எல்லா மனிதர்களும் இயல்பாகவே பிறக்கிறார்கள். சிலர் கல்வி கற்கிறார்கள், சிலர் கற்பதில்லை. ஆனால் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் சிந்திக்கிறான், உழைக்கிறான், அனுபவங்களைத் தொகுக்கிறான். அந்த உழைப்பிலும் திறமையிலும் மற்றவர்களை விட ஒரு படி மேலே செல்லும்போது, சமூகம் அவனை “ஆளுமை” (Personality) என்று கொண்டாடுகிறது.
பலர் நினைக்கிறார்கள், அந்த ஆளுமை முழுக்க அவனது தனிப்பட்ட முயற்சியின் விளைவு என்று. ஆனால் உண்மை அதுவல்ல.
ஆளுமைக்கான அடித்தளத்தை யார் அமைக்கிறார்கள்?
ஒரு மனிதன் பெறும் அறிவும், திறமையும், பார்வையும் அவனது சொந்த முயற்சியால் மட்டும் உருவாவதில்லை. இயற்கையும், அவனைச் சுற்றியுள்ள மனித சமூகமும், அவனுக்கு முன்னால் வாழ்ந்த தலைமுறைகளும் விட்டுச் சென்ற எண்ணற்ற அனுபவங்களும், அறிவும், கருவிகளும்தான் அவனை ஆளுமையாக உருவாக்குகின்றன.
புற உலகமும் பிற மனிதர்களின் தொடர்பும் இல்லையென்றால், மனிதன் வெறும் விலங்குலகப் பொதுப் புத்தியுடன் மட்டுமே இருப்பான். அங்கே ஆளுமை என்ற பேச்சுக்கே இடமில்லை.
இசையமைப்பாளர்
ஒரு புகழ்பெற்ற இசையமைப்பாளரின் மூளையில் இசை தானாக உதிப்பதில்லை. காற்றில் அசையும் மரங்களின் சலசலப்பு, பறவைகளின் கீதம், உழைக்கும் மக்களின் நாட்டுப்புறப் பாடல்கள், நெல் குத்தும் பெண்களின் தாளம்—இவற்றையெல்லாம் அவர் உள்வாங்கி, கோர்த்து, உருமாற்றுகிறார். அவர் செய்வது பெரும்பாலும் மறுபடைப்பும் ஒழுங்கமைப்பும்தான்.
மருத்துவரும் பொறியாளரும்
ஒரு சிறந்த மருத்துவர் அல்லது பொறியாளர் தன் திறமைக்குத் தானே முழுக் காரணம் என்று சொல்ல முடியாது. நூற்றாண்டுகளாக உருவான அறிவியல் அறிவும், சமூகத்தின் பரிசோதனைகளும், முந்தைய தலைமுறைகளின் வெற்றிகளும் தோல்விகளும் அவர்களை அந்த உயரத்துக்கு உயர்த்தியுள்ளன.
கலைஞர்களும் எழுத்தாளர்களும்
கவிஞரோ, எழுத்தாளரோ, ஓவியனோ தனிமையில் உருவாவதில்லை. மக்களின் வலியும், போராட்டங்களும், சமூக முரண்பாடுகளும்தான் அவர்களின் படைப்புகளுக்கு உயிர் கொடுக்கின்றன.
ஆளுமை எப்போது சிதைகிறது?
சமூகத்திடமிருந்து உறிஞ்சிய அனுபவங்களால் வளர்ந்த ஆளுமை, மக்களின் நலனுக்காகவும் சமூக மாற்றத்திற்காகவும் பயன்படும்போது வரலாற்றில் நிலைக்கிறது.
ஆனால் அதே ஆளுமை தன்னலத்திற்கு, அதிகாரத்திற்கு, பணத்திற்கு மட்டும் பயன்படத் தொடங்கும்போது அதன் சமூக அர்த்தம் சிதையத் தொடங்குகிறது.
மக்களின் துயரைப் பாடிய பாடகர், கார்ப்பரேட் லாபத்திற்காகவும் தனது பணப்பெட்டியை நிரப்பவும் மட்டும் பாடினால், அவரது குரல் மதிப்பிழக்கிறது.
சாமானியர்களின் வலியை எழுதிய எழுத்தாளர், அதிகார வர்க்கத்தின் கூலியாக மாறினால், அவரது பேனாவின் உயிர் குன்றுகிறது.
மக்களின் நம்பிக்கையால் உயர்ந்த தலைவன், அதே மக்களை மறந்து அதிகாரத்தின் சுகத்தில் மூழ்கினால், அவனது ஆளுமை வெறும் பிம்பமாக மட்டுமே எஞ்சுகிறது.
ஆளுமை என்பது சமூகக் கடன்
ஆளுமை என்பது தனிமனிதச் சொத்து அல்ல; அது ஒரு சமூகப் படைப்பு. முந்தைய தலைமுறைகளின் அறிவு, சமூகத்தின் அனுபவங்கள், இயற்கையின் கொடைகள், நண்பர்கள், ஆசிரியர்கள், சக மனிதர்கள்—இவை அனைத்தும் சேர்ந்தே ஒரு மனிதனை ஆளுமையாக்குகின்றன.
எனவே, ஆளுமை என்பது உரிமை மட்டுமல்ல; அது ஒரு பொறுப்பும் கூட.
மக்களிடமிருந்து பெற்ற அறிவையும் அனுபவத்தையும் மீண்டும் மக்களுக்கே திருப்பித் தரும்போது மட்டுமே அந்த ஆளுமை தனது முழுமையான அர்த்தத்தை அடைகிறது. மக்களின் முன்னேற்றத்திற்கும், சமூக நீதிக்கும், மனிதகுல வளர்ச்சிக்கும் பயன்படும் ஆளுமைகளே வரலாற்றில் நிலைத்துப் போற்றப்படுகின்றன.
மனிதனைப் போற்றுவது அவனது புகழுக்காக அல்ல; அவன் தனது ஆளுமையை மனிதகுல நலனுக்காக எவ்வாறு பயன்படுத்துகிறான் என்பதற்காகத்தான்.
ஆளுமை என்பது தனிமனிதனின் தனிச்சொத்து அல்ல; மக்களிடமிருந்து பெற்ற ஒரு சமூகக் கடன். அந்தக் கடனை மக்களுக்கே திருப்பிச் செலுத்தும்போதுதான் ஒரு மனிதன் உண்மையான ஆளுமையாக உயர்கிறான்.
ஊரான்
.jpeg)
No comments:
Post a Comment