Tuesday, May 16, 2023

கள்ளச்சாராய மரணங்களும் கட்டமைப்பு நெருக்கடியும்!

ஒவ்வொரு ஊரிலும் நடைபெறுகின்ற ஆற்று மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, தாது மணல் கொள்ளை, கள்ளச்சாராயம்-கஞ்சா விற்பனை, அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் லஞ்ச ஊழல் முறைகேடுகள், ஆலைகள் வெளியேற்றும் நச்சுக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள், இவை அனைத்தும் அந்தந்த ஊரில் உள்ள திமுக, அதிமுக, பாமக, விசிக, காங்கிரஸ், பாஜக, மதிமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக, உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் என அனைவருக்கும் தெரியும்.

கள்ளச்சாராய மரணங்கள் போன்று தீவிரமான பிரச்சனைகள் நிகழாதவரை அனைவரும் மௌனம் சாதிப்பர். காரணம் மேற்கண்ட விசயங்களில் கட்சி வேறுபாடு இன்றி உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பெறுகின்ற ஆதாயம்தான். உள்ளூர் மக்களுக்கு இவை எல்லாம் ஓரளவு தெரிந்திருந்த போதிலும், அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. காரணம் அவர்களை ஒருங்கிணைக்கின்ற ஆற்றல்மிக்க உள்ளூர் தலைவர்கள் மேற்கண்ட விசயங்களில் ஆளுங்கட்சித் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளோடு வைத்திருக்கின்ற கள்ளக் கூட்டுதான்.

ஆதாயம் கிடைக்காதவர்கள் மட்டுமே இதற்கு எதிராகக் குரல் கொடுக்க முன் வருகின்றனர். கவனிக்க வேண்டிய விதத்தில் அவர்களை கவனித்தால் அவர்களும் அதன் பிறகு மௌனம் காக்கின்றனர். ஆட்சிகள் மாறினாலும் இதுதான் அன்றாட நடைமுறை. 

இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும் என்று குரல் கொடுக்கின்ற பொதுவுடமை மற்றும் புரட்சிகர இயக்கங்கள் பலவீனமாக இருப்பதினால் அவர்களும் கையறு நிலையில்தான் உள்ளனர். புரட்சிகர இயக்கங்கள் பலம் பெறாத வரையில் மேற்கண்ட சீர்கேடுகள் தொடரவே செய்யும். நடப்பு அரசியல் விவரங்கள் அவதானிப்பதில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளால்  இவர்களும் பல்வேறு குழுக்களாக பிளவுப்பட்டு சிதறுண்டு கிடப்பது மற்றுமொரு அவலம்.

மேலும் இது ஒரு அரசியல் கட்டமைப்பு சார்ந்த பிரச்சனையாகவும் பார்க்க வேண்டி உள்ளது. தேர்தல் காலங்களில் வாக்களிக்கின்ற உரிமையைத் தவிர வேறு எந்த உரிமையும் உள்ளூர் மக்களுக்குக் கிடையாது. மாறாக அதிகாரம் அனைத்தும் அரசு அதிகாரிகளிடம் குவிக்கப்பட்டிருக்கிறது. அரசு அதிகாரிகளும் ஆளுங்கட்சிப் பிரமுகர்களுமே அனைத்தையும் தீர்மானிக்கின்றனர். தீர்மானங்களைக் கொண்டு வருகின்ற அதிகாரம் மட்டுமே மக்கள் பிரதிகளுக்கு இருக்கிறது. அதிகாரிகள் மனசு வைத்தால் மட்டுமே தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படும். இல்லையென்றால் அவை எல்லாம் குப்பை தொட்டியில் வீசப்படும். 

தீர்மானங்கள் கூட மக்கள் நலன் சார்ந்து கொண்டுவரப்படுவதில்லை. மாறாக அந்தத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தினால் அதனால் எவ்வளவு ஆதாயம் பெற முடியும் என்று அரசியல்வாதிகள் முன்கூட்டியே கணக்குப் போட்டுதான் தீர்மானங்களை முன்மொழிகின்றனர்.

கிராம வார்டு உறுப்பினர் வரை அதிகாரம் பரவலாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டாலும் உண்மையான அதிகாரம் அதிகாரிகளிடமே குவிந்து கிடக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கண்ட பிரதிநிதிகள் அதிகாரிகளோடு சேர்ந்து கூட்டுக் கொள்ளை அடிப்பதைத் தவிர வேறு எதையும் செய்வதில்லை. மாறாக தவறிழைக்கின்ற வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை திருப்பி அழைக்கின்ற அதிகாரம் மக்களுக்குக் கிடையாது. அடுத்த தேர்தல் வரை அமைதி காப்பதைத் தவிர மக்களுக்கு வேறு வழி இல்லை.

உள்ளூர் அளவில் அனைத்து அதிகாரமும் மக்கள் பிரதிநிதிகளுக்கே இருக்க வேண்டும். உள்ளூர் மக்களின் தேவைகளுக்காக மட்டுமே திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் தீட்டுகின்ற திட்டங்களை நிறைவேற்றுகின்றவர்களாக மட்டுமே அரசு அதிகாரிகள் இருக்க வேண்டும். மேலும் மக்கள் பிரதிநிதிகள் தவறிழைத்தால் அவர்களை உடனடியாக திரும்பப் பெறுகின்ற வகையில் மக்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும்.  இத்தகைய புதிய கட்டமைப்பு மட்டுமே ஒரு ஒழுங்கமைந்த சமுதாயத்தை உருவாக்கப் பயன்படும். அதற்காக சிந்திப்பதும் குரல் கொடுப்பதும் ஒன்றிணைவதும் இன்றைய காலத்தின் கட்டாயம். நீண்ட கால அடிப்படையில் இது ஒன்றே தீர்வு. 

அதுவரை சும்மா இருப்பதா என்கிற கேள்வியும் கூடவே எழுகிறது அல்லவா? முடிந்த வரையில் உள்ளூர் அளவில் மக்கள் குழுக்களை கட்டி அமைத்துப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இந்த வேலையை பொதுவுடமை மற்றும் புரட்சிகர இயக்கங்களால் மட்டுமே முன்னெடுக்க முடியும். அதுவரை கள்ளச்சாராய மரணங்கள் உள்ளிட்ட அவலங்கள், துயரங்கள் தொடரவே செய்யும்.

நேர்மையான அதிகாரிகளும் சில அரசியல் கட்சிப் பிரதிநிதிகளும் அரிதாக இருக்கவே செய்கின்றனர். விதிவிலக்காக இவர்கள் மிகச் சொற்பமானவர்களே. கட்டமைப்பு சரியில்லாத போது இந்த ஒரு சிலராலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் கள நிலவரம்.

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்


3 comments:

  1. வெட்ட வெளிச்சமாக கூட்டுக் கொள்ளை நடப்பதை தெளிவாக தெரிவிக்கிறது இப்பதிவு.நன்றி. by Ramu through WhatsApp.

    ReplyDelete
    Replies
    1. வெட்ட வெளிச்சமாக கூட்டுக் கொள்ளை நடப்பதை தெளிவாக தெரிவிக்கிறது இப்பதிவு.நன்றி.

      Delete
    2. மரக்காணம் கள்ளச்சாராய சாவில், சாராய விற்பனையில் ஒரு பாஜக காரருக்கும் தொடர்பு உண்டு என்கிற செய்தியோடு இதை நாம் பொருத்திப் பார்க்க வேண்டும். இதுதான் கள நிலவரம். WhatsApp ல் கொடுத்த பதில்.

      Delete