Showing posts with label பெரியார். Show all posts
Showing posts with label பெரியார். Show all posts

Wednesday, 5 November 2025

பஞ்சணைப் பிரச்சாரம் (Arm Chair Criticism)!

"சுயமரியாதை இயக்கம் சட்டசபைகளைக் கைப்பற்றாமல், அதாவது பஞ்சணையில் படுத்துக் கொண்டு மதங்களையும், பழக்கவழக்கங்களையும், மதஸ்தாபனங்களையும் கண்டித்துக் கொண்டிருந்தால் போதுமா?" (Arm Chair Criticism)

என்று கேள்வி எழுப்பி,

"உத்தமர்கள் எங்கு சென்று வேலை செய்து வந்தால் என்ன?"

என்று வினவி,

"இந்துமதச் சபையார் சட்டசபையில் புகுந்து கொண்டு, சுயமரியாதைப் பிரச்சாரங்களைத் தடுக்க ஆரம்பித்தால் அவர்களை யார் தடுப்பது? நாஸ்திகக் கூட்டத்தைச் சட்டசபை மூலமாகத் தடை செய்தால் சபையில் யார் அதனை எதிர்த்துப் போர் புரிவது?”

என்று கேட்டதோடு,

“சமதர்மம் ஆகாய மூலமாவா_ வருமாமென்று கேட்கின்றோம்?”

“புரட்சிக்காரர்கள் சட்டசபைகளில் போகக் கூடாதென்ற மனப்பான்மையைக் குழந்தைகள் வியாதி என்றார் தோழர் லெனின்” 

என சுயமரியாதை இயக்கம் மேற்கொள்ளவேண்டிய பாதை குறித்து ‘ஈரோட்டுத் திட்டம் “புரட்சி”!’ (16) என்ற தலைப்பில் “புரட்சி” இதழில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. சுயமரியாதை இயக்கம் அன்று சமதர்மக் கொள்கையையும் பேசியது.


புரட்சி
பக்கம் 5-17
24.12.1933

சான்று: சிங்காரவேலர் கட்டுரைகள், NCBH வெளியீடு,
***
ஆங்கிலேயரின் அடிமை இந்தியாவில், சனாதனிகள் மட்டுமே படித்துவிட்டு, சென்னை மாகாணத்தில் ஆதிக்கம் செலுத்தியபோது, மேற்கண்ட வழிகாட்டுதல் எந்த அளவுக்கு சாலப் பொருந்துமோ, அதை இன்றைய ஆர்.எஸ்.எஸ்-பாஜக-சனாதனக் கும்பல் அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு செய்துவரும் அக்கிரமங்களைப் பார்க்கும் போது "புரட்சி" இதழின் வழிகாட்டுதல் அப்படியே இன்றும் நூறு சதவீதம் பொருந்துவதாகத்தான் நான் கருதுகிறேன்?

அதிகாரம் கையில் இருந்தால் எதையும் செய்ய முடியும் என்பதைப் புரிந்து கொள்வதற்கு சனாதனிகள் மேற்கொள்ளும் இன்றைய தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கை  (SIR) ஒன்று போதாதா?

இதையெல்லாம் எத்தனையோ கட்சிகள், இயக்கங்கள் சட்டசபைக்கு வெளியில் இருந்து கொண்டு கூக்குரலிடுவதைப் பார்க்கும் போது, “பஞ்சணையில் படுத்துக்கொண்டு” என்று அன்று சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.

அதிமுக போன்ற அடிமைகளும், விஜய் போன்ற தற்குறிகளும் அதிகாரத்தில் இருப்பதாலோ அல்லது அதிகாரத்தைக் கைப்பற்றுவதாலோ மக்களுக்கு என்ன பயன் ஏற்பட்டுவிடப் போகிறது?

ஆர்.எஸ்.எஸ்-பாஜக-சனாதனக் கும்பலை எதிர்ப்பவர்கள், போதிய பிரதிநிதித்துவம் இல்லாமல் பலமற்றிருப்பது அல்லது ஒருசிலர் பிழைப்புவாதிகளாக இருப்பது என்ற இன்றைய சூழலில், அரசியலில் நேர்மையாக இருக்கும் கம்யூனிஸ்டுகள் அதிலும் குறிப்பாக மார்க்சிய-லெனினிய கம்யூனிஸ்டுகள் பலமற்று இருப்பது அல்லது தேர்தல்களைப் புறக்கணிப்பது என்பதைப் பார்க்கும் போது,

“உத்தமர்கள் எங்கு சென்று வேலை செய்து வந்தால் என்ன?" என்று,

அன்று சுயமரியாதைக்காரர்களை நோக்கி கேட்டதைத்தான், மார்க்சிய-லெனினிய கம்யூனிஸ்ட்களை நோக்கி இன்று கேட்கத் தோன்றுகிறது.

காலத்திற்கேற்ப செயல் திட்டம் வகுத்துச் செயல்படுபவர்களே தங்களைக் காத்துக் கொள்வதோடு, சனாதனிகளிடமிருந்து மக்களையும் காக்க முடியும்!

தேர்தலில் நேரடியாகப் பங்கேற்பது, ஒருசில மார்க்சிய-லெனினிய கம்யூனிஸ்டுகளுக்கு நெருடலாகத் தோன்றலாம். அத்தகையோர், ஆர்.எஸ்.எஸ்-பாஜக-சனாதனக் கும்பலை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்காகத் தேர்தல் களம் காணும் கட்சிகளை, கூட்டணிகளை (தற்போதைக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட INDIA கூட்டணி) நேரடியாக ஆதரிப்பதோடு, குறைந்தபட்சம் ஆர்.எஸ்.எஸ்-பாஜக-சனாதனக் கும்பலுக்கு எதிரான
பஞ்சணைப் பிரச்சாரத்தையாவது (Arm Chair Criticism) 
மேற்கொள்ள வேண்டும்! தேர்தல் அரசியலில் நேரடியாகப் பங்கேற்காத இன்றைய சுயமரியாதைக்காரர்களுக்கும், தமிழ்த் தேசியவாதிகளுக்கும் இது பொருந்தும்.

ஊரான்

Sunday, 1 June 2025

தலைவனுக்காகக் காத்துக் கிடக்கும் தமிழ்நாடு!

“இராணிப்பேட்டை, பெல் வளாகத்தில் நான் வசித்தபோது பொன்னை ஆற்றில் (நீவாநதி) கால் நனைத்திருக்கிறேன், ஆனால் நீந்தியதில்லை. பெருவெள்ளமாய் பீறிட்டுப் பாயும் கவிப்பித்தனின் 'நீவாநதியில்' நீந்துவதற்காகக் காத்திருக்கிறேன்”

என, கவிப்பித்தனின் “பிணங்களின் கதை” சிறுகதைத் தொகுப்பைப் வாசித்த பிறகு கடந்த ஆண்டு அக்டோபரில் அவரின் “நீவாநதி” நாவலை வாசிக்க வேண்டும் என்கிற எனது அவாவை வெளிப்படுத்தி இருந்தேன்.


