Friday, January 18, 2019

சபரிமலை-புனிதம் தீண்டாமையின் மையப் புள்ளி!

பத்து வயதிலிருந்து ஐம்பது வயது வரை உள்ளப் பெண்களும் சபரிமலைக்குச் செல்லத் தடையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொல்லி நான்கு மாதங்கள் உருண்டோடி விட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் பல பெண்கள் சபரிமலைக்குச் செல்ல முயன்றபோதெல்லாம் ஆர்.எஸ்.எஸ்.-பாரதிய ஜனதா-பார்ப்பன சங் பரிவாரக் கும்பல் மிகப் பெரிய அளவில் கேரளத்தில் கலவரத்தைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேட முயற்சித்து வருகின்றன. கடுமையான எதிர்ப்புகளையும் மீறி பிந்து மற்றும் கனகதுர்கா ஆகிய இருபெண்கள் சபரிமலைக்குச் சென்று அய்யப்பனை வழிபட்டுவிட்டு திரும்பி உள்ளனர். பெண்கள் பதினெட்டாம்படியேறி அய்யப்பனை வழிபட்டதால் கோவில் தீட்டுபட்டுவிட்டதாகக்கூறி கோவில் நடையை சாத்தி தீட்டுக்கழிப்பு பூஜை செய்துள்ளது தந்திரிக் கும்பல்.

தீண்டாமை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. அது எந்த வடிவத்தில் கடைபிடிக்கப்பட்டாலும் அது தண்டனைக்குரிய குற்றம் என இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 17 மிகத் தெளிவாக சொன்ன போதிலும் தீண்டாமையை சாதியோடு மட்டும் தொடர்புடையதாகக் கருதி பிற வடிவங்களில் கடைபிடிக்கப்படும் தீண்டாமையை கண்டு கொள்ளாமல் இருப்பது அம்பேத்கரையே அவமதிக்கும் செயலாகும். அரசியல் சட்ட வரைவுக்குழுவில் இருந்தவர்கள் பல்வேறு திருத்தங்களை முன்வைத்த போதும் அவற்றை எல்லாம் நிராகரித்துவிட்டு தற்போதைய நிலையில் அதாவது தீண்டாமை எந்த வடிவத்தில் கடைபிடிக்கப்பட்டாலும் அது தண்டனைக்குரிய குற்றமாகும் என்கிற முக்கியமான அம்சத்தை ஒரு தொலை நோக்குப் பார்வையோடு சட்டப்பிரிவு 17 அம்பேத்கர் அவர்கள் உருவாக்கினார்.

ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் இந்து மல்கோத்ராவைத் தவிர மற்ற நான்கு பேரும் பத்து வயதிலிருந்து ஐம்பது வயது வரை உள்ளப் பெண்கள் சபரிமலைக்குச் செல்லத் தடை விதிக்கும் கேரளா இந்துக் கோவில் வழிபாடு (நுழைவை அங்கீகரித்தல்) விதி  3(b)” ஆனது இந்திய அரசியல் சட்டப் பிரிவுகள் 14 (சமத்துவம்), 15 (பாலினப் பாகுபாடு,)  21 (தனிமனித சுதந்திரம்), 25 (ஒரு மதத்தைத் தழுவுவதறக்கும் வழிபடுவதற்குமான உரிமை) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு எதிரானது; இந்திய அரசியல் சட்டப் பிரிவு 26 ன் படி அய்யப்பன்கள் தனி வகையறா கிடையாது மற்றும் பத்து வயதிலிருந்து ஐம்பது வயது வரை உள்ளப் பெண்கள் சபரிமலைக்குச் செல்லத் தடை விதிப்பது அவசிய மதச் செயல்பாடு கிடையாது என சட்டத்தின் பார்வையில் நின்று தீர்ப்பு வழங்கினாலும் நீதிபதி சந்திரசூட் மட்டும் தீண்டாமை என்கிற முக்கிய அம்சத்தையும் கணக்கில் கொண்டு தீர்ப்பு வழங்கி உள்ளார். இந்து மல்கோத்ரா மட்டும் பத்து வயதிலிருந்து ஐம்பது வயது வரை உள்ளப் பெண்களை மனுமதிக்காதது சரியே என தீர்ப்பு வழங்கி உள்ளார்.

தீட்டில் இரு வகைகள் உண்டு. ஒன்று சாதியத் தீட்டு. அதாவது பறையனைத் தொட்டுவிட்டால் அது சாதியத் தீட்டு. மற்றொன்று வாழ்வியல் தீட்டு. அதாவது மாதவிடாய்ப் பெண், பிணம் உள்ளிட்டவை இதில் அடங்கும். மாதவிடாயை தீட்டு என்கிறது இந்து மதம் (மனு 3-239, 4-208, 5-66, 5-85) மாதவிடாய்ப் பெண்ணையும் பறையனையும் தெரியாமல் தொட்டுவிட்டால் தீட்டுக் கழிக்க தலை முழுக வேண்டும் என்கிறது இந்து மதம். (மனு 5-85).

தூய்மை-தீட்டு (purity-pollution) என்கிற உயர்மை-தாழ்மை என்கிற இந்து மதக் கோட்பாடுதான் சாதியத் தீட்டையும் வாழ்வியல் தீட்டையும் வரையறுக்கிறது. எங்கெல்லாம் புனிதம் பேசப்படுகிறதோ அங்கெல்லாம் தீட்டும் சேர்ந்தே இயங்குகிறது. அதனால்தான் இரு பெண்கள் சபரிமலைக்குச் சென்றதால் கோவிலின் புனிதம் கெட்டுவிட்டது என தீட்டுக் கழிப்பு பூஜை செய்கிறார்கள். பத்து வயதிலிருந்து ஐம்பது வயது வரை உள்ளப் பெண்கள் சபரிமலைக்குச் செல்வதைத் தடுப்பதும், மீறி சென்றால் அதற்காக தீட்டுக் கழிப்பு பூஜை நடத்துவதும் இந்திய அரசியல் சட்டப் பிரிவு 17 க்கு எதிரான தண்டனைக்குரிய குற்றமாகும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிலைநாட்டிய பெண்கள் தாக்குதலுக்கு அஞ்சி தலைமறைவாக உள்ளனர். இந்திய அரசியல் சட்டப் பிரிவு 17 க்கு விரோதமாக தீண்டாமையை கடைபிடிக்கும் பார்ப்பன தந்திரி கும்பல் தெனாவாட்டாக சுற்றித் திரிகிறது.

சபரிமலைத் தீர்ப்பு குறித்த விரிவானதொரு கலந்துரையாடல் நிகழ்வு “அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம்” சார்பில் 11.01.2019 அன்று மாலை இராணிப்பேட்டையில் நடைபெற்றது. தோழர் மு.இரவி இந்நிகழ்வை தலைமை ஏற்று வழி நடத்தினார். தோழர் அ.கிருபா விக்னேஷ் வரவேற்புரை நிகழ்த்த தோழர் வே.இந்திரன் அறிமுக உரையாற்றினார். தோழர் பொன்.சேகர் சபரிமலைத் தீர்ப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து விளக்கிப் பேசினார். இறுதியில் தோழர் சு.பாலசுப்பிரமணியன் நன்றி உரையாற்றினார்.

அ.கிருபா விக்னேஷ்

மு.இரவி
 பார்வையாளர்கள்

வே.இந்திரன்

பொன்.சேகர்

பார்வையாளர்கள்
தொடர்புடைய பதிவுகள்:

No comments:

Post a Comment