Showing posts with label சாலை. Show all posts
Showing posts with label சாலை. Show all posts

Thursday, 12 March 2026

மாலை நேரங்களில் சாலை ஓரம் பந்தி விரிக்கும் குடிகாரர்கள்!

தமிழகத்தின் மாலைப் பொழுதுகள் ஒரு காலத்தில் தென்றலின் வருடலுக்காகக் காத்திருந்தன; ஆனால் இன்று, சாலையோரச் சாக்கடைகளின் ஓரம் விரிந்து கிடக்கும் 'குடிகாரர்கள் விரிக்கும் பந்திகளின்' மதுநெடியால் அருவருக்கத்தக்கச் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

சாலையோரப் பந்தியும் 'கண்ணாடி'க் காடுகளும் சாராயக் குடுவைகள், நெகிழித் தண்ணீர் பைகள், ஊறுகாய் பொட்டலங்கள், கறி வருவல், நொறுக்குத் தீனிகள் என சாலையோரங்களில் விரிக்கப்படும் பந்திகள் வெறும் போதைக்கானவை மட்டுமல்ல; அவை ஒழுக்கத்தின் சீர்கேடுகள்.

குடித்துவிட்டு வீசப்படும் சாராயக் குடுவைகள், இந்தப் பூமியில் மனிதன் கால் வைக்க முடியாத அளவுக்கு 'கண்ணாடிக் காடுகளை' அன்றாடம் வளர்க்கின்றன. பூமியின் பசுமையைவிட, உடைந்த பாட்டில்களின் கூர்மையே இன்று சாலையோரங்களின் அடையாளமாகிவிட்டது.

எரியும் வயிறுகள் ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 300 ரூபாய். இது வெறும் மதுவிற்கான செலவு மட்டுமல்ல; ஒரு குடும்பத்தின் அடுப்பு எரிய வேண்டிய காசு. தங்களது ஈரலை எரித்துக் கொள்ளும் இந்தக் குடிகாரர்கள், வீட்டிலிருக்கும் மனைவி, குழந்தைகளின் வயிறுகளையும் பட்டினி போட்டு எரியவிடுகிறார்கள். மேட்டுக்குடிகள் நட்சத்திர விடுதிகளில், குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் குடிக்கும்போது, சாமான்யன் புழுதிபடிந்த சாலையோரம் ஒதுங்குகிறான். இடம் மாறினாலும், இந்த இரு தரப்பினரும் அழிப்பது தங்களை மட்டுமல்ல, இந்தச் சமூகத்தின் அறத்தையும்தான். போதை: அரசியலும் மௌனமும் இன்று இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாக ஆட்சியாளர்களும், ஆளத் துடிப்போரும் மேடைதோறும் முழங்குகிறார்கள். உண்மைதான். ஆனால், கஞ்சாவிற்கு எதிராகக் குரல் கொடுக்கும் இந்தத் தலைவர்கள், அரசாங்கத்திற்குப் பெரும் வருவாய் ஈட்டித் தரும் சாராயத்தைப் பற்றி மட்டும் மௌனம் காக்கின்றனர்.
தமிழகத்தில் கிட்டத்தட்ட பெரும்பாலான ஆண்கள் ஏதோ ஒரு வகையில் போதையில் மிதக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை. கஞ்சா என்பது பேசுபொருளாக இருக்கிறது, ஆனால் சாராயம் என்பது வாழ்வியலாகவே மாறிவிட்டது. வீழ்த்தப்பட்ட விழுமியங்கள்

ஒழுக்கமே உயிருக்கு நிகரானது என்றும், அதை உயிரைவிட மேலானதாகக் காக்க வேண்டும் என்றும் வள்ளுவன் கற்பித்தான்:
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்."
மேலும், நாணத்தையும் மானத்தையும் உயிராகக் கருதி வாழ்பவர்கள், அறிவை மயக்கிச் சீரழிக்கும் மதுவை விரும்ப மாட்டார்கள் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
"நாணத்து வாழ்வார் நயந்தாரே பேணாது
கள்ளுண்டல் என்னும் களி."
ஆனால் இன்று, அந்த நாணத்தையும் ஒழுக்கத்தையும் போதையில் எரித்து, உயிரைச் சிதைத்து, சாலையோரம் சிதறிக் கிடக்கும் பாட்டில் துண்டுகளாக்கி வருகின்றனர்.
ஒரு காலத்தில் 'குடி' என்பது சமூகத்தால் அருவருக்கத்தக்கச் செயலாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இன்று அது ஒரு இயல்பான சடங்காக மாறிவிட்டது. மதுவைப் போலவே, தகாத உறவுகளும் இன்று சமூக அங்கீகாரம் பெறத் தொடங்கி விட்டதை அண்மைய 'விசில்' சப்தங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

ஒழுக்கக்கேடுகளே இன்று நவீன வாழ்வியலின் அங்கமாகத் தரம் தாழ்ந்து போயினவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
“ஐயகோ! இந்தச் சமூகத்தைச் சீரழிவிலிருந்தும், போதை இருளிலிருந்தும் மீட்கப்போகும் அந்த மீட்பர் யாரோ?” என ஏங்குவதைவிடுத்து, நீயே மீட்பராக அவதாரம் எடு! புழுங்கிப்போன மாதர்கள் புடைசூழு நீ வாகை சூடுவாய்!
ஊரான்

Sunday, 25 January 2026

கண்ணீர் சிந்தும் புங்கை மரம்!

இராணிப்பேட்டை, பாரத மிகுமின் நிறுவனத்திலிருந்து (BHEL) பணி ஓய்வு பெறுவதையொட்டி, 23.06.2018 அன்று 'டவுன்ஷிப் ஹெல்த் பார்க்' அருகில் மரக்கன்றுகள் நட்ட போது...

புங்கை மரக் கன்று

நினைவுச் செடி!

பல்லாண்டு காலப் பணிப்பயணம், நிறைவுபெறும் இந்த நன்னாளிலே... 
சுட்டெரிக்கும் வெயிலிலும் - ஒரு குளிர்ச்சியான விடைபெறல்!

பொன்னை ஆற்றின் கரையாகட்டும், 
பி.ஹெச்.இ.எல் நகரியத்தின் நிழலாகட்டும், 
நீ செய்த பணிகள் பல இருக்கும்... ஆனால், 
அன்று நீ நட்ட புங்கை - உன் சேவையின் அடையாளமாய் என்றும் நிற்கும்!

கைகள் அழுக்காகலாம்... 
ஆனால் உன் உள்ளம் தூய்மையானது! 
நீ நட்ட அந்தச் செடி விருட்சமாகி, உன் உழைப்பின் பெருமையை - அந்த மண்ணிற்கு என்றும் சொல்லிக் கொண்டிருக்கும்!

பணி ஓய்வு என்பது வெறும் விடைபெறல் அல்ல, 
உன் சேவையை ஒரு மரமாக வேரூன்றச் செய்த திருநாள்! 
வாழ்க பல்லாண்டு... 
உன் உழைப்பைப் போலவே, 
உன் புகழும் என்றும் தழைத்தோங்கட்டும்!

***
சாலை விரிவாக்கத்திற்காக அந்தப் புங்கை மரம் தற்போது அழிக்கப்பட்டு விட்டது.
***
கண்ணீர் சிந்தும் புங்கை மரம்!

நாளைய நிழலுக்காக 
நான் நட்ட நினைவுச் செடி, 
மரமாய் வளர்ந்து இன்று - நடுரோட்டில் சாய்ந்து கிடக்குதோ?

பணி நிறைவின் சாட்சியாய் 
நான் பதித்த பசுமை, 
பாதை விரிவாக்கத்தில் பலியாகிப் போனதோ?

வாகனங்கள் விரைந்து செல்ல - ஒரு உயிரின் மூச்சை நிறுத்திவிட்டோம்! 
நிழல் தேடி அலையும் தலைமுறைக்கு - 
நாம் நிஜங்களை விடுத்து 
தார்ச் சாலை தந்தோம்!

என் சேவையின் அடையாளமே! 
நீ சாய்ந்த இடத்தில் 
என் இதயத்தின் ஒரு பகுதி வீழ்ந்தது! 
உன் இலைகள் உதிர்ந்த மண்ணில் - என் உழைப்பின் சாட்சியும் கரைந்தது!

சாலையோரம் நீ நின்றிருந்தால் சோர்வோர்க்குத் தந்திருப்பாய் குளிர்ந்த நிழல்... 
இன்று நீ இல்லாத அந்தப் பாதையில் 
தகிப்பது வெயில் மட்டுமல்ல - என் மனமும்தான்!

***
ஜெமினி உதவியுடன்..

ஊரான்

Tuesday, 28 April 2015

டொக்குச் சாலைகளும் குவார்ட்டர் கடைகளும்!

பேருந்துகள், லாரிகள், வாடகைக் கார்கள், வேன்கள், ஆட்டோக்கள், சிறு லோடு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள், ஸ்பேர் பார்ட்ஸ் கடை உரிமையாளர்கள், மெக்கானிக் ஷாப் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இருசக்கர வாகன உரிமையாளர்கள் என வாகனம் தொடர்புடையவர்கள் அனைவரும் ஏப்ரல் 30 அன்று மோடி அரசுக்கு எதிராக அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
வாகனப் பதிவு, வாகனங்களுக்கான தகுதிச் சான்று (எப்.சி), வாகனங்களுக்கான சாலை வரி வசூல், ஓட்டுநர் உரிமம், பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட வாகனம் தொடர்பான செயல்பாடுகள் இதுவரை அந்தந்த மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
மாநில அரசுகளிடமிருக்கும் இந்த அதிகாரங்கள் அனைத்தையும் பறித்துக் கொண்டு தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதோடு தனியார் முதலாளிகள் இத்துறையில் நுழைவதற்கு வழிவகை செய்கிற நோக்கத்தோடு “சாலை பாதுகாப்பு மசோதா 2014” என்கிற சட்ட மசோதா ஒன்றை கொண்டு வருகிறது மோடி தலைமையிலான மத்திய அரசு. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் என்ன நடக்கும்?
ஓட்டுநர் உரிமம் பெற எழுத்துத் தேர்வு. தேறினால் மட்டுமே ஓராண்டு கழித்து உரிமம் வழங்கப்படும்.
வாகனத் தயாரிப்பாளர்களே - அதாவது கார்பரேட் முதலாளிகளே - இனி வாகனப் பதிவை மேற்கொள்வார்கள்.

இருபது கோடி ரூபாயும் 15 ஏக்கர் நிலமும் வைத்திருப்பவர்கள் மட்டுமே இனி ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளை நடத்த முடியும். இவ்வளவு முதலீடு போடுபவன் பயிற்சிக் கட்டணம் எவ்வளவு வாங்குவான்? வண்டி ஓட்டியாவது பிழைக்கலாம் என எண்ணுவோருக்கு இனி ஆப்புதான்.

ஆட்டோ ஓட்டுநர் உரிமம் பெற தற்போது ஆகும் செலவு சுமார் ரூ.4000/= இனி அது 25000/= ரூபாயாக உயரும்.
ஒரு ஆட்டோவை பழுது பார்த்து தகுதிச் சான்று பெற தற்போது ஆகும் செலவு சுமார் ரூ.10000/= இனி அது 30000/= ரூபாயாக உயரும்.
வாகனங்களை இனி சாலை ஓர மெக்கானிக் கடைகளில் பழுது பார்த்தால் அது செல்லாது. அங்கீகரிக்கப்பட்ட வாகன உற்பத்தியாளர்களின் மெக்கானிக் ஷாப்புகளில் பழுது பார்த்தால் மட்டுமே வாகனங்களுக்கு சான்றளிக்கப்படும். வெளிப்படையாகச் சொன்னால் கார்பரேட் கம்பெனிகள் சான்றளித்தால் மட்டுமே உங்கள் வண்டி ஓடும். இல்லை என்றால் பேரீச்சம் பழம்தான்.
சிறு சிறு வாகன விதி மீறலுக்கான தண்டத் தொகை இனி பல மடங்கு உயரும்
ஒவ்வொறு விதி மீறலும் புள்ளி அடைப்படையில் கணக்கிடப்பட்டு 12 புள்ளிகள் பெறுபவர் ஓராண்டு சிறைக்குச் செல்ல வேண்டும். மீண்டும் 12 புள்ளிகள் பெற்றால் 5 ஆண்டு சிறை மட்டுமல்ல அவரது ஓட்டுநர் உரிமமும் காலியாகிவிடும். அதன் பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து வெளியே வந்தால் கார்பரேட் கம்பெனிகளில் வண்டி தொடைக்கலாம்.
ஆட்டோக்கள் மட்டுமல்ல இனி எந்த வாகனமும் இதிலிருந்து தப்ப முடியாது.
இரு சக்கர வாகனங்களுக்கும் இனி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தகுதிச் சான்று (எப்.சி).
இப்படி இன்னும் பலப்பல அம்சங்கள் “சாலை பாதுகாப்பு மசோதா 2014” ல். எல்லாமே கார்பரேட்டுகள் கொழுக்கவே!
மசோதாவின் அம்சங்கள் எல்லாம் நல்லாத்தானே இருக்கு. இது நடைமுறைக்கு வந்தால் விபத்துக்கள் நடக்காது என நீங்கள் நினைக்கலாம். டொக்குச் சாலைகளும் குவார்ட்டர் கடைகளும் இருக்கும் வரை உங்கள் உயிருக்கு மட்டுமல்ல ஓட்டுநர் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை. 
கார்பரேட்டுகள் இதை எல்லாம் சேவை நோக்கிலா செய்வான்? அவனுக்குத் தேவை பணம். அவன் பிடுங்கும் ஒவ்வொரு ரூபாயின் சுமையும் இறுதியில் பொது மக்களின் முதுகில்தான் ஏற்றப்படும்.

தொடர்புடைய பதிவு:

சாலை பயங்கரவாதம்! (Road Terrorism)

Wednesday, 16 November 2011

சாலை பயங்கரவாதம்! (Road Terrorism)

சமீபத்தில் எனது உறவினர் ஒருவர் குடி போதையில் இரு சக்கர வண்டி ஓட்டிச் சென்றபோது சாலையில் முன் சென்ற மிதி வண்டியில் மோதி விபத்துக்குள்ளாகி தலையில் பலத்த அடிபட்டு முதலில் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு, விபத்தின் தீவிரம் கருதி பிரபல தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்க்பட்டார். தலையில் அடிபட்டுள்ளது என்றாலே ஸ்கேன் உள்ளிட்ட முக்கியமான பரிசோதனைகளைச் செய்யாமல் விடுவது பிற்காலத்தில் ஆபத்தை விலை கொடுத்து வாங்குவது போலாகிவிடும்.

தலையில் அடிபட்டிருந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் முன்று நாட்களுக்கு பரிசோதித்த பிறகே அச்சப்படும்படியான பாதிப்பு இல்லை என்கிற முடிவுக்கு மருத்துவர்களால் வரமுடிந்தது. இதற்காக சுமார் நாற்பதாயிரம் ரூபாய் செலவானது. உறவினர்களின் ஆதரவு இருந்ததால் மிகச் சாதாரண ஒப்பந்தத் தொழிலாளியால் இத்தகைய சிகிச்சையை பெற முடிந்தது. நாற்பது ரூபாய்க்கு அடித்த குவார்ட்டரால் நாற்பதாயிரமும் போச்சு,  நாற்பதாண்டு காலம் ஈட்டிய நற்பெயரும் போச்சு.

ஓட்டுநர் உரிமமும் வண்டிக்கான காப்பீடும் முறையாக இருந்தால் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து சிகிச்சைக்குத் செலவான தொகையை பெற்றுவிட முடியும். வண்டியில் ஏற்பட்ட சேதாரத்துக்கும் இழப்பீடு பெறமுடியும். ஆனால் விபத்து நடந்தபோது இவர் போதையில் இருந்ததால் மருத்துவர்கள் தங்களது அறிக்கையிலும் அதைக் குறிப்பிட்டுவிட்டதால் இழப்பீடு தொகை பெறுவதற்கு இயலாமல் போய்விட்டது. இப்படி இழப்பீடு தொகை பெற முடியாமல் பொனவர்கள் மிகச் சிலரே.