இந்த மாதத் தொடக்கத்தில், இரா.சுப்பிரமணி அவர்களின் “பெரியாரின் போர்க்களங்களைச்” சுற்றி வந்தபோது, இடையில்   ‘நீவாநதி’யில் இறங்கி நீந்தத் தொடங்கி, அது ஓடிய திசை எங்கும் நானும் ஓடி, நிரம்பி வழிந்த ஏரிகளில் முங்கி எழுந்து, சலசலக்கும் நெல் மணிகளை உரசிக் கொண்டு, பசுமை படர்ந்த வயல் வரப்புகளை விட்டேகி, கொல்லை மேடுகளின் கடலைச் செடிகளின் ஊடே மொச்சை வாசத்தில் மிதந்தவாறு, காடுகளில் ஆடுகளுடன் ஆட்டம் போட்டு, மாலையில் சுண்டி இழுத்தக் கருவாட்டுக் குழம்பில் களி உருண்டைகள் வயிற்றை நிரப்ப, அயர்ந்து உறங்கி காலைக் கடனைக் கழித்து, கால் கழுவ ஆற்றில் கைநீட்டிய போது, கானல் நீரில் விரல்கள் தணக்க, நெஞ்சு கனத்து, மீண்டும் “பெரியாரின் போர்க்களங்களில்” நுழையலானேன்.

பெரியாரின் போர்க்களங்கள் 

ஒத்துழையாமை இயக்கம், கள்ளுக்கடை மறியல், சேரன்மாதேவி குருகுலத்தில் பாகுபாடு,  வைக்கம் போராட்டம்,  இந்தி எதிர்ப்பு, இடஒதுக்கீட்டுக்கான வகுப்புரிமைப் போராட்டம், வடவர் சுரண்டல், இந்தித் திணிப்பு, பிள்ளையார் பொம்மை உடைப்பு,  தேசியக்கொடி எரிப்பு, இராமன் உருவ எரிப்பு, பிராமணாள் பெயர் அழிப்பு,  காந்திப்பட எரிப்பு, இந்திய அரசியல் சட்ட எரிப்பு, இந்திய தேசப்பட எரிப்பு,  எருமைக்கிடா வெட்டுத் தடுப்பு,  கம்பராமாயணம் நூல் எரிப்பு, கோவில் கர்ப்பக்கிரக நுழைவு என எண்ணற்றப்  போர்க்களங்களின் ஊடே பயணித்து வெளியே வந்த பிறகு, நான் பார்த்ததை, உணர்ந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
***
இது ஒரு இரண்டாயிரம் ஆண்டுகால ஆரிய-திராவிட நெடும் போர். 1920-களில் 'அந்நிய வெள்ளையர்களுக்கு' எதிரான ஒத்துழையாமை இயக்கம் எனும் போர்க்களத்தில் நுழைந்த பெரியார், 1970-களில் 'இந்திய வெள்ளையர்களுக்கு' எதிரான கர்ப்பக்கிரக நுழைவு எனும் போர்க்களம் வரை எதிரிகளைக் கதறக் கதறத் துரத்தி இருக்கிறார். 

போர்க்களம் புகுமுன், போரின்  அவசியம் குறித்து ‘குடியரசு’விலும் ‘விடுதலை’யிலும் முன்கூட்டியே அறிவிப்பு செய்து, துண்டறிக்கைகள் மூலம்  போராட்டத்தின் நோக்கத்தை உணர்த்தி, ஊர்ஊராய் கூட்டம் போட்டு அறைகூவல் விடுத்து, போராளிகளின் பட்டியலை முன்கூட்டியே உறுதி செய்து, வழக்காட வழக்கறிஞர்களையும் ஏற்பாடு செய்து, பொது மக்களுக்கோ பொது அமைதிக்கோ இடையூறு நேராமல்,
நூற்றுக் கணக்கில் பல்லாயிரக்கணக்கில் போராளிகளைக் களம் இறக்கி, போர்க்களத்தில் முன்வரிசையில் தானே முன்நின்று, தான் மட்டுமன்றி தனது சகோதரி மற்றும் இணையரையும் இணைத்துக் கொண்டு, தடையை மீறி கைதானால் குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் போர் நியாயமானது என நெஞ்சு நிமிர்த்தி, அபராதம் விதித்தாலும் அதைக் கட்ட‌மறுத்து சிறை புகுந்து, கல் உடைத்து, எண்ணற்றோர் உயிர் பலியானபோதும் துவளாமல், தள்ளாத வயதிலும் உடல் உபாதைகளை ஒரு பொருட்டாகக் கருதி ஓய்வெடுக்காமல்,  அடுத்தடுத்து களம் கண்டு எதிரிகளை நிலைகுலைய வைத்தச் சுவடுகளே போர்க்களங்கள் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. 

மக்களிடையே நிலவும் மதம் சார்ந்த பழக்கவழக்கங்களும் அவற்றைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவுகளும், நம்மை அடக்கி ஆள்வதற்கு அரசியல் அதிகாரமும்  எதிரிகளிடம் ஏவுகணைகளாகவும், கேடயங்களாகவும் இருக்கும்வரை, எதிரிகளை முற்றிலுமாக வீழ்த்த முடியாது என்பதை உணர்ந்ததாலோ என்னவோ, ஒன்றியத்தில் இருந்து வெளியேறி நமக்கானதொரு தனி சட்டத்தை உருவாக்கிக் கொண்டு, நம்மை நாமே ஆளுகின்ற அதிகாரம் கொண்ட தன்னாட்சிதான் தீர்வு என்று தனது இறுதி மூச்சுவரை முழங்கியதை உணர முடிகிறது.

இந்தித் திணிப்பு, குலக்கல்விக்கான புதிய கல்விக் கொள்கை, நீட் போர்வையில் உயர்கல்வி மறுப்பு, மும்மொழிக் கொள்கை திணிப்பு-ஏற்க மறுப்பதால் கல்விக்கான நிதி மறுப்பு,  ஆளுநர் மூலம் அதிகார முடக்கம் என எதிரிகளின் எண்ணற்ற ஏவுகணைகள் நம் மீது தொடர்ந்து ஏவப்படும் இன்றைய போர்க்களச் சூழலில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதே இன்றைய கேள்வியாக எஞ்சி நிற்கிறது. 

வெறும் அறிக்கைகள், கருத்தரங்கம், ஆர்ப்பாட்டம் எனும் அடையாளப் போராட்டங்களால் எதிரிகள்  அஞ்சுவதில்லை. இதன் விளைவு, ஆளுநர் என்ற பெயரில் ஒருவன் நம் மண்ணிலேயே நங்கூரமிட்டுக்கொண்டு, அய்யன் வள்ளுவனுக்கு காவிச் சாயம் பூசியதோடு, அய்யனை சனாதனக் காவலனாக்கி நம்மைப் பார்த்து கெக்களித்துக் கொண்டு திரிகிறான். 

இதுவே, பெரியாரின் காலம் என்றால் இந்த ஆட்டுத்தாடி தனது மாளிகையை விட்டு  ஓட்டம் பிடிக்கும் வரை ஆளுநர் மாளிகை அல்லவோ அன்றாடம் முற்றுகையிடப்பட்டிருக்கும்? 

செய்தித் தொடர்பு, தகவல் தொடர்பு, போக்குவரத்து வசதி, பொருளாதார வசதி இல்லாத ஒரு காலத்தில், கல்வி அறிவு குன்றிய மக்களை இறுதி இலக்கு எட்டும்வரை பல்லாயிரக் கணக்கில் பெரியாரால் திரட்டிப் போராட முடிந்தது. கட்சி மாச்சரிங்களைக் கடந்து பெரியாரின் பின்னால் பலரும் அணிதிரளக் காரணம் அவர் மக்களுக்கான தலைவராய் உண்மையாய் உழைத்தார்; வாழ்ந்தார். இன்றும் வாழ்கிறார்.

ஆனால், இன்று எல்லா வசதி வாய்ப்புகளும் இருந்தும், பத்து பேரைத் திரட்டுவதற்கே திண்டாடுகின்றன இயக்கங்கள். காரணம், பெரியாரைப் போன்று நம்பிக்கையான தலைவன் ஒருவனும் எந்த ஒரு கட்சியிலும், எந்த ஒரு இயக்கத்திலும் உருவாகவில்லை என்பதைத்தான் பெரியாரின் போர்க்களங்கள் புரிய வைக்கிறது.

பெரியாரைப் போன்று ஒரு மக்கள் தலைவன் உருவாகாதவரை எதிரிகளை ஒருபோதும் வீழ்த்த முடியாது. தலைவனுக்காக தமிழ்நாடு காத்துக் கிடக்கிறது!

ஊரான்

பெரியாரின் போர்க்களங்கள்
ஆசிரியர்: இரா.சுப்பிரமணி வெளியீடு: கருஞ்சட்டைப் பதிப்பகம்
விலை ரூ.500/-
தொடர்புக்கு: 044-24726408, 81229 46408.
web: www.karunchattaibooks.com

Sunday, 25 August 2024

இளங்கோவன் மரணம்: மேலும் ஒரு பெருந்துயரம்!

கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை, சென்னையிலிருந்து கோவை வரை, என 1978 ஆம் ஆண்டில் பாலிடெக்னிக் படிப்பு முடித்த, தமிழ்நாடு பட்டயப் பொறியாளர்களின் (Diplamo in Engineering) குவி மையமாக விளங்கியது திருச்சி பெல் (BHEL) நிறுவனம்.
 
பன்முகப் பண்புகளைக் கொண்டவர்களோடு பழக, உறவாட பாலம் அமைத்துக் கொடுத்தது அந்நிறுவனம்.  


நடுவண் அரசின் நிறுவனம் ஒன்றில், நிரந்தரப் பணியில் சேர்ந்தோம், இனி தன் வீடு, தன் குடும்பம்மட்டும் என்றில்லாமல், சமூகத்தில், தாங்கள் கற்ற பாடங்களையும் ஒரு படிப்பாக எடுத்துக் கொண்டு, சமூக அவலங்களையும் அலசும் ஆவல் கொண்டவர்களில் தோழர் எஸ்.இளங்கோவனும் ஒருவர்.
 
பணி நிரந்தரம் ஆகுமா என்பது உறுதி ஆவதற்கு முன்பாகவே, பயிற்சிக் காலத்தில், மகத்தான தமிழறிஞர் ஐயா பெருஞ்சித்திரனார் அவர்களின் தமிழ்ச் சாற்றைக் பருகபெல் பயிற்சி விடுதி வளாகத்திலேயே ஏற்பாடு செய்தவர் நண்பர் இளங்கோவன் அவர்கள். ‘தென் மொழியும், ‘தமிச்சிட்டும் எம்மைந் பற்றிக்கொள்ள பாலம் அமைத்தவரும் இவரே.
 
இவர் திராவிட இயக்க அரசியலில் தீவிரமாகப் பயணித்தபோதும், நான் தீவிர இடதுசாரி அரசியலில் பயணித்த போதும், அரசியலில் ஆயிரம் கருத்து முரண் இருந்தாலும், முகம் காட்டாமல், முறுக்கிக் கொண்டு செல்லாமல் புன்முறுவலோடுப் பழகும் பண்பாளர் இவர்.
 
திராவிட இயக்கப் போராளிகளும், தீவிர இடதுசாரிகளும் கரம்கோர்த்து பயணிக்கின்ற அவசியம் ஏற்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில், திருச்சியில்  மகஇக மேடைகளில்கூட அவர் 
முழங்கி உள்ளார்.
 
சமூகப் பணிகளுக்கு அவர் அதிக முன்னுரிமை கொடுத்து, அடிக்கடி விடுப்பு எடுத்துக் கொண்டதால், அவர் எந்தப் பதவியில் (chargeman) பணிக்குச் சேர்ந்தாரோ அதே பதவியிலேயே  அவர் பணி ஓய்வும் பெற்றார். பெல் வரலாற்றில் அதிசயங்களிலும் அதிசயமான ஒரு அசாதாரணமான  நிகழ்வு இது. அதனால், அவர் உயர் பதவிகளுக்கு செல்லும் வாய்ப்பை மட்டும் இழக்கவில்லை; ஊதிய இழப்பாக பணமதிப்பில் பல இலட்சங்களையும் இழந்து, தான் ஏற்றுக் கொண்ட இலட்சியத்திற்காகவே வாழ்ந்தவர் அவர்.
 
தன்னை ஆட்டிப்படைத்த சோரியாசிஸ் எனும் நோய்கு எதிரானப் போராட்டமும் அவரது வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்டது. ஹோமியோபதி கற்றுத் தேறி தனது இறுதி காலத்தில் பிறருக்கு மருத்துவ உதவிகளையும் செய்து வருவதாக என்னிடம் அவர் கூறுவார். இறை மறுப்பு, தமிழ்ப் பற்று, சோரியாஸிஸ், ஹோமியோபதி என எண்ணற்றவற்றில் என்னோடு ஒப்புமை உள்ளவர்.
 
சோரியாசிஸ் ஒரு நோய் அல்ல; அது ஆரோக்கியமானவர்களின் பிணி’ (healthy man disease) என்பார்கள். ஆனாலும் அவர் அறுபத்தி ஐந்திலேயே நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.
வாழ்வின் மிக முக்கிய நண்பரை, தோழரை இழந்துவிட்டேன். அவரது இழப்பின் துயரங்கள் எம்மைத் துரத்திய போதும், அவரது லட்சியங்களைச் சுமப்பதே அவருக்கு யாம் செலுத்தும் அஞ்சலியாகும்.
 
ஊரான்.

Wednesday, 11 January 2023

பதிப்புலகம் பாட்டாளிகளை நோக்கிப் பயணிக்குமா?

