Showing posts with label மெகா சீரியல். Show all posts
Showing posts with label மெகா சீரியல். Show all posts

Friday, 12 October 2012

என்னத்தச் சொல்ல!


இதுவரை தமிழகம் கண்டிராத மிகக் கடுமையான மின்வெட்டு. என்ன செய்வதென்று தெரியாமல் சென்னை தவிர்த்த பிற பகுதி மக்கள் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர்

'எப்பதான் இது தீரும்?' என்கிற கேள்விதான் இன்று மக்களை துளைத்தெடுக்கிறது

சொன்னது:

2013 ஜீனுக்குள் கூடுதலாக 4,000 மெகாவாட் உற்பத்தி: மின்துறை அமைச்சர் விசுவநாதன் - தினமணி (12.10.2012)

மாவட்டங்களில் மீண்டும் 15 மணி நேர மின் வெட்டு: மாநிலத்தின் மொத்த மின் பற்றாக்குறை 4500 மெகாவாட் அளவுக்கு உயர்ந்துள்ளது- தினமணி (12.10.2012)

என்னத்தச் சொல்ல!:

அமைச்சரே உங்கள் கணக்குப்படியே 500 மெகாவாட் உதைக்கிறதே.

அது சரி! இனி புதிதாக வீடுகளுக்கும் கடைகளுக்கும் ஆலைகளுக்கும் மின் இணைப்பே இருக்காதா? அல்லது இனி அடுத்த ஜீன் வரை யாரும்  வீடு கட்டவோ, கடை - ஆலை அமைக்கவோ கூடாதா? மின் தேவையே அதிகரிக்காதா அமைச்சரே?

சொன்னது:

வட சென்னையில் 1200 மெகாவாட், என்.எல்.சி நிறுவனத்தில் 250 மெகாவாட், வள்ளூரில் 1040 மெகாவாட் மின்சாரம் 2013 ஜீன் மாதத்துக்குள் உற்பத்தியாகும். இவற்றின் மூலம் 3,000 மெகாவாட்டும்,  கூடங்குளம் அணு உலையிலிருந்து 1,000 மெகாவாட் மின்சாரமும் கிடைக்க வாயப்புள்ளது. அப்பொழுது தமிழகத்தில் மின்வெட்டு அறவே இருக்காதுமின்துறை அமைச்சர் விசுவநாதன்தினமணி (12.10.2012)

என்னத்தச் சொல்ல!:

அணு உலையின் உற்பத்தித் திறன்:  80%. கூடங்குளத்தில் இதை எட்ட இரண்டு ஆண்டுகள் ஆகும். அதுவரை உற்பத்தி 30-40% மட்டுமே இருக்கும். இதில் தமிழகத்தின் பங்கு 46.25%. இரண்டு உலைகளும் உடனே இயங்கினாலும்கூட தமிழகத்திற்கு 370 மெகாவாட் மின்சாரமே கிடைக்கும். இதில் 22%  கம்பி இழப்பு போக கிடைக்கப் போவதென்னவோ அதிகபட்சம் சுமார் 290 மெகாவாட் மின்சாரம் மட்டுமே.

இதுல ஜீன் 2013 ல் கூடங்குளத்திலிருந்து 1000 மெகாவாட்டாம்! கேக்கிறவன் கேனயன்னா கேப்பையிலும் நெய்வடியுமாம்!

-----------------------------------

மின் தட்டுப்பாட்டால் மெகாசீரியல்களையும் நெடுந்தொடர்களையும் மக்கள் மறந்து போய் வெகு நாளாச்சு. பிறகு என்னைப் போன்ற புறநகர் பதிவர்கள் மட்டும் மெகா பதிவுகளையா வெளியிட முடியும்? இனி குட்டிப் பதிவுகள்தான். இதற்கே திண்டாட வேண்டியிருக்கு!