எமது குடியிருப்பு வளாகத்தில் மக்களின் பயன்பாட்டில் இருந்த ஒரு பொது அடிபம்பை அழித்து, நகராட்சிக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து ஒரு கோயில் கட்டப்படுகிறது. அதே கோயிலில் குழாய் வடிவ ஒலிபெருக்கிகள் அமைத்து நரம்புகளை நொறுக்கும் ஒலிமாசை ஏற்படுத்துகிறார்கள். ஒன்றரை மாதப் பச்சிளம் குழந்தை அலறித் துடிக்கிறது; முதியோர்களின் உடல்நலனும் மனநலனும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.
இது "ஆன்மீகம்" என்ற போர்வையின் கீழ் சட்டத்தையும் பொது அமைதியையும் சீர்குலைக்கும் செயல் அன்றி வேறென்ன?
எம்மை அடிக்கடி அச்சுறுத்தும் ஆன்மீகக் குழாய்கள்
ஆக்கிரமிப்பும் அடிபம்பும்: நிலப்பறிப்பின் புதிய வடிவம்!
மக்கள் குடிநீருக்காகப் பயன்படுத்திய பொதுச்சொத்தை அழித்து வழிபாட்டுத் தலம் கட்டுவதுதான் ஆன்மீகமா?
மாண்புமிகு உச்ச நீதிமன்றம், "அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான பொது நிலங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள வழிபாட்டுத் தலங்களை உடனடியாக அகற்ற வேண்டும்" எனப் பல தீர்ப்புகளில் தெள்ளத்தெளிவாக உத்தரவிட்டுள்ளது. ஆனால், உள்ளாட்சி நிர்வாகமும் நகராட்சியும் இந்த ஆக்கிரமிப்புகளைக் கண்டுகொள்ளாமல் மௌனம் காப்பது, சட்டத்தின் ஆட்சிக்கே விடப்பட்ட சவாலாகும்.
குழாய் வடிவ ஒலிபெருக்கிகளும் பச்சிளங் குழந்தைகளின் அலறலும்!
குடியிருப்புப் பகுதிகளில், அதுவும் பொதுமக்களின் வீடுகளுக்கு மிக அருகில் சட்டவிரோதமான குழாய் வடிவ ஒலிபெருக்கிகளை அமைத்துத் தொடர்ச்சியாகக் கடுமையான ஒலிமாசை ஏற்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்?
மாண்புமிகு உச்ச நீதிமன்றம் (In Re: Noise Pollution case) மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் ஆகியவை குடியிருப்புப் பகுதிகளில் குழாய் வடிவ ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும் உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளன. ஒலிமாசு (கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை) விதிகள் 2000-ன் படி இரவு நேரங்களிலோ அல்லது குடியிருப்புப் பகுதிகளிலோ அனுமதியின்றி ஒலிபெருக்கி இயக்குவது முற்றிலும் சட்டவிரோதமானது.
இந்த உண்மைகளை நேரில் சென்று சுட்டிக்காட்டி முறையிட்டால், கோயில் நிர்வாகிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?
"நாங்கள் அப்படித்தான் செய்வோம், உன்னால் முடிந்ததைப் பார்!"
என்று திமிரோடு பேசுகிறார்கள். இதில் கொடூரம் என்னவென்றால், இந்த ஒலிபெருக்கிகளைக் கட்டிவைத்து அலறவிடும் நிர்வாகிகள் யாருமே அந்தக் கோயிலின் அருகில் வசிப்பதில்லை.
சட்டம்-ஒழுங்கைக் கையில் எடுக்கும் ஆன்மீகக் கும்பல்!
ஆன்மீகத் திருவிழாக்கள் மற்றும் வழிபாடுகள் என்ற பெயரில் காவல்துறையின் உரிய அனுமதியின்றி வீதிகளை மறிப்பதும், பொதுமக்களின் அமைதியான ஓய்வு நேரத்தையும் விடுமுறை நாட்களையும் பாழ்படுத்துவதும், கேள்வி கேட்கும் பொதுமக்களை "ஆன்மீக எதிரி" எனச் சித்தரித்து அச்சுறுத்துவதும், போக்குவரத்தை முடக்கி அவசர கால ஊர்திகள் கூட செல்ல முடியாதபடி இடையூறு செய்வதும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் இல்லையா?
இவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறையும், பொது இடத்தை மீட்க வேண்டிய நகராட்சி நிர்வாகமும் ஏன் பாராமுகமாக இருக்கின்றன? பயத்தின் காரணத்தினாலோ அல்லது வாக்கு வங்கி அரசியலின் காரணமாகவோ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தயங்குவது, இந்தச் சமூக விரோதிகளின் மமதையை மேலும் வளர்க்கவே செய்கிறது.
இத்தகைய அடாவடிகளைக் கண்டுதானோ என்னவோ,
"கோயிலாவதேதடா சாமியாவதேதடா… உள்ளமே கோயில்… இறைவனை உனக்குள் தேடு…"
என்று அன்றே சித்தர்கள் பாடினார்கள் போலும்?
தொகுப்பாக…
வாழ்க்கை குறித்த அச்சம்தான் ஆன்மீகத்திற்கான ஊற்றுக்கண். இந்த அச்சத்தில் இருந்து மீளுவதற்காகத்தான் இவர்கள் ஆன்மீகத்தை நாடுகிறார்கள்; அமைதியைத் தேடுகிறார்கள். ஆனால் இன்றைய ஆன்மீகமோ அடுத்தவர்களின் அமைதியை சீர்குலைக்கும் அராஜகமாகவே மாறி வருகிறது.
சட்டங்கள் ஏட்டில் மட்டும் இருந்தால் போதாது; ஆக்கிரமிப்புக் கோயில்களை அகற்றுவதிலும், சட்டவிரோத ஒலிபெருக்கிகளைப் பறிமுதல் செய்வதிலும், மிரட்டல் விடுக்கும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பதிலும் அரசு உடனடியாகச் செயல்பட வேண்டும். பொதுமக்களின் அமைதியான வாழ்வுரிமையை உறுதி செய்வதே ஒரு 'ஜனநாயக(ன்)' அரசின் தலையாயக் கடமையாகும்.
— ஊரான்
