Showing posts with label உறவு. Show all posts
Showing posts with label உறவு. Show all posts

Tuesday, 5 March 2013

எனது தந்தையின் இறுதி மூச்சு!


"ஹலோ! அண்ணா!
அப்பாவுக்கு.... (எதிர் முனையில் தம்பி... தொடர்ந்து அவனால் பேச முடியவில்லை)

" ஹலோ! மாமா! (தங்கை மகன்)
தாத்தாவுக்கு ரொம்ப முடியல...
உடனே வா.

பத்து கிலோமீட்டருக்கு அப்பாலுள்ள தந்தையைக் காண விரைகிறேன்.

அப்பாவின் தலை, அம்மாவின் மடியில்... ஒரு குழந்தையைப் போல,
கால்கள் நீட்டிய நிலையில்...
கைகள் துவண்டு...
கண்கள் மூடிய நிலையில்...
ஹக்...ஹக்... என்ற ஓசையும் சில நிமிடங்களில் காற்றோடு கரைய,
வாய் அசைவற்று நிற்கிறது.

"அவ்வளவுதாண்ணா... ஒண்ணுமில்ல.

தாய் மௌனித்து நிற்க...
எனது துணைவியார் விம்ம...
தங்கை மகன் ஓரமாய் சென்று கதற...
உறுதிப்படுத்த மருத்துவரை அழைத்துவர தம்பி விரைய...

மார்ச் 2 - 2013, சனிக்கிழமை காலை பத்து மணிக்கு,
எனது தந்தையின் இறுதி மூச்சு இப்படித்தான் நின்று போனது.
எனது தந்தை பொன்முடி

கடந்த சில ஆண்டுகளாக நுரையீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பால் நோயுற்று அவதிப்பட்டு வந்த நிலையில், போதுமான அளவு மருத்துவ வசதி செய்து வந்ததால் பல முறை மரணத்தைத் தொட்டுவிட்டு மீண்டு வந்தவர். எண்பதுகளைக் கடந்ததால் முதுமையின் காரணமாக இம்முறை அவரால் மீள முடியவில்லை.

தனது எளிமையாலும்,
அனைவரிடமும் இயல்பாய்ப் பழகும் குணத்தாலும்,
நூறு கிலோமீட்டருக்கும் அப்பாலிருந்த உறவுகளையும் நட்புகளையும்
குறிப்பாக ஏராளமான தாய்மார்களையும்
இறப்புக்குப் பிறகும் தன்னை நோக்கி ஈர்த்துவிட்டு
இறுதியில் அன்று மாலை 7.00 மணியளவில் எரியூட்டப்பட்டு காற்றோடு கலந்துவிட்டார்.

உறவுகளும் நட்புகளும் அழுது முடித்து அவரவர் வாழ்விடம் நோக்கிச் சென்றுவிட்டனர்.
அன்று  கலங்காத என் கண்கள்...
இன்று குளமாகி நிற்கிறது.
தூக்கம் தூர நிற்கிறது.
நினைவுகள் ஒன்றா... இரண்டா...
மறப்பதற்கு!