Showing posts with label apartments. Show all posts
Showing posts with label apartments. Show all posts

Friday, 17 May 2024

தீவட்டிப்பட்டிகளுக்குத் தீர்வே கிடையாதா?

நண்பர்களே! அன்பர்களே!

நாடெங்கிலும், குறிப்பாக தமிழ்நாட்டுக்கோவில்களில் வழிபாட்டு உரிமை கேட்டு சேரி மக்கள் குரல் கொடுக்கும் போது, அதற்கு எதிராக ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைகிறார்கள். சேரி மக்கள் உள்ளிட்ட அனைவருமே இந்துக்கள் என்றாலும் அவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க ஏன் மறுக்கிறார்கள்?
தீவட்டிப்பட்டி

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளிலும் (TNHB), அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் கட்டமைத்துள்ள நகரியப் (township) பகுதிகளிலும்,  நகரங்களில் ஓங்கி உயர்ந்த வளாக குடியிருப்புகளிலும் (apartments) ஊரிலிருந்தும் சேரியிலிருந்தும் வந்தவர்கள்தானே குடியிருக்கிறார்கள். அங்கு இது போன்ற வழிபாட்டுப் பிரச்சனைகள் பெரும்பாலும் வருவதில்லையே ஏன்?

கிராமப் பகுதிகளில், மனுதர்மம் வகுத்தளித்தபடி ஊரும் சேரியும் தனித்தனியாக அமைக்கப்பட்டிருக்கின்றன.  ஊரிலும் கூட பார்ப்பன அக்ரகாரம் தனியாகவும், பிற சாதியினர் தனித்தனி தெருவிலும் வசித்து வருகின்றனர்.

பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியாக படிநிலையில் தாங்கள் இருப்பதாகக் கருதும் வெள்ளாளர்கள் மேல வீதியிலும், இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர் அதற்குக் கீழான தெருக்களிலும்,  மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் அதற்கும் கீழே உள்ள தெருக்களிலும் வாழ்கின்றனர். பெரும்பாலும் இத்தகைய சாதியினர் அதாவது மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் - சேரியை ஒட்டியே வாழ்வதால் இந்தச் சாதியினருக்கும் சேரி மக்களுக்கும்தான் அதிகமாக மோதல்கள் நடக்கின்றன.

சேரிகளில் கூட படிநிலை சாதி அமைப்புக்கு ஏற்ப, மேலே தேவேந்திரகுல வேளாளர் தெரு, அடுத்து பறையர் தெரு, கீழே சக்கிலியர் தெரு என்றுதானே அமைந்துள்ளன. 

பெரு நகரங்களில்கூட இத்தகைய ஊர் சேரி அமைப்பு முறை இன்னும் சில நகரங்களில் இருக்கத்தான் செய்கின்றன.

புதிதாகக் கட்டமைக்கப்பட்ட குடியிருப்பு வளாகங்களில் வராத வழிபாட்டு உரிமைக்கான பிரச்சனைகள் கிராமப்புறங்களில் வருவதற்குக் காரணம் மேற்கண்ட கிராமப்புற கட்டமைப்புதான்.

எனவே, பார்ப்பனிய மனுதர்மம் வகுத்தளித்த  ஊர்-சேரி கட்டமைப்பை முற்றிலுமாக சிதைத்து விட்டு (demolish), புதிய குடியிருப்பு வளாகங்களை உருவாக்கி, அதில் குலுக்கல் முறையில் அனைவருக்கும் வீடு வழங்குவது ஒன்றுதான் இந்தப் பிரச்சனைக்கு உடனடித் தீர்வாக இருக்க முடியும். 

கலைஞரின் சமத்துவபுரம் இதற்கான ஒரு முன்னோடித் திட்டம் என்றால் அது மிகை அல்ல. இனி ஊரும்-சேரியும் சிதைக்கப்பட்டு  தமிழ்நாடே புதிய சமத்துவபுரங்களாக மாறும்போது மட்டும்தான் வழிபாட்டு உரிமைக்கான மோதல்களும் முடிவை நோக்கி நகரும்.

ஊரான்