Showing posts with label caste. Show all posts
Showing posts with label caste. Show all posts

Wednesday, 19 July 2023

மாங்கனியில் சாதியப் புழுக்கள்!

மாங்கனி - 
'சீசன்' முடியும் காலம்,
நேற்று,
ஐந்து கிலோ வாங்கினேன்,
பார்க்க
அழகாய்த்தான் இருந்தது.
மினுமினுப்பைப் 
பார்த்தேனே ஒழிய
தொட்டுப் பார்க்கவில்லை.
விளைவு,
அறுக்க அறுக்க 
புழுக்கள் நெளிந்தன!

மீதி 
மூன்று கிலோவை 
திருப்பிக் கொடுத்தேன்!
"ஏங்க இப்படி?" என்றேன்!
எமக்கு மட்டும் 
எப்படித் தெரியும் என்றார்!
அவர் வியாபாரி
அப்படித்தானே பேசுவார்!
'உமக்கு மூளை எங்கே போனது?'
உள் மனது முணுமுணுத்தது.


சாதி கூட 
சிலருக்கு
அழகாய்த்தான் தெரியும்
மாங்கனி போல,
அதை அறுக்காதவரை!
குறுக்கும் நெடுக்குமாக
வகுத்துச் பார்,
அங்கே
ஓராயிரம் 
சாதியப் புழுக்கள் 
நெளிவது தெரியும்!

நெளியும் புழுக்களை 
சுமக்கும் கனிகளை
வீசத் தெரிந்த நீ,
சாதியப் புழுக்களைக்
காக்கும் மாங்கனியை 
என்ன செய்யப்......?
சீசன் முடியப் போகிறது 
விரைந்து முடிவெடு 
இல்லையேல் 
நீயும்
நெளிவாய்
புழுவாய்!

ஊரான்

Thursday, 8 June 2023

பிறவிக் குணம்: அறிவியலா?

கை, கால்கள், கண், காது, மூக்கு, குரல் வளம் உள்ளிட்ட உறுப்புகள் தொடர்பான உடல் கட்டமைப்பு (body constitution) மட்டுமே பிறப்பால், பரம்பரையால் ஓரளவுக்குத் தீர்மானிக்கப்படுபவை.  இவை கூட உணவு முறை மற்றும் உடல் உழைப்பு, வாழுகின்ற தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப மாற்றத்திற்குரியவை.

ஆனால், மனம் குணம் நடத்தை சார்ந்த பண்புகளை ஒரு மனிதன் வாழுகின்ற குழுச் சூழல், அவன் பெறக்கூடிய கருத்தியல் ரீதியிலான உள்ளீடுகளே தீர்மானிக்கின்றன. 

ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்த பச்சிளம் குழந்தையை மருத்துவமனையில் பிறந்த கையோடு எடுத்துச் சென்று அந்தக் குழந்தை யாருக்குப் பிறந்தது என்று அக்குழந்தை  அறியாமலேயே வேறு ஒரு சாதிக் குடும்பத்தில் வளர்த்து வந்தால் அந்தக் குழந்தை எத்தகையப் பண்புகளை, நடத்தையை, குணத்தைப் பெற்றிருக்கும்?

தான் வாழ்கின்ற சூழலுக்கு ஏற்பதான் ஒவ்வொரு மனிதனும் தனக்கான பண்புகளை, நடத்தையே, குணத்தைப் பெறுகின்றான். இதை அனுபவப் பூர்வமாக உணர்ந்து ஒரு தொடர் கட்டுரையையே நான் எழுதி இருக்கிறேன்.

எனவே, பிறப்பால் ஒருவரின் குணத்தை, பண்பை நடத்தையை, தீர்மானிப்பது அறிவியலுக்குப் புறம்பானது. 

ஊரான்


தொடர்புடைய பதிவுகள்