Wednesday, October 5, 2022

சம்பூகன் வதம்! முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் பார்ப்பனியம்!

சமீபத்தில், முகநூலில் ஒரு காணொளியைப் கண்டேன். "சூத்திரனாய்ப் பிறந்த சம்பூகன் தவம் செய்யலாமா என ஆத்திரம் கொண்ட இராமன் சம்பூகனை வதம் செய்தான் என்று சொல்லுவது ஒரு வடிகட்டியப் பொய். திராவிடர் கழகத்தினால் இட்டுக்கட்டப்பட்ட கற்பனைக் கதை" என்று வாய் கூசாமல் அளந்து கொண்டிருந்தார் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர். 

அதற்குப் பதிலடி கொடுத்த திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள், "வால்மீகி இராமாயணத்தில் சம்பூகன் வதம் இருப்பதை இராமகிருஷ்ணா மடம் வெளியிட்டுள்ள நூலில் இருந்து நிரூபிக்கத் தயார், வெளிப்படையான விவாதத்திற்கு நீங்கள் தயாரா?" என்று கேட்டபோது சீனிவாசனின் முகம் கருத்துப் போனதுதான் மிச்சம். இதில் வேடிக்கை என்னவென்றால் சீனிவாசன் ஒரு பேராசிரியராம். பார்ப்பனியம் தலைக்கு ஏறிப் போனால் பேராசிரியர் என்று பீற்றிக்கொள்பவனுக்கும் புத்தி மட்டுப் போகும் என்பதற்கு இந்த சீனிவாசனே ஒரு நிகழ்கால சாட்சி. 

சமீப காலமாக, சில பார்ப்பன அடிவருடிகள் தங்களது கருத்துக்கு வலு சேர்ப்பதற்காக அம்பேத்கரை துணைக்கு அழைத்துக் கொள்கின்றனர். ஏதோ அம்பேத்கரை கரைத்துக் குடித்து, கரை சேர்ந்தவர்கள் போல பிதற்றிக் கொண்டு திரிகின்றனர். பார்ப்பனித்தையும், இந்து மதக் கொடுங்கோன்மையும் எத்தனை முறை அம்பேத்கர் அவர்கள் கழுவி கழுவி ஊற்றினாலும் அவர்களுக்கு உரைப்பதே இல்லை. 

சம்பூகன் வதம் குறித்து அம்பேத்கர் அவர்களே எழுதியதை வாசகர்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன். இராமாயணம் மூலநூலில் இருந்தே சம்பூகன் வதம் குறித்து அம்பேத்கர் அவர்கள் எழுதி உள்ள்ளார் என்றாலும் கூட, அதற்கும் திராவிடர் கழகம், பெரியாரே காரணம் என்று கூட, நா கூசாமல் முடிச்சுப் போடுவர். பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து, பொய்யிலே உலவுவதுதானே ‌‌ பார்ப்பனியம். நல்ல வேலை, மகாத்மா ஜோதிராவ் புலே,  நாராயண குரு, வள்ளலார் அம்பேத்கர், பெரியார் போன்ற எண்ணற்ற நம் முன்னோர்கள் பார்ப்பனியம் குறித்த சில உண்மைகளை நமக்கு விட்டுச் சென்றுள்ளனர். இல்லையென்றால் நாமும் பார்ப்பனியம் சொல்வதைத்தான் வேதவாக்காகக் கருதிக் கொண்டிருப்போம்.

இதோ அம்பேத்கர் மொழியில் சம்பூகன் வதம்!

"...நாட்டு மக்களின் குறை கேட்டு நிவர்த்தி செய்கிற பழங்கால மன்னர்களின் பழக்கத்தைக் கூட இராமன் ஒருபோதும் கடைபிடிக்கவில்லை. தம் மக்கள் குறைகளை ஏதோ ஒரு தடவை இராமன் நேரில் கேட்டதாக வால்மீகி ஒரு சந்தர்ப்பத்தைக் குறிப்பிடுகிறார். அதுவும் ஒரு துயரமான நிகழ்ச்சியாக அமைகிறது. அக்குறையைத் தானே தீர்த்து விடுவதாய் பொறுப்பேற்கிறான் இராமன். அப்படி செய்கையில், வரலாறு காணாத கடும் கொடிய குற்றத்தைச் செய்கிறான் இராமன். அதுவே சூத்திரன் சம்பூகனின் படுகொலை நிகழ்ச்சியாகும்.

இராமனுடைய ஆட்சிக் காலத்தில் அவனுடைய நாட்டு மக்கள் யாரும் அகால மரணம் அடையவில்லை என்கிறார் வால்மீகி. இருந்த போதிலும் பிராமணச் சிறுவன் ஒருவன் அகால மரணம் அடைய நேர்ந்தது. மகனைப் பறிகொடுத்த தந்தை, தன் பிள்ளையின் பிணத்தை தூக்கிக்கொண்டு இராமனின் அரண்மனையை நோக்கிப் போனான். அரண்மனையின் வாசலில் பிணத்தை கிடத்தி விட்டுக் கதறி அழுதான். தன் பிள்ளையின் சாவுக்கு இராமனே காரணமென நிந்தித்தான். மன்னனின் ஆட்சியில் படிந்திட்ட பாவம்தான் தன் மகனின் மரணத்திற்குக் காரணம் என்றான். குற்றத்தை அறிந்து தண்டிக்காவிட்டால் மன்னன் இராமனே குற்றவாளி என்றான். மனம் போனபடி பழித்தான்; சபித்தான் குற்றவாளியைப் பிடித்துத் தண்டித்து, செத்துப்போன தன் மகனை பிழைக்கச் செய்யாவிட்டால், அரண்மனை வாசலிலேயே பட்டினிப் போர் (தர்ணா) நடத்தித் தற்கொலை செய்து கொள்வேன் என அச்சுறுத்தினான்.

அதைக் கேட்டு நாரதன் உட்பட அறிவார்ந்த எட்டு ரிஷிகளுடன் இராமன் கலந்தாலோசித்தான். அந்த அறிஞர்களின் ஆலோசனைகளை கூட்டத்தில், நாட்டு மக்களுள்-அதாவது இராம இராஜ்ஜியத்தில், யாரோ சூத்திரன் ஒருவன் தவம் செய்து கொண்டிருப்பதாகவும், அச்செயல் தருமத்திற்கு எதிரானது என்றும் நாரதன் சொன்னான். தரும (புனித) சட்டங்களின்படி பிராமணர்கள் மட்டுமே தவம் செய்யலாம். பிராமணர்களுக்குச் சேவகம் செய்வதே சூத்திரர்களுடைய கடமை என்று மேலும் நாரதன் கூறினான். 

தருமத்திற்கு எதிராக ஒரு சூத்திரன் தவம் செய்வது பெரும் பாவம், குற்றம் என்று இராமன் திடமாய் நம்பினான். உடனே தன் தேரில் ஏறி நாட்டைச் சுற்றித் துருவி அக்குற்றவாளியைப் பிடித்து வரப் புறப்பட்டான். இறுதியில், நாட்டின் தெற்கே அடர்ந்த காட்டுப்பகுதியில் ஒருவன் கடினமானதொரு தவத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டான். இராமன் அவனை நோக்கிப் போனான். அந்தத் தவம் செய்து கொண்டிருந்தவன், தான் சம்பூகன் என்னும் சூத்திரனா, மனித உருவிலேயே மோட்சத்திற்குச் செல்லத் தவம் செய்பவனா என்று கூடக் கேட்டறியாமல், விசாரணையோ, எச்சரிக்கையோ, உண்மை நியாயத்தை அறிந்திடும் நோக்கமோ இன்றி சம்பூகனின் தலையைச் சீவி விட்டான் இராமன். அதே நொடியில் எங்கோ தொலைதூரத்து அயோத்தியில் அகால மரணம் அடைந்த பிராமணனின் மகன் மீண்டும் உயிர் பெற்றானாம். 

கடவுள்களெல்லாம் மன்னன் இராமனின் மீது, மலர் தூவி மகிழ்ந்தார்களாம். தவம் செய்து மோட்சத்தை அடைய தமக்கே உள்ள உரிமையை அதற்கு அருகதையற்ற சூத்திரன் ஒருவன் மேற்கொண்டதைத் தடுத்து, தண்டித்து சம்பூகனை கொலை செய்த மன்னன் இராமனின் செய்கைக்காக அவர்கள் மகிழ்ந்தார்கள். கடவுள்கள், தேவர்கள் எல்லாம் இராமன் முன் தோன்றி அவன் செய்த இந்நற் காரியத்திற்காக அவனைப் பாராட்டினார்கள். 

அயோத்தி அரண்மனை வாசலில் பிணமாய்க் கிடந்த பிராமணச் சிறுவனை மீண்டும் உயிர்பிக்க வேண்டும் என்று கடவுள்களிடம் இராமன் வேண்டினான். "அந்த பிராமணச் சிறுவன் எப்போதோ உயிர் பெற்று எழுந்து விட்டான்" என்று அவர்கள் இராமனுக்குச் சொல்லிவிட்டு மறைந்து போயினர். அதற்குப் பின் இராமன் அருகிலிருந்த அகத்திய முனிவனின் ஆசிரமத்திற்குப் போனான். சம்பூகனைக் கொன்ற நற்செயலைப் பாராட்டி தெய்வ மகிமையுள்ள காப்பு ஒன்றை அகத்தியன் இராமனுக்குப் பரிசாய் அளித்தான். பிறகு இராமன் அயோத்திய அடைந்தான். இத்தகையவனே இராமன்."

பக்கம்: 462, 463, 464. பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி - 8.

ஊரான்

1 comment: