Tuesday, 9 December 2025

சங்கிகளின் சங்கை அறுக்கும் சித்தர்கள்! - 5

"அத்தி வரைவாடி அகப்பேய்
ஐம்பத்தோர் அட்சரமும் 
மித்தையாங் கண்டாயே அகப்பேய்
மெய்யென்று நம்பாதே. (17)"

மந்திரங்கள் தந்திரங்கள் என்பவை மாயை, அவற்றை மெய் என்று நம்புவது வீண் எனவும்,


"சரியை ஆகாதே அகப்பேய்
சாலோகங் கண்டாயே
கிரியை செய்தாலும் அகப்பேய் 
கிட்டுவது ஒன்றுமில்லை. (25)"

எவ்வளவுதான் சரியை (கோவில் வழிபாடு) செய்தாலும், 
எவ்வளவுதான் கிரியை (தியானம், யோகத்தின் ஒரு பகுதி) செய்தாலும், எதுவும் கிடைக்காது (மெய்ஞானம் கிட்டாது) எனவும்,

நாலு மறைகாணா அகப்பேய்
நாதனை யார் காண்பார்
நாலு மறை முடிவில் அகப்பேய் 
நற்குரு பாதமடி. (64)"

நான்கு வேதங்களைப் பேசினாலும் இறைவனைக் காண முடியாது எனவும்,

"சாதிபேதமில்லை அகப்பேய்
தானாகி நின்றவர்க்கே
ஓதி உணர்ந்தாலும் அகப்பேய் 
ஒன்றுந்தான் இல்லையடி. (68)"

என்பதோடு,

"மோட்சம் வேண்டார்கள் அகப்பேய் முத்தியும் வேண்டார்கள்
திட்சை வேண்டார்கள் அகப்பேய் சின்மயமானவர்கள். (82)"

மோட்சமில்லை, முக்தி இல்லை, தீட்சை எனும் சடங்கு இவை எதுவும் இல்லை எனவும், அதனால்

"வேதம் ஓதாதே அகப்பேய் 
மெய் கண்டோம் என்னாதே
பாதம் நம்பாதே அகப்பேய் 
பாவித்துப் பாராதே. (90)"

என வேதம் ஓதக்கூடாது என்று முடிக்கிறார் அகப்பேய்ச் சித்தர்.

***

“தாந்தி மித்திமி தந்தக்கோ னாரே
தீந்தி மித்திமி திந்தக்கோ னாரே
ஆனந்தக் கோனாரே - அருள்
ஆனந்தக் கோனாரே.

என்ற பிரபல பாடலுக்குச் சொந்தக்காரரான இடைக்காட்டுச் சித்தர்,

இடைக்காட்டுச் சித்தர்

“மோகம்போம் மூர்க்கம்போம் மோசம்போம்-தாகம்போம்
வேதமுதல் ஆகமங்கள் மேலானதென்று பல்கால்
ஒதுபிர மரத்துஉற்றுக் கால். (24)”

அதாவது, வேதங்கள், ஆகமங்கள் இவை மேலானதல்ல என வேதாந்திகளின் முகத்தில் கரியைப் பூசுகிறார் இடைக்காட்டுச் சித்தர்.

சங்கிகளுக்கு எதிரான சித்தர்களின் சீற்றம் தொடரும்...

ஊரான்

No comments: