Thursday, June 19, 2025

சாகட்டும்! அந்த ஒரு சிலரோடு முடியட்டும் சாராய சாக்காடு!

கள் இறக்குவதன் மூலமாகத்தான் பனை தொழில் பாதுகாக்கப்படுமா? கள் இறக்கினால் தமிழ்நாடு ஓஹோவென்று உயர்ந்து விடுமா? பனையில் இருந்து வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் சாத்தியமில்லையா? 

பனை வெல்லம், கருப்பட்டி, இதைத்தாண்டி வேறு என்ன வேண்டும்? நொங்கு, பனங்கிழங்குகூட காசுதானே? சும்மாவா கிடைக்கிறது? பனம்பழம் அதன் கூழை ஏன் 'மார்க்கெட்டிங்' செய்யக்கூடாது? 

தென்னை, பயன்பாடு சொல்ல வேண்டியதில்லை. அது தரும் எல்லாமே பயன்தான். பிறகெதற்கு கள்?

கள்ளுண்ட கோமாளி

கள் வேண்டும் என்றால் ஈச்சமரம்கூட வளர்க்கலாமே?  மக்கள் நலன் சார்ந்து சிந்திப்பதே இன்றைய தேவை.

கள்ளை எல்லோரும் குடிப்பதில்லை. குடிகாரர்கள் மட்டுமே பனை-தென்னை மரத்தடிகளில் தவம் கிடப்பார்கள். 
கள் ஒரு உணவு என்று பேசுபவன் மகா மடையன். கள் தேவை என்று கோருவது குடிகாரர்களின் கோரிக்கை.

எந்த ஒரு தொழிலிலும் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருள் உடல் நலனுக்குக் கேடு விளைவிப்பதாக இருக்கக் கூடாது. 

கள்ளில் ஆல்கஹால் அளவு குறைவு என்று பேசுபவர்களே? டாஸ்மாக் சரக்கில் ஆல்கஹாலின் அளவைக் குறைத்து விட்டால் அது போதைப்பொருள்  இல்லை என்று ஆகிவிடுமா? ஆல்கஹால் அது எந்த அளவில் இருந்தாலும் அதனால் போதை ஏறுகிறது என்றால் அதை ஆதரிப்பது மக்களுக்கு எதிரானதே!  மக்களுக்கு எதிரானதை ஆதரிப்பவர்கள் மக்கள் விரோதிகளே!

கள் இறக்கினால் ஒருசிலருக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கலாம்.
காசு பணம் கிடைக்கும் என்பதற்காகக் காமக்கிழத்தியாய் ஆக முடியுமா? 

ஒரு சிலருக்காக பலர் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? பலருக்காக சிலர் விட்டுக் கொடுப்பதுதானே உலக நியதி!

சாராயம், கள்ளு, போதைப் பொருள்களை ஒட்டுமொத்தமாக, உடனடியாக ஒழிக்க முடியாது என்று சொல்வது கோழைத்தனத்தின் அல்லது இயலாமையின் அல்லது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு. 

சாராயத்த உடனடியாக நிறுத்திவிட்டால் அதிலிருந்து மீள முடியாமல் ஒரு சிலர் மாண்டு போகலாம் என்று உரைப்போரும் உண்டு. சாகட்டும்! அந்த ஒரு சிலரோடு முடியட்டும் சாராய சாக்காடு!

ஊரான்

Sunday, June 1, 2025

தலைவனுக்காகக் காத்துக் கிடக்கும் தமிழ்நாடு!

“இராணிப்பேட்டை, பெல் வளாகத்தில் நான் வசித்தபோது பொன்னை ஆற்றில் (நீவாநதி) கால் நனைத்திருக்கிறேன், ஆனால் நீந்தியதில்லை. பெருவெள்ளமாய் பீறிட்டுப் பாயும் கவிப்பித்தனின் 'நீவாநதியில்' நீந்துவதற்காகக் காத்திருக்கிறேன்”

என, கவிப்பித்தனின் “பிணங்களின் கதை” சிறுகதைத் தொகுப்பைப் வாசித்த பிறகு கடந்த ஆண்டு அக்டோபரில் அவரின் “நீவாநதி” நாவலை வாசிக்க வேண்டும் என்கிற எனது அவாவை வெளிப்படுத்தி இருந்தேன்.


இந்த மாதத் தொடக்கத்தில், இரா.சுப்பிரமணி அவர்களின் “பெரியாரின் போர்க்களங்களைச்” சுற்றி வந்தபோது, இடையில்   ‘நீவாநதி’யில் இறங்கி நீந்தத் தொடங்கி, அது ஓடிய திசை எங்கும் நானும் ஓடி, நிரம்பி வழிந்த ஏரிகளில் முங்கி எழுந்து, சலசலக்கும் நெல் மணிகளை உரசிக் கொண்டு, பசுமை படர்ந்த வயல் வரப்புகளை விட்டேகி, கொல்லை மேடுகளின் கடலைச் செடிகளின் ஊடே மொச்சை வாசத்தில் மிதந்தவாறு, காடுகளில் ஆடுகளுடன் ஆட்டம் போட்டு, மாலையில் சுண்டி இழுத்தக் கருவாட்டுக் குழம்பில் களி உருண்டைகள் வயிற்றை நிரப்ப, அயர்ந்து உறங்கி காலைக் கடனைக் கழித்து, கால் கழுவ ஆற்றில் கைநீட்டிய போது, கானல் நீரில் விரல்கள் தணக்க, நெஞ்சு கனத்து, மீண்டும் “பெரியாரின் போர்க்களங்களில்” நுழையலானேன்.

பெரியாரின் போர்க்களங்கள் 

ஒத்துழையாமை இயக்கம், கள்ளுக்கடை மறியல், சேரன்மாதேவி குருகுலத்தில் பாகுபாடு,  வைக்கம் போராட்டம்,  இந்தி எதிர்ப்பு, இடஒதுக்கீட்டுக்கான வகுப்புரிமைப் போராட்டம், வடவர் சுரண்டல், இந்தித் திணிப்பு, பிள்ளையார் பொம்மை உடைப்பு,  தேசியக்கொடி எரிப்பு, இராமன் உருவ எரிப்பு, பிராமணாள் பெயர் அழிப்பு,  காந்திப்பட எரிப்பு, இந்திய அரசியல் சட்ட எரிப்பு, இந்திய தேசப்பட எரிப்பு,  எருமைக்கிடா வெட்டுத் தடுப்பு,  கம்பராமாயணம் நூல் எரிப்பு, கோவில் கர்ப்பக்கிரக நுழைவு என எண்ணற்றப்  போர்க்களங்களின் ஊடே பயணித்து வெளியே வந்த பிறகு, நான் பார்த்ததை, உணர்ந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
***
இது ஒரு இரண்டாயிரம் ஆண்டுகால ஆரிய-திராவிட நெடும் போர். 1920-களில் 'அந்நிய வெள்ளையர்களுக்கு' எதிரான ஒத்துழையாமை இயக்கம் எனும் போர்க்களத்தில் நுழைந்த பெரியார், 1970-களில் 'இந்திய வெள்ளையர்களுக்கு' எதிரான கர்ப்பக்கிரக நுழைவு எனும் போர்க்களம் வரை எதிரிகளைக் கதறக் கதறத் துரத்தி இருக்கிறார். 

போர்க்களம் புகுமுன், போரின்  அவசியம் குறித்து ‘குடியரசு’விலும் ‘விடுதலை’யிலும் முன்கூட்டியே அறிவிப்பு செய்து, துண்டறிக்கைகள் மூலம்  போராட்டத்தின் நோக்கத்தை உணர்த்தி, ஊர்ஊராய் கூட்டம் போட்டு அறைகூவல் விடுத்து, போராளிகளின் பட்டியலை முன்கூட்டியே உறுதி செய்து, வழக்காட வழக்கறிஞர்களையும் ஏற்பாடு செய்து, பொது மக்களுக்கோ பொது அமைதிக்கோ இடையூறு நேராமல்,
நூற்றுக் கணக்கில் பல்லாயிரக்கணக்கில் போராளிகளைக் களம் இறக்கி, போர்க்களத்தில் முன்வரிசையில் தானே முன்நின்று, தான் மட்டுமன்றி தனது சகோதரி மற்றும் இணையரையும் இணைத்துக் கொண்டு, தடையை மீறி கைதானால் குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் போர் நியாயமானது என நெஞ்சு நிமிர்த்தி, அபராதம் விதித்தாலும் அதைக் கட்ட‌மறுத்து சிறை புகுந்து, கல் உடைத்து, எண்ணற்றோர் உயிர் பலியானபோதும் துவளாமல், தள்ளாத வயதிலும் உடல் உபாதைகளை ஒரு பொருட்டாகக் கருதி ஓய்வெடுக்காமல்,  அடுத்தடுத்து களம் கண்டு எதிரிகளை நிலைகுலைய வைத்தச் சுவடுகளே போர்க்களங்கள் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. 

மக்களிடையே நிலவும் மதம் சார்ந்த பழக்கவழக்கங்களும் அவற்றைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவுகளும், நம்மை அடக்கி ஆள்வதற்கு அரசியல் அதிகாரமும்  எதிரிகளிடம் ஏவுகணைகளாகவும், கேடயங்களாகவும் இருக்கும்வரை, எதிரிகளை முற்றிலுமாக வீழ்த்த முடியாது என்பதை உணர்ந்ததாலோ என்னவோ, ஒன்றியத்தில் இருந்து வெளியேறி நமக்கானதொரு தனி சட்டத்தை உருவாக்கிக் கொண்டு, நம்மை நாமே ஆளுகின்ற அதிகாரம் கொண்ட தன்னாட்சிதான் தீர்வு என்று தனது இறுதி மூச்சுவரை முழங்கியதை உணர முடிகிறது.

இந்தித் திணிப்பு, குலக்கல்விக்கான புதிய கல்விக் கொள்கை, நீட் போர்வையில் உயர்கல்வி மறுப்பு, மும்மொழிக் கொள்கை திணிப்பு-ஏற்க மறுப்பதால் கல்விக்கான நிதி மறுப்பு,  ஆளுநர் மூலம் அதிகார முடக்கம் என எதிரிகளின் எண்ணற்ற ஏவுகணைகள் நம் மீது தொடர்ந்து ஏவப்படும் இன்றைய போர்க்களச் சூழலில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதே இன்றைய கேள்வியாக எஞ்சி நிற்கிறது. 

வெறும் அறிக்கைகள், கருத்தரங்கம், ஆர்ப்பாட்டம் எனும் அடையாளப் போராட்டங்களால் எதிரிகள்  அஞ்சுவதில்லை. இதன் விளைவு, ஆளுநர் என்ற பெயரில் ஒருவன் நம் மண்ணிலேயே நங்கூரமிட்டுக்கொண்டு, அய்யன் வள்ளுவனுக்கு காவிச் சாயம் பூசியதோடு, அய்யனை சனாதனக் காவலனாக்கி நம்மைப் பார்த்து கெக்களித்துக் கொண்டு திரிகிறான். 

இதுவே, பெரியாரின் காலம் என்றால் இந்த ஆட்டுத்தாடி தனது மாளிகையை விட்டு  ஓட்டம் பிடிக்கும் வரை ஆளுநர் மாளிகை அல்லவோ அன்றாடம் முற்றுகையிடப்பட்டிருக்கும்? 

செய்தித் தொடர்பு, தகவல் தொடர்பு, போக்குவரத்து வசதி, பொருளாதார வசதி இல்லாத ஒரு காலத்தில், கல்வி அறிவு குன்றிய மக்களை இறுதி இலக்கு எட்டும்வரை பல்லாயிரக் கணக்கில் பெரியாரால் திரட்டிப் போராட முடிந்தது. கட்சி மாச்சரிங்களைக் கடந்து பெரியாரின் பின்னால் பலரும் அணிதிரளக் காரணம் அவர் மக்களுக்கான தலைவராய் உண்மையாய் உழைத்தார்; வாழ்ந்தார். இன்றும் வாழ்கிறார்.

ஆனால், இன்று எல்லா வசதி வாய்ப்புகளும் இருந்தும், பத்து பேரைத் திரட்டுவதற்கே திண்டாடுகின்றன இயக்கங்கள். காரணம், பெரியாரைப் போன்று நம்பிக்கையான தலைவன் ஒருவனும் எந்த ஒரு கட்சியிலும், எந்த ஒரு இயக்கத்திலும் உருவாகவில்லை என்பதைத்தான் பெரியாரின் போர்க்களங்கள் புரிய வைக்கிறது.

பெரியாரைப் போன்று ஒரு மக்கள் தலைவன் உருவாகாதவரை எதிரிகளை ஒருபோதும் வீழ்த்த முடியாது. தலைவனுக்காக தமிழ்நாடு காத்துக் கிடக்கிறது!

ஊரான்

பெரியாரின் போர்க்களங்கள்
ஆசிரியர்: இரா.சுப்பிரமணி வெளியீடு: கருஞ்சட்டைப் பதிப்பகம்
விலை ரூ.500/-
தொடர்புக்கு: 044-24726408, 81229 46408.
web: www.karunchattaibooks.com

Saturday, May 31, 2025

இணை ஏற்பு: நாற்பதாம் ஆண்டு!

மே மாதம் 27 அன்று அகவை 67 முடிந்து 68 இல் அடி எடுத்து வைத்து, நண்பர்களின் வாழ்த்து மழையில் நனைந்த போது, ஜூன் 1 (1986) எனது இல்வாழ்க்கை இணை ஏற்பு நாள் என்பதை நான்கு நாட்களுக்கு முன்பே, கல்லூரியில் எனது வலக்கரமாய் விளங்கிய இனிய நண்பன் ராஜன் சேக்ரி நினைவுபடுத்தினான். 

எமது இணை ஏற்பு விழா குறித்து "இராகு காலத்தில் இணை ஏற்பு!" என்ற தலைப்பில் ஏற்கனவே எதிர்த்து நில் வலைப்பூவில் எழுதிய பதிவு ஒன்றை கல்லூரிக் கால நண்பர்கள் குழுவில் பகிர்ந்திருந்தேன். 


"ஜுன் முதல் நாள்தான் என் பிறந்தநாள் மச்சி..
திருமணத்திற்கு நானும் வந்திருந்தேன்.. பசுமையான நினைவுகளாக இன்றும் உளப்பதிவில் உள்ளது"

என்று நினைவு கூர்ந்ததோடு,

"இராகு காலத்தில் என்பதை விட இரகு (பிறந்த) காலம் அன்று திருமணம் நடந்தது என்பதுதான் கூடுதல் சிறப்பு"

என்று நண்பன் இரகுநாதன் பதில் எழுதினான்.

அதற்கு நான்,

"இரகு இருக்கும் இடத்தில் இராகுவுக்கு என்ன வேலை?"

என்று பதில் எழுதினேன். 

உண்மைதானே? உற்ற நண்பர்களும், தோழர்களும், உறவுகளும் நம்மை அரவணைத்துக் காக்கும் போது 'இராகு'வெல்லாம் எம்மாத்திரம்?

காசு பணம் பொருளைவிட நேசக்கரம் நீட்டும் நட்புதானே நமது நினைவுகளை பசுமையாக்குகின்றன. உறவுகள்கூட சில பல காரணங்களுக்காக இடையில் அறுபடலாம், ஆனால் நட்பு, பூத்த நாள் முதல் உதிரும் இறுதி நாள் வரை வாடாமல் மிளிர்வதால்தானே வண்டுகள் வட்டமடிக்கின்றன.

சாதி மதம் பழக்க வழக்கம் வேறு வேறாயினும் ஒருசிலருக்கிடையில் நட்பு பூக்கிறதே எப்படி? பொய், பித்தலாட்டம் ஏமாற்று வஞ்சகக் கேடுகளை விட்டொழித்து, உண்மை நேர்மை நியாயத்தைக் கைக்கொள்ளும் இடமே மாசற்ற நட்பு மிளிரும் இடம். 

ஒத்த உணர்ச்சிதான் நட்புக்கு அடிப்படை என்பதால், 
சிலசமயம் பொய், பித்தலாட்டம் ஏமாற்று வஞ்சகம் என ஏதாவதொன்று ஒரு நண்பனை ஒட்டிக் கொண்டால் மறுகணமே அவனுடனான நட்பை வெட்டி விடுகிறோம். 

அதனால்தான், "ஒத்த உணர்ச்சி இருக்கும்வரை உறவையும் தோழமையையும் நட்பையும் ஒருவராலும் உடைக்க முடியாது" 

என்று 13.04.2025 அன்று நடைபெற்ற எனது மகனின் இணைஏற்பு விழா குறித்து எழுதியபோது குறிப்பிட்டிருந்தேன்.

எமது இணை ஏற்பு விழா குறித்து "எதிர்த்து நில்" வலைப்பூவில் எழுதிய பதிவு கீழே இணைப்பில்.


நன்றி

பொன்.சேகர்
இணை ஏற்பு



































Thursday, May 29, 2025

பார்ப்பனர்களின் முகத்தில் கரியைப் பூசும் பிரம்மா !

அக்டோபர் 7, 2019 அன்று எழுதிய கட்டுரை. மீள் பதிவு.
****
ண்ணா பல்கலைக் கழக இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் பகவத் கீதையைப் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளது குறித்து தொலைக்காட்சிகளில் அனல் பறக்கும் விவாதங்கள் அரங்கேறின. காந்தியைக் கொலை செய்ய கோட்சேவைத் தூண்டிய ஒரு கொலை நூலை மாணவர்கள் படிப்பதா என பதறுகிறார்கள் பகுத்தறிவாளர்கள். அதுவும் அண்ணா பெயரில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்திலா என ஆதங்கப்படுகிறார்கள். நால் வருண சாதி அமைப்பை நியாயப்படுத்தும் பகவத் கீதையை பாடத்திட்டத்தில் சேர்ப்பது பார்ப்பன மேலாண்மையை நிலை நாட்டுவதும் மறைமுகமாக சமஸ்கிருதத்தைப் புகுத்துவதும்தான் மோடி அரசின் நோக்கம் என்பதே பகவத் கீதையை எதிர்ப்போரின் கருத்தாக இருக்கிறது.









மோடி எதைச் செய்தாலும் எதிர்ப்பதே பெரியாரிஸ்டுகளின் வேலையாப் போச்சு என்கிறது பார்ப்பன தரப்பு. மானுடவியல், தனிமனித ஆளுமை, நிர்வாக மேலாண்மை குறித்துத் தெரிந்து கொள்ள ஏராளமான செய்திகள் கீதையில் கொட்டிக் கிடக்கிறது; மேலும் இந்து மதத்துக்கும் பகவத் கீதைக்கும் தொடர்பே கிடையாது; நால்வருண அமைப்பு என்பது செய்கிற தொழிலை அடிப்படையாகக் கொண்டது; வருண அமைப்புக்கும் சாதிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என அடித்துச் சொல்கிறார்கள். கீதை அனைவருக்குமான ஒரு பண்பாட்டு நூல். பிளாட்டோவையும் அரிஸ்டாட்டிலையும் படிக்கும் போது பகவத் கீதையை ஏன் படிக்கக் கூடாது என கேள்வி எழுப்புகிறது வலதுசாரி பார்ப்பனத் தரப்பு.

இதில் எந்தத் தரப்பு சொல்வது சரி. சாதாரண மக்களுக்கு பொறியியல் பாடத்திட்டம் குறித்த விவரம் தெரியாது.  ‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது’ என்பதைத்தவிர பகவத் கீதை பற்றி வேறு எதுவும் தெரியாது. “எதப் படிச்சா என்ன? வேலை கெடச்சா சரி!” என்பதைத் தாண்டி பொறியியல் மாணவர்களும் சிந்திப்பதாகத் தெரியவில்லை. மோடிகளும் எடப்பாடிகளும் நீடிக்கும் வரை யார் எதைப் படிச்சாலும் எந்த வேலைக்கும் உத்தரவாதம் இல்லை என்பது மட்டும்தான் தற்போதைக்கு எல்லோருக்கும் தெரிந்த செய்தி. இதுல மேலாண்மைக் கோட்பாடாம்! ஆளுமைத் திறனாம்! சோத்துக்கே வழியில்லையாம். ஆனால் சோக்குக்கு மட்டும் கொறச்சல் இல்ல!’

சரி! விசயத்துக்கு வருவோம்! பகுத்தறிவு தரப்பு குறித்து நாம் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. பார்ப்பனர்களின் கருத்தை பரிசீலித்தாலே எது சரி என்பதை முடிவு செய்ய முடியும் எனக் கருதுகிறேன்.

பகவத் கீதைக்கும் இந்து மதத்துக்கும் தொடர்பே கிடையாது?

“ருக்ஸாம யஜூரேவ ச!” (கீதை: 9-17). இருக்கு, சாம, யஜூர் என்ற மூன்று வேதங்களும் நானேதான் என்கிறான் கிருஷ்ணன். “இருக்கு, எஜூர், சாம என்னும் பெயரையுடைய அநாதியான வேதத்தை அக்கினி, வாயு, சூரியன் இவர்கள் மூவரிடத்தினின்றும் (பிரம்மா) வெளிப்படுத்தினார்” (மனு:1-23) என்கிறான் மனு.

வேதங்கள், மனு தரும சாஸ்திரம், பகவத் கீதை இவை எல்லாம் இந்து மதத்தைப் பற்றிப் பேசாமல் கன்பூசியசிசமா பேசுகிறது? கீதைக்கும் இந்து மதத்திற்கும் உள்ள தொடர்பு குறித்த சான்றுகள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கும் போது பகவத் கீதை ஒரு இந்து மத நூலே அல்ல என்று ஒருவன் பேசுகிறான் என்றால் அவனை சந்தேகப்பட வேண்டுமா? வேண்டாமா?

மனுதரும சாஸ்திரமும் கீதையும்!

“சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்” (கீதை: 4-13). “பார்ப்பனர், சத்திரியர். வைசியர், சூத்திரன் ஆகிய நான்கு வருணங்களையும்”, “கு ணகர்மவி பாக” (கீதை:4-13).  “அவர்களுக்கான குணங்களையும் கர்மங்களையும் நானே படைத்தேன்” என்கிறான் கிருஷ்ணன். இதையேதான் “உலக விருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம், புஜம், துடை, கால் இவைகளினின்றும் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் இவர்களைக் கிரமமாக உண்டு பண்ணினார்” (மனு:1-31) என்கிறது மனுதரும சாஸ்திரம்.












