Showing posts with label 100 நாள் வேலை எடப்பாடி அதிமுக பாஜக முருகன் கோயம்புத்தூர். Show all posts
Showing posts with label 100 நாள் வேலை எடப்பாடி அதிமுக பாஜக முருகன் கோயம்புத்தூர். Show all posts

Tuesday, 8 July 2025

நூறு நாள் வேலை! ஆள் பற்றாக்குறை! அல்லாடும் அரசியல் கட்சிகள்!

‘நூறு நாள் வேலை கிடைக்கவில்லையா,  கவலையை விடுங்கள், நான் தருகிறேன்' என்று நூறு நாள் வேலையை கோவை வடவள்ளியில் இன்று எடப்பாடி அவர்கள் திறந்தவெளி வேனில் நின்று கொண்டே தொடங்கி வைத்திருக்கிறார். 


இந்த நூறு நாள் வேலைத் திட்டத்தை, ஏற்கனவே மதுரை முருகன் மாநாட்டின் மூலமாக பாஜக தொடங்கி வைத்திருக்கிறது. திமுகவும் இந்த நூறு நாள் வேலைத் திட்டத்தில்தான் பயணிக்க வேண்டும். மற்ற கட்சிகளால் இந்த நூறு நாள் வேலைத் திட்டத்தை அமல்படுத்துவது சற்றே சிரமம்தான். 

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிகிற வரை இந்த நூறு நாள் வேலை தொடரும் என்பதனால் வரும் நாட்களில் இந்த வேலைக்கு ஆள் பற்றாக்குறை ஏற்படும் என அஞ்சப்படுகிறது. அச்சம் இருக்காதா பின்ன? ஒரே நாளில் ஒரே இடத்தில் வேலை செய்வதற்கு இரண்டு மூன்று கட்சிகள் முண்டியடித்தால் வேலைக்கு ஆள் கிடைப்பது குதிரைக் கொம்பாகி விடுமே?

இந்த வேலைத் திட்டத்தில் பங்கேற்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்றாலும், வேலை நடைபெறும் இடங்களில் அல்லக் 'கைகள்' நீளும் என்பதனால், அது இளம் பெண்களுக்கு  பாதுகாப்பற்றது என உளவுத்துறை  கருதுவதனால், நரைகண்ட ஔவைகளை மட்டுமே இந்த வேலைக்கு அழைத்துச் செல்லுமாறு காவல்துறை தரப்பிலிருந்து நூறு நாள் வேலைத் திட்ட ஏஜெண்டுகளுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். 

வேலை செய்வதற்காக ஆறு ஏரி குளங்களுக்கோ வாய்க்கா வரப்புகளுக்கோ, மண்வெட்டி கொடுவா அறுவா அன்னக்கூடை என எதுவும் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. 
இந்த வேலை பெரும்பாலும் நகரங்களில் விஸ்தீரனமான வீதிகளிலும் மைதானங்களிலும் நடைபெறும் என்பதனால்
கொஞ்சம் மினுமினுப்பாகவே செல்லலாம்.  'வாழ்க' என கோஷமிட்டு கைதட்ட வேண்டும். இதுதான் உங்கள் ஒரே வேலை.

நூறு நாள் வேலை நடைபெறும் இடத்திற்கும் நீங்களாகச் செல்ல வேண்டியதில்லை. அவர்களாக வந்து வாகனங்களில் அழைத்துச் செல்வார்கள். ஆனால் வேலை முடிந்து திரும்பும்போது சில மையங்களில் பிங்க் கலர் பஸ் வருவதற்காகக் காத்திருக்க வேண்டி நேரிடலாம். 

வேலையைத் தொடங்கி வைக்க விரைப்பான காலருடன் மினிஸ்டர் ஒயிட் முதலாளிமார்கள் மேடை ஏறுவார்கள். அவர்கள் மேடை ஏறி, எதற்காக இந்த நூறு நாள் வேலை என்பதைப் பற்றிக் கதைக்கத் தொடங்குவார்கள். அவர்கள் கதைத்துக் கொண்டிருக்கும் போதே, நீங்கள் நைசாக அந்த வளாகத்தில் இருந்து வெளியேறுவதற்கு வழியைத் தேட வேண்டும். அதற்கு ஏற்ப நீங்கள் எந்த லொகேஷனில் இருக்க வேண்டும் என்பது மிக மிக முக்கியம்.

இரண்டு மணி நேர வேலைக்காக ஒரு சோத்துப் பொட்டலத்துடன் 500 ரூபாய் வரை பேட்டாவும் கிடைக்கும். ஏஜெண்டுகளின் கருணை உள்ளத்தைப் பொறுத்து சோத்துப் பொட்டலம் சில சமயம் கலவை சாதத்தையும் தாண்டி  சிக்கன் பிரியாணியாகக்கூட  இருக்கக்கூடும்.

இன்று அவர்கள் கொடுக்கும் பொட்டலத்தை நீங்கள் மடியில் கட்டினால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர்கள் உங்களைப் பொட்டலம் கட்டுவார்கள்!

ஊரான்
08.07.2025