Showing posts with label தனியார் மயம். Show all posts
Showing posts with label தனியார் மயம். Show all posts

Sunday, 9 February 2014

எச்சரிக்கை: கல்விக் கொள்ளையர்கள் கடை விரிக்க வருகிறார்கள்!


அன்று

தன்னைப் போல ஏர் - மாடு - கலப்பை என தனது மகனும் விவசாயம் செய்து துன்பப்பட வேண்டாம் என நினைத்து திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த ஆரணி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது மகனை 1970 வாக்கில் ITI பிட்டர் படிப்பு படிக்க வைத்தார்.

அப்ரன்டிஸ் பயிற்சியாளர் வேலைக்கு ஆள்பிடிக்கும் கலையை அன்றே கற்று வைத்திருந்த சென்னை அண்ணா சாலையிலும், செம்பியத்திலும் இயங்கி வரும் ஒரு நிறுவனத்தில் ITI படித்த அம்மாணவன் பயிற்சியாளராகச் சேர்ந்து ஓராண்டு கசக்கி பிழியப்பட்டு நிரந்தரம் செய்ய முடியாது என விரட்டப்படுகிறார். பிறகு சில ஆண்டுகள் கழித்து நடுவண் அரசின் பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் பணிக்குச் சேர்ந்து சுமார் முப்பந்தைந்து ஆண்டுகாலப் பணி முடித்து சமீபத்தில்தான் ஓய்வு அவர் பெற்றார்.

இன்று

ஏழை எளிய விவசாயிகள் தங்களது பிள்ளைகளை ITI அல்லது டிப்ளமோ படிப்பு படிக்க வைக்கிறார்கள். படிக்கும் போதே வளாக நேர் காணல் மூலம் ஆட்களை அள்ளிச் செல்கின்றனர் தனியார் ஆலை முதலாளிகள். பையனுக்கு வேலை கிடைத்து விட்டது என்கிற மகிழ்ச்சியில் திளைக்கிறது குடும்பம். பட்ட கடனை அடைத்து விடலாம், எத்தனை காலம்தான் கூரைவீட்டில் குடியிருப்புது? இனி சொந்தமாக மெத்தை வீடொன்றை கட்டிக் கொள்ளலாம் என பெற்றோர்கள் மனக்கணக்கு போடுகின்றனர்.

ஆயிரம் கனவுகளோடு ஆலைகளில் பயிற்சியாளர்களாக சேர்கிறார்கள் அம்மாணவர்கள். நம்பிக்கைக்குரிய வகையில் கடினமாக வேலை செய்தால் நிரந்தரமாக்கிக் கொள்வார்கள் என்கிற பொய்யான வாக்குறுதிகளை நம்பி தங்களது ஆற்றல் அனைத்தையும் கொட்டி அந்த நிறுவனத்திற்காக உழைக்கிறார்கள். ஓராண்டு பயிற்சி முடிந்த பிறகு 'போய் வா' என அந்நிறுவனம் கதவை மூடிக் கொள்கிறது. வேலை தேடி மீண்டும் வேறு ஆலைகளின் கதவுகளைத் தட்டினால் அங்கேயும் பயிற்சியாளர் பணிதான். இங்கேயும் ஓராண்டுதான். மீண்டும் கதவு இழுத்து மூடப்படுகிறது. பிறகு மற்றுமொரு ஆலை. மீண்டும் அதே பயிற்சியாளர் பணி. இம்முறையும் கதவு மூடப்படுகிறது.

மாதம் ரூ.3000 த்திலிருந்து ரூ.5000 வரை பயிற்சியாளர்களுக்கு தரப்படுகிறது. இது மாதச் சம்பளம் அல்ல. ஸ்டைபண்ட். இதில் பெரும் பகுதியை நடுவண் அரசே கொடுக்கிறது.

மூன்றாண்டுகளில் தனது ஆற்றல் அனைத்தையும் தனியார் நிறுவன முதலாளிகளிடம் இழந்துவிட்டு சக்கையாய் துப்பப்பட்ட இத்தகைய இளைஞர் கூட்டம் லட்சக் கணக்கில் பெருகிவிட்டது. புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவால் முன்பு போல பொதுத் துறை அரசுத் துறை நிறுவனங்களும் கடந்த பல ஆண்டுகளாகவே வேலைக்கு ஆள் எடுப்பதில்லை.

மீண்டும் பிழைப்பு தேடி

பிழைப்புக்கு என்ன செய்வதென்று புரியாமல் மீண்டும் தனது கிராமங்களுக்கே திரும்புகின்றனர். இனி அப்பன் தொழிலையாவது செய்யலாமென்றால் மழை இல்லை; கிணறு - ஆறு – ஏரி - அணைகளில் நீரில்லை; விவசாயம் இல்லை; விவசாயம் செய்தாலும் விளைவித்த பொருளுக்கு கட்டுப்படியான விலை இல்லை. மொத்தத்தில் வருவாய் இல்லை.

வயதோ முப்பதைத் தொடவிருக்கிறது. திருமணம் செய்து வைக்கலாம் என்றால் வீடு - வாசல் இல்லை, வேலை இல்லை என பெண் தர தயங்குகிறார்கள் பெண்ணைப் பெற்றவர்கள். ITI மற்றும் டிப்ளமோ படித்த இளைஞர்களின் நிலை இதுதான். இன்று பட்டி தொட்டி எங்கும் தனியார் பொறியியல் கல்லூரிகள் முளைத்து விட்டதால் இவர்களின் பட்டியலில் தற்போது BE பட்டதாரிகளும் சேர்ந்து விட்டார்கள்.

ஆசை வார்த்தைகளுக்குப் பஞ்சமில்லை

கடந்த மூன்று ஆண்டுகளில் வளாக நேர்காணல் மூலம் 40% மாணவர்கள் நேரடி வேலை வாய்ப்பினை பெற்றுள்ளனர். 20% பேர் உயர்கல்வி பயிலச் சென்றுள்ளனர். 10- 20% மாணவர்கள் தொழில் முனைவோராகிவிட்டனர் (அதாவது முதலாளிகளாகிவிட்டனர்). 10% மாணவர்கள் மேலை நாடுகளுக்குச் சென்று விட்டனர்.”

ஒரு தனியார் பொறியில் கல்லூரியின் மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் அண்ணா பல்கலையின் துணைவேந்தர் சமீபத்தில் அள்ளித் தெளித்த புள்ளி விவரங்கள் இவை.

ஆண்டு தோரும் பொறியியல் கல்லூரிகளிலிருந்து வெளிவரும் மாணவர்களில் வெறும் 10% மாணவர்கள் மட்டுமே வேலை வாய்ப்பினை பெறுவதற்கான தகுதியைப் (employability) பெற்றுள்ளனர் என கல்வியாளர்கள் கூறுகின்றனர். வேலை கிடைத்தாலும் ஏன் இந்த வேலையில் சேர்ந்தோம் என்கிற விரத்திக்கு ஆளாகி வேலையை விட்டு ஓடும் நிலையில்தான் பலரும் முதலாளிகளால் கசக்கி பிழியப்படுகின்றனர்.

இவர்கள் தவிர மற்றொரு சாரார் வேலை வாய்ப்பினை பெறுவதற்கான தகுதியை மேலும் வளர்த்துக் கொள்ளவே மேற்படிப்பை மேற்கொள்கின்றனர். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை இனி கிடைக்காது, மேற்படிப்பு படிக்க பொருளாதார வசதியும் போதாது என்பதால் படித்த படிப்புக்கு தொடர்பு இல்லை என்றாலும் ஏதாவதொரு தொழிலைத் தேர்வு செய்து 'முன்னேற' வேறு சிலர் முயல்கின்றனர். ஆனால் தொழில் முனைவோராக முயன்ற இவர்களில் பலர் தற்கொலைக்கு முயலும் அவலம் எத்தனை பேருக்குத் தெரியும்?
 
'மெய்ட் சர்வண்ட்' வேலையில் பட்டதாரிப் பெண்கள்

பட்டம் பெற்ற பல பெண்கள் வேலைக்காக காத்திருப்பதில்லை. காதல் - கீதல் செய்து விடுவாளோ என்கிற பயத்தில் படிப்பு முடியும் முன்பே சொந்த சாதியில் ஒரு மாப்பிள்ளையை ஏற்பாடு செய்து குடும்பம் எனும் ஆலையில் ‘நிரந்தர’ வேலை ஒன்றிற்கு பெற்றோர்களே உத்தரவாதம் செய்து விடுகிறார்கள். படிக்கும் போதே வேலை. இதுவும் ஒரு வகையில் வளாக நேர்காணல்தானே!. வேலை என்னவோ ‘மெயிட் சர்வண்ட்’ வேலைதான். ஆனால் டெசிக்னேஷனோ ‘ஹவுஸ் ஒய்ஃப்’. இத்தகைய வேலை வாய்ப்பினை பெற்ற பட்டதாரிப் பெண்கள் முதல் 40% த்தில் அடங்குவர் போலும்!

தனியார் மயம்தாராளமயம்உலகமயக் கொள்கையின் விளைவால் ஆட்குறைப்பு - ஊதிய வெட்டு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ள பலர் தங்களது வேலையைத் தக்க வைத்துக் கொள்ளவே படாத பாடுபடுகின்றனர்.

10 % சதவிகித மாணவர்கள் மட்டுமே பயன் பெறுகின்ற ஒரு கல்விக்காக 90% மாணவர்கள் ஏமாற்றப்படவும், கல்விக் கொள்ளையர்கள் தங்களது பைகளை நிரப்பிக் கொள்ளவுமே மேற்கண்ட புள்ளி விரவங்கள் உதவக் கூடும்.

ஆசை வார்த்தைகளைக் கண்டு மோசம் போவதை விட நம் வாழ்வு மோசமாவதற்கான காரணத்தைக் களைய முற்படுவோம்!

Saturday, 10 December 2011

வளாக நேர்காணலும் வேலை வாய்ப்பும்!

அள்ளித் தரும் ஐ.ஐ.டி
அமெரிக்கா கடனின் மூழ்கி இருந்தாலும், ஐரோப்பா பொருளாதாரம் மந்தமடைந்திருந்தாலும் பெரும் தொழில் நிறுவனங்கள் சென்னை ஐ.ஐ.டி மாணவர்களை கொத்திச் செல்கின்றன.
இந்த ஆண்டு வளாக நேர்காணல் நடைபெற்ற டிசம்பர் முதல் நாளில் மொபைல் தொழில் தொடர்பான அமெரிக்க நிறுவனம் ஒன்று மூன்று மாணவர்களுக்கு தலா ரூ.71.34 லட்சம் ஆண்டுச் சம்பளம் தருவதற்கு முன்வந்துள்ளது. அதாவது மாத ஊதியம் சுமார் 6 லட்சம். இப்படி பல்வேறு நிறுவனங்கள் ஐ.ஐ.டி மாணவர்களுக்கு லட்சக் கணக்கில் மாத ஊதியம் தர முன்வந்திருக்கின்றன.
அம்மாடியோவ்! தலை சுற்றுகிறதோ! இப்படி லட்சங்களை அள்ளித் தருவதால்தான் நடுத்தர வர்க்கம் ஐ.ஐ.டி கனவில் மிதக்கிறது. யாருக்குத் தேவை குழந்தையின் மழலை? குழந்தை பேச முற்படும் முன்னரே அதன் கழுத்தைப் பிடித்து பிட்ஜியில் (fitge) தள்ளுகிறார்கள்? இறுதியில் ஐ.ஐ.டி யை எட்டமுடியவில்லை என்றாலும் என்.ஐ.டி (NIT) யையாவது கிட்டியதே என திருப்தியடைகிறார்கள்.
இதற்காக பெற்றோர்கள் படும் பாடு இருக்கிறதே! சொல்லிமாளாது. ஐதராபாத்துக்கு அனுப்பி ஹாஸ்டலில் சேர்ப்பவர்கள் ஒருபக்கம். சென்னையில் சேர்த்து தனி வீடு பார்த்து மனைவியை பிள்ளையோடு அனுப்பி விட்டு வாழ்க்கையின் பாதிநாட்களை 'மேரீடு பேச்சுளர்களாக' காலத்தை தள்ளும் தகப்பன்மார்கள் மற்றொரு பக்கம்.
பெற்றோர்கள் சம்பாதித்ததை பிள்ளைகள் விழுங்கிவிட பிள்ளைகளை பன்னாட்டுக் கம்பெனிகள் விழுங்கிவிடுகின்றன.
உச்சிக் குடுமியும் வளாக நேர்காணலும்
ஆனால் இப்படி எந்த பிரச்சனையும் இல்லாமல் வளாக நேர்காணலில் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை அள்ளித் தருகிறதாம் ஒரு கல்லூரி. அக்கல்லூரியில் சேர 'பிட்ஜிக்குச்' செல்ல வேண்டாம், 'பிலஸ் டூ' வும் படிக்க வேண்டாம். உச்சிக் குடுமி இருந்தால் போதுமாம். நமக்குத்தான் உச்சிக் குடுமி வைக்க உரிமை இல்லையே. கலைஞரும்தான் நமக்கு உச்சிக்குடுமியை ஒட்ட வைத்துப் பார்த்தார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஆசைப்பட்டார். ஆனால் உச்ச நீதி மன்றத்தில் ஒரிஜினல் குடுமிகள் உலுக்கிய உலுக்கலில் நமது ஒட்டுக் குடுமிகள் உதிர்ந்து போயின.
அது என்ன கல்லூரி? எங்கே இருக்கிறது? என்ன படிப்பு என்று கேட்கிறீர்களா? கர்நாடகாவில் பெங்களூர் – மைசூர் சாலையில் இயங்கும் வேதக்கல்லூரி அது. அங்கு படிக்கும் மாணவர்களுக்கு வளாக நேர்காணல் மூலம் கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் வேலை கிடைத்து விடுகிறதாம். மாதச் சம்பளம் லட்சங்களைத் தாண்டுகிறதாம்.

திருமணமே வேண்டாம் என்று தனியாக வாழ நினைத்தால் வேலை செய்யும் நிறுவனத்திலேயே (கோவில்தான் இவர்களது நிறுவனம்) இலவசமாகத் தங்கிக் கொள்ளலாம். உணவும் இலவசம். அறுசுவை உணவு கிடைக்கவில்லை என்றாலும் பட்டச் சோறு நிச்சயம். திருமணம் செய்து கொண்டு குடும்பத்தோடு வாழ நினைத்தால் அதற்கும் வேலை செய்யும் வளாகத்திலேயே ஏற்பாடு செய்து தரப்படும். எண்ணெய், பருப்பு, காய்கறி, உள்ளிட்ட வீட்டிற்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் காணிக்கையாகவே கிடைத்துவிடும். வாங்கும் சம்பளத்தைத் தொட வேண்டிய அவசியமில்லை. அதை அப்படியே தொடர் வைப்பில் (RD) போட்டுவரலாம்.

நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே வெளிப்பணிகள் செய்வதன் மூலம் மேலும் சில லட்சங்களை சம்பாதிக்க முடியும். இத்தகைய வேலைகளைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வேலை கொடுப்பவர்கள் வீடு தேடி  வருவார்கள். இத்தகைய கிராக்கி ஆண்டு முழுக்க உண்டு. இந்தியாவிலும் இத்தகைய வேலைகள் கிடைக்கின்றன. இங்கே ஆயிரங்களைத்தான் பார்க்க முடியும் ஆனால் வெளிநாடுகளில் லட்சங்களை எளிதில் தொட்டு விடலாம்.


அரசு நிறுவனங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் 'ஆன் டூட்டி ' கிடைக்காதா என ஏங்கும் ஊழியர்களின் புலம்பலைக் கேட்டிருக்கிறோம். ஆனால் அயல் நாட்டுக்கே அனாயசமாய் 'ஆன் டூட்டி' சென்று வரும் உச்சிக் குடுமிகளை பார்த்திருக்கிறீர்களா? எமக்குத் தெரிந்த ஒருவர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு ஒரு மாதம் சிங்கப்பூர் 'ஆன் டூட்டி' சென்று ஒரு லட்சத்தோடு திரும்பி வந்தார். உணவு போக்குவரத்து 'ஃப்ரீ'.

மணிஆட்டி மந்திரம் ஓதும் வேலைக்குத்தான் இத்தனை மவுசு. மற்றவர்களுக்குத் தகுதி இல்லை என்றாலும் ஐ.ஐ.டி வாய்ப்பை இழந்த உச்சிக் குடுமிகள் இதற்கு முயற்சி செய்யலாம்.
பொருளாதார நெருக்கடியும் புரோகிதர் தொழிலும்
பொருளாதார நெருக்கடிகள் அதிகரிக்க அதிகரிக்க இந்தத் தொழிலில் வேலை வாய்ப்பும் அதிகரிக்கிறதாம். பொருளாதார நெருக்கடியால் அமெரிக்கா உட்பட உலகம் முழுவதிலும் பல்வேறு தரப்பினர் வேலையிழந்து, வீடிழந்து வீதிக்கு விரட்டப்பட்டுள்ள நிலையில் அவர்கள்  கோவில்களுக்கு படை எடுப்பதாலும், பரிகாரம் தேடி சடங்குகள் சம்பிரதாயங்களை நாடுவதாலும் மந்திரம் ஓதும் தொழில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளதாக உலகப் பொருளாதார ஆய்வு மைய அறிக்கை கூறுகிறது.
உலகப் பொருளாதார நெருக்கடியால் ஒருபுறம் ஆலை மூடல்-ஆட்குறைப்பு நடக்கும் அதே வேலையில் மந்திரம் ஓதும் தொழிலுக்கு எப்போதும் ஆள் பற்றாக்குறைதான். அதனால்தான் பல் போன கிழங்களுக்குக்கூட ஏக கிராக்கி ஏற்பட்டுள்ளது.
மற்ற தொழில்களில் விருப்ப ஓய்வில் வீட்டுக்கு அனுப்பப்படும் போது மந்திரம் ஓதும் தொழிலில் மட்டும் ஓய்வே கிடையாது. சமீபத்தில் நண்பர் ஒருவரின் புதுமனை புகுவிழாவுக்கு நான் திருவண்ணாமலை சென்றிருந்த போது 76 வயது நிறைந்த முதியவர் மந்திரம் ஓதியதை பார்த்தபோது அது உண்மைதான் என்பது நிரூபணமானது. தள்ளாத வயதிலும் மடியில் தாள்கள் விழுகின்றனவே! இத்தொழிலில் எப்போதும் ‘ஆயிரம் பொன்’தான்.
புதிய பொருளாதாரக் கொள்கை, தாராள மயம், தனியார் மயம், உலக மயம் நீடிக்கும் வரை இந்தத் தொழிலும் செழித்தே வளரும்.
என்ன! நமக்குத்தான் கொடுத்து வைக்கவில்லை!
*****
தொடர்புடைய பதிவுகள்: