Sunday, 19 March 2023

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-5

V

ஹர்ஷத் மேத்தா

தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற பெயரில் இந்தியச் சந்தையை உலகச் சந்தைக்கு திறந்துவிட்ட 1990-களின் காலகட்டத்தில், ஹர்சத் மேத்தா என்கிற பங்குச் சந்தைத் தரகரின், பங்குச் சந்தை மோசடி இந்திய முதலீட்டாளர்களை நிலைகுலையச் செய்தது. முறைகேடுகளில் ஈடுபட்ட ஹர்சத் மேத்தா மீதான 23 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட ஹர்சத் மேத்தா அங்கேயே மாண்டு போனார். ஆனால் பங்குச் சந்தையில் முதலீடு செய்த பலர் தங்களுடைய சுமார் ரூ.3542 கோடி மதிப்பிலான சொத்தை இழந்து நடைபிணமாய் வீதியில் வீசப்பட்டனர்.

விஜய் மல்லய்யா

எப்பொழுதும் அழகிகளோடு ஆட்டம் போடும் பிரபல கிங்பிஷர் சாராய அதிபரும், யுனைட்டடு பிரீவரீஸ் நிறுவனத்தின் முதலாளியுமான விஜய் மல்லய்யாவை அறியாதோர் உண்டோ? சாராயத் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டே, 2005 ஆம் ஆண்டு வாக்கில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் என்ற பெயரில் ஒரு விமான சேவை நிறுவனத்தைத் தொடங்குகிறார். அதற்காக பொதுத்துறை வங்கிகளிடமிருந்து பலகோடி ரூபாயைக் கடனாகப் பெறுகிறார். ஆனால் அடுத்த மூன்று ஆண்டுகளிலேயே போதிய வருவாய் இல்லை என்கிற காரணத்தைக் காட்டி கிங்பிஷர் ஏர்லைன் நிறுவனத்தை இழுத்து மூடுகிறார். கடன் கொடுத்தவர்கள் கடனைத் திருப்பி அடைக்க நெருக்குதல் கொடுத்த போது, 2016 மார்ச் 6 அன்று இந்தியாவைவிட்டு தப்பிஓடி இங்கிலாந்தில் அடைக்கலமாகிறார்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), பஞ்சாப் நேஷனல் பேங்க் (PNB), ஐடிபிஐ (IDBI), பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட 17 பொதுத்துறை வங்கிகளிடமிருந்து அவர் கடனாகப் பெற்ற சுமார் ரூ.9000 கோடியில் ஒருபைசாவைக்கூட இன்றுவரை திரும்பப் பெறமுடியவில்லை. உண்மையில் விஜய் மல்லய்யா ஏப்பம் விட்ட இந்தியாவின் சொத்து மதிப்பு ரூ.30000 கோடி என்கிறது ஒரு புள்ளி விவரம். இதில் வேடிக்கை என்னவென்றால், ஊழலை ஒழிப்பதற்காகவே அவதாரம் எடுத்ததாகக் கூப்பாடு போடும் மோடியால் இன்றுவரை இங்கிலாந்தில் சல்லாபமாக வாழ்ந்து வரும் மல்லய்யாவின் ஒரு மயிரைக்கூடத் தொடமுடியவில்லை.

கைலாசா

முதலாளிகள் மட்டுமல்ல சாமியார்கள்கூட இந்தியப் பணத்தைச் சுருட்டிக் கொண்டு வெளிநாடுகளுக்கு ஓட்டம் பிடித்து சல்லாபமாய் கூத்தடிக்கின்றனர் என்பதை நித்தியானந்தா நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.  பலஆயிரம் கோடி சொத்துக்களோடும் சில நூறு அழகிகளோடும் ஒருவன் இந்தியாவைவிட்டு ஓடுவது மோடி கூட்டத்திற்குத் தெரியாதா என்ன? பாகிஸ்தான் எல்லையில் அந்நாட்டு இராணுவக்காரன் ஒருவன் விடும் குசுவைக்கூட மோப்பம் பிடிக்கத் தெரிந்த நமது புலாய்வுப் புலிகளுக்கு நித்தியானந்தா எங்கிருக்கிறான் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லையாம்!  ஐ.நா சபையிலேயே கைலாசா சார்பாக பேச முடிகிறது என்றால் நாம் எத்தகைய கேணயர்கள் என்பதை நாம்தான் உணர வேண்டும். நித்தியானந்தா வெறும் கோவணத்தோடு ஓடியிருந்தால் யாரும் பொருட்படுத்தப் போவதில்லை. அவன் இந்தியாவின் சொத்துக்களை அள்ளிச் சென்றிருக்கிறான் என்பதற்காகத்தான் நாம் கவலைப்பட வேண்டி உள்ளது. இந்த வரிசையில் அடுத்து இந்தியாவை விட்டு ஓடக்கூடியவன் ஜக்கியா அல்லது பதஞ்சலி இராம்தேவா என்பது நமக்குத் தெரியாது.

ஆலைகளை அமைத்து தொழில் செய்யும் ஒரு சில  முதலாளிகள் சில லட்சம் ரூபாய்களை சம்பாதிப்பதற்கே அல்லாடும் போது, வெறும் கோவணத்தைக் காட்டியே இவர்களால் பல ஆயிரம் கோடிகளைச் சுருட்ட முடிகிறது என்றால், அது அவர்களின் திறமையினாலா அல்லது நமது இளிச்சவாய்த் தனத்தினாலா? சிந்திக்க வேண்டும். 

தொடரும்...... 

பொன்.சேகர்

(குறிப்பு: ஹிண்டன்பர்க் அறிக்கையையொட்டி அதானி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக, 10.03.2023 அன்று காலை 10 மணி அளவில்,  எல்ஐசி அலுவலகத்திற்கு முன்பாக இராணிப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நான் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட  கட்டுரைத் தொடர் இது).

தொடர்புடைய பதிவுகள்

Saturday, 18 March 2023

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-4

IV

ல்லுளி மங்கன் மோடி

ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை அனைத்தும் பொய்யானவை, இட்டுக்கட்டப்பட்டவை, உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டவை என 413 பக்க அளவில் தனது மறுப்பு அறிக்கையை அதானி குழுமம் வெளியிட்ட போதிலும், அதானியின் சொத்து மதிப்பு கிடுகிடுவென சரிந்து ரூ.46 000 கோடி அளவுக்கு வீழ்ச்சி அடைந்ததால் உலகின் மூன்றாவது இடத்தில் இருந்த அதானி குழுமம் ஏழாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது.

முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்ததோடு ஆயிரக்கணக்கான ஆவணங்கள் மற்றும் ஆறு நாடுகளுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்து வெளியிடப்பட்ட ஹிண்டன்பர்க் அறிக்கை மீது பலரும் மௌனம் காத்த போதும்,

“எத்தனை முறை நீங்கள் கௌதம் அதானியுடன் பயணத்திருக்கிறீர்?  எத்தனை முறை அவரை சந்தித்திருக்கிறீர்? ஹிண்டன்பர்க் அறிக்கை மீது ஏன் விசாரணை நடத்த உத்தரவிடவில்லை? விமான நிலையங்கள், சிமெண்ட், சூரியஒளி மின்ஆலைகள், காற்றாலைகள், பாதுகாப்பு, நுகர்பொருள், நிதி, தகவல் தொடர்பு, துறைமுகங்கள் உள்ளிட்ட எண்ணற்ற துறைகளில் அதானியால் எப்படி கோலோச்ச முடிகிறது? 2014 இல் ரூ.10 லட்சம் கோடியாக இருந்த அதானியின் சொத்து மதிப்பு மூன்றே ஆண்டுகளில் எப்படி ரூ.18 லட்சம் கோடியாக உயர்ந்தது?”

உள்ளிட்ட 18 குற்றச்சாட்டுகளை 07.02.2023 அன்று நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில் மோடியின் முகத்தைப் பார்த்து நேரடியாகவேக் கேட்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி. வழக்கம் போலவே ஒரு நமட்டுச் சிரிப்புடன், தான் ஒரு கல்லுளி மங்கன்தான் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார் திருவாளர் மோடி.

செவிடன் காதில் சங்கு ஊதுவதால் பயன் ஏதும் இல்லை என்பதை உணர்ந்ததாலோ என்னவோ,

"ஒரு தனிமனிதன் இரண்டு ஆண்டுகளில் இந்தியாவையே கடத்திச் சென்றிருக்கிறான், பூதாகரமாக ஊதிப் பெருக்கிக் காட்டப்பட்டுள்ள அதானியின் பங்குகள், ஒரு நீர்க்குமிழி போல விரைவிலேயே வெடித்துச் சிதறும் எனவும், ஆயுள் காப்பீடு நிறுவனம் மற்றும் இந்திய ஸ்டேட் வங்கிகள் முன்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்" எனவும் பாரத் ஜோடோ யாத்ராவில் அறிவித்துதிருக்கிறார் இராகுல் காந்தி. மாநிலங்களவையிலும் இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் சார்பாக 10 முறை நோட்டீஸ் கொடுத்தும் சபாநாயகர் அதற்கு அனுமதி வழங்கவில்லை. 

நாடாளுமன்றக் கூட்டுக்குழு ஒன்றை அமைத்தோ அல்லது உச்சநீதி மன்றத்தின் மேற்பார்வையில் விசாரணைக்குழு ஒன்றை அமைத்தோ ஹிண்டன்பர்க் அறிக்கை மீதான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்த நிலையில், நாடாளுமன்றக் கூட்டுக்குழுவை உடனே அமைக்க வேண்டும் என 14.03.2023 அன்று காங்கிரஸ், திமுக, சமாஜ்சாதி, கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட 16 எதிர்கட்சிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தியும் வருகின்றன.

பங்குச் சந்தையைக் கண்காணிப்பதற்காகச் செயல்படும் செபி (SEBI) என்கிற அமைப்பு இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகக்கூறி, எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு செவிமடுக்க மறுக்கிறது மோடி அரசு. செபிக்குத் தெரியாமலேயா அல்லது வருவாய் புலனாய்வு இயக்குநரகத்துக்குத் (DRI) தெரியாமலேயா இத்தகைய ஊழல் நடந்திருக்க முடியும்?

தொடரும்.... 

பொன்.சேகர்

(குறிப்பு: ஹிண்டன்பர்க் அறிக்கையையொட்டி அதானி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக, 10.03.2023 அன்று காலை 10 மணி அளவில்,  எல்ஐசி அலுவலகத்திற்கு முன்பாக இராணிப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நான் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட  கட்டுரைத் தொடர் இது).

தொடர்புடைய பதிவுகள்

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-3

Friday, 17 March 2023

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-3

 III

மன்ஹாட்டன் மடோஃப் வழியில் அதானி

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வர்த்தகம் மற்றும் நிதி ஆதார மையமாக விளங்கும் மன்ஹாட்டன் (manhatten) என்கிற பகுதியைச் சேர்ந்த பெர்னார்டு லாரன்ஸ் மடோஃப் (Madoff) என்பவன் 64.8 பில்லியன் டாலர் (இன்றைய இந்திய மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் கோடி) ஃபோன்சி (ponzi) முறைகேட்டுக்குப் பெயர் போன ஒரு நிதி மோசடிக்காரன். புதிய முதலீட்டார்களிடமிருந்து பணத்தைக் கவர்ந்து பழைய முதலீட்டாளர்களுக்கு லாபமாகத் தரும் ஒரு ஏமாற்று முறைக்குப் பெயர்தான் ஃபோன்சி முறைகேடு என்று சொல்லுவார்கள்.

அதானிக்கும் மடோஃபிதான் வழிகாட்டி போல. அதனால்தான் அதானி சொத்துக் குவிப்பு குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட ஹிண்டன்பர்க் நிறுவனம் தனது ஆய்வறிக்கையை மன்ஹாட்டனின் அடோஃப்ஸ் (adoff’s of manhattan) என்ற பெயரில்தான் வெளியிட்டது. கார்ப்பரேட் உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய முறைகேட்டை, உலகின் மூன்றாவது பெரிய பணக்காரனான அதானி குழும் எப்படிச் செய்துள்ளது என்பதை விளக்கி 88 கேள்விக் கணைகளோடு ஹிண்டன்பர்க் நிறுவனம் தனது ஆய்வறிக்கையை 24.01.2023 அன்று வெளியிட்டது.

அதானி மீதான குற்றச்சாட்டுகள்

மூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை அதானியின் சொத்து மதிப்பு ரூ.9.70 லட்சம் கோடி. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் அதன் சொத்து மதிப்பு மேலும் ரூ.8.10 லட்சம் கோடி அதிகரித்து 2022 இறுதியில் மொத்த சொத்து மதிப்பு ரூ.17.80 லட்சம் கோடியாக உயர்ந்தது. இதில் பாதிதான் அதானியினுடையது. மீதி பாதி வங்கிகளிலிருந்து பெறப்பட்ட கடன். கிட்டத்தட்ட ரூ.9 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளிடமிருந்து திரட்டப்பட்டது என கூறப்படுகிறது. ஆனால் இதை வங்கியின் பணமாகக் காண்பிக்காமல் தனது சொத்தாகக் காட்டுகிறது அதானி குழுமம்.

அதனால்தானோ என்னவா வங்கிகளிடமிருந்து அதானி பெற்றுள்ள கடன் விவரங்களை வெளியிட முடியாது என 13.03.2023 அன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளாரோ?  அதானி குழுமம் கடனால் வளர்ந்த நிறுவனம் என்கிற ஹிண்டன்பர்க் அறிக்கை முன்வைக்கும் குற்றச்சாட்டை ஒதுக்கிவிட முடியாது என்பதைத்தான் நிர்மலா சீத்தாராமனின் பதில் நமக்கு உணர்த்துகிறது. என்னதான் முந்தானையைக் கொண்டு மூடி மறைக்க முயன்றாலும் அதானிக்கு ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (LIC) கொடுத்துள்ள ரூ.74000 கோடியும், இந்திய ஸ்டேட் வங்கி (SBI) கொடுத்துள்ள ரூ.21320 கோடியும் முந்தானையின் கிழிசலுக்கிடையில் துருத்திக் கொண்டு வெளியே தெரியத்தானே செய்கிறது.


பெரிய அளவில் உற்பத்தியில் ஈடுபடாமலேயே இவ்வளவு சொத்துக்களை அதானியால் சேர்க்க முடிந்ததற்குக் காரணம் அது ஒரு பங்குச் சந்தை நிறுவனமாகச் செயல்படுவதால்தான். 75% பங்குகள் அதானி குழுமத்தின் பெயரிலும் மீதி 25% பங்குகள் பொது மக்கள் பெயரிலும் இருப்பது போலக் கணக்குக் காட்டி ஏய்ப்பது ஒரு வகை. இதற்காக சிங்கப்பூர், மொரீசியஸ், கரீபியன் தீவுகள் (மேற்கு இந்தியத் தீவுகள்), சைப்ரஸ், ஐக்கிய அரபு எமிரேட் என பல்வேறு நாடுகளில் பினாமி பெயரில் அதானிக்குச் சொந்தமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பினாமி நிறுவனங்களின் பெயரில் அதானி குழுமத்தின் பங்குகளை வாங்குவதோடு கருப்புப் பணத்தை வெள்ளையாகவும் மாற்றுகின்றனர். எடுத்துக்காட்டாக ரூ.1 கோடி மதிப்புள்ள ஒரு பொருளை அல்லது எந்திரத்தை ரூ.10 கோடியாக மதிப்பைக் கூட்டி அந்த பினாமி நிறுவனங்கள் மூலம் இந்தியாவுக்கு விற்பனை செய்வதன் மூலம் ரூ.9 கோடியை வெள்ளையாக மாற்றி அந்தப் பினாமி நிறுவனத்திற்கே அத்தொகை செல்வதால் அதானியின் பங்கு மதிப்பு மேலும் அதிகரிக்கிறது.  

22 இயக்குநர்களில் கௌதம் அதானிதான் மிகமுக்கிய நபர் என்றாலும் இவருடைய அண்ணன் வினோத் அதானி, தம்பி ராஜேஷ் அதானி, மைத்துனர் சமீர் ஹோரா உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் இதில் இயக்குநர்களாக இருப்பதால் அதானி குழுமம் ஒரு குடும்ப நிறுவனமாகவே செயல்பட்டு வருகிறது.

அதே வேளையில் சட்டவிரோதமாக இரும்புத் தாது மற்றும் நிலக்கரி இறக்குமதி, வைர வர்த்தகத்தில் சுங்க வரி ஏய்ப்பு உள்ளிட்ட எண்ணற்ற குற்றவழக்குகள் இவர்கள் மீது நிலுவையில் இருக்கும் போது இவர்கள் எப்படி அதானி குழுமத்தில் இயக்குநர்களாக பதவி வகிக்க முடிகிறது? அயல்நாடுகளில் உள்ள அதானியின் பினாமி நிறுவனங்களின் பெயரில் உள்ள பல லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் அந்த நிறுவனங்களுக்கு எப்படி வந்தது? என அடுக்கடுக்காக 88 கேள்விகளை எழுப்புகிறது ஹிண்டன்பார்க் ஆய்வறிக்கை.

தொடரும்.... 

பொன்.சேகர்

(குறிப்பு: ஹிண்டன்பர்க் அறிக்கையையொட்டி அதானி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக, 10.03.2023 அன்று காலை 10 மணி அளவில்,  எல்ஐசி அலுவலகத்திற்கு முன்பாக இராணிப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நான் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட  கட்டுரைத் தொடர் இது).

தொடர்புடைய பதிவுகள்

Thursday, 16 March 2023

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-2

 II

நிகோலா

இலாபம் ஒன்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் பெருநிறுவனங்களாலும், பொறுப்பற்ற அரசுகளாலும், நீர்-நிலம்-காற்று என அனைத்தும் பாழாகி, மக்கள் வாழ முடியாத நிலைக்கு இப்புவிப் பரப்பு மாசடைந்துவிட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இனம்புரியாத பல்வேறு புதுப்புது நோய்களுக்கு ஆட்பட்டு அவதியுறுவதோடு, பலர் அன்றாடம் மாண்டும் வருகின்றனர். வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையும், சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறதுதானே!

ஒருபுறம், புவி மாசடைவதைத் தடுக்கத் தமிழகத்தில் செயல்படும் பூவுலகின் நண்பர்களைப் போல உலகமெங்கும் எண்ணற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தோன்றிய வண்ணம் உள்ளனர். மற்றொருபுறம், நச்சுப் புகையை வெளியேற்றாத வாகனங்களைத் தாங்கள் வடிவமைத்துள்ளதாகவும், நச்சுப் புகையை வெளியிடாத இயற்கை எரிபொருளை கண்டுபிடித்து விட்டதாகவும் சிலர் கூறுவதை நாம் அவ்வப்பொழுது கேட்டுக் கொண்டுதான் வருகிறோம். இந்த வழியில் பிரபலமாகப் பேசப்பட்ட இராமர் பிள்ளையின் மூலிகைப் பெட்ரோல் என்னவாயிற்று என்று இதுவரை தெரியவில்லை.

முன்பு ‘நிகோலா மோட்டார்ஸ்’ (Nikola Motors) என்று அறியப்பட்ட, ட்ரீவர் மில்டன் என்பவரைத் தலைவராகக் கொண்ட, அமெரிக்காவைச் சேர்ந்த நிகோலா (Nikola Corporation) என்கிற ஒரு நிறுவனம் நச்சுப்புகையைக் கக்காத (zero emission) ‘லித்தியம் பேட்டரி’ மற்றும் ‘ஹைட்ரஜன் செல்’லில் இயங்கும் வாகனத்தை வடிவமைத்துள்ளதாகக் கூறி, டிரக் வகையைச் சார்ந்த ஒரு மோட்டார் வாகனம் சாலையில் ஓடும் வீடியோவை 2020 ஆம் ஆண்டு மத்தியில் வெளியிட்டது. அதைத் தொடர்ந்து அத்தகைய வாகனங்கள் எதுவும் உற்பத்தி செய்யப்பட்டு சந்தைக்கு வராத போதிலும், நிகோலா நிறுவனத்தின பங்குகள் உச்சத்தைத் தொட்டன. அதைத் தொடர்ந்து பிரபல ஜெனரல் மோட்டார் (GM) நிறுவனமும் நிகோலாவுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது.

நிகோலா நிறுவனம் வடிவமைத்ததாகச் சொல்லப்படும் டிரக், லித்தியம் மற்றும் ஹைட்ரஜன் செல்லில் ஓடவில்லை, மாறாக அது சாய்வான மலைப் பாதையில் தானாக ஓடுவதாகவும், ஒரு டஜன் பொய்களைச் சொல்லி நிகோலா நிறுவனம் மக்களை ஏமாற்றுவதாகவும் கூறி, 21.09.2020 அன்று ஹிண்டன்பர்க் தனது ஆய்வறிக்கையை வெளியிட்ட அடுத்த சில நாட்களில், நிகோலா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 30% அளவுக்கு மளமளவென சரிந்தது. இதைத் தொடர்ந்து ஜெனரல் மோட்டார்ஸ் (GM) நிறுவனமும் நிகோலாவுடனான ஒப்பந்தத்தை இரத்து செய்துவிட்டது.

க்ளோவர் ஹெல்த்

மருத்துவம் மற்றும் காப்பீடு தொடர்பான தொழிலில் ஈடுபட்டு வரும் மற்றொரு அமெரிக்க நிறுவனமான க்ளோவர் ஹெல்த் (Clover Health) என்ற நிறுவனம் முதலீட்டார்களை தவறாக வழிநடத்தி சொத்துக் குவித்து வருதாக அந்த நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஹிண்டன்பர்க் தனது ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்ட பிறகு க்ளோவர் ஹெல்த் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 12.3% சரிவைக் கண்டது.

மேற்கண்ட இரு நிறுவனங்கள் மட்டுமன்றி, 2017 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் சுமார் 30 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் மோசடிகளை ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அம்பலப்படுத்தி அறிக்கை வெளியிட்டிருந்தாலும், இந்தியாவைப் பொருத்தவரை 2023, ஜனவரி 27 ஆம் தேதிவரை பலருக்கும் ஹிண்டன்பர்க் என்றால் என்னவென்றே தெரியாது.

அதானி

மோடி ஆட்சிக்கு வரும் வரை இந்தியாவைப் பொருத்தவரை டாடா-பிர்லா என்கிற இரு பெருமுதலாளிகளைத்தான் நாம் அறிவோம். 1857 ல் தொடங்கப்பட்ட பிர்லா நிறுவனம் சிமெண்ட், ஜவுளி மற்றும் இரசாயணம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களிலும், 1868 ல் தொடங்கப்பட்ட டாடா நிறுவனம் ஜவுளி, இரும்பு, நீர் மின் நிலையங்கள், மோட்டார் வாகனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றன.

அதன் பிறகு கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் கழித்து 1966 ல் தொடங்கப்பட்ட அம்பானி மற்றும் 1988 ல் தொடங்கப்பட்ட அதானி ஆகிய இரு நிறுவனங்களும் முதலில் பலருக்கும் பரிச்சயமில்லாத நிறுவனங்களாக இருந்து வந்தன. இவர்களைத்தவிர கோத்ரெஜ், பஜாஜ், மித்தல், ஜிண்டால் என பல்வேறு முதலாளிகளும் இந்தியாவில் இருக்கத்தான் செய்கின்றனர்.

ஆனால், இன்று குறிப்பாக மோடி பிரதமராக வந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு பெட்ரோலியம், ஜவுளி, இரசாயணம், துறைமுகங்கள், மின்சாரம் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் அம்பானி மற்றும் அதானி ஆகிய இருவர் மட்டுமே கொடிகட்டிப் பறக்கின்றனர். அதிலும் குறிப்பாக அதானி கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் முதல் பணக்கார முதலாளியாகவும் உலகின் மூன்றாவது பெரிய பணக்கார முதலாளியாகவும் வளர்ந்து நிற்கிறார்.  இது எப்படிச் சாத்தியமானது?


நேற்றுவரை ஒரு சாதாரண அரசியல்வாதியாக இருந்த நம்ம ஊர் பிரமுகர் ஒருவர் திடீரென சில லட்சங்களைச் சேர்த்துவிட்டால் உடனே நாம் கொந்தளிக்கிறோம். அதுவும் அவர் மாற்றுக் கட்சிக்காரர் எனில் வறுத்தெடுத்து விடுகிறோம். இலஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டால் மட்டுமே ஒருவன் திடீர் பணக்காரனாக வளரமுடியும் என்பது நாம் அறிந்த பால பாடம்.

அரசியல்வாதிகள் மக்களோடு சேர்ந்து வாழ்வதாலும் பழகுவதாலும் அவர்கள் எப்படிச் சொத்து சேர்த்தார்கள் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் பெரு முதலாளிகளுக்கும் மக்களுக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லாததால், பெருமுதலாளிகள் எப்படிச் சொத்து சேர்த்தார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளவதற்கான வாய்ப்பும் இல்லை அல்லது தெரிந்து கொள்வதற்கு நாம் முயற்சிப்பதும் இல்லை.

அதனால்தான், அதானி எப்படி உலகின் மூன்றாவது பணக்காரனாக வளர முடிந்தது என்பதை அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவன் வந்து நமக்குப் புரிய வைக்க வேண்டி உள்ளது. இதற்காக நாம் வெட்கப்படத்தானே வேண்டும்.

தொடரும்...

பொன்.சேகர்

(குறிப்பு: ஹிண்டன்பர்க் அறிக்கையையொட்டி அதானி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக, 10.03.2023 அன்று காலை 10 மணி அளவில்,  எல்ஐசி அலுவலகத்திற்கு முன்பாக இராணிப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நான் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட  கட்டுரைத் தொடர் இது).

தொடர்புடைய பதிவுகள்


Wednesday, 15 March 2023

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி!

 I

ஹிண்டன்பர்க்

1937, மே மாதம் 3 ம் தேதி மாலை 7.36 மணிக்கு ஜெர்மனியின் ஃபிராங்க்பர்ட் நகரிலிருந்து புறப்படுகிறது அந்த வான்கப்பல். ஹைட்ரஜன் வாயுவால் நிரப்பட்ட அந்த வான்கப்பல் 97 பேரைச் சுமந்து கொண்டு அட்லாண்டிக் பெருங்கடலின் மேலே அமெரிக்காவை நோக்கி வானில் சிறகடித்துச் செல்கிறது.

கடல் வழியாகப் பயணம் செய்யும் நேரத்தைவிட பாதி நேரத்தில் வான்வழியாகப் பயணம் செய்தால் அமெரிக்காவை அடைந்துவிட முடியும் என்பதாலும், பியானோ இசையின் மயக்கத்தில், அறுசுவை உணவோடு, சிகரெட் வளையங்களை இரசித்தவாறு வான்கப்பலில் பயணிப்பதென்றால் அந்தக் காலத்தில் யாருக்குத்தான் பிடிக்காது.

மே மாதம் 6 ம் தேதி காலை 6.00 மணிக்குத் தரை இறங்க வேண்டிய அந்த வான்கப்பல், மோசமான வாநிலை காரணமாக, மாலை 6.00 மணிக்குத் தரை இறங்குவது எனத் திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது. தரை இறங்க வேண்டிய நியூயார்க் நகரின்மேல் மாலை 3 மணி அளவில் வட்டமடிக்கிறது அந்த வான்கப்பல்.

ஆனால் தரை இறங்குவதற்கு முன்பாகவே, ஹைட்ரஜன் வாயுக் கசிவால் அந்த வான்கப்பலில் தீவிபத்து ஏற்படுகிறது. வான்கப்பல் தீப்பற்றி எறிவதைக் கண்ட சிலர் வான்கப்பலிலிருந்து குதித்து உயிர் பிழைக்கின்றனர். 35 பேர் வான்கப்பலோடு தீயில் கருகி மாண்டு போயினர். ஹைட்ரஜன் வாயுவால் இயக்கப்பட்டு வந்த வான்கப்பல் பயணம் அத்தோடு முடிவுக்கு வருகிறது.

அந்த வான்கப்பலுக்கு ஹிட்லரின் பெயரைச் சூட்ட வேண்டும் என்கிற கோயபல்ஸின் கோரிக்கை ஏற்கப்படாததால், ஜெர்மனியின் முன்னாள் அதிபர்களில் ஒருவரான பால் வான் ஹிண்டன்பர்க் என்பவரின் நினைவாக “ஹிண்டன்பர்க்” என்று அந்த வான்கப்பலுக்குப் பெயரிடப்படுகிறது. வான்கப்பல் வரலாற்றில் ஹிண்டன்பர்க் விபத்து ஒரு கோர விபத்து என்பதால் அது வரலாற்றில் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது.

கல்வெட்டுகளும், ஏடுகளும் வரலாறுகளை சுமந்த அன்றைய காலமானாலும், வான் அலைகளின் மூலம் தாவி வரும் இன்றைய டிஜிட்டல் காலமானாலும், யாரோ ஒரு சிலர் வரலாற்றை நினைவூட்டும்போதுதான் அவை மக்களிடையே எடுத்துச் செல்லப்படுகின்றன.

உலகெங்கிலும் செயல்படக்கூடிய பல்வேறு நிறுவனங்களின் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகளை ஆய்வு செய்வதற்கென, அமெரிக்காவைச் சேர்ந்த நாதன் ஆண்டர்சன் என்பவர் 2017 ம் ஆண்டு, தான் தொடங்கிய ஒரு நிதி ஆய்வு நிறுவனத்திற்கு ஹிண்டன்பர்க் என பெயரிட்டபோது, ஹிண்டன்பர்க் வான்கப்பலும் அந்தக்கோர விபத்தும் நம் கண்முன் தோன்றத்தானே செய்கிறது.

ஹைட்ரஜன் வாயுவால் இயக்கப்பட்டு வந்த வான் கப்பல் பயணத்தை ஹிண்டன்பர்க் கோர விபத்து முடிவுக்குக் கொண்டு வந்ததைப் போல, நிதி மோசடிகளில் ஈடுபடும் நிறுவனங்களின் செயல்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டு தனது ஆய்வு நிறுவனத்திற்கு ஒருவேளை ஹிண்டன்பர்க் என்கிற பெயர் பொருத்தமாக இருக்கும் என்பதால் ஆண்டர்சன் தனது நிறுவனத்திற்கு ஹிண்டன்பர்க் என பெயரிட்டிருக்கக் கூடும்.

தொடரும்

பொன்.சேகர்

(குறிப்பு: ஹிண்டன்பர்க் அறிக்கையையொட்டி அதானி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக, 10.03.2023 அன்று காலை 10 மணி அளவில்,  எல்ஐசி அலுவலகத்திற்கு முன்பாக இராணிப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நான் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட  கட்டுரைத் தொடர் இது).