Friday, 10 July 2026

கரூர் "கொத்து பரோட்டா!"

இது ஏற்கனவே ஓங்கி வளர்ந்த ஒரு பெருங்காடு. இன்னும் விடிந்திருக்கவில்லை; காரிருள் மரங்களின் கிளைகளுக்கு இடையே ஊடுருவி உரைந்து கிடந்தது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஓர் ஆதி விடியல் காலம் அது. மனிதன் இன்னும் தனக்கான மொழியைக் கண்டறிந்திருக்கவில்லை. எண்ணங்களை வெளிப்படுத்தச் சொற்கள் இல்லை; உதடுகளின் அசைவுகளுக்கு அர்த்தங்கள் இல்லை; வெறும் சைகைகளும், தொண்டைக்குள் எழும் விசித்திர ஒலிகளும் மட்டுமே அவனது உலகமாக இருந்தன.


காரிருள் விலகிய காலைப் பொழுதில் ஒரு நாள், கூட்டத்தின் தலைவன் ஒருவன் அடர்ந்த புதரின் திசையைக் காட்டி ஏதோ ஒரு சைகை செய்தான். “அங்கே சுவையான கனிகள் நிறைந்த மரங்கள் இருக்கின்றன; பசியும் ஆசையும் தீரும்” என்பது அவனது சைகையின் பொருள்.

ஆனால், ருசி வெறியோடு இருந்த ஒரு ஆதிமனிதன் அந்தச் சைகையைத் தவறாகப் புரிந்துகொண்டான். கனிகள் கிடைப்பது மட்டுமல்ல, பழக்குவியலிலேயே புரண்டு விளையாடலாம் என்ற பேராசையோடு அந்த இடத்தை நோக்கி ஓடினான்.

அடுத்த சில நொடிகளில் காடே அதிரும் படியாக ஒரு மரண ஓலம் கேட்டது!

அங்கே கனிகள் எதுவும் இல்லை. மாறாக, பசி வெறி கொண்ட காட்டு விலங்குகள் அவன் மீது பாய்ந்து கடித்துக் குதறின. உடல் சிதைந்து, தசைகள் கிழிந்து தொங்க, ரத்தம் சொட்டச் சொட்ட அவன் புதரிலிருந்து வெளியே தள்ளாடி வந்தான்.

தனக்கு நேர்ந்த கொடூரத்தையும் ஏமாற்றத்தையும் சக மனிதர்களுக்குச் சொல்ல அவனிடம் மொழி இல்லை. கைகள் நடுங்கியதால் சைகை காட்டவும் முடியவில்லை. தன் சொந்தத் தவறான புரிதலால், சொல்லவும் முடியாமல் மெல்ல மெல்லத் துடித்து மடியும் அந்த அவல நிலைதான் காட்டுமிராண்டி காலத்தின் ஆகப்பெரும் சாபம்.

காலம் மாறியது… காட்சிகள் மாறினவா?

காலச் சக்கரம் சுழன்றது. மனிதன் மொழியைக் கண்டுபிடித்தான்; நாகரிகம் அடைந்தான்; உலகிற்கே பண்பாட்டைக் கற்றுக்கொடுத்த உயர்ந்த தமிழினமாக மாறினான்.

ஆனால் இன்றைய தமிழ்நாட்டு அரசியல் சூழலைப் பார்க்கும்போது, நாம் மீண்டும் அந்த ஆதி கானகத்தின் காட்டுமிராண்டி காலத்திற்கே பின்னோக்கித் தள்ளப்பட்டிருக்கிறோமோ என்ற அச்சம் எழுகிறது.

அன்று ஆதிமனிதன் சைகையைத் தவறாகப் புரிந்துகொண்டான். இன்று மக்கள் ஒரு நடிகரின் திரைப் பிம்பத்தையும், கவர்ச்சியான மேடைப் பேச்சையும், ஆசை வார்த்தைகளையும் உண்மை என்று நம்பித் தவறாகப் புரிந்துகொண்டார்கள்.

திரையில் காட்டிய பாவனைகளையும், மேடையில் வெளிப்படுத்திய கவர்ச்சியையும் கண்டு, தங்களுக்கு ஒரு புதிய விடியல் பிறக்கப் போகிறது என்று நம்பி அவரை ஆட்சிப் பீடத்தில் அமர வைத்தார்கள்.

வாய்ச்சொல் வீரமும்… ஆணவத்தின் உச்சமும்…

ஆனால் அரியணையில் அமர்ந்த பிறகுதான் மக்களுக்கு ஏமாற்றம் மிஞ்சியது.

எது கிடைக்கும் என்று நம்பி ஓடினார்களோ, அது கிடைக்கவில்லை.

கனிகளைக் காண்பித்தவர்கள் கனிகளைக் கொடுக்கவில்லை.

விடியலை வாக்குறுதி அளித்தவர்கள், விடியலைக் கொண்டு வரவில்லை.

மக்களுக்குத் தேவையான வாழ்வாதார மாற்றங்களோ, எதிர்பார்த்த முன்னேற்றங்களோ அங்கே இல்லை. அதற்குப் பதிலாக மேடைகளில் சப்தமிடும் “கொத்து புரோட்டா” போன்ற வெற்று வசனங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.

இன்று “கொத்து புரோட்டா” என்பது ஒரு உணவின் பெயர் மட்டுமல்ல; அரசியலில் உள்ளடக்கம் இல்லாத ஆரவாரத்திற்கும், திட்டம் இல்லாத திமிருக்கும், செயல் இல்லாத வசன வீரத்திற்கும் ஒரு குறியீடாக மாறிவிட்டது.

மக்களுக்கான ‘விடியல்’ பற்றிப் பேசியவர்கள், அந்த ‘விடியலையே’ வீதியில் வெட்டி எறிந்துவிட்டார்கள். 

கானகத்தின் புதிய தலைவன், தன் அரியணைப் போதையில், தனக்கு முன்னிருந்த தலைவர்களின் வீழ்ச்சியைக் கேலி பேசி, வார்த்தைகளைச் சிதைத்து, மேடைகளில் “கொத்து புரோட்டா” என ஆணவத்தை வெளிப்படுத்துகிறான்.

கனியின் ருசி பார்க்கக் காத்திருக்கும் மக்களுக்குக் கனிகளைத் தராமல், தன் அதிகாரத் திமிரையும் வெற்று வசனங்களையும் மட்டுமே வாரி வீசும் இந்தப் போக்கு, ஆணவத்தின் உச்சமன்றி வேறென்ன?

வரலாறு புகட்டும் பாடம்

இயற்கை எப்போதும் மனிதனுக்குப் பாடம் கற்பிக்கிறது.

அன்று ரத்தம் சொட்டச் சொட்டத் தவித்த ஆதிமனிதனுக்குத் தன் ஏமாற்றத்தைச் சொல்ல மொழி தெரியவில்லை.

இன்றோ, உலகமே வியக்கும் மொழி இருந்தும், தங்களின் அவல நிலையை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள முடியாமல், “நாம்தானே இந்தத் திரைப் பிம்பத்தை நம்பி ஓடினோம்?” என்ற குற்ற உணர்ச்சியிலும் ஏமாற்றத்திலும் பலர் மௌனமாய் ரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் என்பது திரைக்கதை அல்ல; அது மக்களின் வாழ்வாதாரப் போராட்டம்.

வெற்று வார்த்தைகளையும், மேடைத் திமிரையும், வசன வீரத்தையும் நிஜமென்று நம்பி ஏமாறும் வரை, அன்று சைகையைத் தவறாகப் புரிந்துகொண்டு காட்டு விலங்குகளிடம் சிக்கிய ஆதிமனிதனின் நிலையும், இன்று வாக்குறுதிகளின் பின்னால் ஓடி ஏமாற்றத்தில் நிற்கும் மக்களின் நிலையும் வேறுபட்டதல்ல.

காலம் மாறியிருக்கலாம்.
மொழி வளர்ந்திருக்கலாம்.
ஆனால், உண்மையைப் புரிந்துகொள்ளும் அறிவு விழித்தெழாத வரை, காட்டின் வடிவம் மாறுமே தவிர, காட்டுமிராண்டித்தனம் மாறாது.

— ஊரான்


No comments: