Tuesday, May 23, 2023

அன்று "அம்மா"! இன்று "ஆவின்"!

இராட்டிணக் கிணறுகளை
ஆழ்துளைக் கிணறுகள் விழுங்கி
ஆண்டுகள் உருண்டோடின.
தாமரை தவழ்ந்த குளங்களெல்லாம்
கர்நாடகா போல என்றோ
தரைமட்டமாகின.

தெளிந்த நீர் ஓடைகளையும் 
தெவிட்டாத ஆற்று ஊற்றுகளையும்
கழிவுகள் கபளீகரம் செய்ததால்
காகங்கள் கூட கரைகின்றன-
நன்னீருக்காக!
ஏரிகளிலும் சாக்கடைகள் சங்கமிப்பதால்
பயிர்களுக்கே பங்கம் வந்துவிட்டன.

தாகம் என்று கதவைத் தட்டினால்
தெரிந்தவர் என்றால் செம்பு நிறைய
தெரியாதவர் என்றால் 'கைகள்' நனைய
தாகம் தீர்த்தக் காலம் ஒன்றிருந்தது!
இன்று,
ஆர்.ஓ-கேன் எல்லாமே காசு ஆன பிறகு! 
யார்தான் தருவர் சும்மா?

அதனால்தானே, 
பயணம் என்றால் பாட்டிலோடு
பயணிக்கிறோம்!
பாதி பயணத்தில் தீர்ந்து போனால் 
புது பாட்டிலைத் தேடுகிறோம்!

நாம் நாவை நனைக்கும் வேளையில்
சிற்றூர்களில் சிறு முதலாளிகளும்
பெருநகரங்களில் கார்ப்பரேட் முதலாளிகளும்
பண மழையில் நனைகின்றனர்.

ஆசை யாரைத்தான் விட்டது?
ஜார்ஜ் கோட்டைகள் 
என்றோ விழித்துக் கொண்டன.
அன்று "அம்மா"
இன்று "ஆவின்" 
எதுவாயினும் ஏற்புடையதல்ல!
பொது இடங்களில் - இலவசமாய் 
குடிநீர் வழங்க 
ஆவண செய்வதே 
அரசின் கடமை!

ஆனால்,
"அம்மா" குடிநீர் இருந்தபோது 
வாய் பொத்திக் கொண்டிருந்தவர்கள்
"ஆவின்" குடிநீர் வருவதைக் கண்டு
ஆர்ப்பரிப்பரிக்கின்றனர் - சிலர்
அரசியல் ஆதாயம் தேட!

ஊரான்





No comments:

Post a Comment