Sunday, October 2, 2022

ஐயம் இருப்போர் ஆய்வு செய்க!

"இந்தியக் கிராமம் ஒரே ஒரு சமூக அலகாக இல்லை. அது பல சாதிகளைக் கொண்டது.

1.கிராமத்தின் மக்கள் தொகை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. (1).தீண்டத்தக்கவர்கள் (2).தீண்டத்தகாதவர்கள்.

2. தீண்டத்தக்கவர்கள் பெரிய சமுதாயமாகவும், தீண்டத்தகாதவர்கள் ஒரு சிறிய சமுதாயமாகவும் உள்ளனர்.

3. தீண்டத்தக்கவர்கள் கிராமத்தின் உள்ளேயும், தீண்டத்தகாதவர்கள் கிராமத்திற்கு வெளியேயும் தனித்தனிப் பகுதிகளில் வசிக்கின்றனர்.

4. பொருளாதார ரீதியில் தீண்டத்தக்கவர்கள் பலமான, சக்தி வாய்ந்த சமுதாயமாக உள்ளனர். தீண்டத்தகாதோர் ஏழைகளாக, சார்ந்து வாழ்கின்ற சமுதாயமாக உள்ளனர்.

5. சமூக ரீதியில், தீண்டத்தக்கவர்கள், ஆளும் இனம் என்ற இடத்தில் உள்ளனர். தீண்டத்தகாதவர்கள் பரம்பரையான, பிணை வேலைக்காரர்களைக் கொண்ட, ஆளப்படும் இனம் என்ற இடத்தில் உள்ளனர்.

இந்தியக் கிராமங்களில் தீண்டத்தக்கவர்களும், தீண்டத்தகாதோரும் சில நிபந்தனைகளின் அடிப்படையில் இணைந்து வாழ்கின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும், அதற்கு சில விதிகளை வைத்திருக்கின்றனர். இவற்றை தீண்டத்தகாதவர்கள் பின்பற்றி நடக்க வேண்டும்.  எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது, எதைச் செய்தால் குற்றம், எதைச் செய்யத் தவறினால் குற்றம் என்பவை குறித்து அவை கூறுகின்றன.

அவற்றில்,

தீண்டத்தகாதவர்கள், இந்துக்கள் வசிக்கும் இடத்திற்கு அப்பால் தனியான பகுதிகளில் வசிக்க வேண்டும். இவ்வாறு பிரித்து வைக்கும் விதியை மீறுவது குற்றமாகும். (மனு: 10-51)

தீண்டத்தகாதோர் வசிக்கும் பகுதிகள் தெற்கு திசையில் இருக்க வேண்டும். ஏனென்றால், தெற்குதான் நான்கு திசைகளில் மிகவும் அமங்கலமானது. இந்த விதியை மீறி நடப்பது குற்றமாக கருதப்படும்.

தீண்டத்தகாதவர்கள் தீட்டு ஏற்படுத்தும் தூரம் அல்லது நிழல் தீட்டு பற்றிய விதியை பின்பற்ற வேண்டும். இந்த விதியை மீறுவது குற்றமாகும்."

-அமபேத்கர் நூல் தொகுப்பு-9.

இந்தியா முழுக்க இதுதான் விதி. ஐயம் இருப்போர் ஆய்வு செய்க!

தீண்டாமையின் தொடக்கப் புள்ளியே ஊரும் சேரியும் தனித்தனியாக இருப்பதுதான். இதற்கு விதி வகுத்தது சனாதன தர்மம். அந்த சனாதனத்தைப் போற்றிப் பாதுகாப்பது என்பது தீண்டாமைக்கு துணை போவதாகும். இதுதான் இந்து தர்மம். இதைத்தான் பார்ப்பனியம் பேசி வருகிறது; பாஜக ஏற்றிப் போற்றுகிறது, அதற்காகத்தான் மோடி ஓடோடி உழைக்கிறார். வானதி வால் பிடிக்கிறார். தமிழிசை தாளம் போடுகிறார். கிருஷ்ணசாமி ஜால்ரா அடிக்கிறார். 

-ஊரான்

No comments:

Post a Comment