இழப்பீடு கிடைக்காது என்பதால் இந்த விபத்துக்கு முதல் தகவல் அறிக்கைகூட பதிவு செய்யப்படவில்லை. இப்படி ஒரு சில காரணங்களுக்காக பல விபத்துக்கள் பதிவு செய்யப்படவில்லை என்றாலும் பதிவாகும் விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

உயிரைக் காக்கும் தலைக்கவசம்

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதே பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம் என கோவை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகிறார்கள். தலையில் பலத்த காயம் அடைபவர்களில் சுமார் 70%  பேர் மரணத்தைத் தழுவுகிறார்கள். தலைக்கவசம் அணிந்தால் இதில் பாதிபேர் உயிர் பிழைக்க முடியும் என்றாலும் அதை பலரும் அலட்சியப்படுத்துகிறார்கள். சுயநினைவு உள்ளவர்களே தலைக்கவசத்தை அலட்சியப் படுத்தும் போது போதைக்கு அடிமையானவர்களிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

வார இறுதி நாட்களிலும், பிறந்த நாள் - திருமணம் போன்ற மகிழ்சிக்குரிய நாட்களிலும்,  சாவு - காரியம் உள்ளிட்ட துயர நிகழ்ச்சிகளிலும் மது குடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதும், அதிலும் ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாகக் குடிப்பதும் (முன்பு ‘ரவுண்ட்ஸ்’ என்று சொன்னதை இப்போது ‘கட்டிங்’ என்று சொல்கிறார்கள்), தற்போது வழக்கமாகி விட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் அவ்வாறு மது குடிப்பவர்களில் இளைஞர்களுக்கு மட்டுமே இரத்தத்தில் கலக்கும் ஆல்கஹாலின் அளவு அதிகமாம்.

“ஜாலிக்காக” தொடங்கும் இந்தக் குடிப்பழக்கம் மெல்ல மெல்ல “உனக்கு நான் சளைத்தவன் அல்ல” என்ற போட்டா போட்டியில் மொடாக் குடியில் போய் நிறுத்துகிறது.  சுமார் 30 முதல் 40  வயதுப் பெண்கள் மதுப் பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக மருத்துவரை நாடிவருவதும் அதிகரித்துள்ளது. வசதிபடைத்தோர், குறைந்த வருவாய் மற்றும் வேலை நிமித்தமாக குடும்பத்தைவிட்டுத் தனியாக வாழும் பெண்கள் என மூன்று வகையான பெண்கள் இதில் அடங்குவர். அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தின் அபாய அறிகுறி இது.

சாலை பயங்கரவாதத்தால் பலியாவோர்

சாலை விபத்துகளால் இந்தியாவில் ஓர் ஆண்டுக்கு பலியாவோர் எண்ணிக்கை 130000  என உலக சுகாதார நிறுவனம் (WHO)  கூறுகிறது. இது சீனாவைவிட அதிகமாம். 

தேசிய நெடுஞசாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாவட்டச் சாலைகள், கிராமப்புறச் சாலைகள் என மொத்தம் இந்தியச்சாலைகளின் நீளம் சுமார் 33 இலட்சம் கிலோமீட்டர்கள். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில்தான். பெருப்பாலான விபத்துகள் நடக்கின்றன. அதாவது சுமார் 194754 கிலோமீட்டர் நீளச்சாலைகளில் ஆண்டுக்கு 130000  பேர் மடிகின்றார்கள் என்றால் ஒரு கிலோ மீட்டருக்கு ஒருவர் இறக்கிறார் என்றாகிறது.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக – இதில் இளைஞர்களே அதிகம் - கடந்த ஆண்டு கோவையில் மட்டும் பதிவான வழக்குகள் 2003. இந்த ஆண்டில் 4000 ஆக அதிகரித்துள்ளதாக காவல் துறை கண்காணிப்பாளர் (குற்றம் மற்றும் போக்குவரத்து) தெரிவித்துள்ளார். பெரும்பாலான விபத்துகள் குடி போதையினால் நடந்தாலும் ஆயுள் காப்பீடு பெறவேண்டும் என்பதற்காக அவை மறைக்கப்படுகின்றன.