“வேதங்களையும், சாஸ்திரங்களையும் கற்றல் – கற்பித்தல் இவை பார்ப்பனர்களுக்கு இயல்பாகவே உண்டான கர்மங்கள்” (கீதை:18-42), “கொடையும் ஆளும் தன்மையும் சத்திரியர்களுக்கு இயல்பான கர்மங்கள் ஆகும்” (கீதை:18-43), “உழவு செய்தலும், பொருட்களை வாங்கி விற்பதும் வைசியர்களுக்கு இயல்பாக உண்டான கர்மங்கள்” (கீதை:18-44), “மக்கள் அனைவருக்கும் சேவை புரிவது நான்காம் வர்ணத்தவர்களுக்கு இயல்பாக உண்டான கர்மம்” (கீதை:18-45) என கீதை சொல்கிறது.

இதையேதான் மனுதரும சாஸ்திரமும் சொல்கிறது. “இவர்களுக்கான கர்மங்களைத் தனித்தனியாகப் பகுத்தார்” (மனு: 1-87), “பார்ப்பானுக்கு வேதம் ஓதுவித்தல், யாகம் செய்தல்” (மனு:1-88), “சத்திரியனுக்கு மக்களைக் காத்தல், தானம் கொடுத்தல்” (மனு:1-89), “வைசியனுக்கு பயிரிடுதல், வாணிபம் செய்தல்” (1-90), “சூத்திரனுக்கு இந்த மூன்று வருணத்தாருக்கும் பொறாமை இன்றி பணி செய்வதை தருமமாக ஏற்படுத்தினார்” (மனு:1-91).

கீதையும் மனுதரும சாஸ்திரமும் வேறு வேறு அல்ல என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? மனுதர்மத்தை சுலபமாக புரிய வைக்க, பதிய வைக்க எழுதப்பட்ட ஒரு கோனார் உரைதான் கீதை.

தொழிலை மாற்றிக் கொண்டால் வருண சாதி மாறிவிடுமா?

இதில் தொழிலை மாற்றிக் கொண்டால் அதாவது பார்ப்பனன் பிறருக்கு சேவை செய்தால் அவன் சூத்திரனாகவும், சூத்திரன் வேதம் ஓதி யாகம் வளர்த்தால் அவன் பார்ப்பானாகவும் ஆக முடியும் என்று மூச்சு முட்ட பேசுகின்றனர் பார்ப்பனர்கள்.

இசைக் கருவிகளை வாசிப்பது பார்ப்பானின் தொழில் கிடையாது.  வீணை, புல்லாங்குழல், வயலின், பக்க வாத்தியங்களான மிருதங்கம், கஞ்சிரா  வாசிக்கிற பார்ப்பனர்கள் எல்லாம் இசைவேளாளர்களாக சாதி மாறிவிட்டார்களா? அப்படி மாற்றிக் கொண்ட ஒரு பார்ப்பானையாவது காட்ட முடியுமா?

இவர்கள் சொல்வது போல அப்படி எல்லாம் மாற்றிக் கொள்ள முடியாது. “பிறருடைய தர்மத்தைக் காட்டிலும் தன்னுடைய தர்மம் உயர்ந்தது” (கீதை:18-47), “தனக்குரிய இயல்பான கடமையை விட்டுவிடலாகாது” (கீதை:18-48), உன்னுடைய தொழில்தான் உயர்ந்தது, அதை விட்டுவிடாதே என வலியுறுத்துகிறான் கிருஷ்ணன்.

ஒரு வேளை ஏதோ ஒரு காரணத்திற்காக உனது தொழிலை நீ மாற்றிக் கொண்டால் உனது வருணம் மாறிவிடுமா? உனது தொழிலை நீ மாற்றிக் கொள்ள உனக்கு அதிகாரம் கிடையாது என்பதுதான் இந்து மத சாஸ்திரம். “பார்ப்பனன் தொழிலைச் செய்தாலும் சூத்திரன் பார்ப்பன சாதியாகமாட்டான். ஏனென்றால் அவனுக்கு பார்ப்பனச் சாதித் தொழிலில் அதிகாரமில்லையல்லவா. சூத்திரன் தொழிலைச் செய்தாலும் பார்ப்பனன் சூத்திரசாதியாகமாட்டான். ஏனென்றால் அவன் ஈனத் தொழிலைச் செய்தாலும் அவன் சாதி உயர்ந்ததல்லவா. இப்படியே இந்த விசயங்களை பிரம்மாவும் நிச்சயம் செய்திருக்கிறார். (மனு:10-73).

நீ உனது தொழிலை மாற்றிக் கொண்டாலும் உனது வருணம் – சாதி மாறாது என ஷேசாத்திரிகள், கோலாகலன்கள், இராமசுப்புக்களின் முகத்தில் கரியைப் பூசுகிறார் பிரம்மா.

ஊரான்

Saturday, May 10, 2025

கண்களைக் கசிய வைக்கும் "நீவாநதி"!

“அன்பளிப்புகள் தவிர்க்கப்பட வேண்டும்!’ என்று அன்பான வேண்டுகோள் விடுத்தும், எமது இல்ல மணவிழாவில் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை தோழர்கள் பரிசளித்திருந்தனர். திருப்பி செலுத்தப்பட வேண்டிய “மொய்” கணக்கில் நூல்கள் சேராது என்பதனால் இந்த அன்பளிப்புகளால் எனக்கு வருத்தம் ஏதும் இல்லை; மாறாக மகிழ்ச்சிதான்.

திருமணம் ஒருவரின் வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனை என்றால் நூல்களும்கூட பலருக்கு வாழ்க்கையில் திருப்பங்களை ஏற்படுத்த வல்லவைதானே?


இருபத்தோறு பகுதிகளைக் கொண்ட “பெரியாரின் போர்க்களங்கள்” என்ற நூலின் ஏழு பகுதிகளை வாசித்து முடித்த போது, எதற்காக ஒருவர் ஒரு நூலை எழுத வேண்டும், எதற்காக மற்றொருவர் அதை வாசிக்க வேண்டும், பெரியாரின் போர்க்களங்களைத் தெரிந்து கொண்டு நாம் என்ன செய்யப் போகிறோம் போன்ற கேள்விகள் என்னுள்ளே எழத் தொடங்கிய போது, 11.05.2025 அன்று கவிப்பித்தன் அவர்களின் “நீவாநதி” உள்ளிட்ட அவரது படைப்புகள் மீதான உரையாடல் நிகழ்வு ஒன்று வேலூரில்
நடப்பதாக முகநூல் செய்தி ஒன்றைப் பார்த்தேன். 
***
ஏற்கனவே, அவரது "பிணங்களின் கதை" சிறு கதைகள் குறித்த ஒரு பகுப்பாய்வுக் கட்டுரையை வெளியிட்டிருந்தேன். அதைப் படித்த ‘பெல்’ நண்பர் சங்கரநாராயணன் அவர்கள், நீவாநதி நாவல் பற்றி குறிப்பிட்டதோடு, தன்னிடம் உள்ள அந்த நாவலை எனக்குத் தருவதாகக் கூறி இருந்தார். மணவிழா அன்பளிப்புத் தொகுப்பில் அந்த நாவல் அவர் மூலம் எனக்குக் கிடைக்கப் பெற்றதால், “பெரியாரின் போர்க்களங்கள்” வாசிப்பதை நிறுத்திவிட்டு நீவாநதியை ஒரு வாரத்திற்கு முன்பு வாசிக்கத் தொடங்கினேன். 11.05.2025 க்குள் நாவல் குறித்த எனது கருத்தை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக, மற்ற சில வேலைகளின் ஊடே இந்த நாவலை இன்று முழுமையாகப் படித்து முடித்தேன்.

நாவலின் சாரம்

ஆந்திராவில் பெருமழை பெய்யும் காலங்களில், பொன்னை ஆற்றில் பெருக்கெடுக்கும் வெள்ளத்தை வாய்க்கால் வழியாகத் திருப்பி ஏரிகளை நிரப்பினால், நஞ்சை நிலங்களில் இரண்டு போகம் நெல் விளையும்; புஞ்சை நிலங்களில் வேர்க்கடலை, மொச்சை, காராமணி, துவரை என மானாவாரி பயிர்களுக்குப் பிறகு, கிணற்று நீரில்  கம்பு, சோளம், கேழ்வரகு என தானியங்கள் விளைந்து குவியும்.

களி, கூழ், சோறு என மீன் குழம்பும், கருவாட்டுக் குழம்பும் கமகமக்க வசூர் மக்களின் வயித்துப் பாட்டுக்குக் குறைவில்லை. 

கங்கையம்மன் திருவிழா, வள்ளிமலைத் தேர், பொங்கல், கார்த்திகை தீபம், தெருக்கூத்து என விழாக்களுக்கும்,  பண்டிகைகளுக்கும், கறி சோற்றுக்கும் பஞ்சமில்லை.

கடன ஒடன படாம, நகை நட்டு போட்டு விழி பிதுங்காம பெண்டு பிள்ளைகளைக் கரை சேர்க்க முடிந்தது.  ஆனால் படிப்பு மட்டும் பலருக்கும் எட்டிக்காயாய் கசந்து நின்றது. 

ஊர் நாட்டாமை சின்னசாமி ரெட்டியார் (வன்னிர்களுக்கான பட்டப் பெயர்) தனது மகனைப் படிக்க வைக்கப் படாத பாடுபட்டும், படிப்பு மட்டும் அவனுக்கு ஏறவில்லை.

ஆண்டுகள் உருண்டோடின. தவறாமல் பெய்யும், பருவ மழையும் மெல்ல மெல்ல குறையத் தொடங்கி, ஆற்றில் நீர்வரத்தும் அருகிப் போனதால், கால்ஏரி அரைஏரி நிரம்புவதே பெரும்பாடாய் மாறிப்போனது. ஒரு போக சாகுபடியே கேள்விக்குள்ளானது.  
நிலத்தடி நீர் சுண்டிக் போனதால் புஞ்சை நிலங்களும் பொட்டல் காடாய் மாறிப் போயின.

1980 வாக்கில் ‘பெல்’ (BHEL) நிறுவனத்திற்கும், அதன் துணை நிறுவனங்களுக்கும் லாலாப்பேட்டை
சுற்றுவட்டாரக் கிராமங்களில் வேளாண் நிலங்களை 
அடிமாட்டு விலைக்கு அரசாங்கம் பிடுங்கிக் கொண்ட அச்சம் வசூர் மக்களைத் தொற்றிக் கொள்ள,  பிறகு இவர்கள் ஊரிலும் புஞ்சை நிலங்களை அரசாங்கம் எடுத்துக் கொள்ள மானாவாரியும் கனவாய்ப் போனது.

இனியும் விவசாயத்தை நம்பினால் கால் வயித்துக் கஞ்சிக்கே திண்டாட்டம் என்பதால் சிலர் ஆடு மேய்க்கவும், சிலர் பெங்களூரு, இராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் எடுபிடி வேலைகளில் தங்களை பிணைத்துக் கொண்டனர்.

ஊர் நாட்டாமை சின்னசாமி தனது ஒரே மகனை பெங்களூருவுக்குப் பிழைக்க அனுப்ப, அது சரிபட்டு வராததால் உள்ளூரிலேயே ஆடு மேய்க்கச் சொல்ல, அப்போது வண்ணாரப் பெண்ணோடு அவன் காதல் வயப்பட, 'ஒரு வண்ணாரப் பொண்ணு வன்னியன் வீட்டுக்கு மருமகளா வருவதா?' என ஆத்திரங் கொண்டு, அதை உடைக்க ஆடுகளை விற்று அவனை ‘பெல் ஆன்சிலரி’க்கு வேலைக்கு அனுப்ப, அங்கே அவன் ஒரு விபத்தில் சிக்கி மாண்டு போகிறான். 

ஒரே மகனையும் பறிகொடுத்து விட்டு, ஒரு கட்டத்தில் வயித்துப் பாட்டுக்கே வழியற்றுப் போன நாட்டாமை, அவமானங்களையும் சுமந்து கொண்டு
ஒரு தோல் கம்பெனியில் எடுபிடி வேலை செய்ய, 

இராணிப்பேட்டையில் செயல்படும் இரசாயனத் தொழிற்சாலைகள் மற்றும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் சுற்றுவட்டார ஏரிகள் தத்தளிக்க, நிலத்தடி நீரும் நஞ்சாகியதைக் கண்டு நொந்து போகிறார்.

மேலும் சில ஆண்டுகள் உருண்டோடின. நிலத்தை இழந்தவர்கள் நிவாரணத்திற்காக வழக்கு, வாய்தா என நீதிமன்றப் படிகளில் ஏறி ஏறி இறங்கிய போதும் நிவாரணத் தொகையும் வந்தபாடில்லை.

அவ்வப்பொழுது பெய்யும் மழையால் ஏரிகளில் ஓரளவு தண்ணீர் நிறைந்தாலும் பொன்னை ஆறு மட்டும் வறண்டே கிடந்தது. 

ஆந்திர மாநிலம் கலவகுண்டாவில் ஆற்றை மறித்து கட்டிய அணை மொத்த நீரையும் இழுத்துக் கொண்டதால், இனி ஆற்றில் எஞ்சி இருப்பது கானல் நீரே என்பதைக் கண்ட பிறகு, முன்பு ஆற்று நீரைத் திருப்ப மணல் அள்ளும் ‘மணல் செரா’ இனி எதற்கு என அதை விற்று வாங்கிய வெங்காயத்தைக் கூழுக்குக் கடித்த போது, காரத்தால் நாட்டாமையின் கண்கள் கலங்கியதைப் போல, நீவாநதியும் நம் கண்களைக் கசிய வைக்கிறது.

நாவலோடு எல்லோராலும் ஒன்ற முடியுமா?

கல்வியை பெரிதாகக் கருதாமல் வேளாண்மையை மட்டுமே நம்பி வாழும் வடார்க்காடு மாவட்ட கிராமப்புற மக்களின் வட்டார மொழியில் நாவல் எழுதப்பட்டுள்ளதால், 
இந்த மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த,

அக்கடா, மணல் செரா, ரொப்பி, இஸ்துகினு, குள்ளாக் கண்டை, குரவை, உலுவை, மீங்கிரிங்க, கீறத, கொய்ந்திங்க, வைக்கப் போர், புட்டுக்கூடை, தளுவு பொங்கல், கொண்டுகான், கலக்கா, பொய்து, காவலிக் கிழங்கு, பாலைப் பூண்டு, மடவல்ச்சி, கீச்சாங் குருவி, தாக்குப் பள்ளம், பீவேலி, கெய்வாம, காரை முட்செடி, கவலை, மரக்கால், தோணி, சால், இருசு, வடம், கண்ணி, ஒட்டந்தட்டு, கருகம்புல், சாணிப்புல், துரத்தி, கதண்டு, ஆரா, ஓராவதி, அட்டங்கால், தூரி வலை, சிங்க வலை, மானாவாரி, புணை, மொசுலு, மஞ்சுப் புல், சீக்கம் முட்செடி, பீகுருவி, மொய்லியாருங்க, கடேரி, பாட்டை, பாரி, ஏர் ஓட்ட, பரம்படிக்க, அண்டை வெட்ட, சால், பனை புடுக்கு, மொகுமாவு, கோணயா, ஒயவு, கவுண்கோலு, நுணா, கோங்கீர, புழுதிக்கால், கொர்ராடு, சாவியாகத்தான், தும்பைச் செடி, பேபர்சி, காஞ்சிகினு கீது, ஈச்ச ஓலை, சரடு, ருப்பினர், அண்டை வெட்டுதல், பாத்தி, கசிறு, தொண்டாம் புற்கள், அம்பாரம், பனஞ்செடி, மாவளி போன்ற சொற்களின் புரிதலோடு 1980 களின் கிராமப்புற வாழ்வியலைக் கண்டவர்கள் நாவலோடு ஒட்ட முடியும். 
"""
எனது இளமைக்கால வாழ்க்கையை அச்சு அசலாக அப்படியே இந்நாவலின் கிராமப்புற வாழ்வு பிரதிபலிப்பதாலும்,  பிற்காலத்தில் பெல் ஆலையில் பணியாற்றியதாலும் மற்றும் அதன் துணை நிறுவனங்களோடு தொடர்பு கொண்டதாலும், பெல் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த பல்வேறு தொழிலாளர்களோடு பழகியதாலும், மாசடைந்த நகரங்களில் உலகில் பத்து இடங்களுக்குள் இராணிப்பேட்டை இருப்பதை  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா ஜெ.அசேன் அவர்கள் உதவியுடன் பல்வேறு தரவுகள் மூலம் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பதாலும் இந்த நாவலோடு என்னால் ஒன்றிச் செல்ல முடிகிறது.
***
பொதுவாக ஒரு நாவல் என்றால் உண்மையும், கற்பனைப் புனைவும் இரண்டறக் கலந்திருக்கும். புனைவுகளே எடுப்பாகத் தெரியும். ஆனால் நீவாநதி நிஜத்தை மட்டுமே பேசுகிறது. 

நிஜத்தைப் பேச வேண்டுமானால் நிஜத்தோடு வாழ்ந்திருக்க வேண்டும். நாவலாசிரியர் கவிப்பித்தன் அச்சு அசலாக நிஜத்தோடு வாழ்ந்திருக்கிறார். நாவலின் ஒவ்வொரு வரியிலும் அதைக் காண முடிகிறது. 

கதைக்களம் பயணிக்கும் காலகட்டத்தில் அரசியல் பொருளாதாரப் பண்பாட்டுத் தலங்களில் ஏற்படும் நகர்வுகள் எப்படி மக்களின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும், பழைய பண்பாட்டுக் கூறுகளில் சாதி-ஏற்றத்தாழ்வு, மூடநம்பிக்கை உள்ளிட்ட சில தவறானப் போக்குகளை நாசுக்காகச் சுட்டிக்காட்டும் பொழுது அது வாசகர்களுடைய சிந்தனையை மேம்படுத்த உதவும்.

நாட்டாமை சின்னசாமியின் மகன் மாண்டு போவதைவிட, வண்ணார-வன்னியர் காதலை வெற்றி பெற வைத்திருந்தால் நீவாநதி இன்னும் நெஞ்சுக்குள் ஆழமாய் பாய்ந்திருக்கும்.

மக்களின் வாழ்வியலை இந்நாவல் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. இதை மீண்டும் அதே மக்களிடம் சொல்லும் போதுதான் நாவலின் வெற்றி அடங்கி இருக்கிறது. கூத்து வடிவில் புராணக் கதைகள் கிராமங்களில் சொல்லப்படுவது போல, நீவாநதி போன்ற நாவல்கள் கதைகளாக எளிய மக்களிடம் நேரடியாக சொல்லப்பட வேண்டும். வேலூரில் நடத்த வேண்டிய கலந்துரையாடலை வசூரில் நடத்த வேண்டும். 

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Tuesday, May 6, 2025

கழிசடைகளின் கூடாரமாக "புரட்சிகர மக்கள் அதிகாரம்"!

 "புரட்சிகர மக்கள் அதிகாரம்" என்ற கோஷ்டியைச் சேர்ந்த புவன் என்கிற ஒரு நபர், பாடகர் கோவனுக்கு எதிராக முகநூலில் ஒரு காணொளி வெளியிட்டிருந்தார். 

புவன் காணொளி

Sekar P: "நீங்கள் பேசியதை நீங்களே ஒரு முறை கேட்டுப் பாருங்களேன். ஏதாவது புரிகிறதா என்று பார்ப்போம். எல்லாம், காணொளிகளுக்கு வந்தக் கேடு."

என அதற்கு ஒரு மறுமொழியை நான் வெளியிட்டிருந்தேன்.

அதற்கு, அதே "புரட்சிகர மக்கள் அதிகாரம்" கோஷ்டியைச் சேர்ந்த பென்னாகரம் "தோழர் கோபிநாத்" என்ற நபருக்கும் எனக்கும் இடையில் நடந்த உரையாடலை அப்படியே தருகிறேன்.

"கோபிநாத்": நீங்க இப்படி பேசுறதெல்லாம் கேக்குறது எங்களுக்கு சாபக்கேடு.

Sekar P:  வாண்டுகளின் வசவுகளைக் கேட்பதும் ஒரு சாபக்கேடுதான்.

"கோபிநாத்": உங்களைப் போன்ற துரோகிகளின் தூற்றலை கேட்பதும் சாபக்கேடுதான்.

Sekar P:  நான் உமக்கு என்ன துரோகம் பண்ணினேன் தம்பி? வசவு பாடி வம்படிப்பதுதான் உங்கள் வேலையோ? மீசைக்கார தாத்தா நல்லா வளத்திருக்காரு. வேறென்ன செய்ய? பெல் சிட்டி ஊழலை வளர்த்தவரின் வாரிசுகள் இப்படித்தானே பேசுவீங்க. நல்லா வருவீங்க தம்பி. வாழ்த்துகள். பணம் கொடுத்து ஏமாந்த பெல் ஊழியர்கள், அகவை 65 ஐத் தாண்டியும் மீசைக்கார ஆசானைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள், நியாயம் கேட்க?

"கோபிநாத்": நீ எனக்கு துரோகம் செயல சேகரு, கட்சியை காட்டி கொடுத்து திமுகவுக்கு அடகு வைத்து, மருதையனின் ரசிகர் குஞ்சியா ? வளம் வந்து புரட்சிகர கட்சியை துரோகம் பாதைக்கு எடுத்துட்டு போன திருடர்களுக்கு, துணை போன நீ துரோகி இல்லையா.

