Showing posts with label ஜெயலலிதா. Show all posts
Showing posts with label ஜெயலலிதா. Show all posts

Sunday, 5 November 2023

மழைக்காலம்: வடிகால்களை சரி செய்யுமா விடியல் அரசு?

போதிய மழை பெய்து ஓடைகளில், ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஏரிகள், குளங்கள், அணைகள் நிரம்பினாலும் வயல்களுக்குச் சென்று சேரும் வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்தாலும், தூர்வாரப்படாமல் இருப்பதாலும் கடைமடைப் பகுதிகளுக்கு நீர் சென்று சேராததால் பயிர்கள் கருகி நாசமாகின்றன; 

அதேபோல வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்தாலும் தூர்வாரப்படாமல் இருப்பதாலும் பெருமழை காலங்களில் பெய்யும் மழைநீர், வடிய வழி இல்லாததால் மேலுள்ள வயல்களில் வளரும் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி நாசமாகின்றன.

கோப்புப் படம்

ஆதிக்கச் சக்தியினர் மட்டுமன்றி சாதாரண விவசாயிகள் உள்ளிட்ட அனைவருமே தங்களின் தன்னலத்திற்காக இத்தகைய ஆக்கிரமிப்புகளை செய்துள்ளனர். பல கிராமங்களில் பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களே இல்லை என்ற நிலைதான் உள்ளது.

உள்ளாட்சி நிர்வாகங்கள் முடங்கிப் போனதனால்தான், 30 ஆண்டுகளுக்கு முன்பு இல்லாத இந்த நிலைமை தற்போது நிலவுகிறது. தங்களுக்குள் உள்ள போட்டி, பொறாமையின் காரணமாக இத்தகைய நிலைமைகளை விவசாயிகளே கண்டும் காணாமல் கடந்து செல்கின்றனர். இறுதியில் அவர்களே நட்டத்துக்கும் ஆளாகின்றனர்.

நிலைமைகளைப் புரிந்து கொண்டு, தன்னலத்தைக் கைவிட்டு, முடங்கிக் கிடக்கும் உள்ளாட்சி நிர்வாகத்தைத் தட்டி எழுப்பி, நீர் வரத்து மற்றும் வடிகால் வழிகளை சரி செய்யவில்லை என்றால் இனிவரும் காலங்களில் வேளாண்மையை கைவிட்டு திருவோடு ஏந்தும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவார்கள். 

நகர்ப்புறங்களில் சிறு மழைக்கே வீதிகளில் நீர் தேங்கி வடியாமல், வீடுகளுக்குள் புகுவதற்கான காரணம், வடிகால் வசதிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாலும் தூர்வாரப்படாமல் இருப்பதாலும்தான். 

எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் சீர்குலையத் தொடங்கிய உள்ளூராட்சி நிர்வாகம், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தீவிரமாகி, எடப்பாடி ஆட்சிக் காலத்தில் உச்சத்தைத் தொட்டது. இடையிடையே வந்த திமுக ஆட்சியிலும் இது தொடரவே செய்தது. இன்றும் தொடர்கிறது. 

நாம் விழித்துக் கொண்டு போராடவில்லை என்றால் அழிவு நமக்குத்தான்; அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அல்ல.

தற்போது பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையில், வடிகால் வசதி இல்லாததால் வயலில் தேங்கிய மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் அழுகியதை ஒரு விவசாயி விவரித்த அவலக் காட்சியை தொலைக்காட்சியில் பார்த்த பிறகு, வேதனையோடு இந்தப் பதிவை எழுதுகிறேன். 

ஊரான்

 

 

Thursday, 12 December 2019

அடுத்த நூறு ஆண்டுகளில் மெரினா இருக்குமா?


அண்ணா பல்கலைக்கழகத்தின் 40 வது பட்டமளிப்பு விழா 04.12.2019 அன்று சென்னையில் நடைபெற்றது. உறவினர் ஒருவர் முனைவர் பட்டம் பெறுவதால், நானும் அந்நிகழ்வில் ஒரு பார்வையாளராகப் பங்கேற்றேன். அண்ணா பல்கலைக்கழக நூலகக் கட்டடத்தில் உள்ள அரங்கத்தில் அவ்விழா நடைபெற்றது. 1,251 மாணவர்கள் நேரில் அழைக்கப்பட்டிருந்ததால், அந்த அரங்கம் அவர்களுக்கே போதுமானதாக இல்லை. உடன் வந்த உறவினர்கள் விழாவைக்கான அரங்கத்திற்கு வெளியே திரை அமைத்திருந்தார்கள். அந்த இடமும் நெருக்கடியாக இருந்ததால் கூட்டம் அலைமோதி முண்டியடித்துக் கொண்டுதான் திரையில்கூட நிகழ்ச்சியைக் காண முடிந்தது.
திரையில் பட்டமளிப்பு விழா

1,251 பேருக்கு ஆளுநர் நேரில் பட்டம் வழங்கினார் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர் 71 பேருக்கு மட்டுமே தனது கையால் பட்டம் வழங்கினார். இதில் வேடிக்கை என்னவென்றால் விழா முடிந்த பிறகு, ஏற்கனவே மொத்தமாக தங்கள் கைக்கு வந்துவிட்ட பட்டத்தை துணை வேந்தர் சூரப்பாவின் கையில் கொடுத்து, அவர் கையால் பட்டம் பெறுவது போல புகைப்படம் எடுத்துக் கொண்டனர் சிலர். இதைப் பார்த்த போது துணைவேந்தரே இவர்களுக்கு நேரில் பட்டமளிப்பது போன்றதொரு பிம்பத்தை மட்டுமே ஏற்படுத்தியது. 71 பேர் மட்டுமே நேரில் பட்டம் பெறும் ஒரு நிகழ்ச்சியில் போக்குவரத்து, தங்குமிடம், உணவுக்கு என பெரும் தொகையை செலவு செய்து ஆயிரக்கணக்கானோர் சென்னைக்கு ஏன் வரவேண்டும்?

அண்ணா நினைவிடம்
சரி! செய்த செலவுக்கு மெரினாவுக்காகவாவது சென்று வரலாம் என அங்கு சென்றோம். முதலில் அண்ணா நினைவிடத்தையும், அதற்கு உள்ளேயே ஒரு ஓரமாக மிகச்சிறிய இடத்தில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தையும் பார்த்துவிட்டு வெளியே வந்தோம். எனக்கு தி.மு.க வோடு அரசியல் ரீதியாக ஆயிரம் கருத்து வேறுபாடுகளும், முரண்களும் இருந்தாலும் கலைஞர் நினைவிடத்தின் அருகில் நான் சென்ற போது என்னை அறியாமலேயே என் கண்கள் சற்றே கலங்கின. பார்ப்பனர்கள் ஒருவனை மூர்க்கமாக  எதிர்க்கிறார்கள் என்றால், அவனும் ஏதோ ஒரு வகையில் உன் தோழனே என ஆசுவாசப்படுத்திக் கொண்டு அங்குள்ள கலைஞரின் பொன் மொழிகள் சிலவற்றை உற்று நோக்கிய போது “மூளை! மூளை! அவ்வளவும் மூளை!” என ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி தன்னுடன் வந்தவர்களுடன் பேசிக் கொண்டது, கலைஞர் மிக ஆழமாகவே மக்கள் மனிதில் இடம் பிடித்துள்ளார் என்பதை உணர்த்தியது!
கலைஞர் நினைவிடம்
வெளியே வந்த பிறகு எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்றோம். அங்கு பராமறிப்புப் பணிகள் நடைபெற்று வந்ததால் உள்ளே செல்ல முடியவில்லை. வெளியில் இருந்து பார்த்த போது ஜெயலலிதாவின் நினைவிடம் மிகப்பிரம்மாண்டமாக அமைக்கப்படுவதைக் காண முடிந்தது. அண்ணா - கலைஞர் நினைவிடத்தையும், எம்ஜி.ஆர் – ஜெயலலிதா நினைவிடத்தையும் பிரிக்கும் வகையில் தடுப்புச்சுவர் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. அண்ணாவும் கலைஞரும் அண்ணன் - தம்பி போலவும், (உடன் பிறந்தவர்கள் இல்லை என்றாலும் இவர்கள் இருவரும் அண்ணன் தம்பிகளாகத்தானே கருதப்படுகின்றனர்) எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் கணவன் - மனைவி போலவும் (அங்கு வைக்கப்பட்டிருக்கும் WAY TO DR.MGR & AMMA SAMADHI என்ற அறிவிப்பைப் பார்க்கும் அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது) ஒரு தோற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. இது என்ன பங்காளிகளைப் பிரிக்கும் தடுப்புச் சுவரா? இல்லை கலைஞர் சமாதியை மிதித்தவன் நேராக ஜெயலலிதாவின் சமாதியை மிதித்துவிடக்கூடாது என்பதற்கான தீண்டாமைச் சுவரா? அண்ணா, கலைஞர், எம்ஜி.ஆர், ஜெயலலிதா நால்வருமே தமிழக முதல்வராக இருந்தவர்கள்தானே! பிறகு எதற்காக இந்த தடுப்புச்சுவர்?
ஜெயலலிதா நினைவிடம்

அண்ணா - எம்ஜி.ஆர் - ஜெயலலிதா மூவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ள இடம் மற்றும் அவர்களது நினைவிடத்தின் பிரம்மாண்டத்தையும், கலைஞருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடம் அவரது நினைவிடத்தின் அமைப்பையும், பார்த்த போது
அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி

அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்!”
என்கிற எம்.ஜி.ஆரின் “என் அண்ணன்” திரைப்படத்தில் வரும் கவிஞர் கண்ணதாசனின் "நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா!" எனத் தொடங்கும் பாடலில் உள்ள வரிகள்தான் நினைவுக்கு வந்தது.


எம்ஜி.ஆர் நினைவிடம்
மெரினாவில் சமாதிகளே கூடாது என்பதுதான் எனது கருத்து. இருப்பவற்றையும் இடித்துத்தள்ளி, சமாதிகளுக்கு முடிவுகட்டவில்லை என்றால், நாற்பது ஆண்டுகளில் நான்கான சமாதிகள் அடுத்த நூறு ஆண்டுகளில் பதினான்காகும். அப்பொழுது மெரினாவும் புதைக்கப்பட்டிருக்கும்.

மெரினா என்றால் கடலில் கால் நனைக்காமலா? “யாரும் கடலில் இறங்க வேண்டாம். கடல் நீரில் கால் நனைக்க வேண்டாம். நனைத்தால் நோய் தொற்று வரும்!” என மெரினாக் காவல் நிலையம் எச்சரித்திருந்ததாக கேள்விப்பட்டோம். அருகில் சென்ற போது கடலிலிருந்து வீசிய கெட்டநாற்றம், இந்த எச்சரிக்கை உண்மைதான் என்பதைப் புரிய வைத்தது. ‘கடலில் பெருங்காயம் கலப்பதைப் போல’ என்கிற சொலவடை இங்கே பொய்யாக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் பெய்த மழையால் சென்னை நகரின் மொத்தக் கழிவும் வங்கக்கடலில் சங்கமித்ததால் வந்தக்கேடு இது. கழிவுநீரைக்கூட சுத்திகரிக்கும் ஆற்றலற்ற அரசு கட்டமைப்பு நீடிக்கும்வரை கடல் கன்னிகள் கலங்கப்படுவதை யார்தான் தடுக்க முடியும்?

மெரினா
கடற்கரைக்கு வந்துவிட்ட பிறகு இளைப்பாறாமலா? மணற்பரப்பில் இரண்டறக் கலந்திருந்த குப்பைக் கூலங்கள் சுற்றித்திரியும் நாய்கள், மாடுகளின் கழிவுகள் சங்கடத்தை ஏற்படுத்தினாலும் நீண்ட நேரம் நடந்த களைப்பைப் போக்க சிறது நேரம் ஓய்வெடுத்துவிட்டு ஜல்லிக்கட்டின் நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு ஊர் திரும்பினோம்.

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Friday, 4 March 2011

ஊர்ப் பயணம்! கலைஞருக்கு 'ஓட்டு' விழுமா?

நிலையத்திலிருந்து புறப்பட்ட பேருந்து, தனியார்ப் பேருந்தைப் போலல்லாமல் விரைவிலேயே நகரைக் கடந்து மாநில நெடுஞ்சாலையில் விரைந்து சென்றது. காலை நேரம் என்பதால் அதிகாலையிலேயே எழுந்து பயணத்திற்காகத் தூக்கத்தைக் தொலைத்தவர்கள் சிலர் தூங்கிக் கொண்டும், சிலர் பேசிக் கொண்டும், ஒரு சிலர் கண்களை மூடியவாறு காதுகளில் 'ஹியர் ஃபோனை' மாட்டிக் கொண்டு தாங்கள் விரும்பிய பாடல்களைக் கேட்டுக் கொண்டும் வந்தனர். தூக்கம் கெட்டிருந்தாலும் நான் பேருந்துப் பயணத்தின் போது தூங்குவதில்லை.  பயணங்கள் தரும் பாடங்கள் நிறைய இருக்கே.

கண்ணுக்கெட்டிய தூரம் எங்கு பார்த்தாலும் பசுமை நிறைந்த நெல் வயல்களும், கரும்புத் தோட்டங்களும், வாழை மரங்களும் கண்களைக் குளிர வைக்கும் போது தூக்கம் எப்படி வரும்?

அடுத்து வட்டத் தலைநகர் வந்தது. இறங்கி அடுத்தப் பேருந்தில் ஏறி பயணமானேன். முப்பது கி.மீ. தூரப் பயணம். விரைவுப் பேருந்து என்பதால் உரிய நேரத்தில் சென்று விடும். எனது கிராமத்துக்குச் செல்லும் நகரப் பேருந்தை பிடித்து விடலாம் என்ற மகிழ்ச்சியோடு இருந்தேன். இன்னும் பத்து நிமிடம் பயணித்தால் நான் செல்லவேண்டிய இடத்தை அடைந்துவிடலாம் என எண்ணிய போது ஓட்டுநர் பேருந்தை ஓரம் கட்டினார். 

எனக்கு சற்றே கலக்கம். அது ஒரு சிறிய கிராமம். எதற்கு இங்கே ஓரம் கட்டுகிறார் என எண்ணிக் கொண்டிருந்த போது ஓட்டுநரும் நடத்துநரும் அருகில் இருந்த சிறிய சிற்றுண்டியகத்திற்குச் சென்றார்கள். அவர்களோடு 'பேண்ட்' சட்டை போட்டவர்களும் செல்லவே நானும் சென்றேன். நான்கு இட்லி, இரண்டு வடை. மொத்தமே பத்து ரூபாய்தான். போதுமானதாக இருந்தது. காரச் சட்னி, தேங்காய்ச் சட்னி, சாம்பார் என தூக்கலாய்தான் இருந்தது. ஓட்டுநர்களும் நடத்துநர்களும் சாப்பிடுகிறார்கள் என்றால் சும்மாவா?

தேசிய நெடுஞ் சாலைகளில் உள்ள ஒரு சில 'மோட்டல்களை' நினைத்துப் பார்த்தேன். அவைகள் பசியாற்றும் 'ஓட்டல்கள்' அல்ல. தொலைதூரப் பயணிகளை மறித்து காசு பறிக்கும் வழிப் பறி கொல்லையர்களின் கூடாரங்கள்.

இரண்டு மொடக்குக்குக்கூட ஆகாத டீ, பாதி சோடா மாவு மற்றும் ஆமணுக்குக் கொட்டையால் குஷ்பு இட்லியாக மாறிய ரேசன் அரிசி. இட்லி ஆறிப் போனால் நாறிவிடும் என்பதால் சூடாகத்தான் கொடுப்பார்கள். ஆவி பறக்கும் இட்லியைப் பார்த்த உடனே நம்மாளு மயங்காமலா இருப்பான். அதுவும் நல்லிரவு லேசான குளிரும் சேரும் போது விடவா முடியும். இட்லி சூடாக இருக்கும் போது பூப் போலத்தான் இருக்கும். குடலின் ஈரம் பட்டு 'கொன்ச்சிங்' ஆன இட்லி கடினமாகி குடலை கெட்டியாய் பிடித்துக் கொள்ளும். அதன் விளைவை பிறகு தவிர்க்கவா முடியும்?

இங்கு விலையோ மூன்று மடங்கு. 'லீ மெரிடியனில்'கூட உணவருந்திவிட்டு பத்து ரூபாயை மிச்சப் படுத்தி வெளியே வந்து நகரப் பேருந்தில் வீடு போய்ச் சேரலாம். ஆனால் 'மோட்டல்களுக்குச்' சென்றால் 'பர்சு' காலி. 'ஏ.டி.எம் கார்டு' இருந்தால் ஊர்ப் பயணம் தொடரலாம். இல்லை என்றால் ஊராவது பயணமாவது வேலை கிடைத்து விட்டது எனக் கருதி அங்கேயே 'செட்டிலாகலாம்'.

உள்ளே சென்றால்தானே காசைப் பறிக்கிறார்கள். வெளியிலேயே 'பிஸ்கட் பாக்கெட்' ஒன்றை வாங்கித் தின்று தண்ணீர் குடித்தால் போதும் எனக் கருதி வாங்கச் சென்றால் விலையோ எகிறிக் கிடக்கும். ஐந்து ரூபாய் 'பிஸ்கட்' ஏழு ரூபாயாம். எங்கே சென்று முறையிடுவது? காய்ந்த தொண்டையை இரண்டு ரூபாய் 'பாக்கெட்' தண்ணீரால் ஈரப்படுத்தி பயணத்தைத் தொடர வேண்டியதுதான், ஊர்ப் போய்ச் சேர்ந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று. 

காலை சிற்றுண்டி முடித்து பேருந்து புறப்பட்டது. நடத்துநரிடம் பேச்சுக் கொடுத்தேன். "முன்ன மாதிரி கஷ்டமில்ல சார்", "ரோடு நல்லாயிருக்கு" என்றார். ஓராண்டுக்கு முன்பே மாநில நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்ட சாலை. பல தேசிய நெடுஞ்சாலைகளைவிட மேம்பட்ட தரத்தோடு போடப்பட்டிருந்தது. இப்பொழுது அதில் பயணிப்பது அலாதி சுகம்தான்.

இதே சாலையில் கடந்த நாற்பது ஆண்டுகளாக அவ்வப் பொழுது பயணித்துள்ளேன். முப்பது கிலோ மீட்டருக்கு மூன்று மணி நேரம் ஆகும். 'கார்ப்' பந்தயங்களை நடத்த காடு மேடுகளுக்குச் செல்ல வேண்டியதில்லை. குறை மாத கர்ப்பிணிகள் முப்பது கிலோ மீட்டரிலேயே நிறைமாதமாகி குழந்தைகளைப் பெற்றெடுப்பதும் உண்டு. கூடுதலாக ஒரு இட்லியை வயிற்றில் திணித்து அவசரமாய்ப் பேருந்தில் பயணிக்கும் வயதுப் பெண்கள் பேருந்து குலுக்கும் குலுக்கலில் வாந்தி எடுத்து பிறரின் சந்தேகத்திற்கு ஆளாவதும் உண்டு. இன்று நெடுஞ்சாலைகள்தான் மேம்பட்டுள்ளன. கிராமச் சாலைகளில் பயணித்தால் மூன்று கிலோமீட்டர் பயணத்திலேயே மேற்கண்ட அதிசயங்கள் நிகழும். 

