Showing posts with label மகஇக பெரியார் சுயமரியாதைத் திருமணம். Show all posts
Showing posts with label மகஇக பெரியார் சுயமரியாதைத் திருமணம். Show all posts

Saturday, 31 May 2025

இணை ஏற்பு: நாற்பதாம் ஆண்டு!

மே மாதம் 27 அன்று அகவை 67 முடிந்து 68 இல் அடி எடுத்து வைத்து, நண்பர்களின் வாழ்த்து மழையில் நனைந்த போது, ஜூன் 1 (1986) எனது இல்வாழ்க்கை இணை ஏற்பு நாள் என்பதை நான்கு நாட்களுக்கு முன்பே, கல்லூரியில் எனது வலக்கரமாய் விளங்கிய இனிய நண்பன் ராஜன் சேக்ரி நினைவுபடுத்தினான். 

எமது இணை ஏற்பு விழா குறித்து "இராகு காலத்தில் இணை ஏற்பு!" என்ற தலைப்பில் ஏற்கனவே எதிர்த்து நில் வலைப்பூவில் எழுதிய பதிவு ஒன்றை கல்லூரிக் கால நண்பர்கள் குழுவில் பகிர்ந்திருந்தேன். 


"ஜுன் முதல் நாள்தான் என் பிறந்தநாள் மச்சி..
திருமணத்திற்கு நானும் வந்திருந்தேன்.. பசுமையான நினைவுகளாக இன்றும் உளப்பதிவில் உள்ளது"

என்று நினைவு கூர்ந்ததோடு,

"இராகு காலத்தில் என்பதை விட இரகு (பிறந்த) காலம் அன்று திருமணம் நடந்தது என்பதுதான் கூடுதல் சிறப்பு"

என்று நண்பன் இரகுநாதன் பதில் எழுதினான்.

அதற்கு நான்,

"இரகு இருக்கும் இடத்தில் இராகுவுக்கு என்ன வேலை?"

என்று பதில் எழுதினேன். 

உண்மைதானே? உற்ற நண்பர்களும், தோழர்களும், உறவுகளும் நம்மை அரவணைத்துக் காக்கும் போது 'இராகு'வெல்லாம் எம்மாத்திரம்?

காசு பணம் பொருளைவிட நேசக்கரம் நீட்டும் நட்புதானே நமது நினைவுகளை பசுமையாக்குகின்றன. உறவுகள்கூட சில பல காரணங்களுக்காக இடையில் அறுபடலாம், ஆனால் நட்பு, பூத்த நாள் முதல் உதிரும் இறுதி நாள் வரை வாடாமல் மிளிர்வதால்தானே வண்டுகள் வட்டமடிக்கின்றன.

சாதி மதம் பழக்க வழக்கம் வேறு வேறாயினும் ஒருசிலருக்கிடையில் நட்பு பூக்கிறதே எப்படி? பொய், பித்தலாட்டம் ஏமாற்று வஞ்சகக் கேடுகளை விட்டொழித்து, உண்மை நேர்மை நியாயத்தைக் கைக்கொள்ளும் இடமே மாசற்ற நட்பு மிளிரும் இடம். 

ஒத்த உணர்ச்சிதான் நட்புக்கு அடிப்படை என்பதால், 
சிலசமயம் பொய், பித்தலாட்டம் ஏமாற்று வஞ்சகம் என ஏதாவதொன்று ஒரு நண்பனை ஒட்டிக் கொண்டால் மறுகணமே அவனுடனான நட்பை வெட்டி விடுகிறோம். 

அதனால்தான், "ஒத்த உணர்ச்சி இருக்கும்வரை உறவையும் தோழமையையும் நட்பையும் ஒருவராலும் உடைக்க முடியாது" 

என்று 13.04.2025 அன்று நடைபெற்ற எனது மகனின் இணைஏற்பு விழா குறித்து எழுதியபோது குறிப்பிட்டிருந்தேன்.

எமது இணை ஏற்பு விழா குறித்து "எதிர்த்து நில்" வலைப்பூவில் எழுதிய பதிவு கீழே இணைப்பில்.


நன்றி

பொன்.சேகர்
இணை ஏற்பு