வாகனங்களின் சீற்றத்தால் குருதியில் தோய்ந்து மரணக்காடாய் இன்று காட்சியளிக்கின்றன இந்தியச் சாலைகள்.

ஒவ்வொரு விளைவிற்கும் (effect) பல காரணிகள் இருக்கக்கூடும்.  அதன் காரணிகளைக் கண்டறிந்து முக்கியக் காரணிகளில் தொடங்கி ஒவ்வொன்றாகக் களையும் போதுதான் தவறுகளைத் தவிர்க்க முடியும். ஐப்பானிய அறிஞர் இஷிகாவாவின் மீன் எலும்புக்கூடு வரைபட (fish bone diagram or ishikawa diagram) அணுகுமுறை இதைத்தான் வலியுறுத்துகிறது.

சாலை விபத்துகள் எதனால்?

சாலை விபத்துக்கள் அதிகரிக்கக் காரணம் என்ன? பராமறிக்கப்படாமல் இருக்கும் சாலைகளாலா? பராமரிக்கப்படாத வாகனங்களாலா? அந்நியன் படத்தில் விக்ரம் அம்பி கண்டுபிடித்த தரம் குறைந்த ‘பிரேக் ஒயர்’ போன்ற உதிரிப்பாகங்களாலா? குடி போதையில் வாகனம் ஓட்டுவதாலா? வாழ்க்கைத் துன்பங்களைச் சோகமாகச் சுமந்து கொண்டு கவனக் குறைவாய் வாகனம் ஓட்டுவதாலா? எதிர்பாராத ஒன்று தனக்குக் கிடைத்ததால் ஏற்பட்ட களி மகிழ்ச்சியில் (ecstasy) தன்னை மறந்து வாகனம் ஓட்டுவதலா? தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவதாலா? சாலை விதிகளை மீறுவதாலா? சாலையில் திரியும் விலங்குகளாலா?

சாலை பாதுகாப்பு வாரங்கள் கடைபிடிக்கப்பட்டு மக்களுக்கு சாலை விதிகள் போதிக்கப்பட்டு வருகின்றன. மதுக் குடியர்களுக்கு ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் விபத்துகள் குறைந்த பாடில்லை. அதிகரித்த வண்ணம் உள்ளன. அப்படியானால் விபத்துகளுக்கு முக்கிய பங்காற்றும் காரணிகள்தான் எவை?

சாலை விபத்துகளின் ஊற்றுக்கண்

எனது பார்வையில் இங்கே சொல்லப்பட்ட அனைத்துமே காரணிகளாக இருந்தாலும் இரண்டு காரணிகளே பிரதான பங்காற்றுகின்றன. ஒன்று குடி போதையில் வண்டி ஓட்டுவது. அடுத்தது பராமரிக்கப்படாத மற்றும் விரிவுபடுத்தப்படாத சாலைகள். இவைகளைச் சரி செய்யாமல் பெரிய அளவில் சாலை விபத்துகளைக் குறைத்துவிட முடியாது. பராமரிக்கப்படாத சாலைகளுக்கு பொறுப்பு அரசாங்கம்தான் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது.

