடி, நிரம்பி வழிந்த ஏரிகளில் முங்கி எழுந்து, சலசலக்கும் நெல் மணிகளை உரசிக் கொண்டு, பசுமை படர்ந்த வயல் வரப்புகளை விட்டேகி, கொல்லை மேடுகளின் கடலைச் செடிகளின் ஊடே மொச்சை வாசத்தில் மிதந்தவாறு, காடுகளில் ஆடுகளுடன் ஆட்டம் போட்டு, மாலையில் சுண்டி இழுத்தக் கருவாட்டுக் குழம்பில் களி உருண்டைகள் வயிற்றை நிரப்ப, அயர்ந்து உறங்கி காலைக் கடனைக் கழித்து, கால் கழுவ ஆற்றில் கைநீட்டிய போது, கானல் நீரில் விரல்கள் தணக்க, நெஞ்சு கனத்து, மீண்டும் “பெரியாரின் போர்க்களங்களில்” நுழையலானேன்.
பெரியாரின் போர்க்களங்கள்
ஒத்துழையாமை இயக்கம், கள்ளுக்கடை மறியல், சேரன்மாதேவி குருகுலத்தில் பாகுபாடு, வைக்கம் போராட்டம், இந்தி எதிர்ப்பு, இடஒதுக்கீட்டுக்கான வகுப்புரிமைப் போராட்டம், வடவர் சுரண்டல், இந்தித் திணிப்பு, பிள்ளையார் பொம்மை உடைப்பு, தேசியக்கொடி எரிப்பு, இராமன் உருவ எரிப்பு, பிராமணாள் பெயர் அழிப்பு, காந்திப்பட எரிப்பு, இந்திய அரசியல் சட்ட எரிப்பு, இந்திய தேசப்பட எரிப்பு, எருமைக்கிடா வெட்டுத் தடுப்பு, கம்பராமாயணம் நூல் எரிப்பு, கோவில் கர்ப்பக்கிரக நுழைவு என எண்ணற்றப் போர்க்களங்களின் ஊடே பயணித்து வெளியே வந்த பிறகு, நான் பார்த்ததை, உணர்ந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
***
இது ஒரு இரண்டாயிரம் ஆண்டுகால ஆரிய-திராவிட நெடும் போர். 1920-களில் 'அந்நிய வெள்ளையர்களுக்கு' எதிரான ஒத்துழையாமை இயக்கம் எனும் போர்க்களத்தில் நுழைந்த பெரியார், 1970-களில் 'இந்திய வெள்ளையர்களுக்கு' எதிரான கர்ப்பக்கிரக நுழைவு எனும் போர்க்களம் வரை எதிரிகளைக் கதறக் கதறத் துரத்தி இருக்கிறார்.
போர்க்களம் புகுமுன், போரின் அவசியம் குறித்து ‘குடியரசு’விலும் ‘விடுதலை’யிலும் முன்கூட்டியே அறிவிப்பு செய்து, துண்டறிக்கைகள் மூலம் போராட்டத்தின் நோக்கத்தை உணர்த்தி, ஊர்ஊராய் கூட்டம் போட்டு அறைகூவல் விடுத்து, போராளிகளின் பட்டியலை முன்கூட்டியே உறுதி செய்து, வழக்காட வழக்கறிஞர்களையும் ஏற்பாடு செய்து, பொது மக்களுக்கோ பொது அமைதிக்கோ இடையூறு நேராமல்,
நூற்றுக் கணக்கில் பல்லாயிரக்கணக்கில் போராளிகளைக் களம் இறக்கி, போர்க்களத்தில் முன்வரிசையில் தானே முன்நின்று, தான் மட்டுமன்றி தனது சகோதரி மற்றும் இணையரையும் இணைத்துக் கொண்டு, தடையை மீறி கைதானால் குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் போர் நியாயமானது என நெஞ்சு நிமிர்த்தி, அபராதம் விதித்தாலும் அதைக் கட்டமறுத்து சிறை புகுந்து, கல் உடைத்து, எண்ணற்றோர் உயிர் பலியானபோதும் துவளாமல், தள்ளாத வயதிலும் உடல் உபாதைகளை ஒரு பொருட்டாகக் கருதி ஓய்வெடுக்காமல், அடுத்தடுத்து களம் கண்டு எதிரிகளை நிலைகுலைய வைத்தச் சுவடுகளே போர்க்களங்கள் முழுவதும் விரவிக் கிடக்கின்றன.
