Thursday, 9 April 2015

இந்தியா ஜனநாயக நாடா? வெட்கக் கேடு!









 

சொல்லிக் கொள்ளப்படும் எத்தனையோ சட்டங்கள், வழிகாட்டும் நெறிமுறைகள் இவை எதையும் காவல் துறையும் இராணுவமும் மயிரளவுக்குக்கூட மதிப்பதில்லை என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் செம்மரம் வெட்டியதாக திருப்பதி அருகில் தமிழகத்தைச் சேர்ந்த இருபது பேர் படுகொலை செய்யப்பட்ட கோர நிகழ்வு.

இந்தியா ஜனநாயக நாடா? வெட்கக் கேடு!

Monday, 6 April 2015

அதளபாதாளமும் மன்மத ஆண்டும்!

14.04.2015 அன்று உத்திராயண புண்ணிய காலத்தில் வசந்த ருது, செவ்வாயக்கிழமை,, கிருஷ்ண பட்சம் (தேய்பிறை) தசமி திதி அவிட்ட நட்சத்திரம் 2 ம் பாதம், மகர ராசி, சுபநாம யோகம், பத்திரை கரணம், சித்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில், நண்பகல் 01.50 மணிக்கு கடக லக்னத்தில் கும்ப நவாம்சத்தில் பிறக்கிறதாம் தமிழ் ஆண்டுகளில் இருபத்தொன்பதாக வரும் மன்மத ஆண்டு.

“வெளி நாடுகளில் குறிப்பாக, மேற்கத்திய நாடுகளில் நமது நாட்டின் கௌரவம் உச்ச கட்டத்தை எட்டிவிடும். இரும்பு, தாதுப் பொருட்கள் நிலக்கரி சிமெண்ட் போன்ற தொழில்கள் பெரிய அளவில் வளர்ச்சி அடையும். நீதித்துறையில் உன்னதமான மாற்றங்கள் நிகழும். ஆணவத்தால் தலைக்கனம் பிடித்திருந்தவர்களும் பகல் வேஷம் போடுபவர்களும் அதளபாதாளதிற்குத் தள்ளப்படுவார்கள்” என சென்னையைச் சேர்ந்த சோதிடர் கே.சி.எஸ். ஐயர் என்பவர் ஆண்டுப்பலன் கணித்துள்ளார். (வெள்ளிமணி / தினமணி / ஏப்ரல் 03 2015)

இதை ஒரு சோதிடனின் கணிப்பாக மட்டும் ஒதுக்கிவிட முடியாது. இது பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு தொலைக்காட்சி விவாதங்களில் அரசியல் விமர்சகர் என்ற முகமூடியோடு அறிமுகமாகி இன்று பா.ஜ.க பிரமுகராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ராமசுப்பிரமணியன் என்பவரின் கூற்றும் கே.சி.எஸ். ஐயரின் கணிப்பும் வேறு வேறு அல்ல.

பா.ஜ.க வினர் சொல்வது கருத்து! சோதிடன் சொல்வது கணிப்பு.!மொத்தத்தில் இருவரும் சொல்வது பா.ஜ.க ஆட்சியை மனதில் வைத்துதான்.

ஒரு பத்து லட்ச ரூபாய் கோட்டாலேயே ஜோட்டால அடிச்ச மாதிரி மேற்கத்திய நாடுகளில் நமது நாட்டின் கௌரவத்தை ஏற்கனவே நிரூபித்துவிட்டார்கள். புத்தாண்டு பிறப்பதற்குள்ளாகவே முதல் பலன் பலித்துவிட்டது.

நிரக்கரி சுரங்க ஒதுக்கீடு மற்றும் கனிம வளங்களை கொள்ளையடிக்க அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் மலைகளையும் காடுகளையும் ஏற்கனவே ஏலம் போட்டுவிட்டதால் இரும்பு, தாதுப் பொருட்கள் நிலக்கரி சிமெண்ட் போன்ற தொழில்கள் பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என்பதையும் நம்பலாம். இதனால் ஆதாயம் அடையப் போவது சாமான்யர்கள் அல்ல; அதானிகளும் அம்பானிகளும் என்பதும் உண்மைதான்.

தொழிலாளர் சட்டங்கள் முதல் நிலம் கையகப்படுத்தும் சட்டங்கள் வரை பல்வேறு சட்ட திருத்தங்கள் செய்யப்பட்டு வருவதால் பாதிக்கப்படும் சாமான்யர்கள் நீதி மன்றமே செல்ல முடியாது என்பதால் நீதித்துறையில் உன்னதமான மாற்றங்கள் நிகழும் என்பதையும் நம்பலாம். ஒரு வேளை அடுத்த ஓராண்டுக்குள் இடஒதுக்கீட்டுக்கு ஆப்பு அடிக்கப்பட்டாலும் படலாம். இதை மனதில் வைத்துக் கொண்டுகூட பலன் சொல்லியிருக்கலாம்.