அரசுப் பொறியியல் கல்லூரி ஒன்றில் கட்டடப் பொறியியில் பிரிவில் பணியாற்றியப் பெண் விரிவுரையாளர் ஒருவருக்கு தமிழக பொதுப்பணித்துறையில் பொறியாளர் வேலை கிடைத்தது. இரண்டு இடத்திலும் ஒரே ஊதியம்தான் என்றாலும் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வற்புறுத்தலால் – நிறைய சம்பாதிக்கலாமே - பொதுப்பணித்துறையில் பொறியாளராகப் பொறுப்பேற்கிறார். இரண்டாவது நாளிலேயே திரைப்படங்களில் வரும் வில்லனின் அடியாட்கள் போல சிலர் இவரது அலுவலகத்துக்கு வந்து ஒப்பந்த வேலைகள் முடிந்ததாக கோப்புகளில் கையெழுத்திட வேண்டும் என்கின்றனர். இவரோ வேலைகள் நிறைவேறியதை சோதிக்காமல் கையெழுத்திட முடியாது என்கிறார். அவர்கள் கொடுத்த நெருக்குதலில் மன உளைச்சலுக்கு ஆளாகி ‘அப்பப்பா… இந்த வேலையே வேண்டாம்’ என உதறித்தள்ளிவிட்டு மீண்டும் விரிவுரையாளர் பணிக்குத் திரும்புகிறார். சாலை பராமறிப்பிற்கு ஒதுக்கப்படும் தொகை அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஒப்பந்ததாரர்களால் இப்படி சுருட்டப்படும் போது  சாலைகள் மட்டும் எப்படி செம்மையாக இருக்கும்?

நெடுஞ்சாலைகளில் தாகம் தீர்க்கத் தண்ணீர் கிடைக்கிறதோ இல்லையோ, போதை ஏற்றிக் கொள்ள மதுக்கடைகளும் மோகம் தீர்க்க முந்தானைகளுமே விரிக்கப்பட்டுள்ளன. மோகம் தீர்ப்பதால்தான் சாலையோர ஓட்டல்களெல்லாம் மோட்டல்களாக பெயர் மாற்றம் பெற்றனவோ!

தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் விற்பனையாகும் டாஸ்மாக் மதுவின் மதிப்பு மட்டும் ரூ 1500 கோடிக்கு மேல். கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ1924 கோடிக்கு மது விறபனையாகி சாதனைபடைத்துள்ளது. தமிழகத்தில் 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆண்களின் எண்ணிக்கை சுமார் 3 கோடி பேர். இதில் குழந்தைகள், சிறுவர்கள் என பாதி பேரைக் கழித்துவிட்டால் மீதி 1½ கோடி ஆண்களில் 80% பேர் அதாவது சுமார் ஒரு கோடி ஆண்கள் குடிக்கிறார்கள் என்றால் ஒவ்வொரு குடி மகனும் மாதத்திற்கு சுமார் 2000 ரூபாயை குடிக்காக செலவழிக்கிறான் என்றாகிறது. கள்ளச் சந்தையில் விற்பனையாகும் மது இதில் சேராது.  மது விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதேயொழிய குறைந்த பாடில்லை. இப்போது உயர்ரக மதுக்கடைகள் வேறு வந்து கொண்டிருக்கின்றன.

வீதி எங்கும் மதுக்கடைகளை திறந்து வைத்து விட்டு மக்களை போதையில் ஆழ்த்தினால் விபத்துகள் ஏன் நடக்காது? இங்கே குடிப்பவன் குற்றவாளியா? ஊற்றிக் கொடுக்கும் சிப்பந்தி குற்றவாளியா? கடைவிரித்து விற்பவன் குற்றவாளியா? விற்பனைக்காக உற்பத்தி செய்யும் முதலாளி குற்றவாளியா? இவை எல்லாம் முறையாக நடப்பதை உறுதி செய்யும் அதிகாரி குற்றவாளியா? மதுக்கடைகளை நடத்துவதற்கு கொள்கை முடிவு எடுத்து நடைமுறைப்படுத்தும் அரசாங்கம் குற்றவாளியா? அரசுக்குத் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் முதலமைச்சர் குற்றவாளியா? குடியின் ஊற்றுக்கண் எது? அரசாங்கமா அல்லது குடிப்பவனா?

“குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்” என்கிற உபதேசங்களெல்லாம் எடுபடுகிறதா என்ன? வள்ளுவன், காந்தியின் உபதேசங்களையே உதாசீனப் படுத்தியவன் அரசின் அறிவுரைகளால் மட்டும் மாறிவிடுவானா? உபதேசங்களால் மாற்றங்கள் நிகழாது. குடியின் ஊற்றுக்கண்ணை அகற்றாதவரை சாலைகளில் மரண ஓலங்கள் மறையாது.

ஊரான்