Showing posts with label auto. Show all posts
Showing posts with label auto. Show all posts

Tuesday, 13 August 2024

கொட்டும் மழையும் மொட்டை வெயிலும்! எங்கே நிழற் கூரை?

இன்று, ஹோண்டாவும் யமஹாவும்,
ரெய்டரும் ஃப்ரீடமும், ஸ்ப்லெண்டரும் ராயல் என்ஃபீல்டும், ஸ்கூட்டியும் ஆக்டிவாவும், ஆக்ஸசும் ஃபிளஷரும் என மாந்தரை சுமந்து செல்ல வித விதமாய் வாகனங்கள். 
எல்லாம், அறிவியலின் ஆக்கங்கள்! எல்லையில்லை, இனியும் வரும் புதிது புதிதாய்!

அன்று, எலிகளையும் எருமைகளையும், பூனைகளையும் நாய்களையும், மயில்களையும் கிளிகளையும், ஆடுகளையும் மாடுகளையும், சிங்கம் புலி மான்களையும், கடவுளரின் வாகனமாய் கற்பித்தான் கற்பனையில்! கடவுளோடு வாகனங்களையும் வணங்குகின்றோம். கட்டுண்டு கிடக்கின்றோம் இன்றும்!

கடந்த ஆண்டு, ஒரு நாள் 
சிவனை சுமக்கும்  தெருவோர பைரவனும், எனை சுமக்கும் ஸ்கூட்டியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், எனது முழங்கைதான் முறிந்து போனது! கடவுளர்தான் கற்பனையே ஒழிய அவைகளின் வாகனங்கள் நிஜம்தானே? நிஜம் என்றால் நிதானம் தேவைதானே? 

அன்றிலிருந்து இன்று வரை என்னை நானே சுமக்கின்றேன். குறும் பயணம் என்றால் தானியும், நெடும் பயணம் என்றால் பேருந்தும் என பழகிக் கொண்டேன்.

இன்று, நவீன ஆலைகளின் பேட்டைக்குப் பெயர் போனது இராணிப்பேட்டை. பாக்குக்கும் பஞ்சுக்கும் வெற்றிலைக்கும் சில்குக்கும் என, அன்றே தொன்மையான தொழிற்பேட்டையாய் உருவெடுத்து;
1866 இல் தமிழ்நாட்டின் முதல் நகராட்சியாய் பரிணமித்தது 
வாலாஜா பேட்டை.

பெருக்கெடுக்கும் மழை நீரை தடுப்பேதுமின்றி வழிந்தோடும் வகையில் நகரம் அன்றே வடிவமைக்கப்பட்டதால், புயலும் பெரு மழையும் ஒரு பொருட்டே அல்ல; இன்றும் கூட! இப்படி வாலாஜாவிற்கென பெருமைகள் பல உண்டு.

மாவட்டத் தலைநகரம் இராணிப்பேட்டை ஆயினும், அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையை தன்னகத்தே கொண்டிருப்பதால் மாவட்டத்தின் 
நாற்திசைகளில் இருந்தும் அன்றாடம் நூற்றுக்கணக்கில் துயரர்கள் நாடி வருகின்றனர்.

ஒரு அலுவல் வேலையாய் பேருந்தில் வந்த நான் 
மருத்துவமனை வளாகப் பேருந்து நிறுத்தத்தில் வீடு திரும்பக் காத்திருந்தேன். தென்மேற்குப் பருவ மழை காலம் இது. கீழடுக்கு மேலடுக்கு சுழற்சியினால் இரவு நேர மழையினால்  நகரம் குளிர்ந்தாலும் பகல் நேர வெயிலோ மண்டையைப் பிளந்தெடுக்கும்.

மருத்துவமனை வளாகத்தில் நெடுஞ்சாலை மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நகருவதால் 
துயர் நீங்கி திரும்பும் மக்கள்  மொட்டை வெயிலிலும் கொட்டும் மழையிலும் பேருந்துக்காகக் காத்திருக்கும் அவலம்.
ஒதுங்க ஒரு நிழற் கூரை இல்லை. 
இதுவே எளிய மக்களின் ஏக்கப் பெருமூச்சு. ஏரெடுத்துப் பார்க்குமா மாவட்ட நிர்வாகம்? பெருமை சேர்க்குமா வாலாஜா நகராட்சி!

ஊரான்
 

x
x


Saturday, 11 May 2024

நான் கடவுளைக் கண்டேன்! ---3

மாலை நேர மயக்கம் 1

நவம்பர் 14, 2021 அன்று இராணிப்பேட்டை காரையில் ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வழக்கமான எனது சுசுகி மேக்ஸ் 100 இல் வாலாஜா நோக்கி வந்து கொண்டிருந்தேன். மாலை நேரம் சற்றே இருட்டிவிட்டது. சுசுகியின் முகப்பு விளக்குகூட அவ்வளவாக பளிச்சென்று இருக்காது. 2000 மாடல் ஆச்சே? 'எப்ப மாத்த போற?' என்று அடிக்கடி பிள்ளைகள் கேட்பதுண்டு.


சாலையின் இடது ஓரமாக ஆட்டோ நகரில் வந்து கொண்டிருந்த பொழுது நேர் எதிரில் ஒரு உருவம் வருவது மங்கலான வெளிச்சத்தில் தெரிந்தது. சுதாரிப்பதற்குள் அவர் மீது வண்டி மோதியது. நான் மோதினேனா அல்லது அவராக வந்து விழுந்தாரா என்பதெல்லாம் தெரியாது. பாதசாரிக்கு என்ன ஆனது என்றும் எனக்குத் தெரியவில்லை. 

உடனே கூட்டம் கூடிவிட்டது. ஒருவர் வண்டிச் சாவியை எடுத்துக் கொண்டார். இது போன்ற சம்பவங்களில், அதாவது பாதசாரிகள் மீது வாகனங்கள் மோதி விட்டால், அடி பலமாக இல்லை என்றாலும் வாகனக்காரரிடமிருந்து முடிந்தவரை கறப்பதை பல இடங்களில் பார்த்திருக்கிறோம். 
அவரைத் தெரிந்த ஒரு சிலர் இராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குப் போக வேண்டும் என்றனர். நானோ, 'இல்லை இல்லை வாலாஜாவில் உள்ள அரசு மருத்துவமனைக்குப் போவோம்' என்றேன். நான் வண்டியில் இருந்து விழுந்து அடிபட்டு கிடக்கிறேன். நிலைமையை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. எனவே நண்பர் வாலாஜா அசேன் அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள, அவர் உடனே வி.சி.மோட்டூரிலிருந்து ஒரு நண்பரை அனுப்பி வைத்தார்.

விபத்து நடந்த இடத்திற்கு எதிரில் உள்ள கடைக்காரர் எனது வீட்டுக்கு எதிர் வீட்டு நண்பரின் மருமகன். அவரும் வந்து விடுகிறார். எனக்கு ஆதரவாக முக்கியமான நபர்கள் வந்துவிட அங்கு பஞ்சாயத்து செய்து கொண்டிருந்த நபர்கள் ஒதுங்கிக் கொள்ள ஒரு ஆட்டோவைப் பிடித்து இருவரும் வாலாஜா அரசு மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கே எனக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தார்கள். அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்க அழைத்த போது அவர் காணாமல் போய்விட்டார். காரணம் பிறகுதான் தெரிய வந்தது, அவர் போதையில் இருந்தார் என்று. விபத்து நடந்த இடத்திற்கு எனது மகனும் உடனே வந்து விட்டதால் எனது வண்டியும் வந்து சேர்ந்தது. 

மாலை நேர மயக்கம் 2

2018 இல் பணி ஓய்வு பெற்ற பிறகு பழைய வீட்டை இடுத்துவிட்டு புதிய வீடு கட்டிக் கொண்டிருந்த போது  பிப்ரவரி 12, 2019 அன்று வீடு கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட பிறகு, மாலையில் பெல் குடியிருப்பை நோக்கி வந்து கொண்டிருந்தேன். அவ்வளவாக இருட்டிவிடவில்லை. சிப்காட் பேருந்து நிறுத்தத்தைத் தாண்டி அதே சுசுகி மேக்ஸ் 100 இல் வந்து கொண்டிருந்த பொழுது இடது பக்கமிருந்து ஒரு இரு இருசக்கர வாகனம் இருவரை சுமந்து கொண்டு சற்றே தாழ்வான பகுதியிலிருந்து மேலேறி சர்ரென பிரதான சாலையில் நுழைய, அதன் மீது எதிர்பாராத விதமாக எனது வண்டி மோதி நான் கீழே விழுகிறேன். இந்த முறையும் மண்டைதான் தரையில் மோதுகிறது. எப்பொழுதும் தலைக்கவசம் அணியும் நான் அன்று மட்டும் தலைக்கவசம் அணியவில்லை. அணிந்திருந்தால் மண்டை தப்பி இருக்கும் . 

நெற்றியின் மேல் பகுதியிலிருந்து இரத்தம் வழிகிறது. வண்டி ஒரு பக்கம் பழுதாகி விழுந்து கிடக்கிறது. அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர் உள்ளிட்ட பலர் கூடிவிட்டனர், நான் யார் என்று விசாரித்துத் தெரிந்து கொண்டு ஒரு ஆட்டோவில் என்னை உடனடியாக பெல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே முதல் உதவி அளிக்கப்பட்டு மண்டை காயத்திற்கு எட்டு தையல் போடப்பட்டது.

எனது வண்டியை பத்திரமாக எடுத்து வைத்திருந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் மறுநாள் வண்டியை என்னிடம் ஒப்படைத்தார். எதற்கும் மண்டையை ஒரு ஸ்கேன் செய்து பார்த்து விடலாம் என்று மேல் சிகிச்சைக்காக விஷாரம் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொண்டேன். உள்காயம் ஏதுமில்லை என்று உறுதி செய்து கொண்டேன்.

வலதுகை மூட்டு அறுவை சிகிச்சைக்குப் பிறகு, 25 வயது  சுசுகியையும், 20 வயது ஸ்கூட்டியையும் வேறு ஒருவருக்கு கைமாற்றிய பிறகு கடந்த ஐந்து மாதங்களாக எங்கு சென்றாலும் நடராஜாவும், ஆட்டோக்களும் பேருந்துகளும்தான். போகிறப் போக்கை பார்த்தால் இதுவே பழகிவிடும் போலத்தான் தெரிகிறது. எனினும் உற்ற நண்பர்களை இழுந்து விட்டது போன்ற ஒரு வெறுமை என்னுள் இருக்கத்தான் செய்கிறது.

ஒரு வகைமாதிரிக்காக எனது சொந்த அனுபவத்திலிருந்து ஐந்து சம்பவங்களை நான் மேலே விவரித்திருக்கிறேன். இந்த சம்பவங்கள் உணர்த்தும் படிப்பினை என்ன? அடுத்து பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள் 

நான் கடவுளைக் கண்டேன் ...2

பைரவா! இது உனக்கே நல்லா இருக்கா?

கூரை வீடுகளிலும், ஓட்டு வீடுகளிலும், மெத்தை வீடுகளிலும் அன்றும் மக்கள் வாழ்ந்தார்கள். இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். கல்வி மற்றும் வேலை வாய்ப்பு காரணங்களாலும், வேளாண்மை மற்றும் பிற தொழில்களில் கூடுதல் வருவாய் காரணமாகவும் இன்று கூரை வீடுகளும் ஓட்டு வீடுகளும் மெல்ல மெல்ல மறைந்து கான்கிரீட் வீடுகள் முளைத்து வருகின்றன. 


வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும் அன்றெல்லாம் ஓரிடத்தில் படுத்துறங்குவது இயல்பாய் இருந்திருக்கலாம். ஆனால் இன்றோ ஒவ்வொவரும் தனியாக இருக்கவே விரும்புகின்றனர். நடுத்தரவர்க்க வாழ்க்கை முறையில் தவிர்க்க முடியாத ஒரு பண்பாட்டுக் கூறாக இது மாறி உள்ளது.

எங்களது வீட்டிலும், மாடியில் ஒரு அறை தேவைப்பட்டதால் அதற்கான வேலைகள் 2023 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. வேலைகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி இருந்தன. டிசம்பருக்குள் வேலையை முடித்து விட வேண்டும் என்பதால் 26 ஆம் தேதி காலை சுமார் 10 மணி அளவில் கடைக்குச் சென்று கட்டட வேலைக்குத் தேவையான பொருட்கள் சிலவற்றை வாங்கிக் கொண்டு வழக்கமாக நான் பயணிக்கும் ஸ்கூட்டியில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். 

சாலையின் வலது பக்கம்
விளையாட்டு மைதானம். சில இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். நான் வசிக்கும் வீட்டு வசதி வாரிய வளாகக் குடியிருப்பில் தெரு நாய்களுக்குப் பஞ்சமில்லை. தெரு நாய்கள்தான் அந்தந்தத் தெருவுக்கான பாதுகாவலர்களும் கூட. வீட்டை நெருங்கும் தருவாயில் விளையாட்டு மைதானத்தில் இருந்த ஒரு நாய் திடீரென குறுக்கே வர, அதன் மீது ஸ்கூட்டி மோதி நான் கீழே விழுகிறேன். 

நான் விழுந்ததைப் பார்த்து அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்தவர்களும் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களும் ஓடி வந்தனர். நான் எழ முயற்சிக்கிறேன், முடியவில்லை. அதன் பிறகு என்னைக் கைத் தாங்கலாகப் பிடித்து பக்கத்தில் இருந்த சிமெண்ட் கட்டையில் உட்கார வைத்தனர். வலது கையை தூக்க முடியவில்லை, திருப்ப முடியவில்லை. கை, கால்கள் உள்ளிட்ட சில இடங்களில் சிராய்ப்புக் காயங்கள்.

உடனே குடிக்கத் தண்ணீர் கொடுத்தார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு அம்மா எலுமிச்சை ஜூஸ் போட்டு கொண்டு வந்து தருகிறார். ஒரு இளைஞர் பக்கத்தில் உள்ள கடையில் இருந்து மாசா மாம்பழச்
சாரு வாங்கித் தருகிறார். ஒரு முதியவர் மூக்குத்திப்பூண்டு (இதை தலைவெட்டிப் பூண்டு என்றும் சொல்வதுண்டு) இலையைக் கசக்கி அதன் சாற்றை சிராய்ப்புக் காங்களின் மேல் விடுகிறார். பெரும்பாலும் எல்லோரும் தெரிந்தவர்கள்தான் என்றாலும் இவர்களின் இந்த உதவி என்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டது. அடிபட்ட வலி கூட மறந்து போனது.

அதே தெருவில் மிக அருகில்தான் எனது வீடு. இதைக் கேள்விப்பட்டு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த மேஸ்திரியும் எனது மகனும் ஓடி வந்தனர். ஒரு ஆட்டோவைப் பிடித்து உடனடியாக பெல் மருத்துவமனைக்குச் சென்றோம். மருத்துவர் என்னை பரிசோதித்து பார்த்த பிறகு, செவிலியர்கள் காயத்திற்கு மருந்து போட்டனர். 

Radial head replacement surgery

எக்ஸ்ரே  எடுத்துப் பார்த்ததில் வலது கை முட்டியில் எலும்பு உடைபட்டிருப்பதாகச் சொல்லி இராணிப்பேட்டையில் உள்ள எஸ்எம்எச் மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர். அங்கே வலது கை முட்டியை ஸ்கேன் செய்து பார்த்ததில் ரேடியல் ஹெட்டில் (fracture on radial head) இரண்டு இடத்தில் உடைந்திருந்தது; எனவே, அதை அறுவை சிகிச்சை மூலம் மாற்ற வேண்டும் என்று மருத்துவர் பரிந்துரைக்க, மூட்டு எலும்பின் (radial head) தலையை வெட்டி எடுத்து விட்டு செயற்கைத் தலையைப் பொருத்தி அறுவை சிகிச்சை செய்தனர். நான்கு நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பினேன். 

இது நடந்து முடிந்து நான்கு மாதங்களுக்கு மேல் உருண்டோடி விட்டன. எனது கையைப் பார்த்தால் அடிபட்ட கை போல தெரியாது. இயல்பாகத்தான் தெரியும். ஆனால் பழைய மாதிரி அதனுடைய வலு இல்லை என்பதை மட்டும் உணர முடிகிறது.

மேலும் இரு சம்பவங்கள்... அடுத்து....

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்