எனது ஊருக்குச் செல்லும் கூட்டுச் சாலை வந்தது. காலை மணி ஒண்பதைத் தாண்டிவிட்டது. நகரப் பேருந்து சென்று விட்டது. ஏழு கி.மீ தூரம் எப்படிச் செல்வது? படிக்கும் காலத்தில் பெரும்பாலும் நடந்தே செல்வேன், இள வயசு.

அப்பொழுதெல்லாம் வாடகை சைக்கிள் கடை ஒன்று இருக்கும். உடனே திரும்புவதாக இருந்தால் சில நேரங்களில் சைக்கிள் எடுத்துச் செல்வேன். திரும்புவதற்கு ஒன்றிரண்டு நாட்கள் ஆகும் என்றால் சைக்கிளை யார் திரும்ப ஒப்படைப்பது? இரண்டு நாள் வைத்திருந்து எடுத்து வரலாம் என்றால் நாள்வாடகை கொடுத்து கட்டுப்படியாகுமா? அதனாலேயே பெரும்பாலும் நடந்தே சென்றுவிடுவேன்.

வாடகை சைக்கிள் கடைகளைல்லாம் இன்று பழங்கதைகளாகி வருகின்றன. கிராமமோ, நகரமோ 'ஸ்பிலண்டர்களும்' 'பல்ஸ்சர்களும்' சீறிப் பாயும் காலம் இது. ஊர்ப்பக்கம் செல்லும் ஒரு வாகனத்தில் ஒட்டிக் கொண்டேன். ஊரைச் சென்றடைந்தேன். ஏரி நிறைந்திருந்தது. நெல் வயல்களும், கரும்புத் தோட்டங்களும் கண்களைக் குளிர வைத்தன. எல்லாம் இந்த ஆண்டு பெய்த நல்ல மழையால் ஏற்ப்பட்டதன் விளைவு.

தேர்தல் வருகிறது. கருணாநிதி ஆட்சி என்றால் மழைகூட பெய்யாது என்பது காலங்காலமாய் இருக்கும் கிராமத்து நம்பிக்கை. இந்த அறியாமைதானே சில தேர்தல்களில் எம்ஜியாருக்கும் ஜெயலலிதாவுக்கும் கோட்டைக் கதவுகளை திறக்க உதவின.

மேம்பட்ட நெடுஞ்சாலைகளால் ஊர்ந்து சென்ற வாகனங்கள் இன்று சீறிப்பாய்கின்றன. சாதாரண மக்களையும் விழி பிதுங்க வைத்த தக்காளி, பூண்டு, வெங்காயம், உள்ளிட்ட காய்கறிகளின் விலை வெகுவாய்க் குறைந்துவிட்டன. கருணாநிதியின் தயவால் குறையவில்லைதான். இது விளைச்சல் காலம். இருந்தாலும் ஜெயலலிதாவுக்கு இது சாதகம் இல்லையே.

எதைச் சொல்லி எதிர்க்கட்சிகள் ஓட்டுக் கேட்பார்கள்?. கருணாநிதிக்கு 'ஓட்டு' விழுமா? கூட்டணி பலமாய்ப் போட்டாலும் ராஜா-கனிமொழியின் கூட்டு கலைஞரின் கோட்டைக் கனவுக்கு வேட்டாய் மாறுமா? ஐயம் தொடர்கிறது.

ஊர்ப் பயணமும் தொடரும். மீண்டும் சந்திப்போம்!