கடைசியாக “ஆணவத்தால் தலைக்கணம் பிடித்திருந்தவர்களும், பகல் வேஷம் போடுபவர்களும் அதளபாதாளதிற்குத் தள்ளப்படுவார்கள்”  என்பது மட்டும் வௌங்கல.

இங்கே ஆணவத்தால் தலைக்கணம் பிடித்தவர்கள் என்று யாரைச் சொல்கிறார்? பகல் வேஷம் போடுபவர்கள் யார்?

இந்த மன்மத ஆண்டில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடக்க வாய்ப்பிருப்பதால் ஆணவத்தால் தலைக்கனம் பிடித்தவர்கள் - பகல் வேஷம் போடுபவர்கள் அதளபாதாளத்திற்கு தள்ளப்படுவார்கள் என்றால் யாரோ சிலருடைய தேர்தல் தோல்வியை மனதில் வைத்துதான் ஐயர் இப்படி சொல்கிறார் என்று புரிந்து கொள்வதா? அப்படியானால் அதளபாதாளத்திற்கு தள்ளப்படப் போவது யார்?

நமக்குத் தெரிந்து ஆணவமும் தலைக்கனமும் பிடித்தவர் என்று பார்த்தால் மக்களின் முதல்வர்தான் இத்தகைய தகுதிகளோடு இருப்பவர். அவர் அதளபாதாளத்திற்குச் செல்ல ஐயர் ஒரு போதும் விரும்பமாட்டார். அப்படியானால் மாறன் சகோதர்களைச் சொல்கிறாரா? பகல் வேஷம் போடுபவர்கள் என்று கலைஞரை மனதில் வைத்து சொல்கிறாரா? இந்த அதளபாதாளத்திற்கு தள்ளப்படுபவர்களை மட்டும் கொஞ்சம் தெளிவுபடச் சொல்லியிருந்தால் வௌங்கியிருக்கும்!

Saturday, 4 April 2015

ஆதார் அட்டையும் மாட்டுக் கோமியமும்!

“மாட்டிறைச்சிக்கான தடையை இந்தியா முழுதும் அமுல்படுத்த மாநில அரசுகளுக்கு மிரட்டல். இனி மான்கறி கிடைத்தாலும் கிடைக்கலாம்; ஆனால் மாட்டுக்கறிக்கு வாய்ப்பே கிடையாது. எச்சரிக்கை: மாட்டுக்கு வயதாகி மண்டையைப் போட்டாலோ அல்லது நோயினால் மண்டையைப் போட்டாலோ மறவாமல் ‘டெத் சர்டிபிகேட்டை’ வாங்க மறவாதீர்கள். என்ன செய்ய? ‘டெத் சர்டிபிகேட்டுக்கு’ கொஞ்சம் செலவாகும்தான். இல்லை என்றால் கம்பி எண்ண வேண்டி வரும்!”

இப்படி எழுதி (http://hooraan.blogspot.in/2015/03/3.html) பத்து நாட்கள்கூட ஆகவில்லை. அதற்குள்……

மாடுகளின் புகைப்படத்துடன் கூடிய முழு விவரங்களையும், அவை தங்களுக்குச் சொந்தமானவை என்பதற்கான உத்தரவாதக் கடிதத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் நகர காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். இதில் கூடுதலான தகவல் என்னவென்றால் புகைப்படம் எடுக்கும் போது மாட்டின் உரிமையாளரும் உடன் இருக்க வேண்டுமாம்.

பசுவதைத் தடுப்புச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இது அவசியமாம். இல்லை என்றால் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க முடியாதாம்; வதந்திகளைத் தடுக்க முடியாதாம்.

இனி மாடுகளுக்கும் ஆதார் அட்டை அவசியம் என்ற அறிவிப்பை விரைவில் எதிர்பார்ப்போம்!

ஆதார் அட்டை பெறுவதற்காக தாசில்தார் அலுவலகங்களில் மாடுகளுக்கான தனி கவுன்ட்டர் திறக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.  

மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் ஆசாத் நகரில் மாட்டிறைச்சி விற்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 2 மாட்டுத் தலைகளும் 150 கிலோ மாட்டிறைச்சியும் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறையும் ரூ.10000 அபராதமும் நிச்சயம்.

மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கோவிந்த் பன்சாரே 82 வயதான ந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர். 2015 பிப்ரவரி 16-ம் தேதி தனது மனைவியுடன் காலை நடைப்பயிற்சி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது அவரது வீட்டின் அருகாமையில் வைத்து சுடப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் 20-ம் தேதி உயிரிழந்தார்.

இந்த வழக்கு என்ன ஆனது என்பது குறித்து எந்தச் செய்தியும் இல்லை. ஆனால் மாட்டிறைச்சிக்கோ உடனடி நடவடிக்கை.

மேற்கு வங்கத்தில் 72 வயது கன்யாஸ்திரி பாலியல் வண்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார்.

மேற்கு வங்கத்தில் கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் மாநில அரசின் சி.பி.ஐ விசாரணை கோரிக்கையை நிராகரிக்கும் மத்திய அரசு இனி மாட்டிறைச்சி வழக்குகளில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மத்திய அரசு அலுவலகங்களில் மனித மூத்திரத்தைக் கழுவ மாட்டு மூத்திரம் கிடைக்காமல் போய்விடுமோ எனக் கவலைப்படுபவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

இந்துஸ்தான் பேப்பர் கார்பரேசன், இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ், எச்.எம்.டி வாட்ச்ஸ், திரிவேணி ஸ்ட்ரக்சர்ஸ், துங்கபத்ரா ஸ்டீல் கார்பரேசன் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல பொதுத்துறை நிறுவனங்கள் நலிவடைந்துவிட்டதாம். ஊழியர்களுக்கான ஊதியம் மட்டும் ஆண்டுதோறும் 10000 கோடி ரூபாய் செலவாகிறதாம். எனவே ஊதியத்தை மிச்சப்படுத்த இந்த ஆலைகளை மூடப்போவதாக மத்திய கனரக தொழில் துறை இணை அமைச்சர் சித்தேஷ்வர் அறிவித்துள்ளார்.

மாட்டுக்கு பல்லக்காம். மாநிடனுக்கு பாடையாம். இதற்காகவா ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

தூத்துக்குடி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் பத்து ஆண்டுகளுக்கு முன்பே சுங்கம் வசூலிப்பது நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது அங்கு சுங்கம் வசூலிப்பது நிறுத்தப்படுவதாக சுற்றறிக்கை அனுப்பி அஜால் குஜால் செய்துள்ளது மோடி அரசு.

“ராஜீவ்காந்தி, நைஜீரியாவைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டிருந்தால், அந்தப் பெண் வெள்ளை தோலுடையவராக இருந்திருக்காவிட்டால், காந்கிரஸ் கட்சி அவரது தலைமையை ஏற்றுக் கொண்டிருக்குமா?”

இவ்வாறு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை இணை அமைச்சர் கிரிராஜ்சிங் பேட்டி கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்டது, அதன் பிறகு மன்னிப்பு கேட்டதை வெறுமனே வாய்க்கொழுப்பு என ஒதுக்கிவிட முடியாது. ஆரிய நிறவெறியர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?.

தொடர்புடைய பதிவுகள்:




Friday, 27 March 2015

கிரிக்கெட்: உலகக் கோப்பையும் இந்தியனின் மனநிலையும்!

இந்திய வீரர்கள் வீழ்த்தப்பட்ட போது, தானே வீழ்ந்ததைப் போல உணர்ந்தான். துவண்டு போனான். துக்கம் தொண்டையை அடைத்தது. சோகம் கவ்வியது. செய்வதறியாது திகைத்து நின்றான். கண்களில் கண்ணீர் முட்டியது. கைகளில் இருந்த கைக்குட்டை ஈரத்தால் உறைந்து போனது. இதுதான் இன்றைய இந்தியனின் நிலை. இவன் வீட்டில் இழவு விழுந்தால்கூட இத்தனை சோகத்திற்கு ஆளாவானா என்பது ஐயமே!

இவ்வாறு சென்ற உலகக் கோப்பையின் போது எழுதியிருந்தேன். இந்த உலகக் கோப்பையில் இந்தியா அரை இறுதியில் தோற்று விட்டது. இந்தச் சூழலில் இந்தியனின் மன நிலையை மேலும் அறிய...

துன்பக் கடலில் துவளும் இந்தியா! 


தொடர்புடைய பதிவுகள்:

Sunday, 22 March 2015

கடவுள் ஒரு செங்கிஸ்கான்-வீழ்த்துங்கள் அவனை!

”நான் நாத்திகம் பேசுவதற்கு காரணம் என்னுடைய ஆணவமா? அகந்தையா?

எனது பாட்டனாரும் எனது தந்தையும் பக்திமான்களாக இருந்தும் எனது பள்ளிப் படிப்பின் போது காலையும் மாலையும் காயத்ரி மந்திரம் சொல்லி பிரார்த்தனை செய்து சிறு வயதில் பக்தனாக இருந்த நான் எப்படி நாத்திகன் ஆனேன்?

ஒரு வழக்கு தொடர்பாக நான் கைது செய்யப்பட்டு காவலில் இருந்த போது அவ்வழக்கில் எனக்கு தூக்கு தண்டனைகூட விதிக்கப்படலாம் என்ற நிலையில் இரண்டு வேலையும் கடவுளை வணங்கச் சொல்லி காவலர்கள்  என்னைத் தூண்டிய போதும் மிகவும் இக்கட்டான நிலையிலும் நான் தொடர்ந்து நாத்திகனாகவே  இருக்க முடிந்ததேன்?

மதங்கள் எல்லாம் மக்களுக்காகத்தான் எனில் அவைகளுக்குள் வேறுபாடுகள் ஏன்? இந்து மதத்திற்குள்ளாகவே ஆரிய சமாஜம், சனாதன தர்மம் என பிரிவுகள் ஏன்?

துன்பமும் துயரமும் சதா நடந்து கொண்டிருக்கும் போது கடவுள் சர்வ வல்லமை படைத்தவன் எனில் இதை எல்லாம் போக்காமல் ஒரு நீரோ மன்னனைப் போல - ஒரு செங்கிஸ்கானைப் போல அவன் நடந்து கொள்வதேன்? படைக்காதிருக்கக்கூடிய சக்தியும் கடவுளிடம் இருக்கும் போது எதற்காக கடவுள் மக்களைப் படைத்தான்?

சாதித் திமிர்கொண்ட மேல்சாதிக்காரன் கீழ்சாதிக்காரனை தீண்டத் தகாதவனாக நடத்துவதற்கும், மமதையும் பேராசையும் உச்சி முதல் உள்ளங்கால் வரையில் கொண்ட ‘குதிக்கும்’ பார்ப்பனர்களால் வேண்டுமென்றே நிர்மூடத்தனத்தில் ஆழ்த்தி அமுக்கப்பட்டிருக்கும் தாழ்த்த்தப்பட்ட மக்களின்  தண்டனைக்குப் பொறுப்பாளி யார்? உங்களுடைய பரிசுத்த ஞான நூற்களாகிய வேதங்களிலிருந்து சில வாக்கியங்களை அவர்கள் கேட்டாலும் அவர்களுடைய காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டுமென்று தண்டனை விதித்ததற்கு அபராதம் செலுத்த வேண்டியவர்கள் யார்?”

இப்படி கடவுள் மதம் குறித்து பகத்சிங் சரமாரியான கேள்விக் கணைகளைத் தொடுத்து “கற்றுணர் - எதிராளிகளின் பலமான ஆட்சேபங்களுக்கு அச்சமின்றி ஆணித்தரமான ஆப்புகளும், கண்டனங்களும் கொடுப்பதற்காகக் கற்றுணர். உன்னுடைய இலட்சியம், கொள்கை இவைகளின் போக்கைப் பரிசீலனை வாதங்களால் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு கற்றுணர்” என்கிற உணர்ச்சிகள் தன்னுடைய மனதின் வாசற்படியில் கடல் அலைகளைப் போன்று கிளம்பி தாவித்தாவி முட்டி மோதி விசயங்களை கற்றுணர ஆராய்ந்தறியத் தொடங்கியதின் விளைவாக அவரிடம் பெறும் மாற்றங்கள் நிகழ்ந்தன. அவர் ஒரு நாத்திகன் ஆனார்.

புதியவற்றைக் கற்றுணர்வதற்கு பகத்சிங் நமக்கெல்லாம் ஒரு வழிகாட்டி!

மார்ச் 23 பகத்சிங் மற்றும் அவரது சக தோழர்கள் சுகதேவ், ராஜகுரு ஆகியோரின்  நினைவு நாள்.


சுகதேவ் - பகத்சிங் - ராஜகுரு
மேலும் படிக்க:

1.நான் நாத்திகன் ஏன்?
தமிழில் பா.ஜீவானந்தம்.
வெளியீடு கீழைக்காற்று வெளியீட்டகம். 10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை 600 002. தொ.பே எண் 044-28412367
விலை: ரூ15/=

2.The Daring Youth of India : BAGATH SINGH. by: Col.Raghvinder Singh.
Published by: VIJAY GOEL, S-16, Naveen Shahdara, Delhi-110032 Phone: 22324833 e-mail: goelbooks@rediffmail.com
விலை: ரூ75/=

மேலும் பார்க்க:
The Legend of Bhagat Singh (2002) - Hindi Movie

https://www.youtube.com/watch?v=x-Zz6nobDik