Showing posts with label பார்ப்பனர். Show all posts
Showing posts with label பார்ப்பனர். Show all posts

Sunday, 9 December 2018

பார்ப்பனியம் எனும் அழுக்கு!


"டாக்டர்,  3 மாத்திரையும் 2 ஊசியும் போட்டு 200 ருபாய் வாங்கிட்டாரு…
ரொம்ப மோசம்டா..

அது சரி, 
கனபதி ஹோமம் செஞ்சவனுக்கு எவ்வளவு கொடுத்தே..?

2500 ரூபா குடுத்தேன்..

அவன் என்ன குடுத்தான்..?

கோமியம் குடுத்தான்…"

இது BK @Periyar BK என்பவரது பதிவு. சிந்திக்கத் தூண்டும் இப்பதிவை முகநூலில் நானும் பகிர்ந்தேன். இப்பதிவிற்கு எதிராக தனது புலம்பலைக் கொட்டித் தீர்த்தார் ஒரு பார்ப்பனர். ஒருவர் நமக்கு நண்பராக இருந்தாலும் அவர் தன்னை பார்ப்பனர் எனக் கருதிக்கொள்ளும்வரை அவரை பார்ப்பனர் என விளிப்பதே சரி.   

இதோ அவரது புலம்பல்

“பார்ப்பனர்களுக்கு எதிராக உங்களுக்கு ஏன் கோபம்? அவர்கள் உங்களுக்கு என்ன தீங்கு செய்தார்கள்? பார்ப்பனர்கள் ஏற்கனவே வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். பார்ப்பனர் என்று சொல்லி உங்களைப் போன்றவர்கள் அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்களை யார் கனபதி ஹோமம் செய்யச் சொன்னது? அதற்குப் பணம் கொடுக்கச் சொன்னது? எந்தப் பார்ப்பனரும் அவராக உங்கள் வீட்டிற்கு வருவதுமில்லை; எதையும் கேட்பதுமில்லை. புத்திசாலிகளான நீங்கள் பார்ப்பனர்களை பின்பற்ற வேண்டியதில்லையே! கல்வி-வேலை வாய்ப்பு-பதவி உயர்வு உள்ளிட்ட எல்லாவித அரசுப் பலன்களையும் நீங்கள் அனுபவிக்கிறீர்கள். நூறு ஆண்டுகளுக்கு இடஒதுக்கீட்டை நீங்கள் பெற்றாலும் உங்களில் ஒருவரும் உயர்ந்தவர்களாக வளரப் போவதுமில்லை; முன்னேறப் போவதுமில்லை. உங்களது மன நிலையை மாற்றிக் கொள்ளுங்கள்.”

அவர் ஆங்கிலத்தில் போட்டிருந்த பதிவின் எளிமையான மொழியாக்கம் இதுதான். 2000 ஆண்டுகளாக கல்வி கற்க உரிமை பெற்ற சமூகப் பின்னணி கொண்ட ஒருவர் ஆங்கிலத்தில் எழுதுவதும், தற்போதுதான் கல்வியைச் சுவைக்கும் ஒருவர் தமிழில் எழுதுவதும் சமூக எதார்த்தம்தானே!

 அவரின் பேற்கண்ட புலம்பலுக்கு நான் எழுதிய எனது பதில்

"பார்ப்பனர் (இதுதான் தமிழ்) (பிராமணர்-இது வடமொழி்) என தன்னை ஒருவர் ஏன் அழைத்துக் கொள்ள வேண்டும்? பார்ப்பனர் என்பது சாதியா? இல்லையே. அது வர்மாச்சே. ஒருவர் தன்னை பார்ப்பனர் என கருதிக் கொள்வாரேயானால் அவர் மனு வகுத்த சனாதன தர்மத்தை ஆதரிப்பவர். அதாவது சமூகத்தில் ஏற்றத்தாழ்வை அடிப்படையாகக் கொண்ட சாதி அமைப்பு முறையை நியாயப்படுத்துபவர் ஆவார். இதைத்தான் பார்ப்பனியம் என்கிறோம். பார்ப்பனியம் செய்த மிகப் பெருந் தீங்கே இதுதான். சமூகத்தில் நிலவும் தீண்டாமைக்கு இதுதான் அடிப்படைக் காரணம். அதனால்தான் பார்ப்பனியத்தின் மீது எங்களுக்கு கடுங்கோபம்.

கனபதி பூஜை மட்டுமல்ல இதுபோன்ற என்னற்ற சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் தங்களுடைய பிழைப்பிற்காக புகுத்தியவர்கள் பார்ப்பனர்கள். இதை மீறினால் பெருங்கேடு என அப்பாவி மக்களை அன்றாடம் அச்சுறுத்துவது பார்ப்பனியம். இந்தக் கேடுகெட்ட சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் மக்கள் விட்டொழிக்க வேண்டும் என புத்தர் காலம் தொடங்கி இன்றுவரை என்னற்ற தலைவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய போராட்டத்தின் ஒரு வடிவம்தான் மேற்கண்ட பதிவு.

இரண்டாயிரம் ஆண்டுகளாக எம்மக்களுக்கு கல்வியை மறுத்தது பார்ப்பனியம். இன்றுதான், எம்மக்கள் (இங்கே எம்மக்கள் என நான் குறிப்பிடுவது பார்ப்பனரல்லாத மக்களைத்தான்) படிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இன்னமும்கூட பலர் தற்குறிகளாகத்தான் இருந்து வருகிறார்கள். 2000 ஆண்டுகளை ஒப்பிடும் போது முன்னேறுவதற்கு 100 ஆண்டுகள் என்பது மிகச் சொற்பமே!

உயர்சாதி அடையாளமாக இருக்கும் பூணூலை அறுத்தெறிந்து விட்டு அடித்தட்டு மக்களோடு கரம் கோர்க்க வாருங்கள். அது ஒன்றுதான் உங்கள் மீது படிந்துள்ள பார்ப்னிய அழுக்கைப் போக்க சிறந்த வழி."  

Saturday, 21 February 2015

அருந்ததியர் முதல் பார்ப்பனர் வரை: வளரும் காதல்

பறையர்+செட்டியார்
பறையர்+முதலியார்
பார்ப்பனர்+பறையர்
பறையர்+நாடார்
முத்தரையர்+முதலியார்
நாயுடு+அருந்ததியர்
நாயுடு+பறையர்
முதலியார்+மீனவர்(பர்வதராஜகுலம்)
பறையர்+செட்டியார்
வன்னியர்+நாயுடு
வெள்ளாளக்கவுண்டர்+யாதவர்
முதலியார்+பார்ப்பனர்
பிள்ளை+கள்ளர்
நாயுடு+பறையர்
வெள்ளாளக்கவுண்டர்+வன்னியர்
வன்னியர்+பார்ப்பனர்
இஸ்லாமியர்+பறையர்

(ர்-விகுதி:காதல் மறியாதைக்காக; சாதி மறியாதைக்காக அல்ல)

இப்படி நீள்கின்றன கடந்த சில ஆண்டுகளில் எனக்குத் தெரிந்து காதல் திருமணம் செய்து கொண்ட இணைகளின் பட்டியல். பெரும்பாலும் இவர்களின் திருமண விழாக்களில் நான் கலந்து கொண்டுள்ளேன்.

மேற்கண்ட இணைப்பட்டியலில் முதலில் குறிப்பிடப்பட்டுள்ள சாதிகள் பெண்களைக் குறிக்கும். எ.கா: நாயுடு(பெண்)+பறையர்(ஆண்)

இந்த இணைகள் எல்லாம் நடுத்தர வர்க்க இணைகள். பெரும்பாலும் இவர்கள் பட்டம் மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள்.

முதலில் இருதரப்பிலும் காதல் இணைகளை பிரிக்க பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் காதலர்கள் உறுதி குலையாமல் இருந்ததால் முறைப்படி பெற்றோர்களால் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஒரு சில இணைகள் தற்போது ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர்களாகவும் ஆகிவிட்டனர். இதுவரை எந்த இணையும் பிரிந்ததில்லை. பெற்றோர்கள், உறவினர்களிடமிருந்து இழிசொற்கள்-பழிசொற்கள் வந்தாலும் அவற்றை எல்லாம் துச்சமென தூக்கி எறிவதோடு இழிப்போரையும்–பழிப்போரையும் இடித்துரைத்து வெற்றி காண்கின்றனர்.

சாதி வெறியர்கள் தொடர்ந்து காதலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினாலும், இந்து மதவெறியர்கள் சாதித்தூய்மையைப் பாதுகாத்திட கழுதையாய்க் கத்தினாலும் காதல் மணம் புரிவோர் எண்ணிக்கை அதிகரித்துதான் வருகின்றன. இன்றுகூட பறையர்+முதலியார் இணை மணவிழா அழைப்பிதழ் ஒன்று எனக்கு வந்தது.

சமூகத்தின் எதார்த்தமாக காதல் வளர்ந்து வருகின்ற இன்றைய சூழலில் காதலே இல்லாத சமூகம் சாத்தியமா? சாத்தியமென்றால் அச்சமூகம் எப்படிப்பட்டதாக இருக்கும்? அடுத்த பதிவில் பார்ப்போம்.


தொடர்புடைய பதிவுகள்:

Friday, 19 April 2013

பார்ப்பனியம் பிறவிக் குணமா?....தொடர்-1

இது 'ஊரும்' அல்ல; சேரியும் அல்ல; அதற்கும் கீழே! அருந்ததியரின் குடியிருப்புப் பகுதி. இங்குதான் கடந்த பதினைந்து ஆண்டுகளாக குடும்பத்தோடு வசித்து வருகிறேன். அருகாமையில் பள்ளிக்கூடம், வெளியூர் சென்று வரப் பேருந்து மற்றும் தொடர் வண்டி வசதி, வற்றாத நல்ல நிலத்தடி நீர் என சில அடிப்படையான வசதிகள் இங்கு இருப்பதனால்தான் அருந்ததியர் காலனி என்றாலும் பிற சாதியினரும் அதிக அளவில் குடியிருக்கின்றனர்.

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இளம் பார்ப்பன புரோகிதர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாடகைக்கு எதிர் வீட்டில் குடியேறினார். இரண்டாவது குழந்தை ஒரு வயதே நிரம்பிய பெண்குழந்தை. முதல் குழந்தை மூன்று வயது நிரம்பிய ஆண் குழந்தை. குடியேறிய ஒரு சில நாட்களிலேயே இவ்விருவரும் எங்கள் தெருவில் உள்ள அனைவரையும் கவர்ந்து விட்டார்கள். தெருவில் உள்ள எல்லோருடைய வீடுகளுக்கும் செல்வார்கள். அருந்ததியர் வீட்டுக் குழந்தைகளே இவர்களின் சக நண்பர்கள்.

எங்கள் வீட்டின் செல்லக் குழ்ந்தையானாள் அப்பெண்குழந்தை. மூன்று வயதுவரை பெரும்பாலும் எங்கள் வீட்டில்தான் இருப்பாள். மழலையர் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியது முதல் தற்போது முதல் வகுப்பு வரை பள்ளி செல்லும் நேரம் மற்றும் இரவில் அவர்கள் வீட்டில் உறங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் எங்கள் வீட்டில்தான் அதிக நேரம் இருப்பாள். சிறுநீர் - மலம் கழித்தால் சுத்தப்படுத்துவது, குளிக்க வைப்பது, தலை வாரி விடுவது, தேநீர் மற்றும் உணவு கொடுப்பது, கொஞ்சிக் குலாவுவது, விளையாடுவது என சொந்தக் குழந்தையை வளர்க்கும் போது கிடைக்கும் அனுபவத்தில் ஒரு பாதி அனுபவத்தையாவது இக்குழந்தையின் மூலம் பெற்றிருப்போம். இதனால் ஒரு பார்ப்பனக் குழந்தையின் வளர்ச்சிப் போக்கில் கருத்தியல் ரீதியாக ஏற்படும் மாற்றங்களை மிக நுணுக்கமாக உணர முடிந்துள்ளது.

ஒரு வயதாய் இருந்த போது சாம்பாரோ – இரசமோ, மோரோ – தயிரோ, அவித்த முட்டையோ – ஆம்லெட்டோ, உருளைக்கிழங்கு வறுவலோ - வறுத்த கோழிக்கறியோ, விராலோ - இறாலோ இவை எல்லாம் நாம் உண்ணும் உணவு என்பதைத் தவிர வேறெதுவும் தெரியாது இந்தக் குழந்தைக்கு.

திண்பது எதுவானாலும் “எனக்கு” எனக் கேட்பதும், “இந்தா” எனக் கொடுப்பதும்தானே குழந்தைகளின் இயல்பு. நாம் எதையாவது நமது குழந்தைகளுக்குத் திண்ணக் கொடுத்தால் “சாப்பிட்டுவிட்டு அப்புறமா வெளியில போ” என நாம்தானே குழந்தைகளின் பகிர்ந்துண்ணும் பண்பை முளையிலேயே கருக்கி விடுகிறோம்.

பார்ப்பனர்கள் அசைவ உணவை சாப்பிட மாட்டார்கள் என்பதெல்லாம் தெரியாத வயதில் நாங்கள் ருசித்து சாப்பிடும் போது அதைப்பார்க்கும் பார்ப்பனக் குழந்தைக்கு மட்டும் நாக்கில் எச்சில் ஊறாதா என்ன? அப்போது “எனக்கு” எனக் கேட்ட போதும் சைவ உணவைத் தவிர முட்டை உள்ளிட்ட மாமிச உணவு எதையும் நாங்கள் அவளுக்குக் கொடுத்ததில்லை. பகிர்ந்துண்ணும் பண்பைவிட அவர்களின் குடும்ப உணவு முறையில் நாம் குறுக்கிட வேண்டாம் என்பதால்தான் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் மூன்று வயதைத் தொட்டபோது முட்டையும் கோழிக்கறியும் தங்களுக்கான உணவு இல்லை என்பதை அவள் தெரிந்து கொண்டாள்.

ஒரு சமயம் நான் கோழிக்கறியை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது “ஐய்யய்ய.. நீங்க கறி சாப்பிடுறீங்க” என்றாள். “இது கோழிக்கறியில்ல, உருளைக்கிழங்கு, இந்தா சாப்பிடு என நான் கிண்டலுக்குச் சொன்னபோது”, “நாங்க பிராமிண், கறி எல்லாம் சாப்பிட மாட்டோம்” என பதிலுரைத்தது மட்டுமல்ல “அப்ப நீங்க பிராமிண் கிடையாதா?” எனக் கேள்வி வேறு எழுப்பினாள்.

தொடரும்.....

Sunday, 26 February 2012

தனுஷின் கொலவெறியும் தம்ராஸின் கவலையும்!

தமிழக பார்ப்பனர்களின் சங்கமான 'தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின்' (thambraas) அதிகார்வ பூர்வ ஏடான "தம்ராஸ்" பிப்ரவரி 2012 மாத இதழை தற்செயலாக பார்க்க நேர்ந்தது.


ஹும்... இந்தக் காலத்து பசங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் ...
ஒன்னு 'தல விரி'...
இன்னொன்னு 'கொலவெறி..அதான்!'

அந்த இதழில் முதல் பக்கத்தில் வெளியாகியுள்ள ஸ்ரீ-யின் ஒரு கார்ட்டூன் வசனம் இது.

'தல விரி'...

ஜிம்னாஸ்டிக் தொழிலுக்கு ஏற்ற இறுக்கமான முழுக்காலுரை,அதற்கு 'மேட்சான' மேற்சட்டையுடன் தலை மயிர்களை ஒன்றுசேர்த்து கட்டிப்போடாமல் ஒவ்வொரு முடிக்கும் முழுவிடுதலை கொடுத்து இரு கன்னங்களையும் தொட்டுக் கொண்டு அணிவகுத்து விரிந்து தொங்கும் முடி அலங்காரத்துடன் நிற்கும் இரு இளம் பெண்களைப் பார்த்து சடை பின்னிய மடிசார் மாமிகள் இரண்டு பேர் இப்படிப் பேசிக் கொள்கிறார்கள்.

இங்கே இவர்கள் குறிப்பிடும் 'தலவிரி'பசங்க,மாமி வீட்டு குலக் கொழுந்துகளைத்தான்.பார்ப்பனர்கள் பிறரைப்பற்றி எப்போது கவலைப்பட்டிருக்கிறார்கள் இப்பொழுது மட்டும் கவலைப்படுவதற்கு?

ஒரு பக்கம் இத்தகைய பண்பாடுகளை தொலைக்காட்சி ஊடகங்களில் அறிமுகப்படுத்தி அதையே பிறருக்கும் பரவச் செய்யும் பணிகளையும் இவர்களே செய்வார்களாம். அதே நேரத்தில் இவாளுடைய பத்திரிக்கையில் கண்டிக்கவும் செய்வார்களாம். இது யாரை ஏமாற்ற?

உடை மற்றும் முடி அலங்காரம் என்பது தாங்கள் செய்கிற தொழிலுக்கு ஏற்ப இருந்தால் அதில் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

 'கொலவெறி..

இங்கே இவர்கள் கவலைப்படுவது தலவிரிக்காக அல்ல, தனுஷின் காதல் கொல வெறிக்காகத்தான். இந்தக் கொலவெறியைத் தூண்டும் தனுஷ் அவாளின் வட்டத்துக்குள்தானே இருக்கிறார்? ஏன் இப்படிக் கொல வெறியைத் தூண்டுகிறாய் என கண்டிக்கக் கூடாதோ! அப்படிக் கண்டித்தால் அவாளுக்காக அவ்வப்பொழுது குரல் கொடுக்கும் தனுஷின் மாமாவுக்கு சங்கடம் ஏற்படுமோல்ல?

கல்லாக் கட்ட மட்டும்தான் இந்தக் கொல வெறியத் தூண்டலாம். ஆனால் வாழ்க்கையில் கூடாது. காதல்-கீதல்-கொல வெறி என கலப்புத் திருமணம் ஏதும் பிராமணர்கள் செய்து விடக்கூடாதாம். அதற்காக பிராமணாகள் சத்தியம் எடுத்துக் கொள்ள வேண்டுமாம். இது பற்றி அவர்களின் இணைய தளத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

அந்தணர் என்போர் அறவோராம். நீதி-நேர்மை-நியாயம்-தர்மம் மற்றும் நாட்டின் சட்டங்களுக்கு கட்டுப் பட்டவர்களாம். அதனால் புராணங்களிலும் இலக்கியங்களிலும் இவர்களுக்கு மிக உயரிய அந்தஸ்து அளிக்கப்பட்டதாம். தமிழகத்தில் ஒருதலைபட்சமான பிராமண துவேஷ பிரச்சாரத்தால் இவர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டார்களாம்.அதனால் கலாச்சார சீரழிவு தொடங்கிவிட்டதாம்.

பிராமணர் என்பது சாதியா?

 எப்படி முதலியார் என்பது சாதி அல்லவோ,  எப்படி கவுண்டர் என்பது சாதி அல்லவோ,  எப்படி பிள்ளை என்பது சாதி அல்லவோ,  எப்படி செட்டியார் என்பது சாதி அல்லவோ அது போல பிராமணர் என்பதும் சாதி அல்ல.

எப்படி முதலியார் என்பது செங்குந்தர், அகமுடையர், துளுவ வேளாளர் போன்ற சாதிகளை அடையாளப்படுத்தும் ஒரு குறியீடோ அது போல பிராமணர் என்பது ஐயர், ஐயங்கார் போன்ற சாதிகளை அடையாளப்படுத்தும் ஒரு குறியீடு. கவுண்டர், பிள்ளை, செட்டியார் போன்ற குறியீடுகளிலும் பல்வேறு சாதிகள் உண்டு. இவர்கள் ஒரே குறியீட்டின் கீழ் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டாலும் அந்தந்த சாதிகளுக்குள்தான் திருமண உறவுகளை வைத்துக் கொள்கிறார்கள். ஐயங்கார் ஐயருக்குப் பெண்தரமாட்டார். துளுவ வேளாளர் அகமுடையர் வீட்டில் பெண் எடுக்க மாட்டார்.

குடும்ப உறவுகளில் தங்களுக்குள் ஒட்டும் உறவும் வைத்துக் கொள்ளாதவர்கள் பிறகு ஏன் தங்களை பிராமணர்கள் என்றும் முதலியார்கள் என்றும் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்? காரணம் வர்ணாசிரம அடிப்படையில் இவர்கள் பிராமணர்கள் என்றும் சத்திரியர்கள் என்றும் வைசியர்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அப்படி சொல்லிக் கொள்வதில் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று பெருமிதம் கொள்கிறார்கள். அதனால்தான் ஐயர் தன்னை பிராமணன் என்று சொல்லிக் கொள்கிறான். செட்டியார் தன்னை வைசியன் என்று சொல்லிக் கொள்கிறான். கவுண்டர் தன்னை சத்திரியன் என்று சொல்லிக் கொள்கிறான்.

சாதியப்படிநிலையில் தாங்கள் பெருமைக்குரியவர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ள முடியாததால்தான் பள்ளர், பறையர் அருந்ததியர் உள்ளிட்ட சாதியினர் தங்களை சூத்திரர்கள் என்று அடையாளப் படுத்திக் கொள்ளாமல் தாழ்த்தப்பட்டவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இவர்கள்கூட தங்களுக்குள் திருமண உறவுகளை வைத்துக் கொள்வதில்லை. அகமணமுறையை ஒழிப்பது சாதியை ஒழிப்பதற்கான ஒரு வழிமுறை என்பதை டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தியும் அவரது வழிகாட்டுதலை ஒதுக்கிவிட்டு சனாதன தர்மத்தை கடைபிடிப்பது ஒரு அவலமாக இன்னமும் நீடிக்கத்தான் செய்கிறது.  வர்ணாசிரம தர்மத்தின் வெற்றி இதில்தான் அடங்கி இருக்கிறது.

உலக மயமும் கொலவெறியும்

மேலும் பிராமணர்கள் சொல்கிறார்கள்,

"சமீபத்திய உலகமயமாக்கல் மற்றும் கணினிமயமாக்குதல் (IT Revolution) காரணமாக மாபெரும் கலாச்சார சீரழிவு அனைத்து சமூகங்களையும் பாதித்தாலும் நமது பிராமண சமூகத்தை மிகப்பெரும் அளவில் பாதித்துள்ளது. இதன் விளைவாக பல பிராமண சமூகப் பெண்களும், சில பிராமண சமூக ஆண்களும் கலப்புத் திருமணம் செய்து கொள்வது பெருகி வருகின்றது. கலப்புத் திருமணம் நமது பிராமண பாரம்பரியத்தை வேரறுக்கச் செய்திடும்.

உலக மயமாக்களால் தனியார் மயம் - தாராள மயக் கொள்கைகள் அமுலுக்கு வந்ததால் தொழிலாளர்கள் வேலையிழந்தார்கள். விவசாயம் நொடிந்து போய் லட்சக் கணக்கான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படார்கள். சிறு தொழில், சிறு வணிகம் உள்ளிட்ட உள்நாட்டுத் தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது.பன்னாட்டுக் கம்பெனிகள் இந்நாட்டைக் கொள்ளையடிக்க கதவுகள் திறக்கப்பட்டதால் உள்நாட்டுத் தொழில் நலிவடைந்தது.உலகமயமாக்கலின் விளைவால் இன்று கோடிக் கணக்கானோரின் வாழ்வு கேள்விக்குரியதாகிவிட்டது. இதெல்லாம் நமக்குக் கவலை அளிக்கிறது.

ஆனால் அவாளுக்கு கலப்புத் திருமணங்கள் பெருகிவிட்டதே என்கிற கவலை.
பிராமண பாரம்பரியத்தை காதல் திருமணங்கள் வேரறுக்கச் செய்து விடுமாம். அதனால் பிராமணர்கள் கலப்புத் திருமணம் செய்து கொள்ளக் கூடாதாம். உலக மயத்தால் சமூகம் சீரழிகிறது, காதல் திருமணங்கள் அதிகரிக்கிறது, பிராமணியம் அழிகிறது என்றால் உலக மயத்தையல்லவா பிராமணர்கள் எதிர்க்க வேண்டும். அவன் பேண்டதைத் இவன் தின்பானாம். ஆனால் 'நோய்' மட்டும் வரக்கூடாதாம் என்பது போல இருக்கிறது இவாளின் கவலை.

பிறவியிலே மிகச் சிறந்த பிறவியான மனிதப் பிறவியில் அதிலும் புண்ணிய பாரத தேசத்தில், மேலும் குறிப்பாக ரிஷிவர்க்கமாக பிராமணத் தாயார், தகப்பனாருக்குப் பெண்ணாக / பிள்ளையாக பிறந்த நான் எனது வாழ்நாள் முழுவதும் பிராமண பாரம்பரியத்தை கடைப்பிடிப்பேன்.”
“எதிர்காலத்தில் என்னுடைய கணவர் / மனைவி பிராமண சமூகத்தினராகவே இருந்திடுவார். அதாவது வேறு ஜாதியினரை, வேறு மதத்தினரை கலப்புத் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். எனது குடும்பப் பெரியவர்கள் மத்தியில் / ஸ்வாமி சந்நிதியில் / தாம்ப்ராஸ் நடத்துகின்ற சத்யப்ரமாண நிகழ்ச்சியில் நான் இந்த சத்யப் பிரமாணத்தை எடுத்துக் கொள்கின்றேன்.”

என்று பிராமணப் பெண்களும் பையன்களும் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ள வேண்டுமாம்.

"நடந்தவகைள் நடந்தவைகளாக இருக்கட்டும்!
இனி நடக்க இருப்பவை நம்மவைகளாக மட்டுமே இருக்கட்டும்!!"

என நம்பிக்கை வைத்து அந்த அறிவிப்பை முடித்துள்ளார்கள்.

இனி நடப்பவை அவாளுடையதாக இருக்கக் கூடாது. உலக மயம் சமீபத்தியது. வீழ்த்திவிடலாம். நம்பிக்கை இருக்கிறது. ஆனால் பார்ப்பனியம் பல ஆயிரம் ஆண்டு பழைமையானது: உறுதிப் படுத்தப்பட்டது. வீழ்த்துவது கடினம். பார்ப்பனியத்தை வீழ்த்த உலக மயம் உதவும் என்றால் சிறிது காலம் உலக மயத்தை வீழ்த்துவதை தள்ளிப் போடலாமோ என்று கூடத் தோன்றுகிறது!

Thursday, 10 November 2011

பாலும் பசுவதையும்!

”தமிழகத்தில் பசு வதையைத் தடுப்பதற்கான அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளையும் இந்து வழக்குரைஞர்கள் முன்னணியில் இடம் பெற்றுள்ள வழக்குரைஞர்கள் மேற்கொள்ள வேண்டும்”

”வேலூர் மாவட்டத்தில் தோல் தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர் வெளியேற்றப்படுவது தொடர்கிறது. இதைத் தடுக்க வழக்குரைஞர்கள் சரியான சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும்”

புதன் கிழமை (09.11.2011) அன்று வேலூரில் ”இந்து வழக்குரைஞர் முன்னணியை” தொடங்கி வைத்து இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன் மேற்கண்டவாறு பேசியுள்ளார்.

ஏதோ ஒரு கட்சிக்காரன் வந்தான். ஒரு சங்கத்தைத் தொடங்கினான், என்று இதை மிகச் சாதாரணமாகக் கருதிவிட முடியாது.

குஐராத்தில் பசுவதை தடைச்சட்டம் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டது. பசுவைக் கொன்றால் சிறைவாசம் உறுதி. ஏற்கனவே இருந்த ஓராண்டு சிறை தண்டனையால் பசுக்கொலையை தடுக்க முடியவில்லையாம். அதனால் சிறை தண்டனையை ஏழு ஆண்டுகளாக்கிவிட்டார்கள். கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வராக இருந்த போதே மசோதா தயாராகிவிட்டது. இதை செயல்படுத்தக் கோரி போராட்டம் எல்லாம் நடத்தி இருக்கிறார்கள் இந்து மதவெறியாளர்கள்.

எது வதை?

இந்து முன்னணி, பாரதிய ஐனதா, ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்து மத அமைப்புகள் மட்டும் பசு வதையைத் தடுக்க முணைப்பு காட்டுவதேன்? பசு இந்துக்களின் தெய்வமாகக் கருதப்படுவதாலா? அல்லது உயிர் வதைக் கூடாது என்பதாலா? பசுவைக் கொல்லக் கூடாது என்பவர்கள் ஏன் எருது வதையை எதிர்ப்பதில்லை?

கொல்வது மட்டும்தான் வதையா? கொடுமைப்படுத்துவது, இம்சிப்பதெல்லாம் வதையில் சேராதா? “ஏண்டா போட்டு வதைக்கிற?” என்றுதானே நம்மை மற்றொருவர் இம்சிக்கும் போது கேட்கிறோம். எனவே வதை என்பதை இம்சித்தல் அல்லது கொடுமைப்படுத்துதல் என்றும் பொருள் கொள்ளலாமே!

உயர் சாதிக்காரன் கீழ்சாதிக்காரர்களை வதைக்கிறான். பணக்காரன் ஏழைகளை வதைக்கிறான். முதலாளி தொழிலாளியை வதைக்கிறான். மாமியார் மருமகளை வதைக்கிறாள். காவல் துறை மக்களை வதைக்கிறது. ஜெயா அரசு மக்கள் நலப் பணியாளர்களை வதைக்கிறது. ஆப்கானை வதைத்து ஈராக்கை வதைத்து-லிபியாவை-வதைத்து தற்போது ஈரானை வதைக்கத் திட்டம் போட்டு வருகிறது அமெரிக்கா.

ஆளுமையையும், அதிகாரத்தையும், சுரண்டலையும் அடிப்படையாகக் கொண்டே இப்படிப்பட்ட மனித வதைகள் அன்றாடம் அரங்கேறி வருகின்றன.

இப்படி அன்றாடம் அரங்கேறி வரும் மனித வதைகளைக் கண்டு கொள்ளாதவர்கள் பசுவதையை மட்டும் ஏன் எதிர்க்கிறார்கள்? பசுக்களை இந்துக்கள் புனிதமாகக் கருதுவதால் கொல்லக் கூடாது என்கிறார்களா? இஸ்லாமியர்கள் பசுக்களைக் கொன்று தின்கிறார்கள் என்பதற்காக எதிர்க்கிறார்களா? உயிர்களைக் கொள்வது பாவம்-உயிர் வதை பாவம் என்பதற்காக பசு வதையை எதிர்க்கிறார்களா?

காந்தியும் ஆட்டுப் பாலும்

“பால் சாப்பிடுவதை விட்டதற்கு மிக முக்கியமான நோக்கம் ஆன்மீகமானதேயாகும்” என்று காந்தி கடைபிடித்த ஆன்மீகம் கருதி பசு வதை கூடாது என்கிறார்களா?

“எருமைகளின் (அவைகளும் பசுக்கள்தானே) மடிகளிலிருந்து கடைசி சொட்டுவரையிலும் பாலைக் கறந்து விடுவதற்குக் கல்கத்தாவில் மாட்டுக்காரர்கள் அனுசரித்த கொடிய முறைகள் என் மனக் கண்முன் காட்சியளித்தன; மாமிசம் எவ்விதம் மனிதனின் உணவல்லவோ, அதேபோல மிருகங்களின் பாலும் மனிதனின் உணவாக இருப்பதற்கில்லை.” என்று காந்தி சொன்னாரே அத்தகைய கொடுமை கூடாது என்பதால் பசுவதை கூடாது என்கிறார்களா?

“நீங்கள் பால் சாப்பிட்டாலன்றி உங்கள் உடம்பு தேறும்படி செய்வது என்னால் முடியாது” என்று மருத்துவர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் கடைசி வரை பசுவின் பாலைத் தொடவில்லை காந்தி. “சத்தியாகிரகப் பேராட்டத்தை நடத்த வேண்டும் என்று எனக்கு இருந்து வந்த தீவிர ஆர்வம், நான் உயிரோடு இருக்க வேண்டும் என்ற பலமான ஆசையை என்னுள் உண்டாக்கிவிட்டது” என்று காந்தி உயிருக்காக சத்தியத்தைக் கைவிட துணிகிறார்.

“நான் விரதம் எடுத்துக் கொண்ட போது பசுவின் பாலும், எருமைப் பாலுமே என் எண்ணத்தில் இருந்தனவென்றாலும், அதன் இயற்கையான பொருளின்படி, எல்லா மிருகங்களின் பாலும் அதில் அடங்கியதே. மேலும், பால், மனிதனின் இயற்கையான ஆகாரம் அல்ல என்ற கருத்து எனக்கு இருக்கும் வரை, எந்தப் பாலையும் நான் சாப்பிடுவது சரியே அல்ல, இவைகளெல்லாம்அறிந்திருந்தும் ஆட்டுப் பால் சாப்பிடச் சம்மதித்தேன். உயிரோடு இருக்க வேண்டும் என்பதில் கொண்ட உறுதி, சத்தியத்தினிடம் கொண்ட பற்றைவிடப் பலமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது”  என காந்தி பின்னாளில் சத்தியத்தைக் கைவிட்டார்.

காந்தியின் பல்டி

“அதனால்தான் நாங்கள் கட்டிய ஆகாயக் கோட்டைகளில் ஒன்று, … பசுப்பாதுகாப்பு வேலையையும் கவனிப்பது என்பது.  பசுப்பாதுகாப்பு என்பதில் கால்நடை வளர்ப்பு, பசுவின் இனத்தைச் சிறந்ததாக்குவது, காளை மாடுகளை ஜீவகாருண்யத்துடன் நடத்துவது, சிறந்த முறையில் பால் பண்ணைகளை அமைப்பது ஆகியவைகளையும் அடக்கியிருக்கின்றன என்பதே என் அபிப்பிராயம்” என்று காந்தி பின்னாளில் பால் பண்ணைகளுக்காக குரல் கொடுக்கிறார். உயிரே போனாலும் பரவாயில்லை என்று பசுவின் பாலைத் தொடாதவர் பிறகு யாருக்காக பால்பண்ணைகளை அமைக்கக் கோருகிறார்?

காந்தியின் இந்த தலைகீழ் மாற்றம் ஏன் நடந்தது? யாருக்காக நடந்தது? இங்கேதான் பார்ப்பனர்களின் சூழ்ச்சி அடங்கியுள்ளது. வேத காலத்தில் பார்ப்பனர்கள் மாமிசம் உட்கொண்டார்கள், அதுவும் பசு மாமிசம்தான் அவர்களின் பிரியமான உணவு என்பதற்கான ஆதாரங்கள் வேதங்களிலும் மனுஸ்மிருதியிலும் காணக்கிடந்தாலும் இன்று மட்டும் அவர்கள் பசுவை ஏன் தெய்வமாகக் கருதுகிறார்கள்? உயிர்க் கொலையை எதிர்த்த பௌத்தம் செல்வாக்கு பெற்றதால் தாங்களும் செல்வாக்கு பெற வேண்டி மாமிசத்தைக் கைவிட்டு சைவத்துக்கு மாறியவர்கள் பார்ப்பனர்கள். மாமிசத்தைக் கைவிட்ட பிறகு உணவுக்கு என்ன செய்வது? விவசாயம் தெரியாது, மந்திரம் ஓதி பிழைப்பதைத்தவிர வேறு வேலைகள் எவுதும் தெரியாது. எப்படி பிழைப்பது?  எதைத்தின்பது? என்கிற இக்கட்டான நிலையில்தான் அவர்கள் பாலைத் தேர்வு செய்திருக்க வேண்டும். பிற்காலத்தில் பால் இல்லாமல் அவர்கள் வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஏழ்மையும் மாட்டுக்கறியும்

மற்றொரு பக்கம் அடிமைகளாக நடத்தப்பட்ட மக்கள் வறுமை காரணமாக உணவுக்காக மாடுகளைக் கொன்று அதன் கறியை உட்கொண்டு உயிர் வாழ்ந்திருக்க வேண்டும். பசுக்களெல்லாம் கொல்லப்பட்டுவிட்டால் பார்ப்பனர்களுக்கு பால் பற்றாக்குறை ஏற்படுமே? அதனாலேயே பால் கொடுக்கும் பசுக்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். இந்த உண்மையைச் சொன்னால் எடுபடாது என்பதால் பசு புனிதமானது என்கிற கருத்தை பரப்பியிருக்க வேண்டும். அன்று பார்ப்பனர்கள் மட்டுமே இந்துக்களாக அறியப்பட்டார்கள். பின்னாளில் மற்றவர்களும் இந்துக்களாக ஏற்கப்பட்டதால் பார்ப்பனர்களுக்கு மட்டுமே தெய்வமாக இருந்த பசு பொதுவில் இந்துக்களின் தெய்வமாகக் விரிவாக்கப்பட்டிருக்கவேண்டும். இதில்தான் காந்தியும் வீழ்ந்திருக்க வேண்டும்.

இது ஏதோ அனுமானம் அல்ல. பழைய வரலாற்றின் எச்சங்களை இன்றும் காண முடியும். இன்று பால் இல்லாமல் பிறர் உயிர் வாழ்ந்து விட முடியும். ஆனால் பார்ப்பனர்களால் உயிர் வாழ முடியாது. எனவே பார்ப்பனர்களின் தேவையிலிருந்து எழுந்ததுதான் பசுப்பாதுகாப்பு. மாட்டுக்கறி ஏழை எளிய தாழ்த்தப்பட்ட மக்களின் உணவாக இன்றும் நீடிப்பது வரலாற்றின் எச்சம்தானே!

இராம.கோபாலனின் உள்நோக்கம்

பசுவதையை உண்மையியே எதிர்ப்பவர்கள் என்றால் ஒரு கல்லூரி நிர்வாகத்தால் (http://hooraan.blogspot.com/2010/12/blog-post_24.html) பசுக்கள் கொல்லப்பட்டபோது இவர்கள் எங்கே போனார்கள்? எதிர்த்து ஏன் கேள்வி கேட்கவில்லை? பணக்காரன் பசுவைக் கொன்றால் பரவாயில்லை. ஆனால் ‘பறையன்’ பசுவைக் கொள்வதை மட்டும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ‘பறையனாவது’ மடி வற்றிய பசுவைத்தான் கொள்கிறான். ஆனால் இங்கே பணக்காரன் பால்சுரக்கும் பசுக்கைளையல்லவா கொன்றிருக்கிறான்.

தோல் தொழிற்சாலைக் கழிவுகளால் சுற்றுச்சூழல் கெடுவதில் யாருக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது. ஆனால் இதைவிட மிக மோசமாக இராணிப்பேட்டையில் அமைந்துள்ள இரசாயனத் தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடு பண்மடங்கானது. இராணிப்பேட்டை சிப்காட்டில் அமைந்துள்ள திருமலை கெமிக்கல்ஸ் (இது ஒரு பார்ப்பனருக்குச் சொந்தம்), அல்ட்ரா மைரைன், கமார் கெமிக்கல்ஸ், மல்லாடி போன்ற ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் சுற்றுவட்டாரத்திலுள்ள புளியந்தாங்கல், புளியங்கண்ணு, அவரக்கரை, இராணிப்பேட்டை ஆகிய ஊர்களில் உள்ள ஏரி குளங்களை பாழாக்கியதோடு நிலத்தடி நீரையும் பாழாக்கி விவசாயத்திற்கும், குடிப்பதற்றும் பயன்படாத நிலைக்கு ஆளாக்கிவிட்டன. இத்தகைய நீரைக் குடிக்கும் பசுக்கள் உள்ளிட்ட கால் நடைகளும் இனம் புரியா நோய்களுக்கு ஆளாகி இறந்து போகின்றன. இங்கேயும் பசுக்கள் கொல்ப்படுகின்றன. இவை எல்லாம் இராம கோபாலனுக்குத் தெரியாதா என்ன?. இத்தகைய ஆலைகளால்தான் சுற்றுச்சூழல் மாசடைந்த நகரங்களில் உலகிலேயே இராணிப்பேட்டை இரண்டாம் இடத்தில் உள்ளது.


மேற்கண்ட இரு கோரிக்கைகளிலும் மக்கள் நலன் என்பதைவிட இஸ்லாமியர்களின் மீதான காழ்ப்புணர்ச்சியிலிருந்து வைக்கப்பட்டதும் அதையொட்டி மத மோதலுக்கு வித்திடுவதும்தான் இராம.கோபாலனின் நோக்கமாக இருக்கமுடியும். வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தோல் ஆலைகள் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானவை என்பதும், தாழ்த்தப்பட்டவர்கள் மாட்டுக்கறி உண்கிறார்கள் என்பதைவிட பசுக்கள்/மாடுகள் இஸ்லாமியர்களுக்காகவே வெட்டப்படுகின்றன என்பதும்தானே இவர்களது வாதம்.

தோல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரை தடுத்த நிறுத்த கோரிக்கை வைக்கும் இராம் கோபாலன், திருமலை கெமிக்கல்ஸ், அல்ட்ரா மைரைன், கமார் கெமிக்கல்ஸ், மல்லாடி போன்ற ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளை தடுத்து நிறுத்தவும் கோரிக்கை வைத்திருந்தால் அதில் நேர்மை இருந்திருக்கும். இந்து முன்னணியிடம் இதை எப்படி எதிர்பார்க்க முடியும்?

Wednesday, 22 June 2011

கொடுமைக்கு ஆளாவது மருமகள்களா அல்லது முதியோர்களா? ........தொடர்ச்சி

முதியோர்கள் மீது....

வரன் பார்க்கும் போதே மாமியார் இல்லாத வீடு அல்லது பையனை நம்பி அவனது அப்பா அம்மா வாழ்தாலும் அவர்கள் தனியாக இருந்தால் நல்லது என கணக்குப் போடும் பெண்வீட்டாரும் இருக்கத்தானே செய்கிறார்கள். முன்கூட்டியே தீர்மானிக்க முடியவில்லை என்றாலும் பிறகு என்ன செய்கிறார்கள்? மாமனாரையும் மாமியாரையும் வீட்டை விட்டு துரத்துவது அல்லது தனிக்குடித்தனம் செல்வது இதில் எது சாத்தியமோ அதற்காக மருமகள்கள் புகுந்த வீட்டில் தொடுக்கும் முதல் யுத்தம் இதுதான். இந்த யுத்தத்திற்கு இடைவிடாது தூபம் போடுவது மருமகளின் தாய்தான். இதில் வெற்றி பெறுவது என்னவோ மருமகள்தான். இந்த வெற்றியை தீர்மானிப்பதில் பெரும் பங்காற்றுவது மருமகள் கொண்டு வந்த நகை, பணம், சொத்து, சீர்-செனத்தைதான்.

மாமனாரும் மாமியாரும் கைநிறைய சம்பாதிக்கிறார்கள், கனிசமாக 'பென்சன்' வாங்குகிறார்கள் என்றால் வீட்டின் ஒரு ஓரத்தில் இருப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அவர்களின் சம்பாத்தியம் கணவனின் கைக்கு வந்தால் மட்டுமே இந்தச் சலுகை. அதே நேரத்தில் மாமனாருக்கு புதிய வேலைகளும் தீர்மானிக்கப்படும். மளிகைக் கடை, ரேஷன் கடை, காய்கறி மார்க்கெட், கரண்ட் பில், ஃபோன் பில் என வெளிப் பணிகள் அனைத்தும் பி.பி.ஓ (BPO) செய்யப்படும். மாமனாரும் மாமியாரும் 'தண்டச் சோறு' என்றால் வெளிப்பணிகளும் இல்லை, வீட்டில் தங்க இடமும் இல்லை.

மருமகள் கர்ப்பமாகி வளைகாப்பு முடிந்து அம்மா வீட்டிற்குச் சென்று விடுவார். அம்மா வீட்டில்தான் குழந்தை பிறக்கும். மகப்பேறு செலவுகள் அனைத்தையும் இப்போது பெண்வீட்டார்தான் சுமக்க வேண்டும். புதிதாய் குழந்தை பெற்ற தாய்க்கு குழந்தையை பராமரிக்கத் தெரியாதாம். அதனால் அம்மா வீட்டிற்குச் சென்றால் நன்றாக கவனித்துக் கொள்வார்களாம். தனது தாயைப்போல மாமியாரும் குழந்தை பெற்று வளர்த்த அனுபவசாலிதானே. ஏன் மாமியார் பார்த்துக் கொள்ளக்கூடாது? இதற்கு மாமியாரும் தயாரில்லை,  மருமகளும் தயாரில்லை.


குழந்தை பிறந்து ஒன்றிரண்டு மாதங்கள் கழித்து மருமகள் புகுந்த வீடு திரும்புவார். குழந்தையைப் பார்த்துக் கொள்ள தனது தாயை உடன் அழைத்து வரலாம். ஆனால எத்தனை நாளுக்குத்தான் மகள் வீட்டில் தாயால் இருக்க முடியும்? அவருக்கும் கணவனும் குடும்பமும் உண்டே! புகுந்த வீட்டில் மாமியாரும் மாமனாரும் குறிப்பாக மாமியார் இருந்தால் ஒத்தாசையாக இருக்கும். என்ன செய்ய? அவர்களைத்தான் ஏற்கனவே விரட்டியாச்சே!

இப்பொழுது மருமகளின் பாடு திண்டாட்டம்தான். "ஏங்க மாமாவும் அத்தையும் தனியா எதுக்காக கஷ்டப்படனும். அவங்களும் நம்ம கூடவே இருந்துட்டுப் போவட்டுமே"என கணவனிடம் நைச்சியம் பேசி மாமனாரையும் மாமியாரையும் வரவழைப்பதில் மருமகள் வெண்புறாவாக மாறிவிடுவார். குழந்தை ஆய் போனால் கழுவுவது, பத்து பாத்திரம் தேய்ப்பது என வீட்டு வேலைக்கார ஆயாவுக்கு உரிய உட்பணிகள் அனைத்தும் மாமியாரிடம் ஒப்படைக்கப்படும். மாமனாருக்கு ஏற்கனவே சொல்லப்பட்ட வெளிப் பணிகளோடு குழந்தைகளை காலையில் பள்ளிக்கு அழைத்துச் சென்று மீண்டும் மாலையில் அழைத்து வருவது என கூடுதலான வெளிப்பணி சேர்க்கப்படும்.

காலம் வெகுவேகமாக உருண்டோடிவிடும். பிள்ளைகள் வளர்ந்து தனியாகப் பள்ளிக்குச் செல்லத் தொடங்கி விடுவார்கள். மாமனார் மாமியார் இருவருக்கும் வயதாகிவிட்டது. ஒதுக்கப்பட்ட உள்பணி மற்றும் வெளிப் பணிகளை அவர்களால் சரிவரச் செய்ய முடிவதில்லை. குறிப்பாக மாமனார் அடிக்கடி நோய்வாய்படுவது அதிகரித்து விட்டது. எப்பொழுதும் இருமலும் காருவதுமாக இருப்பது தொல்லையாக மாறிவிட்டது. குறிப்பாக பிள்ளைகளுக்கு நோய் தொற்றிவிடும்.

நடுத்தர வர்க்கம் என்றால் முதியோர் இல்லத்தில் தள்ளி விடுவதும் ஏழைகளாயிருந்தால் மாட்டுக் கொட்டகையோ அல்லது வீட்டுத் தாழ்வாரமோ ஒதுக்கப்படும். உயிர் மட்டும் ஒட்டியிருப்பதற்குத் தேவையான கூழோ கஞ்சியோ ஊத்தப்படும். அவைகூட அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட டொக்கு விழுந்த ஒரு பாத்திரத்தில் கொட்டப் படும். 'கஞ்சி ஊத்திட்டாங்க போல' என அவர்களே தெரிந்து கொண்டு குடித்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் படுபாவி பட்டினி போட்டே கொன்று விட்டாளே என்ற பழி வந்து விடுமே! காலையிலும் மாலையிலும் கமழும் தேனீர் மற்றும் காஃபியின் மணம் நாசித்துவாரங்களைத் துளைக்கும் போது நாவில் எச்சில் ஊறும். சிறிது நேரத்தில் காற்றில் மிதந்து வந்த மணமும் மறையும்.  நாவில் ஊறிய எச்சிலும் வறண்டு போகும். வாசத்திலேயே தொண்டையை நனைக்கும் முதியோர்கள்தான் எத்தனை பேர்!   

முதியோர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை பட்டியலிட்டால் வலைப்பூக்கள்கூட கருகிவிடும். இத்தகைய கொடுமைகளுக்கு மருமகள்களே முக்கியப் பங்காற்றுகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

இப்படி மாமியார் மாமனார்கள் ஒருபுறமும், மருமகள்கள் மற்றொரு புறமும் என மாறி மாறி ஒருவரை ஒருவர் துன்புறுத்துகிறார்கள். சொந்த உறவுகளையே துன்புறுத்தும் இவர்களுக்கு சமூகத்தில் நிலவும் பிறரின் துன்ப துயரங்கள் மட்டும் எப்படிப் புரியும்? அதனால்தான் சமூக உணர்வு என்பது இத்தகையோருக்கு சுட்டுப் போட்டாலும் வருவதில்லை.  

மருமகள்களும் முதியோர்களும் துன்புறுத்தப்பட்டு இந்தியாவெங்கும் பிண வாடைதான் வீசுகிறது. இதுதான் இன்றைய இந்தியா.  ஏதோ ஒரு சிலர் மட்டும் இப்படி நடந்து கொண்டால் உபதேசம் செய்து திருத்திவிடலாம். ஆனால் விதிவிலக்காக ஒருசிலரைத் தவிர ஒட்டு மொத்த சமூகமும் இப்படி இருந்தால் எப்படித் திருத்த முடியும்?

இந்து, முஸ்லீம், கிருத்துவ மதத்தினரும், பார்ப்பனர், ரெட்டியார், பிள்ளைமார், கள்ளர், தேவர், மறவர், நாடார், முத்தரையர், செட்டியார், வன்னிய-வெள்ளாள-வேட்டுவ-ஊராளி-
குரும்ப கவுண்டர்கள், நாயுடு, பள்ளர், பறையர், சக்கிலியர், வண்ணார், வாணியர், நாவிதர், செங்குந்த-துளுவ வேளாள-அகமுடைய முதலியார் என சகல சாதி மக்களும் இதில் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். தேசம் நெடுக இழையோடும் நமது பண்பாடு இதுதான்.

பணமும் பொருளுமே வாழ்க்கை என முன்னிறுத்தப்பட்டு இவற்றை அடைவதே வாழ்க்கையில் வெற்றியாக கருதப்படுகிறது. அதற்காக எத்தகைய பஞ்சமா பாதகங்களையும் செய்வது தவறில்லை என்கிற போக்கு நிலவுகிறது. குறிப்பாக இன்றைய உலகமயம் ஏற்படுத்தியுள்ள நிச்சயமற்ற எதிர்காலம் இவற்றை மேலும் தீவிரப்படுத்திவருகிறது. அதனால்தான் சமீப காலங்களில் வரதட்சணைக் கொடுமைகள் அதிகரித்துள்ளன. முதியோர் இல்லங்கள் பெருகி வருகின்றன.

மருமகள்களும், மாமனார்-மாமியார்களும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? இன்று நேற்றல்ல, காலம் காலமாக இத்தகையக் கொடுமைகள் தொடர்ந்து அரங்கேறுவது எதனால்?  இது தனிநபர் சார்ந்த விவகாரமா அல்லது சமூகம் சார்ந்த பிரச்சனையா? கொடுமை செய்யும் தனி நபர்களுக்கு எதிராக போராடுகிற அதே வேளையில் இவற்றிற்கு அடிப்படையாக இருக்கும் இச்சமூகக் கட்டமைப்பை என்ன செய்யப் போகிறோம?

பணம் எனும் பிணத்தின் மீது கட்டப்பட்டுள்ள இச்சமூகக் கோட்டையிலிருந்து பிணவாடைதான் வரும். இத்துப்போன பழங்கோட்டையை தகர்க்காமல் பிண வாடை ஒரு போதும் அகலாது.

முற்றும்

ஊரான்