‌‌08.01.2023 ஞாயிறு அன்று முற்பகலில் நந்தனம் ஒய் எம் சி ஏ வில் நடைபெற்று வரும் சென்னை புத்தகக் கண்காட்சி மற்றும் மாலையில் தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற்ற மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியின் மாத இதழான சிந்தனையாளன் பொங்கல் மலர் வெளியீட்டு விழா என இரு வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன்.‍‌ ‌‌

காலை 11 மணிக்கு உள்ளே நுழைந்து வெறும் கழுகுப் பார்வையோடு பிற்பகல் 2 மணிக்கு வெளியே வந்த எனக்கு இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி ஒருபுறம் நேர்மறை எண்ணங்களையும் மற்றொருபுறம் எதிர்மறை எண்ணங்களையும் என்னுள் ஏற்படுத்தியது.

கட்டுக் கட்டாய் பொன்னியின் செல்வன்கள் ஆங்காங்கே குவிக்கப்பட்டிருந்தாலும், "இவர் தமிழர் இல்லையென்றால் வேறு யார்தான் தமிழர்?" என்ற வினாவோடு கைத்தடியில் வீரு நடை போடும் பெரியாரே இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியின் நாயகன்.
யாரெல்லாம் கருத்துக்களை விதைத்துச் சென்றார்களோ அவர்களே வரலாறு நெடுக தொடர்ந்து கடத்தப்படுவார்கள் என்பதை அரங்குகளில் முறுவலித்த அண்ணாவையும், ஆனந்தச் சிரிப்போடு கலைஞரையும் பார்த்தபோது எனக்குத் தோன்றியது. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும், அடிமைகளும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்தாலும் அவர்கள் வரலாற்றில் அசை போடுவதற்கு அருகதையற்றவர்கள் என்பதை சொல்லாமலேயே உணர்த்தியது புத்தகக் கண்காட்சி.

மார்க்சியக் கோட்பாடும், அம்பேத்கர் மற்றும் பெரியாரின் சிந்தனைகளுமே இனி தேவை என்பதை ஆங்காங்கே விரவிக் கிடக்கும் முற்போக்கு நூல்கள் நமக்கு உணர்த்துகிறது. 

வண்ணத் திரை நட்சத்திரங்களையும் மிஞ்சும் வகையில் பெரியார் மற்றும் அம்பேத்கரின் சிலைகள் பலரை வசீகரித்துக் கொண்டிருந்தன.

அல்லவற்றைப் புரிந்து கொண்டால்தான் நல்லவற்றை நாட முடியும் என்பது போல பிற்போக்கு நூல்களையும் படித்தால்தான் முற்போக்கு நூல்களின் தேவையை உணர முடியும்.  ஏதோ ஒரு வகையில் எல்லாமும் நமக்கு தேவைப்படுபவைதான்.

பொன்னியின் செல்வனைப் புரட்டிப் பார்க்க, வேள்பாரியை விரித்துப் படிக்க, சங்க இலக்கியங்களை ஊடுருவிப் பார்க்க, வேதங்களின் வேர்களைத் தேட, மூலதனத்தை முத்தமிட ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது, ஆயிரம் ஆயிரமாய் நோட்டுக் கட்டுகள் இருந்தால்தான் முடியும் போல. 

வர்க்க உணர்வு உள்ளவனோ வறியவனாய் இருக்க, வாங்கிப் படிக்க வசதி உள்ளவனை மட்டும் நம்பினால் மாற்ற‌‌ம் வந்து விடுமா என்ற வினாதான் எஞ்சி நிற்கிறது.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என சமத்துவத்தை ஓரடியில் அடித்துச் சொன்னான் ஐயன் அன்று. பெரியாரின் "பெண் ஏன் அடிமையானாள்"?, ஒரு சில பக்கங்களில் மாமிகளைக்கூட மடைமாற்றுகிறது.  

ஆனால் இன்று, பலர் பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளுகிறார்கள்,  அவர்களுக்குள்ளேயே அது முடங்கிப் போகிறது.   வாழ்க்கைப் பாடுகளை, ஓரிரு பக்கங்களில், மக்கள் மொழியில் எளியோரிடம் எடுத்துச் செல்ல வேண்டும். அதுதான் இன்றைய தேவையும் கூட.

ஆயிரம் பக்கங்களைக் கொண்ட பகவத் கீதையை வெறும் 260 ரூபாய்க்கு  நாக்பூரில் இருந்து கடத்தி வருகிறான் தமிழ்நாட்டுக்கு. 50 பதிப்புகளில் 5 லட்சம் பிரதிகளைக் கடந்து எதிரி ஊடுருவிக் கொண்டிருக்கிறான். ஆனால் நாமோ, நான்கு பதிப்புகளில் நாற்பதாயிரம் பிரதியைக் கடந்ததற்கே ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறோம்.  படைப்புலகம் இதை பரிசீலிக்கவில்லை என்றால் வரலாறு உங்களை மன்னிக்காது.

காரிருள் சூழ்ந்தால் வயல்கள் துளிர்க்கும், காவி இருள் சூழ்ந்தால் களைகள் முளைக்கும். காவி இருள் ஏற்கனவே தமிழகத்தை சூழ்ந்து விட்டது‌. ஆங்காங்கே களைகள் முளைத்து விட்டன. களைகளைப் பிடுங்கி எறியவில்லை என்றால், வயல்களில் ஒரு குண்டு மணிகூட மிஞ்சாது என்பதை உணர்த்தும் வகையில் அமைந்தது மார்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியின் "சிந்தனையாளன்" பொங்கல் மலர் வெளியீட்டு விழாவும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சனாதன எதிர்ப்புக் கருத்தரங்கமும்.

பேராசிரியர் சுப வீரபாண்டியன், பேராசிரியர் கருணானந்தம், தோழர் தியாகு, தோழர் வாலாசா வல்லவன் உள்ளிட்ட ஆளுமைகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி ஒரு சில பாடங்களை உணர்த்தியது.

சனாதனம் என்ற பெயரில் பார்ப்பனியத்தை உயர்த்திப் பிடிக்கும் பாரதிய ஜனதாக் கட்சி உள்ளிட்ட சங்பரிவாரக் கும்பலை வீழ்த்த வேண்டுமானால், முற்போக்கு பேசுபவர்கள் வெகுமக்கள் இருக்கிற மேடைகளைப் பயன்படுத்த வேண்டும். திமுக மீது ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அங்குதான் பெருவாரியான வெகுமக்கள் இருக்கிறார்கள். இன்றைய அரசியல் சூழலில் திமுகவை ஒதுக்கி வைத்துவிட்டு சனாதனத்தை வீழ்த்துவது என்பது சாத்தியமா என்பதையும் யோசிக்க வேண்டும். 

குடிநீரில் மலம் கலக்கும் சிந்தனை கொண்ட மக்களை வைத்துக் கொண்டா காவிகளை வீழ்த்த முடியும்? சனாதன சிந்தனையிருந்தும், சனாதன வாழ்க்கை முறைகளிலிருந்தும் வெகுமக்களை மீட்டெடுக்காமல் சங்பரிவாரக் கூட்டத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது.‌‌ முற்போக்கு பேசுபவர்கள் வெகு மக்களை நோக்கிச் செல்வதைத் தவிர இதற்கு வேறு வழி ஏதுமில்லை.

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

புத்தகக் கண்காட்சி: எதற்காக?‌‌

சென்னை புத்தகக்‌ காட்சி: அப்படி என்னதான் இருக்கிறது அங்கே?

Wednesday, 5 October 2022

சம்பூகன் வதம்! முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் பார்ப்பனியம்!

சமீபத்தில், முகநூலில் ஒரு காணொளியைப் கண்டேன். "சூத்திரனாய்ப் பிறந்த சம்பூகன் தவம் செய்யலாமா என ஆத்திரம் கொண்ட இராமன் சம்பூகனை வதம் செய்தான் என்று சொல்லுவது ஒரு வடிகட்டியப் பொய். திராவிடர் கழகத்தினால் இட்டுக்கட்டப்பட்ட கற்பனைக் கதை" என்று வாய் கூசாமல் அளந்து கொண்டிருந்தார் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர். 

அதற்குப் பதிலடி கொடுத்த திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள், "வால்மீகி இராமாயணத்தில் சம்பூகன் வதம் இருப்பதை இராமகிருஷ்ணா மடம் வெளியிட்டுள்ள நூலில் இருந்து நிரூபிக்கத் தயார், வெளிப்படையான விவாதத்திற்கு நீங்கள் தயாரா?" என்று கேட்டபோது சீனிவாசனின் முகம் கருத்துப் போனதுதான் மிச்சம். இதில் வேடிக்கை என்னவென்றால் சீனிவாசன் ஒரு பேராசிரியராம். பார்ப்பனியம் தலைக்கு ஏறிப் போனால் பேராசிரியர் என்று பீற்றிக்கொள்பவனுக்கும் புத்தி மட்டுப் போகும் என்பதற்கு இந்த சீனிவாசனே ஒரு நிகழ்கால சாட்சி. 

சமீப காலமாக, சில பார்ப்பன அடிவருடிகள் தங்களது கருத்துக்கு வலு சேர்ப்பதற்காக அம்பேத்கரை துணைக்கு அழைத்துக் கொள்கின்றனர். ஏதோ அம்பேத்கரை கரைத்துக் குடித்து, கரை சேர்ந்தவர்கள் போல பிதற்றிக் கொண்டு திரிகின்றனர். பார்ப்பனித்தையும், இந்து மதக் கொடுங்கோன்மையும் எத்தனை முறை அம்பேத்கர் அவர்கள் கழுவி கழுவி ஊற்றினாலும் அவர்களுக்கு உரைப்பதே இல்லை. 

சம்பூகன் வதம் குறித்து அம்பேத்கர் அவர்களே எழுதியதை வாசகர்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன். இராமாயணம் மூலநூலில் இருந்தே சம்பூகன் வதம் குறித்து அம்பேத்கர் அவர்கள் எழுதி உள்ள்ளார் என்றாலும் கூட, அதற்கும் திராவிடர் கழகம், பெரியாரே காரணம் என்று கூட, நா கூசாமல் முடிச்சுப் போடுவர். பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து, பொய்யிலே உலவுவதுதானே ‌‌ பார்ப்பனியம். நல்ல வேலை, மகாத்மா ஜோதிராவ் புலே,  நாராயண குரு, வள்ளலார் அம்பேத்கர், பெரியார் போன்ற எண்ணற்ற நம் முன்னோர்கள் பார்ப்பனியம் குறித்த சில உண்மைகளை நமக்கு விட்டுச் சென்றுள்ளனர். இல்லையென்றால் நாமும் பார்ப்பனியம் சொல்வதைத்தான் வேதவாக்காகக் கருதிக் கொண்டிருப்போம்.

இதோ அம்பேத்கர் மொழியில் சம்பூகன் வதம்!

"...நாட்டு மக்களின் குறை கேட்டு நிவர்த்தி செய்கிற பழங்கால மன்னர்களின் பழக்கத்தைக் கூட இராமன் ஒருபோதும் கடைபிடிக்கவில்லை. தம் மக்கள் குறைகளை ஏதோ ஒரு தடவை இராமன் நேரில் கேட்டதாக வால்மீகி ஒரு சந்தர்ப்பத்தைக் குறிப்பிடுகிறார். அதுவும் ஒரு துயரமான நிகழ்ச்சியாக அமைகிறது. அக்குறையைத் தானே தீர்த்து விடுவதாய் பொறுப்பேற்கிறான் இராமன். அப்படி செய்கையில், வரலாறு காணாத கடும் கொடிய குற்றத்தைச் செய்கிறான் இராமன். அதுவே சூத்திரன் சம்பூகனின் படுகொலை நிகழ்ச்சியாகும்.

இராமனுடைய ஆட்சிக் காலத்தில் அவனுடைய நாட்டு மக்கள் யாரும் அகால மரணம் அடையவில்லை என்கிறார் வால்மீகி. இருந்த போதிலும் பிராமணச் சிறுவன் ஒருவன் அகால மரணம் அடைய நேர்ந்தது. மகனைப் பறிகொடுத்த தந்தை, தன் பிள்ளையின் பிணத்தை தூக்கிக்கொண்டு இராமனின் அரண்மனையை நோக்கிப் போனான். அரண்மனையின் வாசலில் பிணத்தை கிடத்தி விட்டுக் கதறி அழுதான். தன் பிள்ளையின் சாவுக்கு இராமனே காரணமென நிந்தித்தான். மன்னனின் ஆட்சியில் படிந்திட்ட பாவம்தான் தன் மகனின் மரணத்திற்குக் காரணம் என்றான். குற்றத்தை அறிந்து தண்டிக்காவிட்டால் மன்னன் இராமனே குற்றவாளி என்றான். மனம் போனபடி பழித்தான்; சபித்தான் குற்றவாளியைப் பிடித்துத் தண்டித்து, செத்துப்போன தன் மகனை பிழைக்கச் செய்யாவிட்டால், அரண்மனை வாசலிலேயே பட்டினிப் போர் (தர்ணா) நடத்தித் தற்கொலை செய்து கொள்வேன் என அச்சுறுத்தினான்.

அதைக் கேட்டு நாரதன் உட்பட அறிவார்ந்த எட்டு ரிஷிகளுடன் இராமன் கலந்தாலோசித்தான். அந்த அறிஞர்களின் ஆலோசனைகளை கூட்டத்தில், நாட்டு மக்களுள்-அதாவது இராம இராஜ்ஜியத்தில், யாரோ சூத்திரன் ஒருவன் தவம் செய்து கொண்டிருப்பதாகவும், அச்செயல் தருமத்திற்கு எதிரானது என்றும் நாரதன் சொன்னான். தரும (புனித) சட்டங்களின்படி பிராமணர்கள் மட்டுமே தவம் செய்யலாம். பிராமணர்களுக்குச் சேவகம் செய்வதே சூத்திரர்களுடைய கடமை என்று மேலும் நாரதன் கூறினான். 

