Showing posts with label சாராயம். Show all posts
Showing posts with label சாராயம். Show all posts

Thursday, 12 March 2026

மாலை நேரங்களில் சாலை ஓரம் பந்தி விரிக்கும் குடிகாரர்கள்!

தமிழகத்தின் மாலைப் பொழுதுகள் ஒரு காலத்தில் தென்றலின் வருடலுக்காகக் காத்திருந்தன; ஆனால் இன்று, சாலையோரச் சாக்கடைகளின் ஓரம் விரிந்து கிடக்கும் 'குடிகாரர்கள் விரிக்கும் பந்திகளின்' மதுநெடியால் அருவருக்கத்தக்கச் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

சாலையோரப் பந்தியும் 'கண்ணாடி'க் காடுகளும் சாராயக் குடுவைகள், நெகிழித் தண்ணீர் பைகள், ஊறுகாய் பொட்டலங்கள், கறி வருவல், நொறுக்குத் தீனிகள் என சாலையோரங்களில் விரிக்கப்படும் பந்திகள் வெறும் போதைக்கானவை மட்டுமல்ல; அவை ஒழுக்கத்தின் சீர்கேடுகள்.

குடித்துவிட்டு வீசப்படும் சாராயக் குடுவைகள், இந்தப் பூமியில் மனிதன் கால் வைக்க முடியாத அளவுக்கு 'கண்ணாடிக் காடுகளை' அன்றாடம் வளர்க்கின்றன. பூமியின் பசுமையைவிட, உடைந்த பாட்டில்களின் கூர்மையே இன்று சாலையோரங்களின் அடையாளமாகிவிட்டது.

எரியும் வயிறுகள் ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 300 ரூபாய். இது வெறும் மதுவிற்கான செலவு மட்டுமல்ல; ஒரு குடும்பத்தின் அடுப்பு எரிய வேண்டிய காசு. தங்களது ஈரலை எரித்துக் கொள்ளும் இந்தக் குடிகாரர்கள், வீட்டிலிருக்கும் மனைவி, குழந்தைகளின் வயிறுகளையும் பட்டினி போட்டு எரியவிடுகிறார்கள். மேட்டுக்குடிகள் நட்சத்திர விடுதிகளில், குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் குடிக்கும்போது, சாமான்யன் புழுதிபடிந்த சாலையோரம் ஒதுங்குகிறான். இடம் மாறினாலும், இந்த இரு தரப்பினரும் அழிப்பது தங்களை மட்டுமல்ல, இந்தச் சமூகத்தின் அறத்தையும்தான். போதை: அரசியலும் மௌனமும் இன்று இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாக ஆட்சியாளர்களும், ஆளத் துடிப்போரும் மேடைதோறும் முழங்குகிறார்கள். உண்மைதான். ஆனால், கஞ்சாவிற்கு எதிராகக் குரல் கொடுக்கும் இந்தத் தலைவர்கள், அரசாங்கத்திற்குப் பெரும் வருவாய் ஈட்டித் தரும் சாராயத்தைப் பற்றி மட்டும் மௌனம் காக்கின்றனர்.
தமிழகத்தில் கிட்டத்தட்ட பெரும்பாலான ஆண்கள் ஏதோ ஒரு வகையில் போதையில் மிதக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை. கஞ்சா என்பது பேசுபொருளாக இருக்கிறது, ஆனால் சாராயம் என்பது வாழ்வியலாகவே மாறிவிட்டது. வீழ்த்தப்பட்ட விழுமியங்கள்

ஒழுக்கமே உயிருக்கு நிகரானது என்றும், அதை உயிரைவிட மேலானதாகக் காக்க வேண்டும் என்றும் வள்ளுவன் கற்பித்தான்:
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்."
மேலும், நாணத்தையும் மானத்தையும் உயிராகக் கருதி வாழ்பவர்கள், அறிவை மயக்கிச் சீரழிக்கும் மதுவை விரும்ப மாட்டார்கள் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
"நாணத்து வாழ்வார் நயந்தாரே பேணாது
கள்ளுண்டல் என்னும் களி."
ஆனால் இன்று, அந்த நாணத்தையும் ஒழுக்கத்தையும் போதையில் எரித்து, உயிரைச் சிதைத்து, சாலையோரம் சிதறிக் கிடக்கும் பாட்டில் துண்டுகளாக்கி வருகின்றனர்.
ஒரு காலத்தில் 'குடி' என்பது சமூகத்தால் அருவருக்கத்தக்கச் செயலாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இன்று அது ஒரு இயல்பான சடங்காக மாறிவிட்டது. மதுவைப் போலவே, தகாத உறவுகளும் இன்று சமூக அங்கீகாரம் பெறத் தொடங்கி விட்டதை அண்மைய 'விசில்' சப்தங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

ஒழுக்கக்கேடுகளே இன்று நவீன வாழ்வியலின் அங்கமாகத் தரம் தாழ்ந்து போயினவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
“ஐயகோ! இந்தச் சமூகத்தைச் சீரழிவிலிருந்தும், போதை இருளிலிருந்தும் மீட்கப்போகும் அந்த மீட்பர் யாரோ?” என ஏங்குவதைவிடுத்து, நீயே மீட்பராக அவதாரம் எடு! புழுங்கிப்போன மாதர்கள் புடைசூழு நீ வாகை சூடுவாய்!
ஊரான்

Saturday, 20 July 2024

நாளேடுகளில் நாட்டு நடப்பு!

"வறுமை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பராமரிப்பு உள்ளிட்ட சில துறைகளில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் இடம் என பெருமைபட்டுக் கொள்கிறது திராவிட மாடல் அரசு".

ஆனால், அதேவேளையில், பாலின சமத்துவம், தொழில் வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், பசிப்பிணி அகற்றுதல் உள்ளிட்ட சில துறைகளில் உள்ள வளர்ச்சி பாதியைக்தானே தாண்டி உள்ளது.

வட இந்திய நோஞ்சான்களோடு ஒப்பிட்டு, நான்தான் பயில்வான் என பெருமிதம் கொள்வதால் என்ன பெருமை இருக்கு? மேற்கண்டத் துறைகளிலும் 100க்கு 100 சாதனை புரிந்தால் பெருமைபட்டுக் கொள்ளலாம். அதை நோக்கிப் பயணக்குமா திமுக அரசு?

*****

"இட ஒதுக்கீடு பிரச்சனை. வங்கதேசத்தில் கலவரம்! கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி. பல்வேறு பல்கலைக்கழகங்களில் படித்து வரும் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களில் சுமார் 1000 மாணவர்கள் நாடு திரும்புகின்றனர்".

வடஇந்தியாவின் கல்வித் தரத்தைவிட வங்கதேசக் கல்வித்தரம் உயர்ந்தது என்பதனால்தானே வங்கதேசத்திற்குப் படிக்கச் செல்கிறார்கள்.

வடக்கு இன்னும் வளரவில்லை என்பதற்கு இது ஒன்று போதாதா?

*****

"கள்ளச்சாரய விற்பனையைத் தடுக்கத் தவறியதாக தமிழக அரசு மீது குற்றம் சாட்டி ஆரணி மற்றும் கண்ணமங்கலம் பகுதிகளில் அதிமுக-வினர் துண்டுப் பிரசுரம் விநியோகம்".

ஆட்சிகள் மாறும்போது கள்ளச்சாராய வியாபாரமும் கைமாறும் என்பதுதானே இங்கு எழுதப்படாத சட்டம்?

கள்ளச்சாராயத் தொழில் தங்களிடமிருந்து கைமீறிப் போனதால் வந்த கோபமோ இது என்றுதானே மக்கள் கேட்கிறார்கள்.

*****

"திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் பௌர்ணமி கிரிவலம்! மூன்று மணி நேரம் காத்திருந்து தரிசனம்!"

கோவில்களில் கூட்டம் கூடுவது மக்களின் ஏக்கப் பெருமூச்சின் வெளிப்பாடு.  தங்களுடைய குறைகள் நீங்கத்தானே கோவில்களை நாடி ஓடுகிறார்கள். கோவில்கள் என்றைக்கு ஈ ஓட்டுகிறதோ அன்றுதான் நாட்டு மக்களின் நனவுகளும் கனவுகளும் நிறைவேறி மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள் என்று பொருள். அப்பொழுது மக்கள் கோவில்களை நாடி ஓட மாட்டார்கள். சுற்றுலாத் தளங்களில் முட்டி மோதுவார்கள். 

வெறும் மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரங்களால் மட்டுமே கோவில்களில் கூடும் கூட்டத்தை குறைத்துவிட முடியாது. மாறாக மக்களின் வாழ்க்கையின் ஏக்கப் பெருமூச்சுகளை நீக்கவல்ல ஒரு அரசு அமைந்தால் மட்டுமே இதிலிருந்து மக்களை மீட்க முடியும்.

*****

"வேதாரண்யம் அருகே கஞ்சா கடத்திய வழக்கில் அதிமுக-வைச் சேர்ந்த வேதாரண்யம் ஒன்றியக் குழுத் தலைவர் அறிவழகனுக்குத் தொடர்பு!"

இதற்குத்தானே உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்களில் கடும் போட்டி நிலவுகிறதோ? இதில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்று கண்ணமங்கலத்தில் அதிமுக-வினர் பிரசுர விநியோகம் எனும் கேலிக்கூத்து!

ஊரான்

செய்தி ஆதாரம்: இந்து தமிழ் திசை நாளேடு. 21.07.2024

Friday, 21 June 2024

கள்ளக்குறிச்சி சாராயம்: மரணமா? படுகொலையா?

முழு மதுவிலக்கு சாத்தியமா?

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்த 50-க்கும் மேற்பட்டோர் மாண்டு போனார்கள். இன்னும் 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 

கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் தவறிய மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட ஒரு சிலரை பணியிட மாற்றம் செய்தும், ஒரு சிலரை தற்காலிகப் பணி நீக்கம் செய்தும் உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. 

இந்தச் சாராய மரணங்களுக்குப் பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி, மருத்துவர் இராமதாஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குரல் எழுப்புகின்றனர். இந்தச் சாராய மரணங்களைக் காரணம் காட்டி, ஆளுங்கட்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து அரசியல் ஆதாயம் தேட பல்வேறு தரப்பினரும் முயற்சி செய்கின்றனர்.


தற்போது மட்டுமா கள்ளச் சாராய சாவுகள் நடக்கின்றன? எடப்பாடி ஆட்சியில் நடக்கவில்லையா? ஜெயலலிதா ஆட்சியில் நடக்கவில்லையா? கர்நாடகாவில் நடக்கவில்லையா? முழு மதுவிலக்கு நடைமுறையில் இருக்கும் குஜராத்தில் நடக்கவில்லையா? எங்குதான் சாராயச் சாவுகள் நடக்கவில்லை என்று அகில இந்திய அளவிலான புள்ளி விவரங்களை எடுத்துப் போட்டு, இது ஒன்றும் புதியதல்ல என்கிற கோணத்திலும் விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. 

இனியும் தாமதிக்கக் கூடாது; உடனடியாக முழுமையான மதுவிலக்கு வேண்டுமென வைகோ, தொல்.திருமா உள்ளிட்ட பல தலைவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

'திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்பது போல குடிகாரனாய்ப் பார்த்துக்
குடியை நிறுத்தாவிட்டால் குடியை ஒழிக்க முடியாது என்று வாதிடுவோரும் உண்டு.

டாஸ்மாக் கடைகளில் சாராயத்தின் விலை கூடுதலாக இருப்பதனால்தான் மலிவு விலை பாக்கெட் சாராயத்தை ஏழைகள் நாடுகிறார்கள்; எனவே குறைந்த விலையில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்தால் மரணங்களைத் தடுக்க முடியும் என்று கோருவோரும் உண்டு.

சாராயத்தில் எத்தனாலுக்குப் பதிலாக மெத்தனால் அதிகமாக இருந்ததுதான் தற்போதைய மரணங்களுக்குக் காரணம்; 
எனவே மெத்தனால் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தினாலே மரணங்கள் குறையும் என்று வாதிடுவோரும் உண்டு.

தமிழ்நாட்டில் ஒரு கோடி பேருக்கு மேல் அன்றாடம் சாராயம் குடிக்கிறார்கள், எனவே முழு மதுவிலக்கு எல்லாம் இனி சாத்தியமில்லை, கள்ளுக்கடைகளைத் திறப்பதுதான் ஒரே வழி; இதனால் கள்ளச்சாராய மரணங்களையும் ஒழிக்க முடியும், விவசாயிகளுக்கும் வாழ்வளிப்பதாக இருக்கும் என்று ஒரு சிலர் ஆலோசனைகளை முன்வைக்கின்றனர்.

சாலை விபத்துகளில் இறந்து போனால் நிவாரணம் ஒரு லட்சம், ஆனால், சாராயம் குடித்து மாண்டு போனால் 10 லட்சமா? யார் அப்பன் வீட்டுப் பணத்தை எடுத்து யாருக்குக் கொடுப்பது? என ஆவேசப்படுவோரும் உண்டு.

'மாதா மாதம் பிரீமியம் செலுத்தி இன்ஷூரன்ஸ் பெறுவதைவிட 30 ரூபாய்க்கு ஒரு பாக்கெட் சாராயத்தைக் குடித்தால் பத்து லட்சம் சொலையா கிடைக்குமே?' என்று இந்த மரணத்தை எள்ளி நகையாடும் மீம்சுகளும் ஒரு பக்கம் உலவுகின்றன.

ஜெயலலிதா ஆட்சியில் 'ஊத்திக் கொடுத்த உத்தமி!' என பொங்கி எழுந்த போராளிகள், இன்று எங்கே போனார்கள் என்று கேள்வி எழுப்பி பாடகர் கோவன் உள்ளிட்ட போராளிகளை எள்ளி நகையாடி இழிவுபடுத்தி, சமூகத்திற்காக ஒரு துரும்பையும் எடுத்துப் போடாத சில திண்ணைத் தூங்கிகள் சமூகவலைதளங்களில் முனகி வருகின்றனர். 

உபதேசங்கள் ஊறுகாயாக..

எத்தனாலும் மெத்தனாலும்
கார்பன், ஆக்சிஜன், ஹைட்ரஜன் ஆகிய தனிமங்களைக் கொண்ட மூலக்கூறுகள்தான். அணுக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதன் வேதியல் பண்புகள் வேறுபடுகின்றன. வேதியியல் பண்புகள் வேறுபடுகின்றபோது அதனுடைய வினையாற்றலும் மாறுபடுகின்றன. அதனால்தான் மெத்தனால் குடித்தால் மாண்டு போகிறான். எத்தனால் குடித்தால் போதையில் ஆழ்கிறான். மெத்தனால் அதிகம் உள்ள சாராயத்தைக் குடித்தவனைக் காப்பாற்ற வேண்டுமானால் எத்தனால் அதிகம் உள்ள சாராயத்தைக் கொடுத்தால் அவன் பிழைத்துக் கொள்வான் என்கிறார் ஒரு மருத்துவர்.

அன்னியச் சரக்கோ, அரசின் டாஸ்மாக் சரக்கோ அல்லது கள்ளச்சரக்கோ எல்லா சரக்கிலும் எத்தனால் உண்டு. அது சரி எதற்காக எத்தனால் குடிக்க வேண்டும்? 

வேதகாலத்தில் சோம பானத்தில் தொடங்கிய குடி, சங்க காலத்தில் கள் குடியாக மாறி, இன்று கட்டிங் சரக்சாக வடிவம் எடுத்துள்ளது. பிறந்தநாள் விழாக்கள், திருமணங்கள், எழவு வீடுகள் என்று எங்கும் நீக்கமற நிறைந்து விட்டது குடி. இந்தக் குடி ஒட்டுமொத்தக் குடிகளையே ஆட்கொண்டுவிட்டது. அலுப்புக்காக குடிப்பது என்பதெல்லாம் அனர்த்தமானது, எல்லாம் அனுபவிப்பதற்காகத்தான் என்பதே நிதர்சனமானது!

'திரிகடுகத்தில் தீட்டினார்கள்‌. கள்ளுண்ணாமை குறித்து வள்ளுவன் கதறினான். எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காய் போனதுதான் மிச்சம். உபதேசங்களையே ஊறுகாயாகத் தொட்டுக் கொள்பவன்தானே நம் குடிமகன். 'குடி குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்' என்பதெல்லாம் எம்மாத்திரம்?


எதுவாயினும், முழு மதுவிலக்கு ஒன்றுதான் மனித சமூகத்தை காப்பதற்கான ஒரே வழி. இதனால் ஏற்படும் இதர இன்னல்களை நாம் தற்காலிகமாக ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். இதற்கு ஆளுகின்ற அரசு ஆவண செய்யவில்லை என்றால் அவர்களது ஆட்சியும் வரும் காலத்தில் மரக்கட்டைகளுக்குள் அடுக்கப்படும்.‌!

மதுவிலக்குத் தடைச் சட்டம்!

வேள்ளைக்காரன் ஆட்சிக் காலத்தில் அவன் நாட்டு சரக்கை விற்க உள் நாட்டுச் சரக்குகளைத் தடை செய்து சட்டம் கொண்டு வந்தான். அரசாங்கத்தைத் தவிர வேறு யாரும் சரக்கு தயாரிக்கக் கூடாது. அதுதான் இன்றைக்கும் தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டமாக (Tamil Nadu Prohibition Act 1937) இருக்கிறது. அரசாங்கமே தயாரித்து விற்றால் அது நல்ல சரக்கு. அதையே வேறு நபர்கள் தயாரித்து விற்றால் அது கெட்ட சரக்கு. எத்தனாலை எவன் தயாரித்தால் என்ன? மெத்தனால் உடனே கொல்லும். எத்தனால் மெல்லக் கொல்லும்‌. எத்தனாலை யார் தயாரித்தாலும் மரணம் நிச்சயம். எனவே மரணத்தை விளைவிக்கக் கூடிய பொருளை தயாரித்து விற்பவன் எவனாயினும் அவன் கொலைகாரனே! கொலைகளைத் தடுக்க ஒரே வழி, முழு மதுவிலக்குதான். வேறு தீர்வே கிடையாது!

சரி! இவர்கள் எழுதி வைத்த சட்டத்தையாவது இவர்கள் மதித்து நடைமுறைப்படுத்தினார்களா? 

போதைதரும் மது வகைகளைத் தயாரிப்பது, மது தயாரிப்பதற்குரிய சாதனங்களை வைத்திருப்பது, தயாரித்த மது வகைகளை புட்டிகளில் அடைப்பது, அவற்றை விற்பனை செய்வது, வாங்கிக் குடிப்பது, மேற்கண்ட சரக்கு தயாரிக்கும் வேலைகளுக்கு உதவி செய்வது, உடந்தையாக இருப்பது இவை அனைத்துமே மேற்கண்ட சட்டப்படி (பிரிவு: 4) குற்றங்களாக வரையறுக்கப்பட்டு, இத்தகையக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மூன்று மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் முதல் பத்யிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்க சட்டம் வழிவகை செய்கிறது. 

அத்தகைய மது வகைகளால் மரணம் ஏற்படுமாயின் கடுங்காவல் ஆயுள் தண்டனையும், மற்ற பிற குற்றங்களுக்கு பத்தாண்டுகள் வரை சிறை தண்டனையும், இது தவிர 5000 ரூபாய் முதல் 7000 ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடம் உண்டு. 

மேற்கண்ட சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க இதற்கென்று உருவாக்கப்பட்ட மதுவிலக்கு காவல் துறையும் அதாவது கலால் துறையும், உள்ளூர் சட்டம் ஒழுங்கு காவல்துறையும், வருவாய்த் துறையும் செயல்பட வேண்டும் என்றும் அரசுத்துறை அதிகாரிகளும், உள்ளாட்சி அமைப்புகளைச் சார்ந்தவர்களும் உதவிட வேண்டும் என்றும் சொல்கிறது சட்டம் (பிரிவு: 32, 35). ஏதேனும் சட்டமீறல்கள் நடைபெற்றால், அது குறித்த விவரம் தெரிந்தவர்கள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்கிறது இச்சட்டம் (பிரிவு: 36).

இவை போதாதென்று, உடலுக்கு ஊறுவிளைவிக்கும் நஞ்சு கலந்த போதைப் பொருளை வைத்திருந்தால் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 328 இன் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியும். இதற்கு பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற்றுத் தர முடியும். 

மேலும், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுபவோரை எந்தவித விசாரணையும் இன்றி தொடர்ந்து அத்தொழிலை செய்வதிலிருந்து தடுக்கும் வகையில் குண்டர்சட்டத்தின் கீழ் (Tamil Nadu Prevention of Dangerous Activities of , .....Drug Offenders, .... Act,1982), ஓராண்டுக்கு சிறையில் அடைக்க முடியும். 

கொலைக் குற்றம்!

நடந்திருப்பவை வெறும் மரணங்கள் அல்ல; தெரிந்தே மெத்தனாலை கலந்து விற்பனை செய்திருப்பதனால்
அது ஒரு கொலைக் குற்றமாகக் கருதப்பட்டு தொடர்புடையவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 (IPC) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், இந்த வழக்கில் முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு சட்ட விதிமீறலில் யார் யாருக்கெல்லாம் என்ன பங்கோ அதற்கு ஏற்ப அவர்கள் அனைவருக்கும் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். இடமாற்றமும் தற்காலிக பணி நீக்கமும் வெறும் கண்துடைப்பே!
இந்த சட்டப் பின்னணியோடு கள்ளக்குறிச்சி சாராய மரணங்களைப் பரிசீலித்தால், 

காவல்துறை மட்டுமல்ல மொத்த அரசு கட்டமைப்பும்தான் இதற்குப் பொறுப்பு. கிராம நிர்வாக அலுவலர் முதல் வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், மதுவிலக்கு காவல்துறை, சட்டம் ஒழுங்கு காவல்துறை என்கிற அதிகார வர்க்கமும், 

வார்டு உறுப்பினர்கள், ஒன்றியக் கவுன்சிலர்கள், ஊராட்சித் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள், நகராட்சித் தலைவர்கள், ஒன்றிய மாவட்டக் கவுன்சிலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் - இவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருப்பினும்- மற்றும் மந்திரிகள், முதலமைச்சர் உள்ளிட்ட ஆளும் வர்க்கமும், 

அந்தந்த ஊர்களில் உள்ள உள்ளூர் திமுக, அதிமுக, பாமக, பாஜக, நாம் தமிழர், காங்கிரஸ், தேமுதிக, விசிக உள்ளிட்ட அனைத்துக் கட்சி அரசியல் பிரமுகர்கள் என ஒரு பெரும் கூட்டமுமே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

இவர்களில் ஒருவருக்குக்கூடத் தெரியாமல் உள்ளுர் அளவில் யாரும் சாராயம் காய்ச்சி விற்பனை செய்ய முடியாது. அனைவருக்கும் தெரிந்தே நடக்கிற இந்த குற்றச் செயல்களுக்கு காவல்துறையை மட்டும் பொறுப்பாக்கினால் போதுமா? கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், விற்பதும் ஒருவருக்குத் தெரிந்த பிறகு அதை உரிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் இருப்பதும் குற்றம் என்றுதானே மதுவிலக்குச் சட்டம் சொல்கிறது. 

நாம் எங்கே தவறினோம்? 

கள்ளச் சாராய விற்பனை நடக்கிறது என்பது தெரிந்தும் கண்டும் காணாமலோ அல்லது அச்சப்பட்டோ மௌனம் காக்கும் பொதுமக்களுக்கு இதில் பொறுப்பில்லையா?

கள்ளச்சாராயம் தொழிலில் ஈடுபடுபவோர் மீது புகார் கொடுக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு ஏற்ப, இதற்கென தனியாக ஒரு இணையதளத்தை உருவாக்கி அதில் உள்ளீடு செய்பவர் யார் என்கிற இரகசியத்தை வெளிக்காட்டாமல் இருப்பதற்கு ஏற்ப அது அமைய வேண்டும். இந்த இணையதளத்தை உள்ளூர் காவல்துறையிலிருந்து தலைமைச் செயலகம் வரை பார்வையிடவும், நடவடிக்கை எடுக்கவும், சோதித்தறிவும் வழிவகை செய்ய வேண்டும். புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை பொதுமக்கள் அறியும் வகையிலும் அது வடிவமைக்கப்பட வேண்டும்.

ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பும், சமூகக் கட்டமைப்பும் சீரழிந்து, நிலைகுலைந்து போய் உள்ளதால், உள்ளூர் அளவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கண்காணிப்புக் குழுக்களை அமைத்து நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே கள்ளச் சாராயம் உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும். அரசு கட்டமைப்பை மட்டுமே நம்பி இருந்தால் அது ஒருபோதும் கதைக்கு உதவாது. 'பழைய குருடி கதவைத் திறடி' என்கிற கதையாகத்தான் அது இருக்கும். 

தமிழ்மணி

Wednesday, 2 August 2023

பாட்டி ஊருக்கு ஒரு பயணம்! "விவசாயிகளுக்கு விடிவே இல்லையா?" இறுதிப் பகுதி!

வேளாண்மையில் இன்று உழவுக்கும், சில இடங்களில் விதைப்புக்கும், அறுவடைக்கும் டிராக்டர்கள் மற்றும் எந்திரங்கள்  பயன்படுத்தப்படுகின்றன. மற்ற வேலைகள் பெரும்பாலும் இன்னமும் மனிதர்களைத்தான் நம்பி இருக்கின்றன. 

விவசாய வேலை பார்க்கும் பெண்கள் எல்லாம் 100 நாள் வேலைக்குச் சென்று விடுவதால் விவசாயம் அழிந்து வருவதாக ஒரு பக்கம் அறியாமையில் சிலர் பிதற்றி வருகின்றனர். 100 நாள் வேலை வருவதற்கு முன்பு ஏதோ விவசாயம் செழித்தோங்கி இருந்தது போலவும் இவர்கள் கதைக்கின்றனர். ஓராண்டில் 100 நாள் போக மீதி 265 நாட்கள் மனித சக்தியை வேளாண்மையில் ஈடுபடுத்தினால் விவசாயம் வளர்ச்சி அடைந்து விடுமா?

தற்போதைய சூழலில் அரசு அலுவலகங்களில் வேலை பார்த்துக் கொண்டே விவசாயம் செய்பவர்கள், ஆயிரக் கணக்கில் அரசிடமிருந்து மாதஓய்வூதியம் பெற்றுக் கொண்டு வேளாண்மையில் ஈடுபடுபவர்கள், கள்ளச்சாராயம்-கந்துவட்டி உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டு விவசாயம் செய்பவர்கள் என விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர்தான் தங்களுடைய வசதிகளை பெருக்கிக் கொள்ள முடியும். ஏனைய பெரும்பான்மை வேளாண் குடிகளின் வாழ்க்கையில் கடந்த ஆண்டுகளில் பாரிய மாற்றம் எதுவும் நிகழ்ந்து விடவுமில்லை; இனி நிகழப் போவதுமில்லை.

உலக அளவில் வேளாண் உற்பத்திக் கருவிகள் பெருமளவில் வளர்ச்சி அடைந்திருந்தாலும், இந்தியாவைப் பொறுத்தவரையில் பங்கு-பாகப்பிரிவினைகளால் இங்கொன்றும் அங்கொன்றுமாக நிலங்கள் துண்டு துண்டாக விரவிக் கிடப்பதனால்  ஒரே நேரத்தில் ஒரே வகையான பயிர்களை நவீனக் கருவிகளைக் கொண்டு சாகுபடி செய்யவதில் சிரமங்கள் இருக்கின்றன. 

சிறுவீத உற்பத்தியிலிருந்து பெருவீத உற்பத்திக்கு வேளாண்மை மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதற்குத் துண்டு துக்காணி நிலங்களை எல்லாம் ஒருங்கிணைத்து சமன்படுத்தி பெரும் பண்ணைகளாகக் கட்டமைக்கப்பட வேண்டும். உற்பத்திக் கருவிகள் மற்றும் வேளாண் இடு பொருட்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். நீர்ப்பாசன வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். வேளாண்மை ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்பட்டு அதில் பணிபுரிபவர்கள் தொழிலாளர்களாக கருதப்பட்டு அவர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்பட வேண்டும். இன்றைய கிராமப்புற குடியிருப்புகள் எல்லாம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட வேண்டும். தொழிற்சாலைகளில் வரவு செலவு, இலாப-நட்டக் கணக்குப் பார்க்கப்படுவதைப் போல வேளாண்மையிலும் பார்க்கப்பட வேண்டும். இலாபம் இல்லாத வேளாண் பண்ணைகளை மேம்படுத்துவதற்கு அரசு உதவி செய்ய வேண்டும். 

அனைத்து வகை தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களிடையே உள்ள சம்பள வேறுபாட்டைக் குறைத்து, கிட்டத்தட்ட உழைப்புக்கேற்ற ஊதியம் அல்லது சமமான ஊதியம் பெறுகின்ற வகையில் ஊதியக் கொள்கைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். 

இத்தகையதொரு கட்டமைப்பை உருவாக்கவும் அதற்கு இசைவான ஒரு அரசை நிறுவவும் முயற்சிப்பது ஒன்றுதான் வேளாண் குடிகளின் விடுதலைக்கு வழி வகுக்கும்.

*****

வாலாஜாவில் அடுத்த சில வேலைகள்  எனக்காகக் காத்திருந்ததால், நான் ஊர் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பனம்பழத்தை ருசி பார்க்கும் ஆசை என்னைத் துரத்தியதால், தொடர் சாரல் மழை காரணமாக இரண்டு நாள் முயற்சித்து பழத்தைச் சுடமுடியாமல்,  கடைசி நாளில் அது கைகூடியதால் ஒரே நேரத்தில் மூன்று கொட்டைகளைக் கொண்ட ஒரு முழு பழத்தையும் சுவைத்து முடித்தேன்.

இத்தனை நாள் இருந்தும் காட்டுக்குள் போகாமலா ஊர் திரும்புவது என உள்ளம் துள்ளியதால், கணுக்காலில் ஏற்பட்ட வலியையும் பொருட்படுத்திக் கொண்டு மாலை வேளையில் மெல்ல நடந்து காட்டுக்குள் சென்றேன். கலாக்காயைத் தேடிச் சென்ற போது, எலந்தை, சூரை, காரை, பூலாச் செடிகள் கண்ணில் பட்டன. பழங்கள் கிடைக்கும் பருவம் இது இல்லை என்றாலும் ஒரு பூலாச்செடியில் மட்டும் சில பழங்கள் பளிச்சிட்டன. இனிப்பு கசப்பும் புளிப்பும் துவர்ப்பும் கொண்ட சில பூலாப்பழங்களை வாயில் போட்டு அதக்கியவாறு காட்டுக்குள் நீண்ட தூரம் சென்றேன். கலாச்செடி மட்டும் கண்ணில் படவேயில்லை. ஆனால் கண்ணில் பட்டவையோ காலி பாட்டில்களே!

கண்ணாடிக் காடுகளை வளர்க்கும் அரசை நம்பினால் வேளாண் குடிகளுக்கு இனி விடுதலை இல்லை; வேறு வழியைத்தான் நாடு வேண்டும் என எண்ணியவாறு காட்டை விட்டு வெளியேறினேன்.

எட்டி நின்று பார்த்தால் கிராமங்கள் பசுமையாகத்தான் தெரியும். நெருங்கினால்தான் அதன் துயரம் புரியும். 

பச்சை வேர்க்கடலைகளை கொஞ்சம் பையிலே திணித்ததனால் முதுகுப் பாரம் சற்று கூடியதே ஒழிய, இந்த ஒரு வாரத்தில் மனசு லேசாகி உறவுகளிடம் விடைபெற்றுக் கொண்டு மறுநாள் ஊர் திரும்பினேன்.

முற்றும்.

ஊரான்

பாட்டி ஊருக்கு ஒரு பயணம்! "உழைத்துப் பார்! தெரியும் களைப்பு!" தொடர் - 5



Monday, 24 July 2023

குடிப்பவனும் திருந்த மாட்டான்! கொடுப்பவனும் மாற மாட்டான்!

காலை வேளை, 
ஜூலையிலும்
மோடம் பிடித்தது போல் 
சாரல் மழை.
காட்டோர கூட்ரோடு
பகலில் 
பயணிகளின் நிழற்குடை,
இரவில் 
குடிகாரர்களின் வாழ்விடம். 


பேருந்துக்காகக் காத்திருக்கும் 
பள்ளி மாணவர்களின்
கனவுகளை சிதைக்கும்
காலி பாட்டில்கள்!

குடிப்பவனும் திருந்த மாட்டான்
கொடுப்பவனும் மாற மாட்டான்.
வெஞ்சீற்றத்துடன்
ஊர் நோக்கிப் பயணிக்கிறேன்.

ஊரான்

Wednesday, 28 June 2023

நெஞ்சைப் பிளக்கிறதே!

ஜூன் மாதத்திலும்...
கடல் போல் காட்சியளிக்கும் ஏரி,
புது மண்ணின் அரவணைப்பில்
புதுப் பொலிவு பெற்ற ஏரிக்கரை,
தென்மேற்கிலிருந்து வீசும் மெல்லிய பூங்காற்று, 
கண்ணைக் குளிர வைக்கும் எழில்மிகு மலைத் தொடர், 
கடலின் பேரலையில் தள்ளாடிக் தவழும் பெருங் கப்பலைப் போல...
காற்றலையால் எழும் ஏரி நீரின் மெல்லலையில் 
தள்ளாடிக் தவழும் நீர்ப்பறவைகள்,
இதழ் விரித்து மலர்ந்திருக்கும் அல்லி மலர்கள்,
பெருமீன்கள் நீரின் ஆழத்தில் ஓய்வெடுக்க, 
சிறு குஞ்சுகளோ மேலெழுந்து நீந்திக் களிக்க,
காலை நேர வேளையிலே...இவை மனதை வருடினாலும்
கரையின் இருமருங்கிலும் சரிந்து 
குவிந்து கிடக்கும் 
சாராய பாட்டிகள்...
நெஞ்சைப் பிளக்கிறதே!

தமிழ்மணி

குறிப்பு: திருவண்ணாமலை மாவட்டம், மட்டவெட்டு, அத்திமூரான் கொட்டாய் ஏரிக்கரை.















Tuesday, 16 May 2023

கள்ளச்சாராய மரணங்களும் கட்டமைப்பு நெருக்கடியும்!

ஒவ்வொரு ஊரிலும் நடைபெறுகின்ற ஆற்று மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, தாது மணல் கொள்ளை, கள்ளச்சாராயம்-கஞ்சா விற்பனை, அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் லஞ்ச ஊழல் முறைகேடுகள், ஆலைகள் வெளியேற்றும் நச்சுக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள், இவை அனைத்தும் அந்தந்த ஊரில் உள்ள திமுக, அதிமுக, பாமக, விசிக, காங்கிரஸ், பாஜக, மதிமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக, உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் என அனைவருக்கும் தெரியும்.

கள்ளச்சாராய மரணங்கள் போன்று தீவிரமான பிரச்சனைகள் நிகழாதவரை அனைவரும் மௌனம் சாதிப்பர். காரணம் மேற்கண்ட விசயங்களில் கட்சி வேறுபாடு இன்றி உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பெறுகின்ற ஆதாயம்தான். உள்ளூர் மக்களுக்கு இவை எல்லாம் ஓரளவு தெரிந்திருந்த போதிலும், அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. காரணம் அவர்களை ஒருங்கிணைக்கின்ற ஆற்றல்மிக்க உள்ளூர் தலைவர்கள் மேற்கண்ட விசயங்களில் ஆளுங்கட்சித் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளோடு வைத்திருக்கின்ற கள்ளக் கூட்டுதான்.

ஆதாயம் கிடைக்காதவர்கள் மட்டுமே இதற்கு எதிராகக் குரல் கொடுக்க முன் வருகின்றனர். கவனிக்க வேண்டிய விதத்தில் அவர்களை கவனித்தால் அவர்களும் அதன் பிறகு மௌனம் காக்கின்றனர். ஆட்சிகள் மாறினாலும் இதுதான் அன்றாட நடைமுறை. 

இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும் என்று குரல் கொடுக்கின்ற பொதுவுடமை மற்றும் புரட்சிகர இயக்கங்கள் பலவீனமாக இருப்பதினால் அவர்களும் கையறு நிலையில்தான் உள்ளனர். புரட்சிகர இயக்கங்கள் பலம் பெறாத வரையில் மேற்கண்ட சீர்கேடுகள் தொடரவே செய்யும். நடப்பு அரசியல் விவரங்கள் அவதானிப்பதில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளால்  இவர்களும் பல்வேறு குழுக்களாக பிளவுப்பட்டு சிதறுண்டு கிடப்பது மற்றுமொரு அவலம்.

மேலும் இது ஒரு அரசியல் கட்டமைப்பு சார்ந்த பிரச்சனையாகவும் பார்க்க வேண்டி உள்ளது. தேர்தல் காலங்களில் வாக்களிக்கின்ற உரிமையைத் தவிர வேறு எந்த உரிமையும் உள்ளூர் மக்களுக்குக் கிடையாது. மாறாக அதிகாரம் அனைத்தும் அரசு அதிகாரிகளிடம் குவிக்கப்பட்டிருக்கிறது. அரசு அதிகாரிகளும் ஆளுங்கட்சிப் பிரமுகர்களுமே அனைத்தையும் தீர்மானிக்கின்றனர். தீர்மானங்களைக் கொண்டு வருகின்ற அதிகாரம் மட்டுமே மக்கள் பிரதிகளுக்கு இருக்கிறது. அதிகாரிகள் மனசு வைத்தால் மட்டுமே தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படும். இல்லையென்றால் அவை எல்லாம் குப்பை தொட்டியில் வீசப்படும். 

தீர்மானங்கள் கூட மக்கள் நலன் சார்ந்து கொண்டுவரப்படுவதில்லை. மாறாக அந்தத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தினால் அதனால் எவ்வளவு ஆதாயம் பெற முடியும் என்று அரசியல்வாதிகள் முன்கூட்டியே கணக்குப் போட்டுதான் தீர்மானங்களை முன்மொழிகின்றனர்.

கிராம வார்டு உறுப்பினர் வரை அதிகாரம் பரவலாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டாலும் உண்மையான அதிகாரம் அதிகாரிகளிடமே குவிந்து கிடக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கண்ட பிரதிநிதிகள் அதிகாரிகளோடு சேர்ந்து கூட்டுக் கொள்ளை அடிப்பதைத் தவிர வேறு எதையும் செய்வதில்லை. மாறாக தவறிழைக்கின்ற வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை திருப்பி அழைக்கின்ற அதிகாரம் மக்களுக்குக் கிடையாது. அடுத்த தேர்தல் வரை அமைதி காப்பதைத் தவிர மக்களுக்கு வேறு வழி இல்லை.

உள்ளூர் அளவில் அனைத்து அதிகாரமும் மக்கள் பிரதிநிதிகளுக்கே இருக்க வேண்டும். உள்ளூர் மக்களின் தேவைகளுக்காக மட்டுமே திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் தீட்டுகின்ற திட்டங்களை நிறைவேற்றுகின்றவர்களாக மட்டுமே அரசு அதிகாரிகள் இருக்க வேண்டும். மேலும் மக்கள் பிரதிநிதிகள் தவறிழைத்தால் அவர்களை உடனடியாக திரும்பப் பெறுகின்ற வகையில் மக்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும்.  இத்தகைய புதிய கட்டமைப்பு மட்டுமே ஒரு ஒழுங்கமைந்த சமுதாயத்தை உருவாக்கப் பயன்படும். அதற்காக சிந்திப்பதும் குரல் கொடுப்பதும் ஒன்றிணைவதும் இன்றைய காலத்தின் கட்டாயம். நீண்ட கால அடிப்படையில் இது ஒன்றே தீர்வு. 

அதுவரை சும்மா இருப்பதா என்கிற கேள்வியும் கூடவே எழுகிறது அல்லவா? முடிந்த வரையில் உள்ளூர் அளவில் மக்கள் குழுக்களை கட்டி அமைத்துப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இந்த வேலையை பொதுவுடமை மற்றும் புரட்சிகர இயக்கங்களால் மட்டுமே முன்னெடுக்க முடியும். அதுவரை கள்ளச்சாராய மரணங்கள் உள்ளிட்ட அவலங்கள், துயரங்கள் தொடரவே செய்யும்.

நேர்மையான அதிகாரிகளும் சில அரசியல் கட்சிப் பிரதிநிதிகளும் அரிதாக இருக்கவே செய்கின்றனர். விதிவிலக்காக இவர்கள் மிகச் சொற்பமானவர்களே. கட்டமைப்பு சரியில்லாத போது இந்த ஒரு சிலராலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் கள நிலவரம்.

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்


Thursday, 4 July 2013

மனு இன்னும் மடியவில்லை!

தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள வேப்பமரத்தூர் கிராமம். கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள தற்போது ஓசூரில் வசித்து வரும் இக்கிராமத்தைச் சேர்ந்த G.சுரேஷ் (வயது:30) தனது மனைவி s.சுதாவுடன் (வயது:23) ஊருக்கு வருகிறார். திருவிழாவிற்காக ஏற்கனவே இவரிடமிருந்து வசூல் செய்திருந்த ரூ.1500 ஐ விழா நடத்துவோர் திருப்பிக் கொடுத்து விடுகின்றனர்.

திருவிழாவில் கலந்து கொள்ள ஆசை ஆசையாய் வந்திருந்தவருக்கோ இது அதிர்ச்சியாக இருந்தது. இந்த அதிர்ச்சியிலிருந்து இவர் மீள்வதற்குள் இவரையும் இவரது குடும்பத்தையும் ஊரை விட்டு நீக்கி வைப்பதாகவும், இவர்கள் கோவிலுக்குள் நுழையவும், பொது நீர் ஆதாரங்களிலிருந்து தண்ணீர் எடுக்கவும்,
 ஊர்க்காரர்கள் இந்தக் குடும்பத்தோடு எவ்வித ஒட்டும் உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும்  தடை விதித்து கட்டப் பஞ்சாயத்து மூலம் தீர்ப்பெழுதுகிறது சாதிவெறிக் கும்பல்.

கந்துவட்டிக்காரன், திருட்டுத் தொழில் செய்பவன், சாராயம் காயச்சுபவன், பாலியல் பலாத்காரம் செய்பவன், லஞ்ச ஊழல் பேர்வழிகள் உள்ளிட்ட சமூக விரோதிகள் கொடுக்கும் காசு இவர்களுக்கு கசப்பதில்லை. ஆனால் G.சுரேஷ்  கொடுத்த காசு மட்டும் ஏன் கசக்கிறது?

வன்னியரான G.சுரேஷின் மனைவி தாழ்த்தப்பட்டவராம். அது இப்பொழுதுதான் தெரியவந்ததாம். பணத்தை திருப்பிக் கொடுத்ததற்கு இதுதான் காரணமாம். வன்னிய சாதி வெறியர்கள் மட்டுமல்ல ஊரில் உள்ள பிற உயர்சாதியினர் அனைவரும் சேர்ந்துதான் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இந்தத் தம்பதியர் வயதுக்கு வந்தவர்கள்தானே? அதாவது சாதிவெறியர்களின் மொழியில் சொல்ல வேண்டுமானால் இவர்கள் 'மைனர்கள்' இல்லைதானே? "காதலுக்கு நாங்கள் எதிரிகள் அல்ல; 'செட்டப்' திருமணங்களைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்" என கூப்பாடு போடும் பா.ம.க வினரோ அல்லது அவர்களுக்கு பக்க மேளம் வாசிக்கும் இணைய எழுத்தாளர்களோ இது குறித்து ஏன் வாய் திறக்கவில்லை?

ஆணோ! பெண்ணோ! அது தாழ்த்தப்பட்ட நபராக இருந்தால் அவர்கள் பிற உயர்சாதியினரை காதலித்துத் திருமணம் செய்து கொள்வதை ஏற்க முடியாது என்பதுதான் சாதி வெறியர்களின் சமூக நீதி. நாயக்கன் கொட்டாய் சம்பவமும், வேப்பமரத்தூர் சம்பவமும் இதைத்தான் உணர்த்துகிறது.

இதே சுரேஷ் ஒரு செட்டியார் பெண்ணையோ அல்லது ஒரு முதலியார் பெண்ணையோ திருமணம் செய்திருந்தால் திருவிழாவிற்காக கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுத்திருக்க மாட்டார்கள். அப்பொழுது மட்டும்  சுரேஷின் காசு இனித்திருக்கும். இப்பொழுது மட்டும் கசப்பதற்குக் காரணம் ஒரு தீண்டத்தகாதவளை திருமணம் செய்து கொண்டதால் சுரேசும் அவனது காசும் தீட்டுப் பட்டுவிட்டது. இதுதான் சாதி வெறியர்களின் மன ஓட்டம்.

இது அப்பட்டமான வன் கொடுமை. இது குறித்து சுதா புகார் கொடுத்ததன் பேரில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரெங்கநாதன்  மற்றும் கிராம பெருசு (நாட்டாமை) பெரியசாமி உள்ளிட்ட 22 பேர் மீது வன் கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவுகளின்  கீழ் வழக்குப் பதிவு  செய்து  அரூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர்  விசாரணை செய்து வருகிறார்.

தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்கள் நுழையவும் பொது நீர் ஆதாரங்களை பயன்படுத்தவும் சாதி வெறியர்கள் தடை விதித்து வருவதைத்தான் நாம் இதுவரை பார்த்து வருகிறோம். ஆனால் இன்று ஒரு வன்னியனையே கோவிலுக்குள் நுழையவும், பொது நீர் ஆதாரங்களை பயன்படுத்தவும் வன்னிய சாதி வெறியர்களே தடை விதித்துள்ளார்கள். ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை சுரேஷ் திருமணம் செய்து கொண்டதால் அவரும் தீண்டத்தகாதவராகி விட்டார். 

தத்ததமது சாதிகளுக்குள்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மனு சாஸ்திரம் சட்டம் வகுத்துள்ளது. ஆனால் இதையும் மீறி அன்று  கலப்பு திருமணங்கள் நடைபெறவே செய்தன. இதை மனுவால் தடுக்க முடியவில்லை. அதனால் கலப்பு மணம் செய்து கொண்டவர்களுக்குப் பிறக்கும் வாரிசுகளை தனி ஒரு சாதியாக்கினான் மனு. இத்தகைய புதிய சாதிகளை சாதியப் படிநிலையில் மேலும் கீழான சாதிகளாக்கினான்.

இங்கே G.சுரேஷ் - s.சுதா இருவருக்கும் இன்னும் வாரிசு உருவாகவில்லை.ஆனால் வாரிசு உருவாவதற்கு முன்னரே வன்னியனாகப் பிறந்த ஒருவன் தாழ்த்தப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டதற்காகவே அவனைத் தீண்டத்தகாதவனாக்கி மனுவையே விஞ்சி விட்டார்கள் வன்னிய சாதி வெறியர்கள்.

மனு இன்னும் மடியவில்லை. அவன் வன்னியனாக, முதலியாராக, கவுண்டனாக, நாயுடுவாக, கள்ளனாக, தேவனாக, ரெட்டியாக, செட்டியாக, ஐயராக, ஐயங்காராக இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான். அதனால்தான் இளவரசன்கள் மாண்டு கொண்டிருக்கிறார்கள்.

செய்தி ஆதாரம்: THE HINDU, June 24, 2013

Saturday, 28 April 2012

செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் கதவுகளை இழுத்து மூடுவது எப்போது?

குடிக்காத ஆண்கள் எத்தனை பேர்? ஒரு பத்து சதம் இருப்பார்களா? இருக்காது என்றார் ஒரு நண்பர். அப்படியானால் ஒரு 90% சதம் பேர் குடிகார்களாக இருப்பார்களா? இந்தக் கேள்விகளுக்கு புள்ளி விவர அடிப்படையில் பதில் தேடுவதைவிட சாராய விற்பனையின் அளவைக் கணக்கிட்டாலே உண்மை விளங்கிவிடும்.

கடந்த நிதி ஆண்டில் (2011-12) டாஸ்மாக் மூலம் ரூ.18081 கோடி வருவாய் ஈட்டியுள்ளது தமிழக அரசு. இது கடந்த நிதி ஆண்டைவிட ரூ.3116 கோடி அதிகமாம். கடந்த இரண்டு ஆண்டுகளில் 20% வளர்ச்சியைக் கண்டுள்ளது அரசின் சாராய விற்பனை.

‘கள்ளச் சாராயம்’ மற்றும் ‘கடத்தல் சாராயத்தை’ ஒழித்ததன் மூலமாக தமிழக அரசின் ‘நல்ல சாராய’ விற்பனை 2003 ம் ஆண்டிலிருந்து அதிகரித்தே வருகிறது. கலைஞரும் ஜெயலலிதாவும் கருத்து வேறுபாடு ஏதுமின்றி வளர்த்து வரக்கூடிய தமிழகத்தின் பிரதானமான ஒரே தொழில் சாராயத் தொழில்தான்.
‘குடி’ உயரக் கோன் உயரும்!

2009-10 ல் ரூ.12498 கோடி, 2010-11 ல் ரூ.14965 கோடி, 2011-12 ல் ரூ18081 கோடி. என சாராயத்தின் மூலம் அரசு வருவாயாக ஈட்டியுள்ளது. அதாவது வளர்ச்சி விகிதம் முறையே 17.89%, 19.74%, 20% என அதிகரித்துக் கொண்டே வருகிறது. அரசு போக்குவரத்துக் கழகமும் தமிழ்நாடு மின்சார வாரியமும் தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வரும் நிலையில் அரசின் சாராயத் தொழில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக வளர்ச்சி கண்டு இலாபமீட்டி வருகிறது.

2003-04 ல் ரூ.3639 கோடி வருவாயாக இருந்த சாராய விற்பனை 2011-12 ல் ரூ18081 கோடியாக அதாவது ஆறு மடங்காக அதிகரித்துள்ளது.

இதில் வேடிக்கை என்ன தெரியுமா? குடிப்பழக்கத்தை தடுப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகளுக்கிடையிலும் சாராய விற்பனை இந்த போடு போடுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

‘குடி’ உயரக் கோன் உயரும் என ஔவையார் சும்மாவா சொன்னார்கள்?

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்தைத் தாண்டுவதற்கே திண்டாடும் மன்மோகன் - மாண்டேசிங் அலுவாலியா தலைமையிலான பொருளாதாரப் புலிகள் கருணாநிதி - ஜெயலலிதாவிடம் பாடம் கற்றுக் கொண்டால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒரே ஆண்டில் 20 சதவீதத்தைத் தாண்டும். யாராவது இதை அவர்களுக்கு எடுத்துச் சொன்னால் அப்துல்கலாம் கனவு கண்டதைப் போல இந்தியா நாலுகால் பாய்ச்சலில் ஒரே ராத்திரியில் வல்லரசாகிவிடும்.

சாராயம் வாங்க வருவோர் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கூட்ட நெரிசலை சமாளிக்க டாஸ்மாக் கடைகளில் ரசீது போடும் எந்திரங்களை அறிமுகப் படுத்தவிருக்கிறது தமிழக அரசு. முதல் கட்டமாக 2500 கடைகளுக்கு இந்த எந்திரங்கள் வழங்கப்படவிருக்கின்றன. இதற்காக ரூ.5 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது நேரத்தை மிச்சப்படுத்துவதோடு (time management) கணக்குகளை முறையாக பராமறிக்கவும், அதிகாரிகள் திடீர் சோதனைக்கு வரும் போது அவர்களுக்கு உதவியாகவும் இந்த ரசீது போடும் எந்திரங்கள் பயன்படுமாம்.

போராடும் ஊழியர்கள் மயங்கினால் என்ன? ஊத்திக்கொடு!

ஏழைப் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் சத்துணவு ஊழியர்களின்  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஊழியர்கள் மயங்கி விழுகிறார்கள். இவர்கள் மயங்கி விழுந்து மாண்டு போனாலும் சவக்குழிக்கு செலவு செய்யவும் அரசு தாயாராக இருக்குமேயொழிய சலுகை எதுவும் செய்யாது போல!

கொதிக்கும் தார் தங்கள் கால்களில் ஏற்படுத்தும் கொப்புளங்களையும் பொருட்படுத்தாமல் நாம் வண்டிகளில் வழுக்கிச் செல்ல வழி ஏற்படுத்தும் சாலைப்பணியாளர்கள் நீதிமன்றப் படிக்கட்டுகளை தங்களின் ஏனிப்படிகளாக மாற்றியபோதும் மீண்டும் பணியில் சேர்வதற்கான அவர்களின் கோரிக்கையை அரசாங்கம் அலட்சியப்படுத்தி வருகிறது.