பெரிய தியாகி நீ, பெல் சிட்டி ஊழல் என்றால், அங்கு தங்கி கூத்தடித்த மருதையனும், காளியப்பனும் தியாகியா? சேகர். நீ துரோகிகளின் வாரிசு. அமைப்பு சொத்தை விற்று பங்கு போட்டுக் கொண்ட துரோகிகளின் கூட்டத்தில் உலாவும் பெருச்சாளி நீ. அமைப்பை உடைக்க பெல் சிட்டி ஊழல் என்கிற பதத்தை பயன்படுத்திய அயோக்கியர்கள். ஊழல் இருப்பின் ஏன் மருதையன்  ஓடி ஒளிந்து கொண்டான். எங்கு போனான், ஏன் எந்த கூட்டத்திற்கு வரவில்லை. ஏன் தலை மறைவு, ஏன் வெளிப்படையாக பேசவில்லை, ஏன் அணிகளிடம் வைத்து போராட வில்லை, இப்படி எத்தனையோ கேள்விகள் இருக்கிறது. ஏனென்றால் கட்சி உடைக்க துரோகி மருதையனுக்கு கிடைத்த ஆயுதம் பெல்சிட்டி ஊழல், சரி உங்களுக்கு இதற்கெல்லாம் கேள்வி கேட்க நேரமில்லை, பாவம் திமுகவிற்கு போய் சொம்புபடியுங்கள். உனக்கு எப்படி புரியும். நாங்க பேசறது .

நீங்க போயி திமுக கூட சேர்ந்து புரட்சி பண்ணுங்கள்.

***
இதைத் தொடர்ந்து நான் எழுதிய மறு மொழிகளை வெளியிடாமல் முடக்கிவிட்டது அந்த கோஷ்டி.

***
தொடர்ந்து எனக்கு எதிராக வசவுச் சொற்களை வாரி இறைத்தது.

"கோபிநாத்": டேய் பொறுக்கி, திமுக கிட்ட காசு வாங்கி வேலை செய்ற அயோக்கிய பயலே, உனக்கு கட்சியை பத்தியோ அல்லது நக்சல்பாரி அரசியல் பற்றியோ ஒரு மயிரும் தெரியாதுடா. கட்சியை திமுககிட்ட அடகு வச்சி பிழைப்பு நடத்துற அயோக்கிய பயலுகளுக்கு குண்டி கழுவி விடற நாயி நீ. எவண்டா உன்கிட்ட வரணும். நான் வரண்டா , உன் தலைவனை வர சொல்லுடா பேசுறதுக்கு. எனக்கு புத்தி சொல்ல உனக்கு என்னடா தகுதி இருக்கு அயோக்கிய பயலே.

***
கோபிநாத் என்ற இந்த நபருக்கு ஒரு 35 வயது இருக்கும். எனக்கோ வரும் 27 இல் 67 வயது முடிகிறது.

நான் மகஇக தொடங்கிய 1980 களின் தொடக்கத்திலிருந்து சுமார் இருபது ஆண்டு காலம் மகஇக மாநில செயற்குழுவிலும், தற்போது "மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின்" மாநில நிர்வாகக் குழுவிலும் செயல்பட்டு வருகிறேன். எனது புரட்சிகர வாழ்க்கை அனுபவங்களை "இழி குணம்" என்ற தொடரில் விரிவாக இதே தளத்தில் எழுதி உள்ளேன்.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் அதிகாரம் அமைப்பிற்குள் வந்த புதிய தலைமுறையைச் சேர்ந்த கோபிநாத் போன்ற இத்தகைய நபர்கள் பொது வாழ்க்கையில் ஈடுபடுவதற்கு லாயக்கற்றவர்கள் என்பதை இந்த உரையாடலே உணர்த்தி விடுகிறது.

'பெல் சிட்டி' ஊழலுக்கு உடனிருந்த இந்தக் கும்பலின் தலைவர் இருவர் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்த போது, மக்கள் அதிகாரம் அமைப்பிலிருந்து சில நபர்களுடன் வெளியேறி, சில காலம் 'மக்கள் அதிகாரம்' பெயரிலேயே செயல்பட்டு, தற்போது "புரட்சிகர‌ மக்கள் அதிகாரம்" என்ற பெயரில் செயல்படுகின்றனர். இது ஒரு ரவுடிக் கும்பல் என்பதை பழைய தோழர் ஒருவர் மிகச்சரியாகவே கணித்திருக்கிறார்.

எனவே, கோபிநாத் போன்ற நபர்களையும், இத்தகைய நபர்களை முன்னணியாளர்களாகக் கொண்ட "புரட்சிகர மக்கள் அதிகாரம்" என்ற குப்பலையும் அடையாளம் கண்டு புறந்தள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்மணி
மகஇக முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர்
06.05.2025

Thursday, April 24, 2025

மணவிழாவில் ஒத்த உணர்ச்சி கொண்டோரின் ஒன்று கூடல்!

முன்னிரவு  தொடங்கிய மேடை அலங்கார வேலைகள் முடியும் தருவாயில் ஒரு பக்கம், மாலைநேர மணவிழா விருந்துக்கான சமையல் வேலைகள் மறுபக்கம் நடந்து கொண்டிருக்க, பங்குனியின் கடைசிநாள் ஞாயிறு பிற்பகலில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஒவ்வொருவராக மண்டபத்தை நோக்கி வரத்தொடங்கினர். 

நண்பர்களும் உறவினர்களும் தோழர்களும் மண்டபத்தின் கீழ்வாசல் வழியாக திரள் திரளாய் நுழைவதைக் கண்டு அச்சமோ என்னவோ, கதிரவன் மேற்கு நோக்கி வேகமாக ஓடியதால்  வெக்கையும் சற்றே தணிந்தது.  வந்திருந்தோரின் நேச மழையில், நானோ கொடுங்கோடையிலும் உறைந்து போனேன்.

நண்பர்களை ஆரத்தழுவி கட்டி அணைப்பது வழக்கம்தான் என்றாலும், பல ஆண்டுகள் கழித்து சிலரைக் கட்டித் தழுவியபோது ‘ஸ்பைடர்மேனாக’ நான் பறக்கலானேன். 

வாழ்நாள் முழுக்க கூடவே பயணிக்கின்ற சொந்தங்கள், பொது வாழ்வில் களப்போராட்டங்களில் கைகோர்த்து பயணிக்கின்ற தோழர்கள், மிக நீண்டகாலம் அருகருகே அமர்ந்து வேலை பார்க்கும் சக ஊழியர்கள் 

என இவர்கள், சிலசமயங்களில் சிலபல காரணங்களுக்காக விலகி நிற்கவோ, தோழமையை துண்டித்துக் கொள்ளவோ, மனம் கசிந்து போகவோ நேரிடலாம்.

“நட்பு செய்வதற்கு தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை; ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்” என்கிறான் வள்ளுவன் (785)

அண்மையில் சென்னையில் மின்சாரத்தால் தாக்குண்டு மழை நீரில்  தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனை ஒரு இளைஞன் காப்பாற்றிய போது அவன் மீது அதைப் பார்ப்பவர்களுக்கு ஏற்படுகிற பரிவு ஒத்த உணர்ச்சியின் வெளிப்பாடுதானே? 

உலகையே உலுக்கிய சுனாமியின்போது உணவுக்காக நீண்ட வரிசையில் பலர் பசியோடு காத்திருக்க, முன்வரிசையில் தான்பெற்ற உணவை ‘என்னைவிடப் பசியோடு பலர் காத்துக் கிடக்கின்றனர்’ எனக்கூறி மீண்டும் மொத்த உணவோடு தனது உணவைச் சேர்த்த சிறுவனின் நடத்தையைப் படிக்கும் போது, அவன் எப்படி இருப்பான் என்பதுகூட தெரியவில்லை என்றாலும், அவன் மீது ஏற்படுகிற பரிவு ஒத்த உணர்ச்சியின் வெளிப்பாடன்றோ? 

