உறவினர் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என பிற்பகல் ஒன்றரை மணிக்குப்
பேசிக் கொண்டோம். இரண்டரை மணிக்கு நகரப் பேருந்து வந்து விடும். அரை கிலோ
மீட்டர் தூரத்தில் பேருந்து நிறுத்தம். காலையிலிருந்து தோட்ட
வேலை செய்ததால் குளித்து, பின் உடைமாற்றி பகல் உணவையும் முடித்தபிறகு, நகரப் பேருந்தைப் பிடிப்பது குதிரைக் கொம்புதான் என்பது தெரிந்தும் முயற்சியை
மட்டும் கைவிடவில்லை.
அடிக்கடி இருசக்கர வாகனங்கள் செல்லும் வரப்புப் பாதை, சற்றே கீழ்அழுந்தி 'U'-வாகி குறுகி
விட்டதால், கால் இடறாமல் நடந்து கடப்பது எளிதல்ல. ஐந்து வரப்புகளைக் கடந்து நெடுஞ்சாலைக்கு வந்தோம். பேருந்தைப் பிடிக்கும் முயற்சி பயனற்றுப் போனதால் பங்கு தானியில் கெஜல்நாயக்கன்பட்டி
சென்றடைந்தோம்.
அன்றாடம் அலைபேசியில் நலம் விசாரிக்கும், எழுபதைக் கடந்த அன்புத்
தோழர் ஒருவரை எதிர்பாராத விதமாக அங்கு சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. பிரதிபலன் எதுவும் எதிர்பார்க்காத
தோழமைகளையும், நட்புகளையும்,
உறவுகளையும் சந்திக்கும் போது எழும் குதூகலம் என்னுள்ளும் எழுந்தது.
கோப்புப் படம்
இப்படி ஊர்கள்கூட நம் உள்ளத்தில் இடம்பிடித்து விடுகின்றனவே! இதுதான் நேசத்தின் பிரதிபலிப்போ?
அரைமணி நேரத்தில் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டை அடைந்தோம். புதிதாய் தளிர்விடும் மழலையைக்
கண்டு தாய் சேய் நலம் விசாரித்தோம்.
குன்றுகளை ஒட்டி அமைந்துள்ள குக்கிராமம் என்றாலும் குடியிருப்புகள்
நகரை நினைவூட்டின. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, சீதா மரங்களைத் தவிர குன்றின் மீது
இருந்த பாறைகள்கூட வெளியில் தெரியும் அளவுக்கு கிட்டத்தட்ட பொட்டலாய் இருந்த காடு, இன்று அடர்காடாய் மாறி இருந்தது.
கிராமக் கட்டமைப்பும்,
வேளாண் உற்பத்தி முறையும் வெகுவாய் மாறிப்போனதால் விறகுக்கோ,
ஏர் கலப்பை, தூலம் தூண் கழிகளுக்கோ காடுகளுக்குச்
செல்ல வேண்டிய அவசியம் இன்று இல்லாமல் போனதால், வனங்கள் எல்லாம்
வனப்பு காட்டுகின்றன.
ஒரு காலத்தில் உழவனுக்கு உதவிய வனங்கள், இன்று வேளாண் குடிகளுக்கு தொல்லை கொடுக்கும் குரங்குகள், மயில்கள், பன்றிகளின் உல்லாசபுரியாய் மாறிவிட்டன. தவிர அரசு வளர்த்த கருவேல மரங்கள் காட்டை ஆக்கிரமித்து பாதையை மறித்துக் கொண்டதால்
சீதாக் காய்களைக்கூட பறிக்க முடியாமல் பலரின் வாழ்வாதாரமும் முடங்கிப் போயின என்றார் எமது உறவினர்.
இருட்டத் தொடங்கி விட்டது. விடைபெற்றுக் கொண்டு, காலியாக வந்த நகரப் பேருந்தில்
பயணமானோம். உடன் வந்த இருவருக்கும் கட்டணமில்லை, எனக்கு ரூ.16.
கிராமச் சாலை,
பிறகு கிருஷ்ணகிரி – வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலை,
மீண்டும் கிராமச் சாலை என இருட்டு வேளையில் இளங்குளிர் காற்று முகத்தை வருட, முகப்பு ஒளிக்கதிர் இருட்டை விலக்கி பாதை காட்ட,'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றலாய்'
நெளிந்து வலையும் சாலைப் பயணம், 'என்னை எங்கெங்கோ கொண்டு சென்றது'.
.jpeg)



.jpeg)
.jpeg)