தருமத்திற்கு எதிராக ஒரு சூத்திரன் தவம் செய்வது பெரும் பாவம், குற்றம் என்று இராமன் திடமாய் நம்பினான். உடனே தன் தேரில் ஏறி நாட்டைச் சுற்றித் துருவி அக்குற்றவாளியைப் பிடித்து வரப் புறப்பட்டான். இறுதியில், நாட்டின் தெற்கே அடர்ந்த காட்டுப்பகுதியில் ஒருவன் கடினமானதொரு தவத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டான். இராமன் அவனை நோக்கிப் போனான். அந்தத் தவம் செய்து கொண்டிருந்தவன், தான் சம்பூகன் என்னும் சூத்திரனா, மனித உருவிலேயே மோட்சத்திற்குச் செல்லத் தவம் செய்பவனா என்று கூடக் கேட்டறியாமல், விசாரணையோ, எச்சரிக்கையோ, உண்மை நியாயத்தை அறிந்திடும் நோக்கமோ இன்றி சம்பூகனின் தலையைச் சீவி விட்டான் இராமன். அதே நொடியில் எங்கோ தொலைதூரத்து அயோத்தியில் அகால மரணம் அடைந்த பிராமணனின் மகன் மீண்டும் உயிர் பெற்றானாம். 

கடவுள்களெல்லாம் மன்னன் இராமனின் மீது, மலர் தூவி மகிழ்ந்தார்களாம். தவம் செய்து மோட்சத்தை அடைய தமக்கே உள்ள உரிமையை அதற்கு அருகதையற்ற சூத்திரன் ஒருவன் மேற்கொண்டதைத் தடுத்து, தண்டித்து சம்பூகனை கொலை செய்த மன்னன் இராமனின் செய்கைக்காக அவர்கள் மகிழ்ந்தார்கள். கடவுள்கள், தேவர்கள் எல்லாம் இராமன் முன் தோன்றி அவன் செய்த இந்நற் காரியத்திற்காக அவனைப் பாராட்டினார்கள். 

அயோத்தி அரண்மனை வாசலில் பிணமாய்க் கிடந்த பிராமணச் சிறுவனை மீண்டும் உயிர்பிக்க வேண்டும் என்று கடவுள்களிடம் இராமன் வேண்டினான். "அந்த பிராமணச் சிறுவன் எப்போதோ உயிர் பெற்று எழுந்து விட்டான்" என்று அவர்கள் இராமனுக்குச் சொல்லிவிட்டு மறைந்து போயினர். அதற்குப் பின் இராமன் அருகிலிருந்த அகத்திய முனிவனின் ஆசிரமத்திற்குப் போனான். சம்பூகனைக் கொன்ற நற்செயலைப் பாராட்டி தெய்வ மகிமையுள்ள காப்பு ஒன்றை அகத்தியன் இராமனுக்குப் பரிசாய் அளித்தான். பிறகு இராமன் அயோத்திய அடைந்தான். இத்தகையவனே இராமன்."

பக்கம்: 462, 463, 464. பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி - 8.

ஊரான்

Monday, 20 September 2021

இராணிப்பேட்டை 'பெல்' நிறுவனத்தில் பெரியார் பிறந்த நாள் விழா!

பழையனக் கழிதலும் புதியனப் புகுதலும் தானாக நடந்து விடுவதில்லை. வரலாறு நெடுகிலும் மாறிவரும் சமூகச் சூழலில் எண்ணற்றத் தலைவர்களின் முன்முயற்சி மற்றும் உழைப்பினாலும்தான் சமூகத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பழமையால் பயன் பெற்று வந்த ஒரு கூட்டம் புதியவற்றைக் கொண்டுவரும் தலைவர்களை எள்ளி நகையாடுவது ஒன்றும் புதியதல்ல.  

பார்ப்பனிய எதிர்ப்பு, வேத மறுப்பு என்கிற திராவிடக் கருத்தியலை  உயர்த்திப் பிடித்து, சாதி மதத்தின் பெயரால் இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்ததனால்தான் பெரியாரை சமூகநீதிக் காவலராகத் தமிழகம் போற்றுகிறது; அவரது பிறந்தநாளை புதுப்பொலிவுடன் கொண்டாடுகிறது.

ஆரியத்துக்கு எதிரான திராவிடக் கருத்தியலை, தமிழனுக்கு எதிரான கருத்தியலாக மடை மாற்ற முயலும் சில அற்பர்களின் முகத்தில் கரியைப் பூசி உள்ளனர் தமிழக மக்கள். 

இந்த ஆண்டு செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாள் "சமூக நீதி நாள்" கொண்டாட்டத்தில் இராணிப்பேட்டை பெல் நிறுவனமே மூழ்கிக் திளைத்தது. மாறுபட்ட கருத்து உள்ளவர்களைக் கூட தனக்கு மலர் தூவ வைத்து விட்டாரே! அதனால்தானோ என்னவோ அவர் மேலும் மேலும் ஆழமாய்... நம் இதயங்களில்........!

இராணிப்பேட்டை பாரத மிகு மின் நிறுவனத்தின் (BHEL) வாயிலில் 17.09.2021 அன்று காலை 7.00 மணி அளவில் நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் விழாவில் இதர பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்க துணைப் பொதுச் செயலாளர் சுந்தர்ராஜன்  வரவேற்புரை நிகழ்த்த,  இதர பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத் தலைவர் தங்கமணி மற்றும் பட்டியலின பழங்குடி ஊழியர்கள் மேம்பாட்டு ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் தேவேந்திரன் ஆகிய இருவரும் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தனர்.

இதர பிற்படுத்தப்பட்டோர் நல சங்கப் பொதுச் செயலாளர் பிரகாசம் மற்றும் பட்டியலின பழங்குடி ஊழியர்கள் மேம்பாட்டு ஒன்றியத்தின் தலைவர் பாலாஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதர பிற்படுத்தப்பட்டோர் நல சங்க துணைத் தலைவர் கார்த்திகேயன் சமூகநீதி நாள் உறுதிமொழி வாசிக்க விழாவில் பங்கேற்ற அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

BAPSU, BAPEU, Supervisors Union,  Executive Association, EGTU/INTUC, LPF, BMS, Welders Association, Crane Operators & Riggers Association, Physically Challenged Welfare Association உள்ளிட்ட சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பட்டியலின பழங்குடி ஊழியர்கள் மேம்பாட்டு ஒன்றியத்தின் அமைப்புச் செயலாளர் வாசுதேவன் விழாவினை நெறியாளுகை செய்ய, அதன் துணைத் தலைவர் ராஜா நன்றி உரையுடன் இனிதே நிறைவுற்றது. பெல், இராணிப்பேட்டை அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத் தோழர்களும் திரளாக விழாவில் பங்கேற்றனர். 

பணிக்குச் சென்ற பெல் ஊழியர்கள் பலரும் விழாவில் கலந்து கொண்டதோடு பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். விழா ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

விழாக் காட்சிகள்

























தொடர்புடைய பதிவுகள்

பொதுவுடைமையை நேசித்த பெரியார்!


Tuesday, 29 June 2021

திராவிட என்ற சொல் மீது பார்ப்பனர்களுக்கு ஏன் கடுங் கோபம்?

திராவிட என்ற சொல் மனுஸ்மிருதியிலேயே (கி.மு 150 முதல் கி.பி 100) இருக்கும் போது, இராபர்ட் கால்டுவெல்தான் (1856) முதன் முதலில் திராவிட என்ற சொல்லைப் புகுத்தித் தமிழனின் அடையாளத்தைத் திசை திருப்பிவிட்டார் என்று தற்போது பார்ப்பனர்கள் கூப்பாடு போடுகின்றனர். திராவிட என்ற சொல் மீது அவர்களுக்கு ஏன் கடுங் கோபம்?; தம்பிகளுக்கும்தான்!

“பிராமணனிடத்தில் வணங்காமையாலும், உபநயன முதலிய கர்மலோபத்தினாலும் மேற்சொன்ன சத்திரிய சாதிகள் இவ்வுலகில் வரவர சூத்திரத்தன்மையை அடைந்தார்கள் (மனு: 10-43)”

பௌண்டரம், ஔண்டரம், திரவிடம், காம்போசம், யவனம், சகம், பாரதம், பால்ஹீகம், சீநம், கிராதம், தரதம், கசம் இந்தத் தேசங்களை ஆண்ட அனைவரும் மேற்சொன்னபடி சூத்திரர்களாகி விட்டார்கள் (மனு: 10-44)”

10-43: But in consequence of the omission of the sacred rites, and of their not consulting Brahmanas, the following tribes of Kshatriyas have gradually sunk in this world to the condition of sudras;

10-44: (VIZ) the Paundrakas, the Kodas, the Dravidas, the Kambogas, the Yavanas, the Sakas, the Paradas, the Pahlavas, the Kinas, the Kiratas, and the Daradas.

(ஆங்கிலத்தில் உள்ள Kodas தமிழில் ஔண்டரம் என்றுள்ளது. தமிழில் உள்ள கசம் ஆங்கிலத்தில் இடம்பெறவில்லை)

மனு கூறியபடி மேற்கண்ட பன்னிரண்டு நாடுகளின் மன்னர்களும் பூணூல் அணிவதை ஏற்கவில்லை. பார்ப்பனர்களை வணங்கி அவர்களின் ஆலோசனைப்படி ஆட்சி நடத்தவில்லை.  அதனால் அவர்கள் சூத்திரர்களாக்கப்பட்டார்கள். இங்கே எடப்பாடி நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

இந்தப் பன்னிரண்டு நாடுகளும் எந்தெந்தப் பகுதி என்பதை வரலாற்றில் தேடினால் சுலபமாகக் கிடைக்கக் கூடியவைதான். திரவிடம் என்றால் பார்ப்பன எதிர்ப்போடு தொடர்புடைய சொல் என்றப் புரிதலைத்தான் மனு நமக்குக் கொடுக்கிறான்.

எனவே, திரவிடம் என்றாலும் பௌண்டரம், ஔண்டரம், காம்போசம், யவனம், சகம், பாரதம், பால்ஹீகம், சீநம், கிராதம், தரதம், கசம், யவனம் என்றாலும் ..... பார்ப்பன எதிர்ப்பு - வேத மறுப்பு என்பதுதான் அதன் சாரம். இந்தப் புரிதலில்தான் பார்ப்பன எதிர்ப்பைக் கொள்கையாகக் கொண்ட பெரியார் அன்று இச்சொல்லைப் பயன்படுத்தி திராவிடர் கழகம் என்று தான் தொடங்கியக் கட்சிக்குப் பெயர் வைத்திருக்கக்கூடும். அப்படியானால் தரதம் என்றோ யவனம் என்றோ வைத்திருக்லாமே என்றுகூடத் தோன்றலாம். திராவிடம் தென்னிந்தியாவை-தமிழர்களைக் குறிப்பதால் பெரியார் திராவிடத்தைத் தெரிவு செய்துள்ளார்.

பின்னாளில் திராவிட என்ற பெயரைத் தாங்கி பல கட்சிகள் தோன்றின. அதனாலேயே அக்கட்சிகள் எல்லாம் பார்ப்பன எதிர்ப்பைக் கொள்கையாகக் கொண்டவை என்று பொருளாகி விடாது. மேலும் திராவிட என்ற பெயரைத் தாங்கி உள்ள கட்சிகளில் உள்ள பலர் பிழைப்புவாதிகளாக, ஊழல்வாதிகளாக சீரழிந்து விட்டால் இதைத் திராவிட என்ற சொல்லோடு முடிச்சுப் போட்டு ‘திருட்டுத் திராவிடம்’ என புதுப் பொருள் விளக்கம் கொடுத்து திராவிட என்ற சொல்லின் பரிமானத்தைக் கொச்சைப் படுத்துகின்றனர். மேலும் திராவிட என்ற பெயரைத் தாங்கி உள்ள கட்சிகளில் உள்ள அனைவருமே பார்ப்பன எதிர்ப்பைக் கடைபிடிப்பவர்களா என்ன?

*****

பார்ப்பனர்களை வணங்காமல், அவர்களின் ஆலோசனைகளைக் கேட்காமல் ஆட்சி நடத்திய மன்னர்கள் சூத்திர நிலைக்குத் தள்ளப்பட்டது மட்டுல்ல அவர்களில் பலர் பார்ப்பனர்களால் வீழ்த்தப்பட்டனர் அல்லது கொன்றொழிக்கப்பட்டனர்.

அரசன் தினந்தோறும் காலையில் எழுந்து மூன்று வேதம் ஓதினவர்களாயும், நீதி சாஸ்திர வித்வான்களாயும் இருக்கிற பார்ப்பனர்களை உபசரித்து அவர்கள் சொல்கிறபடி நீதி செலுத்த வேண்டியது (மனு: 7-37)

தான் நியாயம் அறிந்திருப்பினும், பார்ப்பனர்களிடத்தில் நியாயத்தை வணக்கமாய் கேட்க வேண்டியது. பார்ப்பனர்களை வணங்கி ஆட்சி நடத்தினால் ஒரு போதும் மன்னன் அழியமாட்டான். (மனு: 7-39)

பார்ப்பனர்களை வணங்காமல் ஆட்சி நடத்தாததால் அனேக மன்னர்கள் சதுரங்க சேனையுடன் அழிந்து போனார்கள், நாட்டை விட்டு காட்டுக்கு ஓடிப் போனார்கள். (மனு: 7-40)

அந்த வணக்கமில்லாததால் வேனன், நகுஷன், சுதாசன், யவனன், சுமுகன், நிமி இவர்கள் ஆட்சியை இழந்து அழிந்த போனார்கள். (மனு: 7-41)

மேற்கண்ட மன்னர்களின் கதைகளை பாகவத புராணம், இராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட புராணக் கதைகளில் காண முடியும்.

பார்ப்பனர்களை வணங்கியதால் பிருது, மனு இவ்விரு அரசர்கள் ஆட்சியையும், குபேரன் செல்வத்தையும், விசுவாமித்திரன் பார்ப்பனத் தன்மையையும் அடைந்தார்கள். (மனு: 7-42)

7-37: Let the king, after rising early in the morning, worship Brahmanas who are well versed in the three fold sacred science and learned (in polity), and follow their advise.

7-39: Let him, though he may already be modest, constantly learn modesty from them; for a kind who is modest never perishes;

7-40: Through a want of modesty many kings have perished; together with their belongings; through modesty even hermits in the forest have gained kingdoms.

7-41: Through a want of humility Vena perished, like wise king Nahusha, Sudas, the son of Pigavana, Shumukta and Nemi.

7-42: But the humility Prithu and Manu gained sovereignty, Kubera the position of the Lord of wealth and the son of Dadhi the rank of a Brahmana.

இங்கு பார்ப்பனர்களை வணங்கியதற்கு எடப்பாடியும்,  வணங்காமைக்கு அண்ணா – கலைஞர் - ஸ்டாலின் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

*****

கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் ஒரு பார்ப்பனர் என்பதால் திராவிடர்கள் என்றாலும் பார்ப்பனர்கள் என்றாலும் ஒன்றுதான் என்ற ஒரு வாதத்தையும் அப்பாவித்தனமாக சிலர் முன்வைக்கின்றனர். இது உண்மையா?

“இந்தியப் பார்ப்பனர்கள் இருவேறு வகைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். ஒரு பிரிவு திராவிடர்கள் என்றும் மறு பிரிவு கவுடர்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

திராவிடர் என்ற வகைப் பிரிவு ஐந்து உட்பிரிவுகளைக் கொண்டது. இந்த ஐந்தும் சேர்ந்து பஞ்ச திராவிடர் எனப்படும். இவ்வைந்து உட்பிரிவுகளின் பெயர் பின்வருமாறு:

1.மகாராஷ்டிரர்

2.ஆந்திரர்

3.(முறைப்படியான) திராவிடர் (தமிழ் பார்ப்பனர்கள்)

4.கர்னாடகர்

5.குர்ஜரர்”  

இந்த உட்பிரிவுகள் ஒவ்வொன்றிலும் பல்வேறு உட்சாதிகள் உண்டு. கவுடர்கள் வகையிலும் இதுபோன்று பல்வேறு உட்பிரிவுகளும் உட்சாதிகளும் உண்டு. இப்படியாக பார்பனர்களில் பாகவதர், பண்டிட், பரத்வாஜ், திரிவேதி, ஜெட்லி, பதக், தத்தா, வைத்தயா, பாண்டே, துபே, மிஸ்ரா, பட், முன்ஷி, சுக்லா, வாஜ்பேயி, தீட்சிதர், உபாத்யா, ஆச்சார்யா என ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட சாதிகள் உண்டு.

ரிக்வேதிகள், கிருஷ்ண யஜூர்வேதிகள், சுக்ல யஜூர்வேதிகள்-மத்தியாந்தினார்கள், சுக்ல யஜூர்வேதிகள்-கன்வார்கள், சாமவேதிகள், அதர்வர்கள், வைணவர்கள், வீர வைணவர்கள், ஸ்ரீ-வைணவர்கள், பாகவதர்கள், ஷக்தர்கள் ஆகிய பார்ப்பன சாதிகள் தமிழ்ப் பார்ப்னர்களில் அடங்குவர். இன்று நமக்குத் தெரிந்த ஐயர், ஐயங்கார் உள்ளிட்டவை எப்படி சாதிகளாக அறியப்படுகின்றன என்று தெரியவில்லை. ஒரு வேளை அவை மேற்கண்ட சாதிகள் ஏதாவதின் தமிழாக்கமோ என்னவோ?

“பஞ்ச திராவிடர்கள் என்பது விந்திய மலைக்குக் கீழ்ப்புறம் வாழும் பார்ப்பனர்களுக்கு ஒரு பொதுப் பெயர் ஆகும். பஞ்ச கவுடர்கள் என்பது விந்திய மலைக்கு மேற்புறம் வாழும் பார்ப்பனர்களுக்கு ஒரு பொதுப் பெயர் ஆகும். வேறு விதமாகச் சொன்னால் பஞ்ச கவுடர் என்பது வடக்கத்திய பார்ப்பனர்களையும், பஞ்ச திராவிடர் என்பது தெற்கத்தியப் பார்ப்பனர்களையும் குறிக்கும்”.

எனவே, திராவிடம் என்றால் அது தென்னிந்தியாவோடு தொடர்டையது என்பது மட்டும் தெளிவு.

மலேசியத் தமிழன், ஈழத் தமிழன் என்று விளிப்பது அவர்கள் வாழும் பகுதியைக் குறிப்பது போல திராவிடப் பார்பனர்கள் என்று விளிப்பது அவர்கள் வாழும் பகுதியைக் குறிக்கவே. திராவிடப் பார்ப்பனர்கள் என்றாலும் தென்னிந்திய அல்லது தமிழ்ப் பார்ப்பனர்கள் என்றாலும் ஒன்றுதான்.  

*****

பார்ப்பன எதிர்ப்பை ஏற்றுக் கொண்டவர்கள் திராவிட என்ற பெயர் தாங்கி உள்ள கட்சிகளில் மட்டுமல்ல பொதுவுடைமை உள்ளிட்ட பிற கட்சிகளிலும் ஏராளமாக உள்ளனர். பார்ப்பன எதிர்ப்பைக் கைக்கொள்பவர்கள் அனைவருமே  திராவிடர்கள்தான்.

திராவிட என்ற சொல்லைப் பயன்படுத்தியதன் மூலம் தமிழை-தமிழனை சிறுமைப்படுத்தி விட்டார்கள் என்று கூப்பாடு போடுவது பார்ப்பனியத்துக்கு பல்லக்குத் தூக்குவதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? திராவிட என்ற சொல்லைக் கைவிடுவது பார்ப்பன எதிர்ப்பைக் கைவிடுவதற்கு ஒப்பாகும்.

ஆம்! இந்தப் புரிதலில் நான் திராவிடன்; நீங்கள்?

ஊரான்

ஆதார நூல்கள்: 

1. மனுதரும சாஸ்திரம், 
2.. டாக்டா அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 10

தொடர்புடைய பதிவுகள்

கலைஞர் கடைசி அசுரனா?