அதனால்தான் நாம் உணர்வதை, நாம் செய்ய விரும்புவதை, பிறர் உணரும் போதும், செய்யும் போதும் ஏற்படும் உணர்ச்சிதான் நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கிறது என்கிறானோ வள்ளுவன்?

இரத்த உறவு எப்பொழுது ஒத்த உணர்ச்சியை ஏற்படுத்துகிறதோ அப்பொழுது உறவினர்களும் நண்பர்களாகி விடுவார்கள்; தோழர்களும்தான். ஒத்த உணர்ச்சி இருக்கும்வரை உறவையும் தோழமையையும் நட்பையும் ஒருவராலும் உடைக்க முடியாது. 

இப்படித்தான், நான் எனது உறவினர்களையும் தோழர்களையும் நண்பர்களையும் பார்க்கிறேன்; பாவிக்கிறேன்.

முதுமையையும் உடல் நலனையும் பொருட்படுத்தாமல் தூத்துக்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை, திருச்சி, தஞ்சை, கோவை, பொள்ளாச்சி, தாராபுரம், பாண்டிச்சேரி, சென்னை, காஞ்சிபுரம், தருமபுரி, பெங்களூரு, வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கம் மட்டவெட்டு-அத்திமூரான் கொட்டாய்  என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தொலை தூரங்களிலிருந்தும் அந்த ஒத்த உணர்ச்சிதான் எனது இல்ல மணவிழாவிற்கு  
திருப்பத்தூரை நோக்கி பலரையும் ஈர்த்ததோ?

இதுஒரு மணவிழா என்பதையும் தாண்டி, இது ஒத்த உணர்ச்சி கொண்டோரின் ஒன்றுகூடல் (get together) என்பதாகத்தான் ஒவ்வொருவரையும் உணர வைத்தது. 

“குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனை தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள்” என்கிறான் வள்ளுவன் (1025). இந்த ஒன்றுகூடல் கூட அப்படித்தானோ?

ஆம்! குற்றமற்றவர்களாகவும், குடிமக்களின் நலன்களுக்கு பாடுபடுவோராகவும் நம்மால் முடிந்தவற்றை செய்ய முனைவோம். நண்பர்களாய், மக்கள் நம்மைச் சூழ்ந்திருக்க நமக்கென்ன கவலை?

மணவிழாவில் பங்கேற்ற அனைவருக்கும் 
நன்றிப் பெருக்குடன்,

பொன்.சேகர்

Monday, April 7, 2025

கம்யூனிஸ்டுகள் மனுதர்மத்தைப் புரிந்து கொள்ளவில்லையா?

குழந்தை பிறந்த பத்தாவது அல்லது பன்னிரண்டாவது நாளில் புண்ணிய திதியில் நல்ல முகூர்த்தத்தில் நல்ல நட்சத்திரத்தில் பெயர் சூட்ட வேண்டும் (மனு: 2-30) 

உலகம் முழுக்க உள்ள இந்துக்கள் இன்றும்கூட இதன்படித்தானே பெயர் சூட்டுகிறார்கள்?

பிராமணனுக்கு மங்களத்தையும், சத்ரியனுக்கு பலத்தையும், வைசியனுக்குப் பொருளையும், சூத்திரனுக்குத் தாழ்வையும் காட்டுகின்ற பெயரைச் சூட்ட வேண்டும் (மனு: 2-31)

பிராமணனுக்கு சர்மா என்பதையும், சத்ரியனுக்கு வர்மா என்பதையும், வைசியனுக்குப் பதி என்பதையும், சூத்திரனுக்கு தாசன் என்பதையும் தொடர் பெயராக இட வேண்டும் (மனு: 2-32)


தோழர் மீனாட்சி முகர்ஜி, CPI (M) 
மத்தியக் குழு உறுப்பினர் 

சங்கர் தயாள் சர்மா, இது ஒரு பார்ப்பனரின் பெயர். சர்மா என்பது பார்ப்பனர்களில் ஒரு பிரிவு. இதுபோல முகர்ஜி, பானர்ஜி, சட்டர்ஜி, துபே, பாண்டே என பார்ப்பனர்களில் ஆயிரக்கணக்கான பிரிவுகள் உண்டு. 

ராம் கோபால் வர்மா. இது ஒரு சத்திரியனின் பெயர்.

குமுத் பல்லவ் பதி. இது ஒரு வைசியனின் பெயர். 

சித்தரஞ்சன் தாஸ் இது ஒரு சூத்திரனின் பெயர். 

இப்படித்தான் வட இந்தியாவில் மனுதர்மத்தின் வழிகாட்டுதல்படி இன்று வரை தங்களது பெயரை வைத்துக் கொள்கிறார்கள். 

விந்திய மலைக்குத் தெற்கே வாழ்ந்த திராவிடர்கள் மனுதர்மத்தை ஏற்க மறுத்ததால் (மனு: 10-43, 44) அன்றிலிருந்து பெயர் வைத்துக் கொள்வதில் மனுவின் வழிகாட்டுதலை கடைபிடிக்கவில்லை. எனவே பார்ப்பனர்களைத் தவிர பிற அனைவருமே சூத்திரர்களாகத் தரம் இறக்கப்பட்டிருந்தனர்.  அதனால்தான் நமது பண்டைய பக்தி இலக்கியங்கள் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களில்கூட மனுவின் அடிப்படையில் பெயர் சூட்டப்பட்டதில்லை. 

வட இந்தியாவில் நான்கு வருணங்களும் உண்டு. ஆனால் தென்னிந்தியாவில் பிராமணன், சூத்திரன் என இரு வருணங்கள் மட்டுமே உண்டு.

இன்று தமிழ்நாட்டில் பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பதில் மனுவின் வழிகாட்டுதல்படி இல்லை என்றாலும் தஷ், புஷ் என வடமொழி கலந்த பெயர்களாகத்தான் வைக்கிறார்கள் என்பது தனிக்கதை. 

அண்மையில் மதுரையில் நடந்து முடிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டத் தலைமைக் குழு உறுப்பினர்களின் பெயர்களில் சர்மா, பட்டாச்சார்யா, சவுத்ரி, தேஷ்பாண்டே, முகர்ஜிகளைக் காண முடிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் வாசுகி, பாலபாரதி, சண்முகங்களைத்தான் காண முடிகிறது. 

கம்யூனிஸ்டுகளாய் இருந்தாலும், பெயர் வைப்பதில் வடக்கே இன்னும் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ மனுவின் பிடியிலிருந்து மீளவில்லை என்பதையும், தெற்கில் உள்ளவர்கள் மனுவிலிருந்து என்றோ துண்டித்துக் கொண்டவர்கள் என்பதையும் உணர முடிகிறது.

மனுதர்மம் சமத்துவத்தையும் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் மறுப்பது. ஆனால் மூன்றையும் உயர்த்திப் பிடிப்பது பொதுவுடமை. எனவே, கம்யூனிஸ்டுகள் தங்களது பெயர்களுக்குப் பின்னால் மனுவின் வரையறையின்படி சாதிப்பட்டத்தைச் சுமப்பது மார்க்சுக்கு இழிவைத் தேடித் தருவதாகும்.

தமிழ்நாட்டு கம்யூனிஸ்டுகள்தான் இதை வடஇந்தியக் கம்யூனிஸ்டுகளுக்குச் சுட்டிக்காட்ட வேண்டும்.

ஊரான்