மக்களிடையே நிலவும் மதம் சார்ந்த பழக்கவழக்கங்களும் அவற்றைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவுகளும், நம்மை அடக்கி ஆள்வதற்கு அரசியல் அதிகாரமும் எதிரிகளிடம் ஏவுகணைகளாகவும், கேடயங்களாகவும் இருக்கும்வரை, எதிரிகளை முற்றிலுமாக வீழ்த்த முடியாது என்பதை உணர்ந்ததாலோ என்னவோ, ஒன்றியத்தில் இருந்து வெளியேறி நமக்கானதொரு தனி சட்டத்தை உருவாக்கிக் கொண்டு, நம்மை நாமே ஆளுகின்ற அதிகாரம் கொண்ட தன்னாட்சிதான் தீர்வு என்று தனது இறுதி மூச்சுவரை முழங்கியதை உணர முடிகிறது.
இந்தித் திணிப்பு, குலக்கல்விக்கான புதிய கல்விக் கொள்கை, நீட் போர்வையில் உயர்கல்வி மறுப்பு, மும்மொழிக் கொள்கை திணிப்பு-ஏற்க மறுப்பதால் கல்விக்கான நிதி மறுப்பு, ஆளுநர் மூலம் அதிகார முடக்கம் என எதிரிகளின் எண்ணற்ற ஏவுகணைகள் நம் மீது தொடர்ந்து ஏவப்படும் இன்றைய போர்க்களச் சூழலில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதே இன்றைய கேள்வியாக எஞ்சி நிற்கிறது.
வெறும் அறிக்கைகள், கருத்தரங்கம், ஆர்ப்பாட்டம் எனும் அடையாளப் போராட்டங்களால் எதிரிகள் அஞ்சுவதில்லை. இதன் விளைவு, ஆளுநர் என்ற பெயரில் ஒருவன் நம் மண்ணிலேயே நங்கூரமிட்டுக்கொண்டு, அய்யன் வள்ளுவனுக்கு காவிச் சாயம் பூசியதோடு, அய்யனை சனாதனக் காவலனாக்கி நம்மைப் பார்த்து கெக்களித்துக் கொண்டு திரிகிறான்.
இதுவே, பெரியாரின் காலம் என்றால் இந்த ஆட்டுத்தாடி தனது மாளிகையை விட்டு ஓட்டம் பிடிக்கும் வரை ஆளுநர் மாளிகை அல்லவோ அன்றாடம் முற்றுகையிடப்பட்டிருக்கும்?
செய்தித் தொடர்பு, தகவல் தொடர்பு, போக்குவரத்து வசதி, பொருளாதார வசதி இல்லாத ஒரு காலத்தில், கல்வி அறிவு குன்றிய மக்களை இறுதி இலக்கு எட்டும்வரை பல்லாயிரக் கணக்கில் பெரியாரால் திரட்டிப் போராட முடிந்தது. கட்சி மாச்சரிங்களைக் கடந்து பெரியாரின் பின்னால் பலரும் அணிதிரளக் காரணம் அவர் மக்களுக்கான தலைவராய் உண்மையாய் உழைத்தார்; வாழ்ந்தார். இன்றும் வாழ்கிறார்.
ஆனால், இன்று எல்லா வசதி வாய்ப்புகளும் இருந்தும், பத்து பேரைத் திரட்டுவதற்கே திண்டாடுகின்றன இயக்கங்கள். காரணம், பெரியாரைப் போன்று நம்பிக்கையான தலைவன் ஒருவனும் எந்த ஒரு கட்சியிலும், எந்த ஒரு இயக்கத்திலும் உருவாகவில்லை என்பதைத்தான் பெரியாரின் போர்க்களங்கள் புரிய வைக்கிறது.
பெரியாரைப் போன்று ஒரு மக்கள் தலைவன் உருவாகாதவரை எதிரிகளை ஒருபோதும் வீழ்த்த முடியாது. தலைவனுக்காக தமிழ்நாடு காத்துக் கிடக்கிறது!
ஊரான்
பெரியாரின் போர்க்களங்கள்
ஆசிரியர்: இரா.சுப்பிரமணி வெளியீடு: கருஞ்சட்டைப் பதிப்பகம்
விலை ரூ.500/-
தொடர்புக்கு: 044-24726408, 81229 46408.
web: www.karunchattaibooks.com