இரும்பைப் போன்று இருகிப்போன கரும்பை கசக்கிப் பிழிந்து நமக்கு இனிப்பை வழங்கும் சர்க்கரை ஆலை ஊழியர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வேண்டும் எனப் போராடி வருகிறார்கள். போராடும் சர்க்கரை ஆலை ஊழியர்கள் சக்கையாகிப் போனாலும் எந்தச் சலனமும் இன்றி வேடிக்கை பார்க்கிறது அரசு.

நாம் மின்னொளியில் மிளிர்வதற்காக தங்கள் மேனியை கரியாக்கிக் கொள்ளும் நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டத்தையும் ஏதோ வேற்று கிரகங்களில் நடப்பதைப் போல வேடிக்கை பார்க்கிறது தமிழக அரசு. இவர்களின் போராட்டக் குரல் அரசின் செவிகளில் ஏற மறுக்கிறது. ஆனால் நமக்கு பாடைகட்டும் சாராய சேவகர்களுக்கு மட்டும் அவர்கள் போராடாமலேயே ஊதிய உயர்வாம். என்ன கொடுமை இது?

தமிழகத்தில் உள்ள 6798 சில்லரை விற்பளைக் கடைகளில் சாராயம் ஊற்றிக் கொடுக்கும் மகத்தான பணியை மேற்கொண்டிருக்கும் 28650 சேவகர்களுக்கு ரூ300 முதல் ரூ 500 வரை ஊதிய உயர்வாம்.

வேலை வாய்ப்பை அள்ளித் தரும் சாராயப் படிப்பு!

7785 சாராயக் கங்காணிகளையும் (supervisors)16826 சாராய விற்பனையாளர்களையும் 4039 சாராய விற்பனை உதவியாளர்களையும் புதிதாக நியமிக்கப் போகிறார்களாம். முதலமைச்சரே இதற்கு உத்தரவிட்டிருக்கிறார்களாம். இவை எல்லாம் சாராய அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சட்டமன்றத்தில் தெறிவித்த விவரங்கள். மக்களுக்கு பாடை கட்டும் தொழில் வளர்ந்து வருகிறது. இதில் வேலை வாய்ப்பும் அதிகரிக்கிறது. ஆனால் தனியார்மயம் – தாராளமயம் - உலகமயம் உருவாக்கிய பொருளாதார நெருக்கடிகளால் அடிப்படை கட்டுமானம் மற்றும் சேவைப்பிரிவுகள் நலிந்து வருகின்றன. இத்தொழில்களில் பணியாற்றும் ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

சாராயம் தயாரிப்பு அதன் விநியோகம் மற்றும் பராமரிப்பை மேலும் செம்மைப் படுத்த உதவும் வகையில் B.E (Arrack Technology), DAE (Diploma in Arrack Engineering), ITI (Arrack man) உள்ளிட்ட தொழில் நுட்பப் படிப்புகளை இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்த அரசு முயற்சி எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. போண்டியாகாத தொழிலுக்கெல்லாம் படிப்புகள் இருக்கும் போது கொடி கட்டிப் பறக்கும் சாராயத் தொழிலுக்கு மட்டும் படிப்பு இல்லாமல் இருப்பது நியாயமா?

சரக்கடிப்பதை திடீர் என நிறுத்தி விட்டால்?

சரக்கடிப்போர் சரக்கடிப்பதை நிரந்தரமாக நிறுத்திக் கொண்டால் என்னவாகும்? எனக்கு இப்படி ஒரு ஐயம் திடீர் என எழுந்தது.

அடுத்தவன் கெட்டுப் போனால்தான் சில தொழில்களை தொடர்ந்து நடத்த முடியும். மேலும் மேலும் மக்கள் கெடுதலுக்கு உள்ளானால்தான் அத்தகையத் தொழில்களில் மேலும் வளர்ச்சியைக் காண முடியும்.

அலோபதி - ஆயுர்வேதம் - ஹோமியோபதி - சித்தா – யுனானி - நேச்சுரோபதி என வகை வகையான மருத்துவப் படிப்புகளைப் படித்துவிட்டு லட்ச லட்சமாய் சம்பாதிக்க வேண்டும் என்கிற நோக்கோடு ஒருவர் மருத்துவத்தைப் படித்தவிட்டு கிளினிக் வைத்தால் அவர் லட்சியம் எப்போது நிறைவேறும்? மக்கள் அன்றாடம் நோய்வாய்ப்பட வேண்டும். மருத்துவரின் வேண்டுதலும் அதுவாகத்தான் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவரது லட்சியம் நிறைவேறும். எல்லோரும் நலமாக வாழ்கிறார்கள் என்றால் கிளினிக்குகளை இழுத்து மூடித்தான் ஆகவேண்டும்.

பிஃ.பார்ம் படித்துவிட்டால் வேலை கிடைக்கவில்லை என்றாலும் கவலை இல்லை. ஒரு மருந்துக் கடை வைத்தாலே போதும் பொழப்பை ஓட்டலாம் என கணக்குப் போட்டால் மேலே சொன்னதுதான் மருந்துக் கடைகளுக்கும் பொருந்தும்.

சட்டம் படித்தவன் சம்பாதிக்க வேண்டும் என்றால் நீயும் நானும் அன்றாடம் அடித்துக் கொள்ள வேண்டும். அமைதியாக நாம் வாழ முனைந்தால் கருப்பு அங்கிகளை கொக்கிகளில்தான் தொங்க விடவேண்டும் – தோளில் அல்ல.

பங்க்சர் கடை வைத்தால் எப்படியோ பொழப்பை நடத்தலாம் என நம்பி பங்க்சர் கடை வைத்துவிட்டு வண்டிகள் எதுவும் பங்க்சர் ஆகாமல் ஓடத் தொடங்கினால் பங்க்சர் கடையில் ஈதான் ஓட்ட வேண்டும்.

மேற்கண்ட சில தொழில்கள் நேற்று வரை சேவைத் தொழில்களாகத்தான் கருதப்பட்டன. ஆனால் அவையே இன்று பொருள் ஈட்டும் தொழில்களாக  மாற்றப்பட்டுவிட்டன.

அட போய்யா! படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கலேன்னா என்ன? தெரு முனையில ஒரு பெட்டிக் கடை வைச்சாப் போச்சு! அதை வைத்தே சொந்த வீடு கட்டிட மாட்டேன்! என வேலை தேடும் பட்டதாரி இளைஞன்  பேசுவதைக் கேட்டுக் கொண்டுதானே இருக்கிறோம். புகைப்பவன் புகைப்பதை நிறுத்திக் கொண்டால்; கஞ்சா – பான்பராக் - ஹான்ஸ் போடுவதை இளைஞர்கள் நிறுத்திக் கொண்டால் பெட்டிக் கடைகள் ஆயாவின் போண்டாக் கடைகளாகத்தான் மாற வேண்டும். போண்டாவை பொட்டலம் கட்டலாமேயொழிய பில்டிங் கட்ட முடியாது.

சரக்கடிப்போர் சரக்கடிப்பதை திடீர் என நிரந்தரமாக நிறுத்திக் கொண்டால் என்னவாகும் என எனக்கு எழுந்த ஐயத்திற்கு இப்போது வருவோம். என்னவாகும்? தமிழகமே செயலற்றுப் போகும். செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் கதவுகளை இழுத்து மூடுவதைத்தவிர வேறு வழியேதும் உண்டோ?