நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் அன்பு வணக்கம்!
கீழடியை உயர்த்திப் பிடிப்போம்!
வேத நாகரிகத்தைத் துரத்தியடிப்போம்!
இந்திய வரலாற்றைத் தென்னகத்திலிருந்து எழுதுவோம்!
என்கிறமுழக்கத்தின் கீழ், கடந்த ஆகஸ்ட் 22 அன்று தஞ்சையில் மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்திய “தமிழ் மக்கள் இசை விழா” மாபெரும் வெற்றி பெற்றது.
அந்தப் பெருவெற்றிக்கு முதன்மையான காரணம் — தோழர்களும், நண்பர்களும், பொதுமக்களும் தாராளமாக அள்ளிக் கொடுத்த நிதி ஆதரவுதான்.
தஞ்சை இசை விழாவுக்காக நாங்கள் உங்களிடம் நிதி கேட்டபோது, எங்கள் மீது கொண்ட பற்றோடும், நாங்கள் முன்னெடுக்கும் பணியின் மீது கொண்ட நம்பிக்கையோடும் நீங்கள் அளித்த ஒவ்வொரு ரூபாயும் அந்த விழாவின் வெற்றியில் பங்கெடுத்தது.
அதற்காக எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நண்பர்களே!
கீழடி என்பது வெறும் ஒரு தொல்லியல் தளம் அல்ல.
இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றை நாம் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற கேள்விக்கான ஒரு முக்கியமான திறவுகோல்.
அந்த வரலாற்றை ஆய்வு செய்வதும், பாதுகாப்பதும், மக்களிடம் கொண்டு செல்வதும் நமது வரலாற்றுக் கடமை.
ஆனால் கீழடி உள்ளிட்ட தமிழ்நாட்டின் தொல்லியல் ஆய்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டிய நிலையில், பல்வேறு காரணங்களால் அவை எதிர்கொள்ளும் தடைகள் கவலை அளிக்கின்றன.
எனவே,
ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ள கீழடி ஆய்வறிக்கையை உடனடியாக முழுமையாக வெளியிட வேண்டும்!
தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து நடத்தவும், தொல்லியல் தளங்களைப் பாதுகாக்கவும் தமிழ்நாடு அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்க வேண்டும்!
என்ற கோரிக்கைகளை
வலியுறுத்தி, வருகிற செப்டம்பர் 18 அன்று மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்தப் போராட்டம் வெற்றி பெற வேண்டும்.
மதுரையில் எழும் நமது குரல் ஒன்றிய–மாநில அரசுகளின் செவிகளை எட்ட வேண்டும்.
அதற்கு உங்கள் ஆதரவு தேவை.
உரிமையோடும் உணர்வோடும் ஒரு நிதி விண்ணப்பம்!
நண்பர்களே,
கடந்த 40 ஆண்டுகளாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தோடு நாங்கள் பயணித்து வருகிறோம்.
இந்த நாற்பது ஆண்டுகளில் எத்தனையோ களங்களைப் பார்த்திருக்கிறோம்.
இறால் பண்ணை அழிப்புப் போராட்டம்...
ஜெயா-சசி ஊழலுக்கு எதிராக தஞ்சை வினோதகன் மருத்துவமனை கைப்பற்றும் போராட்டம்…
வரலாற்று சிறப்புமிக்க திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம்...
தூத்துக்குடி தாது மணல் கொள்ளை எதிர்ப்பு...
தில்லையில் திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் பாடும் போராட்டம்...
அனைத்து சாதி அர்ச்சகர் போராட்டம்…
ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம்...
தாமிரபரணியைக் காக்க ‘கோக்’ எதிர்ப்புப் போராட்டம்...
திருவையாறு தியாகய்யர் உற்சவத்தில் தமிழ் இசையை இழிவுபடுத்தும் கொடுமைக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி, அதைத் தொடர்ந்து தஞ்சையில் நடைபெற்று வரும் தமிழ் மக்கள் இசை விழாக்கள்…
என மக்களின் உரிமைக்காக எண்ணற்ற களங்களில் நாங்கள் நின்றிருக்கிறோம்.
இந்தப் பயணத்தில் எங்களிடம் பெரிய பணபலமோ, அதிகார பலமோ இருந்ததில்லை.
எங்களுக்குப் பின்னால் இருந்தது மக்களின் நம்பிக்கையும், உழைக்கும் மக்களின் கரங்களும் மட்டுமே.
பேருந்துகளில் ஏறி...
கடைவீதிகளில் இறங்கி...
குடியிருப்புகளிலும் அலுவலகங்களிலும் சென்று...
“இந்தப் போராட்டத்திற்காக உதவுங்கள்” என்று நிதி கேட்டபோதெல்லாம்,
தங்களுடைய அன்றாட உழைப்பில் இருந்து மக்கள் தங்களால் இயன்றதை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள்.
அந்தச் சிறு சிறு பங்களிப்புகள்தான் எங்களுடைய போராட்டங்களுக்குப் பெரும் மூலதனமாக மாறியிருக்கின்றன.
அந்த நம்பிக்கையில்தான் இன்றும் உங்கள் முன் நிற்கிறோம்.
இந்த முறையும் உங்கள் உதவி தேவை!
தஞ்சை இசை விழாவிற்காக நாங்கள் நிதி கேட்டபோது தாராளமாக உதவிய நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் மீண்டும் எமது நன்றிகள்.
இப்போது மதுரை ஆர்ப்பாட்டத்திற்காக மீண்டும் நண்பர்களின் உதவியை நாடுகிறோம்.
தஞ்சை இசை விழாவிற்காக ஏற்கனவே நிதி வழங்கிய தோழர்களிடமும், நண்பர்களிடமும் மீண்டும் நாங்கள் நிதி கோரவில்லை.
மாறாக, அப்போது நிதி வழங்க முடியாமல் போன நண்பர்களும், தோழர்களும், ஆதரவாளர்களும் மட்டும் இந்த முறை தங்களால் இயன்ற சிறிய தொகையாக இருந்தாலும் வழங்கி, செப்டம்பர் 18 அன்று மதுரையில் நடைபெறும் இந்தப் போராட்டத்திற்கு வலு சேர்க்குமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மதுரையில் ஒலிக்கும் இந்தப் போராட்ட முழக்கம் ஒன்றிய–மாநில அரசுகளின் செவிகளை எட்ட வேண்டும். அந்த முழக்கத்தில் உங்கள் பங்களிப்பும் இருக்கட்டும்!
ஏனெனில்,
நாங்கள் களத்தில் நிற்பதற்கு உங்கள் ஆதரவு தேவை.
நாங்கள் எழுப்பும் குரல் தொலைதூரம் செல்வதற்கு உங்கள் உதவி தேவை.
நாங்கள் தொடர்ந்து பயணிப்பதற்கு உங்கள் நம்பிக்கை தேவை.
செப்டம்பர் 18 அன்று மதுரையில் ஒலிக்கும் போராட்ட முழக்கத்தில் உங்கள் பங்களிப்பும் இருக்கட்டும்!
நீங்கள் அளிக்க விரும்பும் நிதியை G-Pay மூலம் கீழ்கண்ட எமது கைபேசி எண்ணுக்கு அனுப்பி வைக்குமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
கைபேசி: 94861 05861 (r.Veerasamy, போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்)
தோழமையுடன்,
தமிழ்மணி @ பொன்.சேகர்

