Tuesday, 31 March 2026

தேர்தல்: வேட்பாளர் நின்று கொண்டு... அதிகாரி அமர்ந்து கொண்டு... இது ஜனநாயக மாண்பா?

இந்திய ஜனநாயகத்தின் திருவிழாவான தேர்தல்களில், வேட்புமனுத் தாக்கல் செய்யப்படும்போது அரங்கேறும் ஒரு காட்சி தார்மீக ரீதியாகப் பல கேள்விகளை எழுப்புகிறது. பல ஆயிரம் மக்களின் பிரதிநிதியாக, சட்டமியற்றும் அதிகாரத்தை நோக்கிப் பயணிக்கும் ஒரு வேட்பாளர், ஓர் அரசு அதிகாரியின் மேசைக்கு முன்னால் கைகட்டி, குனிந்து நின்று மனு கொடுப்பதும், அந்த அதிகாரி அமர்ந்துகொண்டே அதை வாங்குவதும் என்ன வகை அறம்?

இது ஒரு நிர்வாக நடைமுறையா, அல்லது அதிகாரத்தின் மேலாதிக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு காட்சியா என்ற கேள்வி எழுகிறது. 

தேர்தல் அதிகாரிகள் தங்களை 'நீதிபதிகள்' போலக் கற்பனை செய்துகொண்டு வேட்பாளர்களை நடத்துகின்றனர். நீதிமன்றத்தில் கூட, வாதாடும் வழக்கறிஞருக்கு அந்த ஒரு தருணத்தில் மட்டுமே நிற்க வேண்டிய சூழல் உண்டு. ஆனால் அங்கும் மற்றவர்களுக்கு இருக்கைகள் உண்டு. 

இங்கே ஒரு தொகுதியின் லட்சக்கணக்கான மக்களின் குரலாக வரப்போகும் வேட்பாளருக்கு ஒரு நாற்காலிகூட வழங்காமல் நிற்க வைப்பது ஜனநாயகத்தின் மாண்பைக் குலைக்கும் செயல்.

கோப்பு படம்

மக்களாட்சியில் யார் பெரியவர்?
  • படித்த அதிகாரமா?: ஐ.ஏ.எஸ் அல்லது அரசு அதிகாரிகள் படித்துவிட்டுத் தேர்வு மூலம் பதவிக்கு வந்தவர்கள். அவர்கள் மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் 'சேவகர்கள்' (Public Servants).
  • மக்களின் பிரதிநிதியா?: வேட்பாளர்கள் மக்கள் செல்வாக்குடன், மக்களின் இறையாண்மையைச் சுமந்து வருபவர்கள்.
ஒரு சேவகர் அமர்ந்திருக்க, மக்களின் இறையாண்மையை பிரதிபலிக்கும் ஒருவரை நிற்க வைப்பது அதிகார வர்க்கத்தின் மேலாதிக்கப் போக்கையே காட்டுகிறது. "படித்த அதிகாரிகளே உயர்ந்தவர்கள், மக்கள் பிரதிநிதிகள் அவர்களுக்குக் கீழ்" என்ற பிம்பத்தை இது சமூகத்தில் விதைக்கிறது.

சமத்துவமே ஜனநாயகத்தின் அறம்

ஜனநாயகம் என்பது சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.
  • அதிகாரி அமர்ந்து மனுவைப் பெற்றால், வேட்பாளருக்கும் சமமான இருக்கை வழங்கப்பட வேண்டும்.
  • அல்லது, மக்கள் பிரதிநிதிக்கு மரியாதை அளிக்கும் விதமாக அதிகாரியும் எழுந்து நின்று மனுவைப் பெற வேண்டும்.
இதை விடுத்து, வேட்பாளரை ஒரு 'யாசகர்' போல உணர வைப்பது காலனிய ஆட்சியில் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியர்களை நடத்திய அடிமைத்தனமான முறையின் எச்சமே தவிர வேறில்லை.

முடிவுரை

அதிகாரியின் மேசைக்கு முன்னால் வேட்பாளர் குனிந்து நிற்பது அந்த தனிநபருக்கு இழைக்கப்படும் அவமானமல்ல; அந்த வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கக் காத்திருக்கும் லட்சக்கணக்கான வாக்காளர்களுக்கு இழைக்கப்படும் அவமானம். மக்கள் பிரதிநிதிகள் அதிகாரிகளுக்குக் கீழே பணி செய்பவர்கள் அல்ல. இந்த 'மனு'நீதி மாற வேண்டும்; ஜனநாயகத்தின் உண்மையான எஜமானர்களான மக்களுக்கு (பிரதிநிதிகளுக்கு) உரிய மரியாதை தேர்தல் அலுவலகங்களில் நிலைநாட்டப்பட வேண்டும்.

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்




Monday, 30 March 2026

காகிதக் காலமும் கருப்பு அங்கிகளும்: பார் கவுன்சில் தேர்தல் அனுபவம்

"காதும் கண்ணும் இருக்கும் போது காகிதங்களுக்கு இங்கென்ன வேலை?" என்று கேட்கும் அளவுக்கு இது டிஜிட்டல் மயமாகிப்போன உலகம். மின்னஞ்சல்களும், குறுஞ்செய்திகளும், சமூக ஊடகச் செய்திகளும் ஆதிக்கம் செலுத்தும் இந்த யுகத்தில், கடிதங்கள் நம் வீட்டுக்கதவுகளைத் தட்டுவதே அபூர்வமாகிவிட்டது. 

ஆனால், கடந்த பத்து நாட்களாக என் வீட்டுக் கதவுகள் 'தடதட'த்தன. எட்டிப் பார்த்தால், வாக்கு கேட்டு வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதங்கள் அங்கே விரவிக் கிடந்தன.

வீட்டுக்கதவுகள் மட்டுமல்ல, கைபேசிகளும்கூட இதற்கு விதிவிலக்கல்ல. குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் வழியாக வந்து விழும் தேர்தல் செய்திகள் காதுகளை அதிர வைத்தன. இவையெல்லாம் 30.03.2026 அன்று நடைபெற்ற தமிழ்நாடு மற்றும் புதுவை பார் கவுன்சில் தேர்தலுக்கான பரபரப்புகள். 

'சாராய ‘பார்' பக்கம் ஒதுங்காதவர்களைக்கூடத் தன்பக்கம் இழுக்கும் வல்லமை கொண்டது இந்தப் ‘பார் கவுன்சில்’ தேர்தல். இதில் நானும் ஒரு வாக்காளனாக ஈர்க்கப்பட்டேன்.


வெயிலூரும் பயணமும்

எனக்கான வாக்குச்சாவடி வேலூரில் இருந்ததால், சக வழக்கறிஞர் தோழரோடு மதியம் 12 மணி வாக்கில் வாலாஜாவிலிருந்து இருசக்கர வாகனத்தில் பயணமானேன். நல்லவேளையாக, அன்று மேகங்கள் கதிரவனைச் சற்றே போர்த்திக் கொண்டதால் அனல் தெறிக்கும் வேலூர், 'வெயிலூராக' மாறாமல் தப்பிப் பிழைத்தது.

வாக்குச்சாவடிக்கு வெளியே வழக்கமான தேர்தல் திருவிழாக் கோலம். வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் தனித்தனி அணிகளாகப் பிரிந்து துண்டுச் சீட்டுகளைக் கொடுத்து வாக்கு வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். 
உள்ளாட்சி மற்றும் சட்டமன்றத் தேர்தல்களின் அதே பிம்பம் இங்கும் நிழலாடியது. 

வருத்தமளிக்கும் விதமாக, 'நம்ம ஆளு' என்கிற சாதியப் பற்றும் இங்கே தலைதூக்கி நின்றது. பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனைத் துரத்தும் சாதி, அறிவுசார் தளமான கருப்பு அங்கிகளையும் விட்டு வைக்கவில்லை என்பது கசப்பான உண்மை.

டிஜிட்டல் யுகத்தில் ஒரு 'மன்னராட்சி' முறை

பிற்பகல் ஒரு மணியைத் தாண்டியும் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. வாக்களிக்கக் காத்திருந்த சிலரிடம் பேச்சுக் கொடுத்தபோது, 'வராகனுக்காக' (பயன்) காத்திருப்பவர்கள் போலத் தெரிந்தனர்.

தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அடையாளமாக QR Code முறையைச் சமூக ஊடகங்கள் வழியாக அறிந்திருந்தேன். என் கைபேசியில் இருந்த குறியீட்டைக் காட்டினால் போதும் என்ற நம்பிக்கையில் உள்ளே சென்றேன். ஆனால், அங்கே ஏற்கனவே அச்சிட்டு வைக்கப்பட்டிருந்த QR Code தாள்களின் வரிசையில் என்னுடையது இல்லை. பிறகு கிரிமினல் பாருக்குச் சென்று, ஐந்து ரூபாய் செலவழித்து ஒரு அச்சுப் பிரதியை எடுத்துக் கொண்டு மீண்டும் வரிசையில் நின்றேன்.

அடையாள அட்டை சரிபார்ப்பு மற்றும் புகைப்படப் பதிவுக்குப் பின், வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக வலது கை ஆட்காட்டி விரலில் மை வைக்கப்பட்டது. (பொதுவாக தேர்தல் ஆணையம் இடது கை ஆட்காட்டி விரலில் மை வைப்பது வழக்கம்). அதன் பிறகு வழங்கப்பட்ட 'பாயளவு' வாக்குச்சீட்டு என்னை வியப்படையச் செய்தது.

விசித்திரமான வாக்குச்சீட்டு முறை

இது சற்றே மாறுபட்ட தேர்தல் முறை. மொத்தம் 23 பேருக்கு வாக்களிக்க வேண்டும். வேட்பாளர்களின் பெயருக்கு எதிரே 1, 2, 3 என விருப்ப வரிசைப்படி எண்களை இட வேண்டும். எனக்குத் தெரிந்த பத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்துவிட்டு வெளியே வந்தேன்.

வெளியே வந்தபோது பசி வயிற்றைக் கிள்ளியது. இன்னமும் பல வழக்கறிஞர்கள் வாக்களிக்காமல் தங்களது 'பசையற்ற' கைகளைப் பிசைந்து கொண்டு காத்திருந்தனர். 

வாக்குச்சீட்டு முறையில் முறைகேடுகள் நடக்காது என்று நம்பினாலும், இந்த அதிவேக டிஜிட்டல் உலகில் இந்த நடைமுறை எனக்கு ஒரு 'மன்னராட்சி காலத் தேர்தல்' முறையாகவே தோன்றியது.

மாற்றத்திற்கான தேவை

சுமார் ஒரு லட்சம் வழக்கறிஞர்கள் வாக்களிக்கும் இந்தத் தேர்தலில், 'முதல் விருப்ப' வாக்குகளைப் பெறுபவர் மற்றும் அதற்கு அடுத்தடுத்த வாக்குகளைப் பெறுபவர்கள் உள்ளிட்ட  23 பேரும் 'பார் கவுன்சில் உறுப்பினர்’ ஆகிவிடுவார்கள்.

இந்த முழு நடைமுறையையும் பார்த்தபோது, ஆன்லைன் முறையிலேயே இந்தத் தேர்தலைப் பாதுகாப்பாகவும், எளிமையாகவும் நடத்த முடியும் என்பது மட்டும் திண்ணமாகப் புரிந்தது.

எனது ‘பர்சில்’ கூடுதல் ‘சுமையும்’ ஏறாமல், விரலில் படிந்த கறைபடா கருப்பு மையுடன் மட்டும் மாலைப்பொழுதில் தெம்புடன் வீடு திரும்பினேன்.

பொன்.சேகர்
வழக்கறிஞர்
வாலாஜாபேட்டை

தேர்தல் 2026: வேர்த்து விறுவிறுக்கும் வேட்பாளர்கள், மனப்போராட்டத்தில் வாக்காளர்கள்!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால் போதும், தமிழகத்தின் தார்ச் சாலைகளில் ஒரு விசித்திரமான மாற்றம் நிகழும். அதுவரை ஏதோ ஒரு குளிரூட்டப்பட்ட அறையிலோ அல்லது அதிகாரத் திமிரிலோ அமர்ந்திருந்தவர்கள், திடீரென கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தெருக்களில் இறங்கிவிடுவார்கள்.

கொடைக்கானல் வெயிலைக் கூடத் தாங்க முடியாதவர்கள், அக்னி நட்சத்திரத்தின் உக்கிரத்திலும் "மக்களுக்காக உழைக்கிறேன்" என்ற போர்வையில் வியர்க்க விறுவிறுக்க ஓடுவதைப் பார்க்கும்போது, இதுவல்லவோ உலக விந்தை என்று சொல்லத் தோன்றுகிறது.

இந்தக் கடும் வெயிலிலும் அவர்கள் காட்டும் அசுர உழைப்பைக் கண்டு மக்கள் ஏமாந்துவிடக் கூடாது. தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் உழைக்கிறார்கள் என்றால், அதன் பின்னால் ஒரு பெரிய கணக்கு இருக்கிறது. இன்று அவர்கள் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயும், நாளை அதிகாரத்திற்கு வந்தவுடன் வட்டியுடன் அறுவடை செய்யப்பட வேண்டிய முதலீடாகவே மாறுகிறது.


தன்னலத்தின் முகமூடிகள்

கோடிக்கணக்கில் பணத்தைச் செலவு செய்து ஒருவன் உழைக்கிறான் என்றால், அதன் பின்னணியில் இருப்பது அப்பட்டமான தன்னலம். வசதி குறைந்தவன் தன் நிலையை உயர்த்திக் கொள்ளவும், ஏற்கனவே வசதி படைத்தவன் தன் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டு சமூகத்தில் ஒரு கௌரவமான பிம்பத்தை (Status) உருவாக்கிக் கொள்ளவுமே இந்தத் தேர்தல் வேள்வி நடக்கிறது.

விதிவிலக்காக பொதுவுடைமை இயக்கங்களிலும், சில தனிநபர்களிடமும் மக்கள் நலன் எஞ்சி இருக்கலாம். ஆனால், பெரும்பாலான இடங்களில் அரசியல் என்பது ஒரு லாபகரமான வணிகமாகவே மாறிவிட்டது.

இரவோடு இரவாக மாறும் கொள்கைகள்

நேற்று மாலை வரை ஒரு கட்சியின் கொடியைப் பிடித்துக் கொண்டு, மாற்றுக் கட்சியைச் சாடிய ஒருவன், 'சீட்டு' கிடைக்கவில்லை என்றவுடன் நள்ளிரவு 12 மணிக்குக் கட்சி மாறுகிறான். அதிசயம் என்னவென்றால், அதிகாலை 6 மணிக்கு அந்தப் புதிய கட்சியின் வேட்பாளர் பட்டியலில் அவன் பெயரும் இடம்பெறுகிறது.

தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் கட்சி மாறுவது ஒரு வகை என்றால், தனக்கு வேண்டிய உள்ளூர் தலைவருக்கோ, நண்பனுக்கோ அல்லது தன் சாதிக்காரனுக்கோ வாய்ப்பு மறுக்கப்பட்டால் உடனே 'கொள்கை முரண்பாடு' பேசுவது வேடிக்கையானது.

சாதியும் மதமும் எனும் 'குப்புறத் தள்ளும்' காரணிகள்

எல்லாவற்றையும் உணர்ந்த பொதுமக்களுக்குக் கூட, "யாரை ஆதரிப்பது?" என்கிற குழப்பம் வரும்போது, அங்கே சாதியும் மதமும் குறுக்கே வந்து நிற்கின்றன. "நம்ம ஆளு" என்கிற உணர்வு, அறிவார்ந்த சிந்தனையை மழுங்கடித்து நம்மைப் பள்ளத்தில் குப்புறத் தள்ளிவிடுகிறது. 

இத்தகைய பலவீனங்களைப் பயன்படுத்தித்தான் தேர்தல் அரசியல் நம்மைத் தொடர்ந்து வீழ்த்திக்கொண்டிருக்கிறது.

இரு வேறு கடமைகளின் போர்

இன்னொரு பக்கம், நாட்டைப் பிளவுபடுத்தும் சனாதன சக்திகள், மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து, உள்ளூர் கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு அதிகாரத்தைச் சுவைக்கத் துடிக்கின்றன. 

அவர்களின் வருகை என்பது வெறும் ஊழலோடு முடிந்துவிடாது; அது சமூகத்தில் குருதிக்களரியையும், நீண்டகாலப் பிரிவினையையும் ஏற்படுத்தக்கூடியது. அத்தகைய சக்திகளை வீழ்த்துவது ஒரு தலையாய கடமையாக மாறிவிடுகிறது.

இந்தக் கட்டத்தில்தான் ஒரு வாக்காளன் பெரும் மனப்போராட்டத்திற்கு உள்ளாகிறான். சனாதனப் பேய்களை விரட்ட வேண்டும் என்பதற்காக, உள்ளூர் மட்டத்தில் இருக்கும் ஊழல்வாதிகளையோ அல்லது மோசடிக்காரர்களையோ கூடத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்படுகிறோம்.

குருதியும் சாக்கடையும்: நமது முன்னுரிமை

நமது ஜனநாயகம் இன்று குருதியும் சாக்கடையும் கலந்த ஒரு கலங்கிய நிலையில் உள்ளது. இங்கே நமக்கு முன்னால் இரு பெரும் கடமைகள் உள்ளன:

1. முதலில் சனாதன மற்றும் பிரிவினைவாத சக்திகளால் படர்ந்திருக்கும் குருதியை அகற்ற வேண்டும்.

2. அதைத் தொடர்ந்து, ஊழல் மற்றும் அதிகார முறைகேடுகள் நிரம்பி வழியும் அந்தச் சாக்கடையைச் சுத்தம் செய்ய வேண்டும்.

முதலில் உயிரைக் காக்க வேண்டும், பிறகுதான் உடலைச் சுத்தம் செய்ய முடியும் என்பது போன்றதுதான் இதுவும். 

குருதியைத் துடைக்கும் பணியில் இறங்கும்போது, சில அழுக்குக் கரங்களையும் நாம் துணைக்குச் சேர்க்க வேண்டியிருப்பது காலத்தின் கட்டாயம். ஆனால், குருதியைத் துடைத்து முடித்தவுடன், அந்தச் சாக்கடையையும் சுத்தம் செய்யும் பொறுப்பு மக்களாகிய நமக்கே இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

தேர்தல் முடிந்தவுடன் அரசியல்வாதிகள் குளுகுளு அறைக்குள் ஓய்வெடுக்கச் சென்று விடுவார்கள். ஆனால் நாமோ சாக்கடைகளைச் சுத்தம் செய்வதற்கும், சனாதன சக்திகள் மீண்டும் தலையெடுக்காமல் தடுப்பதற்கும் வேர்த்து விறுவிறுக்க வீதிகளில் இறங்க வேண்டும்.

இதுவே இந்திய ஜனநாயகத்தின் சாபக்கேடு!

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Sunday, 29 March 2026

இறந்த பிறகும் வாழும் மனிதன்!

முன்னுரை

ஒவ்வொரு மனிதனும் சமூகத்தில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க விரும்புகிறான். அந்த விருப்பம், மற்றவர்கள் தன்னை எப்படிக் காண வேண்டும் என்ற ஒரு “பிம்பத்தை” உருவாக்குவதிலேயே தொடங்குகிறது. நடை, உடை, அலங்காரம் மற்றும் பேசும் பாங்கு எனத் தொடங்கும் இந்த முயற்சி, இன்று டிஜிட்டல் திரைகள் வரை விரிந்துள்ளது.

ஆனால் இந்த அடையாளத் தேடலில், மனிதன் தனது அகத்தைக் காட்டிலும் புறத்திற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியிருக்கிறான்.


புறத்தோற்றம்: ஒரு தற்காலிகக் கேடயம்

மனிதர்கள் தங்களின் உடற்கட்டமைப்புக்கேற்ப நடையை அமைத்துக் கொண்டாலும், உடைகள் மற்றும் அலங்காரங்களின் மூலம் ஒரு குறிப்பிட்ட பிம்பத்தை வெளி உலகிற்கு உருவாக்க முயல்கிறார்கள். இது ஒருவரை உடனடியாக கவனிக்க வைக்கும் எளிய வழியாகக் கருதப்படுகிறது.

ஆனால் இத்தகைய புற அடையாளங்கள் பெரும்பாலும் ஒரு தற்காலிகக் கேடயம் மட்டுமே. அவை ஒருவரின் உண்மையான தன்மையை வெளிப்படுத்துவதில்லை; மாறாக, வெளிப்புறத்தில் உருவாக்கப்பட்ட ஒரு தோற்றத்தை மட்டுமே காட்டுகின்றன.

'டிஜிட்டல்' உலகமும் ‘தோற்ற’ முன்னுரிமையும்

இன்றைய டிஜிட்டல் உலகம் இந்த புற அடையாளங்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கும் ஒரு கலாசாரத்தை உருவாக்கியுள்ளது. சாதாரண சாமானியர் முதல் அரசியல் களத்தில் இருக்கும் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் உயர் மட்டத் தலைவர்கள் வரை பலரும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள புறத்தோற்றத்தையே முதன்மையாக நம்புகின்றனர்.

சமூக ஊடகத் தாக்கம்

முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகத் தளங்களில் ஒருவரின் அறிவு அல்லது அறத்தை விட, அவர் பகிரும் புகைப்படங்கள், அலங்காரம் மற்றும் வெளிப்படையான வாழ்க்கை முறையே அதிக கவனத்தைப் பெறுகிறது.

இந்தத் தளங்களில் உருவாகும் அடையாளங்கள் பெரும்பாலும் ஒரு “பிம்பம்” மட்டுமே; அவை மனிதனின் உண்மையான ஆளுமையை முழுமையாக பிரதிபலிப்பதில்லை.

அரசியலும் பிம்ப உருவாக்கமும்

இன்றைய அரசியலிலும் “பிம்ப அரசியல்” ஒரு முக்கிய கருவியாக மாறியுள்ளது. மேடைப் பேச்சுகளில் காட்டப்படும் பாவனைகள், ஆடம்பரமான உடைகள், பின்னால் செல்லும் வாகன வரிசைகள் போன்றவற்றின் மூலம் ஒரு வகையான அதிகாரத் தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கப்படுகிறது.

ஆனால் இத்தகைய பிம்பங்கள் நீர் குமிழிகளைப் போன்றவை — கண்களுக்கு கவர்ச்சியாகத் தோன்றினாலும், நீடித்த உண்மையை கொண்டிருக்காது.

உண்மையான அடையாளம் எது?

ஒரு மனிதனின் நிரந்தரமான அடையாளம் அவனது புற அலங்காரங்களில் இல்லை. அது அவனது ஆற்றல், குணநலன்கள் மற்றும் அறநெறி சார்ந்த வாழ்வியலில் மட்டுமே இருக்கிறது.

புறத்தோற்றத்தின் மூலம் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் ஆண்களும் பெண்களும் இன்று எல்லா துறைகளிலும் அதிகரித்துள்ளனர். ஆனால் தோற்றத்தின் மூலம் கிடைக்கும் கவனம் தற்காலிகமானது; குணநலன்களின் மூலம் கிடைக்கும் அங்கீகாரம் மட்டுமே நிலையானது.

ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான அடிப்படை

புறத்தோற்றம் என்பது ஒரு புத்தகத்தின் அட்டைப்படத்தைப் போன்றது. அட்டைப்படம் அழகாக இருப்பதாலேயே ஒரு புத்தகம் சிறந்ததாகி விடாது.
அதேபோல், அலங்காரங்களால் கவரப்படுபவர்கள் ஒருவரைத் தற்காலிகமாக வியந்து நோக்கலாம். ஆனால் ஒருபோதும் மனதார மதிக்க மாட்டார்கள்.

ஒரு மனிதனின் சொல், செயல் மற்றும் சிந்தனையில் நேர்மை இருக்கும்போது மட்டுமே அவன் மற்றவர்களால் உண்மையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறான்.

முடிவுரை

பிம்பங்களை மட்டுமே துரத்தும் இன்றைய ஓட்டத்தில், மனிதர்கள் தங்கள் அக அடையாளத்தை மெதுவாக இழந்து வருகிறார்கள். அலங்காரங்கள் மேலோட்டமானவை; ஆனால் ஆற்றலும் அறமும் ஆழமானவை.

புறத்தோற்றத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட, தனது குணநலன்களை செதுக்குவதில் ஒருவன் கவனம் செலுத்தினால் மட்டுமே அவன் காலங்களைக் கடந்த ஒரு உண்மையான அடையாளமாக மாற முடியும்.

தோற்றம் கவனத்தை ஈர்க்கலாம்;
ஆனால் குணநலன்களே மரியாதையைப் பெறும்.
மனிதன் நினைவில் நிற்பது அவன் அணிந்த உடையால் அல்ல — அவன் வாழ்ந்த முறையால்தான்.

ஆடை அலங்காரங்களில் மின்னும் மனிதன், இறக்கும் போது அவன் அணிந்த ஆடைகளைப் போலவே காலத்தோடு புதைந்து போகிறான்.
ஆனால் அக குணங்களால் மக்களின் மனதை வென்ற மனிதன், இறந்த பின்னரும் அவர்களுடைய நினைவுகளில் உயிரோடு வாழ்கிறான்.

இறப்புக்குப் பிறகும் நீ வாழ வேண்டுமா?

அப்படியானால் உன் நற்குணத்தையும் அறத்தையும் ஒருபோதும் கைவிடாதே!

அதனால்தான், 
"உலக நடைமுறைகள் பண்பாளர்களைச் சார்ந்து இயங்க வேண்டும். இல்லையேல் அந்த நடைமுறைகள் நாசமாகிவிடும்"
என்கிறான் வள்ளுவன்.

"பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்; அதுஇன்றேல் 
மண்புக்கு மாய்வது மன்." 
(திருக்குறள் - 996, பண்புடைமை அதிகாரம்)

ஊரான்

Saturday, 28 March 2026

பெருஞ்சாதிகளின் உருவாக்கம்: சாதி ஒழிப்பா? அல்லது வாக்கு வங்கி அரசியலா?

அறிமுகம்: ஒரு வியப்புக்குரிய வேட்பாளர் தேர்வு

சமீபத்தில் ஒரு செய்தி பலரது புருவங்களை உயர்த்தியது. திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களை மையமா‌கக் கொண்டு முதலியார் சாதிகளின் அடையாளமாக அறியப்படும் ஏ.சி. சண்முகம் அவர்களின் 'புதிய நீதிக்கட்சி', மதுரை மத்திய தொகுதியின் வேட்பாளராக சுந்தர்.சி அவர்களை அறிவித்துள்ளது.
தொண்டை மண்டலத்தில் செல்வாக்கு கொண்ட ஒரு கட்சி, மதுரையில் வேறு சாதியைச் சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்துவது ஏன்? இந்தத் தேடல்தான் இந்தப் பதிவிற்கான தொடக்கம்.


1. பெயரளவில் இணையும் பெருஞ்சாதிகள்

வட தமிழகத்தில் 'முதலியார்' என்ற பொது அடையாளத்தின் கீழ் தொண்டை மண்டல சைவ வெள்ளாளர், அகமுடைய முதலியார், செங்குந்தர் எனப் பல பிரிவினரை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடக்கின்றன.

இது சாதி ஒழிப்பாகத் தோன்றினாலும், உண்மையில் அது ஒரு புதிய “பெருஞ்சாதி” கட்டமைப்பை உருவாக்கும் அரசியல் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

2. பெயர்களில் மறைக்கப்பட்ட கவசங்கள்

இன்றைய அரசியல் சூழலில் சாதிகளைப் பெருஞ்சாதிகளாக அணிதிரட்டும் எவரும் தங்களின் கட்சிக்குச் சாதி அடையாளத்துடன் பெயர் வைப்பதில்லை.
மாறாக நீதி, பாட்டாளி, புலிகள், தமிழர், திராவிடர், தமிழகம், புரட்சி, மக்கள், முன்னேற்றம், முன்னணி, வாழ்வுரிமை போன்ற பொதுவான மற்றும் கவர்ச்சிகரமான பெயர்களையே சூட்டிக் கொள்கிறார்கள்.

இது சாதி அடிப்படையிலான அணிதிரட்டலை மூடி மறைப்பதற்காக அவர்கள் போட்டுக்கொண்டுள்ள ஒரு ‘அரசியல் கவசம்’.

பெயரில் ‘பாட்டாளி’ என்று இருந்தாலும், செயல்பாட்டில் அது ஒரு குறிப்பிட்ட சாதி அடையாளத்தையே முன்னிறுத்துகிறது. இந்தப் பெயர்கள் வெறும் முகமூடிகளே தவிர, கொள்கைகள் அல்ல.

இதற்கிடையில், “தமிழ் தேசியம் பேசுபவருக்குத் தரவில்லை”, “திராவிட அரசியல் பேசுபவருக்குத் தரவில்லை” என்ற அங்கலாய்ப்புகள் முற்போக்கு முகாம்களில்கூட எழுகின்றன.

3. ஏப்பம் விடுவதும்... ஏமாற்றமும்!

சொந்த சாதிக்காரன் ஒரு கட்சித் தலைவராகவோ, எம்.எல்.ஏ-வாகவோ அல்லது மந்திரியாகவோ ஆகும்போது, அந்தச் சாதியைச் சேர்ந்த சாமானிய மக்கள் அடையும் மகிழ்ச்சி விசித்திரமானது.

“என் சாதிக்காரன் அதிகாரத்தில் இருக்கிறான்” என்று நினைத்து மகிழ்வது, வயிறு காய்ந்து பசியால் வாடிக்கொண்டிருக்கும் ஒருவன் வயிறார உண்டது போல ‘புளித்தேப்பம்’ விடுவதற்குச் சமமானது.

உண்மையில் சாதி அடிப்படையில் இயங்கும் எந்தவொரு தலைவரும், சுய லாபம் அல்லது கட்சி ஆதாயம் இல்லாமல் தன் சாதிக்காரனுக்குக் கூட எதையும் செய்வதில்லை.

4. ஒடுக்கப்பட்டோரின் அணிதிரட்டலும் ஆபத்தும்

இது மேல்தட்டு சாதிகளுக்கு மட்டுமல்ல. ஒடுக்கப்பட்ட சாதிகள்கூட சாதி அடிப்படையில் அணிதிரள்வதும், தங்களைப் பெருஞ்சாதியாக உருமாற்றிக் கொள்வதும் ஆபத்தானதே.

சாதி ஒருபோதும் விடுதலையைத் தராது; அது பிரிவினையை மட்டுமே கூர்மைப்படுத்தும். இதனால் சாதிகளுக்கிடையிலான முரண்களும் மோதல்களும் இன்னும் தீவிரமடைகின்றன.

5. பொதுவுடைமைப் பயணம்: ஒரே தீர்வு

சாதியக் கட்டமைப்புகளை உடைத்து உண்மையான சமத்துவத்தை உருவாக்க, வர்க்க அடிப்படையிலான பொதுவுடைமை அரசியல் மட்டுமே நிலையான வழியாகும்.

தமிழகத்தில் குறிப்பாக நக்சல்பாரி போன்ற இடதுசாரி இயக்கங்கள் ஏற்படுத்திய மிகப்பெரிய தாக்கம் இதுதான். நிலப்பிரபுத்துவச் சாதியக் கட்டமைப்புகளை உடைத்து மனிதனை மனிதனாகப் பார்க்கும் ஒரு பார்வையை இந்த இயக்கங்கள் முன்வைத்தன.

சாதி அடையாளங்களுக்குப் பின்னால் ஓடுவதை விட, வர்க்க ரீதியாக ஒன்றிணைவதே ஒடுக்கப்பட்டோரின் உண்மையான விடுதலையை உறுதி செய்யும்.

முடிவுரை

சாதி அடிப்படையில் அணிதிரள்வதும், பெருஞ்சாதிகளை உருவாக்குவதும் ஜனநாயகத்தின் பலவீனம்.

“நமது சாதிக்காரன்” என்ற குருட்டுத்தனமான பெருமையை விட, “தகுதியான வேட்பாளர் யார்?” மற்றும் “சமத்துவக் கொள்கை எது?” என்ற விழிப்புணர்வே சமூக மாற்றத்திற்குத் தேவை.

அரசியல்வாதிகள் விரிக்கும் இந்த ‘சாதி வலை’யில் சிக்காமல், பொதுவுடைமைச் சிந்தனையுடன் பயணிப்பதே ஒரு விழிப்புணர்வுள்ள குடிமகனின் கடமை.

இன்றைய தேர்தல் அலப்பறைகள் உணர்த்தும் பாடம் இதுதான்.

ஊரான்

தொடர்புடைய ‌பதிவுகள்



நமது தொகுதியில் தகுதியற்றவர் வேட்பாளர் என்றால் நாம் என்ன செய்வது?

தேர்தல் நெருங்கும் வேளையில் ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள். அந்த நேரத்தில் ஒரு வாக்காளராகவும் சமூகச் சிந்தனையாளராகவும் நமக்கு ஒரு தார்மீக மோதல் ஏற்படுகிறது.

நாம் ஆதரிக்கும் கொள்கை கொண்ட கூட்டணியே, நமக்குப் பிடிக்காத அல்லது தகுதி குறைவான ஒருவரை வேட்பாளராக அறிவித்தால் நாம் என்ன செய்ய வேண்டும்?

தற்போது சில தொகுதிகளில் இத்தகைய சூழல் உருவாகியுள்ளது. பல தசாப்தங்களாக மக்களுக்காகப் போராடிய, அரசியல் முதிர்ச்சி கொண்ட ஆளுமைகளை ஓரம் கட்டிவிட்டு, வெறும் ‘வாரிசு’ அடையாளத்தின் அடிப்படையில் அரசியல் அனுபவம் குறைவானவர்களை வேட்பாளர்களாக முன்னிறுத்துவது பலருக்கு ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.


1. தகுதி vs வாரிசு: முட்டி மோதும் முரண்பாடு

ஒரு சட்டமன்ற உறுப்பினர் அந்தத் தொகுதியின் மண்ணின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடி நீர் பிரச்சினை போன்ற உள்ளூர் சிக்கல்களைப் புரிந்துகொண்டு அதற்கான தீர்வுகளை முன்வைக்கும் முதிர்ச்சி அவசியம். 

ஆனால் வாரிசு அரசியலில் இத்தகைய அனுபவமும் முதிர்ச்சியும் அரிதானது. தகுதியான, அனுபவமிக்க ஆளுமைகளின் பல ஆண்டுகால உழைப்பு அங்கீகரிக்கப்படாமல் போவது இயல்பாகவே வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

2. உள்ளூர் பிரச்சினையா? நாட்டுப் பிரச்சினையா?

இங்கேதான் ஒரு வாக்காளனின் மனதில் பெரிய அறப்போர் உருவாகிறது.

உள்ளூர் கோபம்: தகுதி குறைவான வாரிசு அரசியலை ஏற்றுக்கொள்ள முடியாது.

பெரிய நோக்கம்: ஜனநாயகத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் சவாலாக இருக்கும் அரசியல் சக்திகளைத் தோற்கடிப்பது.

உள்ளூர் அதிருப்தியால் ஒதுங்கி நின்றால், அது மறைமுகமாக எதிர்க்கும் சக்திகளுக்கே சாதகமாக அமையும். ஒரு சிறிய தீமையைத் தவிர்க்க முயன்று பெரிய ஆபத்துக்கு வழிவகுத்துவிடக் கூடாது.

3. நாம் எடுக்க வேண்டிய முடிவு

நாட்டுப் பிரச்சினை மற்றும் உள்ளூர் பிரச்சினை என்று வரும்போது, பல சந்தர்ப்பங்களில் பெரிய நோக்கமே முன்னுரிமை பெறுகிறது. தகுதியற்ற வேட்பாளரை ஆதரிப்பது கசப்பான முடிவாக இருந்தாலும், கொள்கை வெற்றிக்காக சில சமரசங்கள் அவசியமாகலாம்.
இது ஒரு வாக்காளனின் தனிப்பட்ட விருப்பம் அல்ல; நாட்டின் எதிர்காலத்தைச் சார்ந்த அரசியல் யதார்த்தம்.

முடிவுரை

வேட்பாளர் நமக்குப் பிடிக்காதவராக இருக்கலாம். ஆனால் நாம் எதிர்க்கும் எதிரி மிக வலிமையானவன். எனவே பெரிய இலக்குக்காக சில சமரசங்களைச் செய்வது கோழைத்தனம் அல்ல; அது முதிர்ந்த அரசியல் அணுகுமுறை.

அறிவிக்கப்பட்ட வேட்பாளர் தகுதி குறைவானவராக இருந்தாலும், அவரைச் செயல்பட வைப்பதும் தவறு செய்தால் தட்டிக் கேட்பதும் விழிப்புணர்வுள்ள வாக்காளரின் கடமை. தகுதியான ஆளுமைகள் சட்டமன்றத்துக்குச் செல்லாவிட்டாலும், அவர்கள் மக்களின் குரலாகக் களத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும்.

நாட்டு நலனே நமக்குப் பெரிது!

பொன்.சேகர்
வழக்கறிஞர்

தொடர்புடைய பதிவு 

Friday, 27 March 2026

இராணிப்பேட்டை தொகுதியின் விடியலுக்கு வாலாஜா ஜெ. அசேன் சட்டமன்ற உறுப்பினராவது 'காலத்தின் கட்டாயம்'!

முன்னுரை

ஒரு ஊரின் வரலாறு சிதைக்கப்படும்போதும், அதன் இயற்கை வளம் நஞ்சாக்கப்படும்போதும், அந்த மண்ணை மீட்டெடுக்க ஒரு தார்மீகக் குரல் தேவைப்படுகிறது. அந்த வகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் இராணிப்பேட்டை தொகுதியின் பிரதிநிதியாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா ஜெ. அசேன் (BA, BL) அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது வெறும் அரசியல் விருப்பம் அல்ல; அது அந்த மண்ணின் காலத்தின் கட்டாயம்.


1. முதல் நகராட்சியின் பெருமையை மீட்டெடுக்க...

1866-ல் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதல் நகராட்சி என்ற பெருமை வாலாஜாபேட்டைக்கு உண்டு. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நகராட்சியின் தலைவராக (Chairman) சிறப்பாகப் பணியாற்றிய அனுபவம் திரு. அசேன் அவர்களுக்கு உண்டு. நகராட்சி நிர்வாகத்தில் அவர் காட்டிய நேர்மையும், தொலைநோக்குப் பார்வையும் இன்றும் மக்களால் பேசப்படுகிறது. இன்று அந்தப் பெருமை மங்கி வரும் நிலையில், அதை மீட்டெடுக்க அனுபவம் வாய்ந்த ஒரு நிர்வாகி தேவை.

2. கவிஞர், வாசகர், தமிழ் மொழி ஆர்வலர்: ஒரு பண்பாட்டு அடையாளம்

அரசியல் களத்தைத் தாண்டி, திரு.அசேன் அவர்கள் ஒரு சிறந்த கவிஞர், தீவிர வாசிப்பாளர் மற்றும் தமிழ் மொழி ஆர்வலர். "முத்தமிழ் சுவைச் சுற்றம்" என்கிற இலக்கிய அமைப்பின் மூலம் ஆண்டுதோறும் இலக்கிய விழாக்களை நடத்தி, இளம் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தி வருகிறார். அவரது ஆழமான கவிதைகளை “நீதிக்கான குரல்” வலைப்பக்கத்தில் காணலாம். மேலும், ஆண்டுதோறும் சமத்துவப் பொங்கல் விழாவை முன்னின்று நடத்தி, சமூக நல்லிணக்கத்தைப் பேணி வருகிறார்.

3. ஒரு இளைஞனைப் போன்ற களப் போராட்டங்கள்!

வயது என்பது வெறும் எண் மட்டுமே என்பதை நிரூபிக்கும் வகையில், இன்றும் ஒரு இளைஞனைப் போலத் துடிப்போடு களத்தில் நிற்பவர் திரு. அசேன்.

தேசியப் பிரச்சினைகள்: CAA, NRC மற்றும் ஹிண்டன்பர்க் அறிக்கை போன்ற விவகாரங்களில் ஜனநாயகத்தைக் காக்க வீதியில் இறங்கிப் போராடியவர்.

உள்ளூர் பிரச்சினைகள்: ஊழல் முறைகேடுகள், போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் சாலை மாடுகளைக் கட்டுப்படுத்த நகராட்சிக்கு எதிராகப் போராட்டம் என மக்களின் அன்றாடத் துயர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பவர்.

சுற்றுச்சூழல் போர்: உலகின் 3-வது மாசடைந்த நகரம் - ஒரு அபாய எச்சரிக்கை!

இன்று இராணிப்பேட்டை உலகின் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை. குரோமியக் கழிவுகள் மற்றும் ஆலைகளின் நச்சுக்கழிவுகளால் நிலத்தடி நீர் நஞ்சாகி, மக்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகியுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளாகச் சமரசமின்றிச் சுற்றுச்சூழல் போரை முன்னெடுத்து வருபவர் திரு.அசேன்.

அமைச்சர்களுக்கும், மத்திய அரசுக்கும் தரவுகளுடன் கடிதம் எழுதியதோடு, நேரடியாக டெல்லிக்குச் சென்று சுற்றுச்சூழல் அதிகாரிகளைச் சந்தித்து, நச்சு ஆலைகளுக்குக் கோடி கணக்கில் அபராதம் விதிக்கக் காரணமாக இருந்தவர்.

இந்தச் சாபக்கேட்டைத் துடைத்தெறிய, ஒரு சட்டமன்ற உறுப்பினராக அவருக்கு அதிகாரம் கிடைப்பது காலத்தின் தேவை.


4. 1989-ல் நிகழ்ந்த ‘மக்களின்’ வெற்றி!

1989 சட்டமன்றத் தேர்தலில், அப்போதைய அரசியல் சூழலில் அவருக்குத் தொகுதி ஒதுக்கப்படாதபோதும், மக்களின் பேராதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கட்சிச் சின்னம் இல்லாமலேயே ஒரு மாபெரும் அலையை வென்று காட்டிய அவர், இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் துணைத்தலைவராக (State Vice President) உயரிய பொறுப்பில் இருந்து வழிநடத்தி வருகிறார்.

5. ஏன் அவர் திமுக கூட்டணி வேட்பாளராக வேண்டும்?

அதிமுக கூட்டணியில் இத்தொகுதி தமாகா-விற்கு (தாமரை சின்னம்) ஒதுக்கப்பட்டுள்ளது, மதச்சார்பற்ற வாக்காளர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், சிறுபான்மையினர் வாக்குகள், திமுகவின் வாக்கு வங்கி மற்றும் அசேனின் தனிப்பட்ட செல்வாக்கு ஆகிய மூன்றுமே இணைந்து ஒரு மிகப்பெரிய வெற்றியை உறுதி செய்யும்.

முடிவுரை

"நல்லவை அல்லவைகளை சீர்தூக்கிப் பார்க்கிற" ஆற்றல் கொண்ட இராணிப்பேட்டை மக்கள், இன்று ஒரு இக்கட்டான சூழலில் இருக்கிறார்கள். வரலாற்றுப் பெருமை கொண்ட ஒரு நகரை, நச்சுக்கழிவுகளின் பிடியிலிருந்து மீட்கவும், பண்பாட்டுச் செழுமையைப் பாதுகாக்கவும் தெரிந்த ஒரே ஆளுமை திரு. அசேன் அவர்களே!

இராணிப்பேட்டையின் விடியலுக்காகவும், வருங்காலத் தலைமுறையின் ஆரோக்கியத்திற்காகவும் திரு.வாலாஜா ஜெ.அசேன் சட்டமன்றத்திற்குச் செல்வதே அந்த மண்ணிற்குச் செய்யும் உண்மையான நீதியாகும்!

பொன்.சேகர், BE. ML. MPhil,
(மேலாளர், பணி ஓய்வு, BHEL, Ranipet)
வழக்கறிஞர்

Thursday, 26 March 2026

வீதிகளில் விதைக்கும் புரட்சி… வீடுகளில் வளரும் களைகள்!

"புரட்சி ஓங்குக!”, “சாதி ஒழிக!”, “சமத்துவம் மலர்க!”, “பகுத்தறிவு பெருகுக!”, “ஆணாதிக்கத்தை வேரறுப்போம்!” — வீதிகளிலும் மேடைகளிலும் நம் முழக்கங்கள் விண்ணைப் பிளக்கின்றன.

ஆனால், இந்த வீரியம் நம் வீட்டுக் கதவைத் தட்டுகிறதா என்பதுதான் இன்றைய மிகப் பெரிய கேள்வி. வீதிகளில் பகுத்தறிவு விதைகளைத் தூவிக்கொண்டே, வீடுகளுக்குள் பிற்போக்குத் தனத்துக்கு நீர் ஊற்றி வளர்க்கும் இரட்டை நிலை, உண்மையான சமூக மாற்றத்தை ஒருபோதும் கொண்டு வராது.


1. மேடை முழக்கமும்... மணவறைத் தேடலும்

சாதி ஒழிய வேண்டும் என்று தொண்டை கிழியப் பேசுபவர்கள்கூட, தங்கள் பிள்ளையின் திருமணம் என்று வரும்போது “சொந்த சாதி” மற்றும் “மத” வளையத்திற்குள் சுருங்கிவிடுகின்றனர்.

முரண்:
“சமத்துவம்” பேசும் அதே நாவுகள், திருமணங்களில் சாதியையும், ஜாதகப் பொருத்தத்தையும், மதச் சடங்குகளையும் தேடுவது தார்மீகத் துரோகம் அல்லவா?

சாதியைச் சுமந்து கொண்டே சாதி ஒழிப்பைப் பேசுவது, தீயை அணைக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு பெட்ரோலை ஊற்றுவதற்கு ஒப்பானது.

2. வீட்டுக்குள் ஒளிந்திருக்கும் சடங்குகள்: மதங்களைக் கடந்த முரண்

இந்த முரண்பாடு ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் உரியது அல்ல. முற்போக்கு பேசும் இந்து, கிறித்தவ, இஸ்லாமிய மற்றும் பௌத்தப் பின்னணி கொண்ட அனைவரிடமும் இதைக் காணலாம்.

மதச் சடங்குகளின் பிடி:
இந்துக்கள் வாஸ்து, திதி, நல்ல நேரம் என்று பார்ப்பது போலவே, கிறித்தவ, இஸ்லாமிய, பௌத்தப் பின்னணி கொண்ட முற்போக்காளர்களும் தங்கள் வீட்டு நிகழ்வுகளில் அந்தந்த மதச் சடங்குகளை எவ்விதக் கேள்வியுமின்றி பின்பற்றுவது எதார்த்தமாகவே உள்ளது.

கேள்வி:
பகுத்தறிவு பேசும் ஒருவன், ஒருபுறம் மதங்களைச் சாடிக்கொண்டே மறுபுறம் தன் வீட்டுப் பிறப்பு, இறப்பு, திருமணச் சடங்குகளில் அதே மதகுருமார்களை முன்னிறுத்துவது எத்தகைய முற்போக்கு?

இல்லங்களில் சடங்குகள் வேரூன்றி இருக்கும் வரை, மேடை முழக்கங்கள் வெறும் சத்தமாகவே எஞ்சும்.

3. ஊழலுக்கு எதிரான ‘கமுக்கமான’ சமரசம்

லஞ்சம், ஊழல், முறைகேடுகள் கூடாது என்று உரக்கப் பேசுவோர்கூட, தனக்கென ஒரு வேலை முடிய வேண்டும் என்றால் வரிசையை மீறுவதும், ‘கவனிப்பதும்’ அமைதியாக நடக்கிறது. லஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள்கூட முற்போக்கு பேசும் அவலமும் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கிறது.

யதார்த்தம்:
“மற்றவர்கள் செய்தால் அது ஊழல்; நான் செய்தால் அது நடைமுறைச் சிக்கல்” என்ற சுயநலப் போக்கு பொதுவாழ்வில் ஈடுபடுவோரிடம் இருக்கக் கூடாத ஒன்று.

4. முன்மாதிரி இல்லையேல் மாற்றம் இல்லை

ஒரு மாற்றத்தை மக்கள் ஏற்க வேண்டும் என்றால், அதை முன்மொழிபவர் தாமே ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

தர்க்கம்:
தன் வீட்டில் சாதி அல்லது மதச் சடங்குகளைச் செய்துவிட்டு, தன் பிள்ளைகளுக்கும் அதே பழமைவாதத்தைப் புகுத்திக்கொண்டே மேடையில் முற்போக்கு பேசினால், அதைக் கேட்பவர்கள் எப்படி மாறுவார்கள்?

தேவை:
நாம் எதைச் சொல்கிறோமோ அதை முதலில் நம் இல்லங்களில் செயல்படுத்திக் காட்ட வேண்டும்.
வீதிகளில் எழுப்பப்படும் புரட்சி முழக்கங்கள், நம் வீட்டுச் சுவர்களுக்குள்ளும் முட்டி மோதி எதிரொலிக்க வேண்டும்.

ஒரு முக்கியமான எச்சரிக்கை!

இதை வாசிக்கும் முற்போக்கு சிந்தனை இல்லாதவர்கள் உடனே “பார்த்தீர்களா, முற்போக்குகளே இப்படித்தான்!” என்று மகிழ்ச்சியில் திளைக்க வேண்டாம்.

அவர்களாவது சமூக மாற்றத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். நீங்களோ பின்னோக்கிய சிந்தனைகளில் மூழ்கித் தவிக்கிறீர்கள். இந்தக் கட்டுரையை வாசித்தாவது சுயபரிசோதனை செய்யுங்கள்.

தன் முதுகில் பிற்போக்கு அழுக்கைச் சுமந்துகொண்டு, பிறரின் முதுகில் உள்ள அழுக்கை மட்டும் சுட்டிக்காட்டி எள்ளி நகையாடுவது அறிவுக்குப் பொருந்தாத செயல்.

முடிவுரை

சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இருக்கும் வரை எந்தப் புரட்சியும் உண்மையாக மலராது. வீதிகளில் விதைக்கும் புரட்சி விதைகளுக்கு வீடுகளில் பிற்போக்கு நீர் ஊற்றினால் அவை கருகிவிடும்.

முற்போக்கு என்பது மேடை அலங்காரம் அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை. நம் ஒவ்வொரு செயலிலும் பகுத்தறிவும் சமத்துவமும் பிரதிபலிக்க வேண்டும். பிறருக்கு உரைக்கும் முன் நாமே மாற வேண்டும். அப்போதுதான் நம் முழக்கங்கள் உண்மையான பயனைத் தரும்.

ஊரான்

Wednesday, 25 March 2026

அரசியல்வாதிகள் ஏன் தொகுதி மாறி ஓடுகிறார்கள்?

சில ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம் வெளியகரம் பள்ளியில் ஆங்கில ஆசிரியர் பகவான் இடமாற்றம் செய்யப்பட்டபோது, மாணவர்கள் அவர் கால்களைக் கட்டிக்கொண்டு கதறி அழுதனர்; ஊர் மக்களே திரண்டு வந்து "எங்கள் ஆசிரியர் இங்கேதான் இருக்க வேண்டும்" எனப் போர்க்குரல் எழுப்பினர். 

சில நேர்மையான அரசு அதிகாரிகளுக்கும் இத்தகைய உணர்ச்சிப்பூர்வமான பிரியாவிடைகள் கிடைப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால், இதே போன்ற ஒரு காட்சியை நமது அரசியல் களத்தில் பார்க்க முடிகிறதா?


1. ஆசிரியரின் 'அடையாளம்' vs அரசியல்வாதியின்  
'அந்நியப்படுதல்'

ஒரு ஆசிரியர் தன் மாணவர்களுக்குப் பாடத்தைத் தாண்டி, அவர்களிடம் வாழ்வியலில் மாற்றத்தை உண்டாக்குகிறார். அதனால்தான் அவர் மாற்றப்படும்போது அது அந்த மாணவர்களின் தனிப்பட்ட இழப்பாக உணரப்படுகிறது.

ஆனால், ஐந்தாண்டு காலம் ஒரு தொகுதியின் பிரதிநிதியாக இருக்கும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் (MLA), அடுத்த தேர்தல் வரும்போது மிகச் சாதாரணமாகத் தனது தொகுதியைத் துறந்துவிட்டு வேறு தொகுதிக்கு ஓடுகிறார். 

வானதி சீனிவாசன் அல்லது நயினார் நாகேந்திரன் போன்ற முக்கிய முகங்கள் பாதுகாப்பான தொகுதி தேடி ஓடுவதாக வரும் செய்திகள் இதற்குச் சான்று.

இங்கே எழும் கேள்வி இதுதான்: "எங்கள் பழைய சட்டமன்ற உறுப்பினரே எங்களுக்கு மீண்டும் வேண்டும்" என்று ஒரு தொகுதியிலாவது மக்கள் கொந்தளித்தது உண்டா?

2. கட்சி எடுக்கும் முடிவு... மக்கள் காட்டும் மௌனம்

இன்னும் ஒரு படி மேலே போய் பார்த்தால், ஒரு கட்சியின் தலைமை பழைய சட்டமன்ற உறுப்பினருக்கு அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுத்து, ஒரு புதிய நபரை வேட்பாளராக நிறுத்துகிறது.

அப்பொழுதும் கூட, "எங்களுக்கு புதிய வேட்பாளர் வேண்டாம், பழைய சட்டமன்ற உறுப்பினர்தான் மீண்டும் வேட்பாளராக இருக்க வேண்டும்" என்று எந்த மக்களும் வீதிக்கு வந்து போர்க்குரல் எழுப்புவதில்லை.

ஏன் இந்த மௌனம்?

ஏனெனில், அந்த ஐந்து ஆண்டுகளில் அந்தப் பிரதிநிதி மக்களுடன் எத்தகைய இதயப்பூர்வமான உறவையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான் நிதர்சனம். மக்கள் பிரதிநிதிகள் என்பவர்கள் இன்று 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்' என்பதைவிட, 'கட்சித் தலைமைகளால் திணிக்கப்பட்டவர்களாகவே' இருக்கிறார்கள். 

ஒரு வேட்பாளர் மாறும்போது மக்கள் அதை ஒரு கட்சியின் நிர்வாக மாற்றமாகப் பார்க்கிறார்களே தவிர, உணர்வுப்பூர்வமான இழப்பாகப் பார்ப்பதில்லை.

3. 'பாதுகாப்பான தொகுதி' தேடி ஓட்டம்

தனது தொகுதியில் உண்மையாகவே அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவந்த ஒரு பிரதிநிதி, ஏன் வேறு தொகுதிக்கு ஓட வேண்டும்? தன் தொகுதி மக்களின் மீது அவருக்கு நம்பிக்கை இருந்தால், அவர் அங்கேயே நின்று மீண்டும் வெல்லத் துணிய மாட்டாரா?

ஒரு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மாறுகிறார் என்பதே, அவர் அந்தத் தொகுதிக்குச் செய்த வேலைகளின் மீது அவருக்கே நம்பிக்கை இல்லை என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலம். 

"நான் இங்கே வேலை செய்யவில்லை, அதனால் மக்கள் எனக்குப் பாடம் புகட்டுவார்கள்" என்ற பயமே அவர்களைப் பாதுகாப்பான வேறு இடங்களைத் தேடி ஓட வைக்கிறது.

4. எங்கே போனது அந்தப் 'போர்க்குரல்'?

ஆசிரியருக்காகக் கண்ணீர் விடும் மாணவர்கள் இருக்கும் அதே சமூகத்தில்தான் நாமும் இருக்கிறோம். ஆனால், அதே சமூகம் தன் பிரதிநிதி மாறுவது குறித்துக் கவலைப்படாமல் இருப்பதற்குக் காரணம் - மக்கள் அவர்களைத் தங்களின் 'நலன் விரும்பிகளாக'ப் பார்ப்பதில்லை; மாறாக, ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை வரும் 'தேர்தல் ஒப்பந்ததாரர்களாகவே' பார்க்கிறார்கள்.

முடிவுரை

அரசியல்வாதிகள் வெறும் கட்சிப் பிரதிநிதிகளாக' மட்டுமே இருக்கிறார்கள், 'மக்களின் பிரதிநிதிகளாக' மாறுவதில்லை. ஒரு ஆசிரியர் தன் பணியால் மாணவர்களின் இதயத்தில் இடம்பிடிப்பது போல, ஒரு சட்டமன்ற உறுப்பினர் மக்களின் இதயத்தில் இடம்பிடிக்கத் தவறுகிறார்.

ஒரு சட்டமன்ற உறுப்பினரின் இடமாற்றத்திற்காக அந்தத் தொகுதி மக்கள் வீதியில் இறங்கிப் போராடும் நாள் வந்தால்தான் இந்திய ஜனநாயகம் அதன் உண்மையான இலக்கை எட்டியுள்ளது என்று சொல்லலாம். அதுவரை, இந்தத் தொகுதி மாற்றங்கள் அனைத்தும் அரசியல் பிழைப்புவாதத்தின் அடையாளங்களே!

ஊரான்

Tuesday, 24 March 2026

தேமுதிக-வுக்கு 10 இடங்கள்: திமுக-வின் தேர்தல் வியூகமா அல்லது அரசியல் கட்டாயமா?

தமிழக அரசியல் களம் தற்போது அனல் பறக்கும் விவாதமாக மாறியுள்ளது. தேமுதிக-வுக்கு 10 தொகுதிகளை திமுக ஒதுக்கியது, “வாக்கு வங்கி சரிந்துள்ள ஒரு கட்சிக்கு இத்தனை இடங்களா?”, “இது திராவிட தெலுங்கு லாபியா?” போன்ற விமர்சனங்கள் எழுந்தாலும், அரசியல் என்பது வெறும் உணர்ச்சிகளால் மட்டுமல்ல, நுணுக்கமான கணக்குகளாலும் நகர்த்தப்படுகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.


1. கூட்டணி அரசியலின் தர்க்கம்

தமிழக அரசியல் பல தசாப்தங்களாக இருமுனைப் போட்டியை (திமுக vs அதிமுக) அடிப்படையாகக் கொண்டது. இந்த இரு பெரும் துருவங்களுக்கு இடையே உள்ள சிறிய மற்றும் நடுத்தரக் கட்சிகளே பெரும்பாலும் வெற்றியின் திசையைத் தீர்மானிக்கின்றன. ஒரு தேர்தலை வெல்வது என்பது உங்கள் பலத்தை நிரூபிப்பது மட்டுமல்ல; எதிரணியின் வாக்குகளைச் சிதறடிக்கும் கலையுமாகும்.

2. தேமுதிக-விற்கான ஒதுக்கீடு: ஒரு 'தடுப்பு அரசியல்' (Pre-emptive Strategy)

தேமுதிக-வுக்கு 10 இடங்கள் வழங்கப்பட்டதன் பின்னணியில் தீர்க்கமான அரசியல் கணக்கு இருக்கலாம்.

எதிரணியைப் பலவீனப்படுத்துதல்: அதிமுக–பாஜக கூட்டணியில் சேரக்கூடிய வலுவான கட்சிகளை தன் பக்கம் இழுப்பது.

'வாக்குச் சிதறலைத் தடுத்தல்': தேமுதிக தனித்துப் போட்டியிட்டாலோ அல்லது எதிரணியில் சேர்ந்தாலோ பிரியும் வாக்குகள், சில தொகுதிகளில் திமுகவின் வெற்றியைப் பாதிக்கலாம். அதைத் தவிர்க்கவே இந்த ‘முன் எச்சரிக்கை’ நடவடிக்கை.

இந்த 10 இடங்கள் தேமுதிக-வின் பலத்திற்காகக் கொடுக்கப்பட்டவை அல்ல, மாறாக அதிமுக-வின் பலத்தைக் குறைப்பதற்காகக் கொடுக்கப்பட்ட விலை.

3. கட்சித் தாவல்களும் தேர்தல் யுக்திகளும்

அதிமுக-வில் இருந்து விலகி திமுக-வில் இணைபவர்களுக்குத் தேர்தல் வாய்ப்பு வழங்குவது ‘நேற்று வந்தவர்களுக்கு சீட்டா?’ என்ற விமர்சனத்துக்கு உள்ளாகலாம். ஆனால், எதிரணியின் உள்ளக வலிமையைச் சிதைப்பது தேர்தல் அரசியலில் பொதுவான யுக்தி. ஒரு கட்சியின் முக்கிய முகங்களை இழுப்பதன் மூலம் அதன் தொண்டர் பலத்தை மனரீதியாகப் பலவீனப்படுத்த முடியும்.

4. கருத்தியல் கூட்டணிகள் vs தேர்தல் கூட்டணிகள்

அனைத்துக் கூட்டணிக் கட்சிகளையும் ஒரே தராசில் நிறுத்த முடியாது.
  • கருத்தியல் கூட்டணிகள்: விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்றவை பாஜக எதிர்ப்பு என்ற தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டவை.
  • தேர்தல் கூட்டணிகள்: சில கட்சிகள் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே செல்வாக்கு பெற்றிருக்கும் அல்லது குறைந்த வாக்கு வங்கி வைத்திருக்கும். ஆனால், அவை தேர்தல் வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கும் 'முடிவு சக்தியாக' (Deciding Factor) மாறக்கூடும்.

இந்த ஒப்பந்தத்தைச் சுற்றி சமூக ஊடகங்களில் எழும் பெரும்பாலான விமர்சனங்கள், ‘தனக்குப் பிடிக்காத கட்சிக்கு இத்தனை இடமா?’ என்ற உணர்ச்சி அடிப்படையிலானவையே. அரசியல் என்பது வெறும் பிடித்தம்-பிடிக்காதது அல்ல; வாக்கு சதவீதம், தொகுதி வலிமை, எதிரணியைப் பலவீனப்படுத்தும் உத்தி ஆகியவற்றின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவு என்பதை பலரும் இப்போது மறந்துவிட்டதுபோல் தெரிகிறது.

முடிவுரை

அரசியலில் எந்த முடிவும் தன்னிச்சையாக எடுக்கப்படுவதில்லை. தேமுதிக-வுக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு என்பது வெறும் ‘பரிசு’ அல்ல; அதிமுக–பாஜக அணியின் பலத்தை பலவீனப் படுத்த முயலும் ஒரு அரசியல் நகர்வு. இந்த வியூகம் பலன் தருமா என்பது தேர்தல் முடிவுகள் வரும்போதுதான் தெரியும்.  

தமிழக அரசியலில் கூட்டணிகள் வெறும் நட்புகளால் உருவாவதில்லை; 'தேர்தல் கணக்குகளாலும், சதுரங்க ஆட்டத்தின் நுணுக்கங்களாலுமே' உருவாகின்றன.

ஊரான்

Monday, 23 March 2026

கூட்டணி பேர சிக்கல்: தனிப் பெரும்பான்மையை உறுதி செய்ய திமுக வியூகம் வகுக்கிறதா?

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு விசித்திரமான உண்மை உண்டு: திமுகவும் அதிமுகவும் இதுவரை எந்தத் தேர்தலிலும் நேரடி கூட்டணி அமைத்ததில்லை. இது ஒரு "எழுதப்படாத சட்டம்" (Unwritten Rule). 1972-இல் எம்.ஜி.ஆர் பிரிந்தது முதல் இன்று வரை இந்த இரு துருவங்களும் எதிரெதிர் திசையிலேயே பயணிக்கின்றன.


கொள்கை vs பிழைப்புவாதம்: ஒரு கூர்மையான ஒப்பீடு

1.திமுகவின் கருத்தியல்: திமுக இன்றும் திராவிடக் கொள்கைகளைத் தன் சட்டையாக உறுதியாக அணிந்துள்ள ஒரு கட்சி. திராவிட அரசியல் பற்றுள்ளவர்களும், அது குறித்து ஆழமாகப் பேசக்கூடியவர்களும் இக்கட்சியில் ஏராளம். எனினும், திமுகவில் உள்ளவர்கள் அனைவரும் அப்பழுக்கற்றவர்கள் என்று சொல்லிவிட முடியாது; அங்கேயும் பிழைப்புவாதிகள் நிறையவே உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

2.அதிமுகவின் 'திராவிட' லேபிள்: அதிமுக தன் பெயரில் 'திராவிட' என்று வைத்திருந்தாலும், அது ஒரு பிழைப்புவாதக் கட்சியாகவே பார்க்கப்படுகிறது. எம்.ஜி.ஆர் கட்சியைத் தொடங்கிய காலத்திலிருந்தே, கொள்கைப் பிடிப்பை விடப் பிழைப்புவாதத்தை முன்னிறுத்தியவர்களே அதில் அதிகம் இணைந்தனர். எனவே, இன்றைய அதிமுக திராவிட அரசியலின் அடையாளத்தை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்துகிறதா என்பது குறித்து விமர்சனங்கள் உள்ளன.

பாஜக காரணியும் திமுகவின் வியூகமும்

தற்போதைய அரசியல் சூழலில் மற்றொரு முக்கியமான அம்சம் கவனிக்கத்தக்கது. அதிமுக ஏற்கனவே பாஜகவுடன் நெருக்கமான அரசியல் நிலைப்பாடு கொண்ட கட்சி என கருதப்படுகிறது. ஆனால் திமுக தற்போதைக்கு அப்படி இல்லை. 
  • பாஜக எதிர்ப்பும் தனிப்பெரும்பான்மையும்: திமுக தனது பாஜக எதிர்ப்புக் கொள்கையைத் தொடர்ந்து உறுதியாகக் கடைபிடிக்க வேண்டும் என்றால், அது தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டியது அவசியம்.
  • கூட்டணிப் பேரத்தின் இரகசியம்: ஒருவேளை தொங்கு சட்டமன்றம் உருவானால், மற்ற எந்தக் கட்சியையும் முழுமையாக நம்ப முடியாது (அவர்கள் அதிமுக பக்கம் அதாவது பாஜக பக்கம் சாய வாய்ப்புண்டு) என்பதை திமுக தலைமை நன்கு உணர்ந்துள்ளது. அதனால்தான், தற்போதைய கூட்டணிப் பேரங்களில் திமுக மிக உறுதியாக இருப்பதோடு, அதிக இடங்களில் போட்டியிட விரும்புவதாகவும் தெரிகிறது. ஒரு வகையில் அவர்களின் இந்தத் தற்காப்பு அணுகுமுறை தர்க்கரீதியாகச் சரியானது என்றே தோன்றுகிறது.

மேலும், கூட்டணிக் கட்சிகள் சார்பாக ஏற்கனவே வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியை, திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளைவிட ஒரு முன்மாதிரியாக மாற்றி அமைத்திருந்தால் அவர்கள் கூட்டணிப் பேரத்தில் வலிமையாக நிற்க முடியும். ஆனால் அவ்வாறு எதுவும் சிறப்பாக நடந்ததாகத் தெரியவில்லை. இதுவும் திமுகவின் கடுமையான பேரநிலைக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

2026-இல் 'கிங்மேக்கர்' யார்?

விஜயின் வருகை மற்றும் சீமானின் அரசியல் ஆகிய காரணங்களுக்காக ஒருவேளை 2026 தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை (118 இடங்கள்) கிடைக்காமல் போனால் என்ன நடக்கும்?
  • அணி மாறும் வாய்ப்புகள்: திமுக, அதிமுகவைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளுமே (காங்கிரஸ், இடதுசாரிகள், பாஜக, பாமக, விசிக, தேமுதிக மற்றும் புதிய கட்சிகள்) வரலாற்றில் ஏதோ ஒரு காலகட்டத்தில் மாறி மாறி இரு அணிகளோடும் கூட்டணி வைத்தவைதான்.
  • நிச்சயமற்ற தன்மை: நாளை அதிகாரம் யாருக்குக் கிடைக்கும் என்ற சூழல் வரும்போது, இந்த இதரக் கட்சிகள் அனைத்தும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு அணி மாறுவதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை. பாஜக காரணி இல்லாத சூழலில் மற்ற கட்சிகள் அதிமுகவுடன் கூட்டு சேரும் வாய்ப்பையும் புறந்தள்ளிவிட முடியாது. இந்த ஆபத்தை உணர்ந்தே திமுக  தன்னை வலுப்படுத்திக் கொள்ள முயல்கிறது என்றே கருத வேண்டி உள்ளது. 

முடிவுரை

தமிழக அரசியல் களம் இரு துருவங்களாகவே பிளவுபட்டு நிற்கிறது. ஒருபுறம் கொள்கைப் பின்னணி கொண்ட (ஆனாலும் பிழைப்புவாதிகளையும் உள்ளடக்கிய) திமுக; மறுபுறம் பிழைப்புவாதத்தையும் பாஜகவின் நிழலையும் அஸ்திவாரமாகக் கொண்ட அதிமுக. இவர்களுக்கு இடையே ஊசலாடும் இதரக் கட்சிகள் 2026-இல் யாரை அரியணையில் ஏற்றப் போகின்றன?

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 ஒரு புதிய திருப்பத்தைத் தருமா? சிந்திப்போம்... விவாதிப்போம்!

ஊரான்

Sunday, 22 March 2026

பாலியல் வன்முறை: தனிநபர் சிக்கலா, சமூக கட்டமைப்பின் விளைவா?

இன்றைய சொத்துடமைச் சமூக அமைப்பு பல பொருளாதார முறைகேடுகளுக்கும் ஊழலுக்கும் உகந்த சூழலை உருவாக்குகிறது.

ஆனால், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்களுக்கு எது அடிப்படை? இது வெறும் தனிநபர் ஒழுக்கம் சார்ந்த சிக்கலா அல்லது இதற்கும் பொருளாதாரக் கட்டமைப்பிற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?

பெண்ணை நுகர்வுப் பொருளாக்கும் போலிப் பிம்பங்கள்

பெண்கள் மீதான வக்கிரங்களுக்கு முதன்மைக் காரணமாக நாம் திரைப்படங்கள், கவிதைகள், பாடல்கள் மற்றும் சமூக ஊடகங்களைச் சாடுகிறோம். நிச்சயமாக, கலைப் படைப்புகள் பெண்களை வெறும் 'போகப் பொருளாக' (Objectification) உருவகப்படுத்துவது எரியும் நெருப்பில் ஊற்றப்படும் எண்ணெயாகச் செயல்படுகிறது.

பெண்ணின் சம்மதத்தைவிட அவளை எப்படியாவது 'வீழ்த்திப் பெறுவதே' ஆணுக்கான வீரம் எனச் சித்தரிக்கும் போக்கு, ஆண்களின் வக்கிர மனநிலைக்கு ஒரு சமூக அங்கீகாரத்தை வழங்குகிறது.

ஆளுமை ஈர்ப்பே ஆண்களின் மூலதனம்

ஒரு பெண் ஒரு ஆணை அணுகும்போது, அவளிடம் இல்லாத ஒரு கருத்தியல் ஆளுமையோ அல்லது ஏதோ ஒரு சிறப்பம்சமோ அந்த ஆணிடம் இருக்கும்போது அவள் ஈர்க்கப்படுகிறாள். உதாரணமாக, முப்பது வயதுப் பெண் ஒரு அறுபது வயது முதியவரின் அறிவார்ந்த ஆளுமையைக் கண்டு வியந்து அவரை விரும்பக்கூடும். தன்னிடம் இல்லாத ஆளுமை இன்னொருவரிடம் இருக்கும்போது அவரிடம் ஈர்க்கப்படுவது இயல்புதான்.

இந்தத் தருணத்தில் அந்த ஆண் காட்ட வேண்டியது கண்ணியமும், அவளது உணர்வை மதிக்கும் பண்பும்தான். ஆனால், கெடுவாய்ப்பாக சில ஆண்கள் பெண்களின் அந்த ஈர்ப்பைத் தங்களின் 'மூலதனமாக' மாற்றிக் கொள்கிறார்கள்.
பெண்களை ஒரு நுகர்வுப் பொருளாகப் பார்க்கும் அந்த ஆணாதிக்கத் தன்மை, அவர்களைச் சுரண்டுவதற்கான வாய்ப்பாகவே இதைப் பார்க்கிறது.

பொருளாதார அதிகாரமும் பாலியல் சுரண்டலும்

இங்கேதான் பொருளாதாரமும் பாலியலும் ஒன்றிணைகின்றன. பெண்கள் பல சமயங்களில் ஆண்களின் அதிகாரம், பொருளாதாரம் அல்லது சமூக நிலை காரணமாக அவர்களிடம் ஈர்க்கப்படலாம். அவர்கள் தரும் பொருளாதார உதவிகள் (பணம், நகை, சொத்து அல்லது நட்சத்திர விடுதி உணவு உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்கள்) ஒரு தூண்டிலாக அமைகின்றன. சமூகம் பெண்களைப் பொருளாதார ரீதியாகச் சுதந்திரமற்றவர்களாக வைத்திருக்கும் வரை, இந்த வகை ஏமாற்றுகளும் பாலியல் அத்துமீறல்களும் தொடரவே செய்யும்.


கருத்தாளுமை: பெண்களின் கேடயம்

இந்தச் சூழலை மாற்ற வேண்டுமானால், பெண்கள் கல்வியில் முன்னேறுவதும் பொருளாதாரத் தற்சார்பு பெறுவதும் மட்டும் போதாது. அதையும் தாண்டி அவர்கள் கருத்தியல் ஆளுமை (Ideological Strength) மிக்கவர்களாக வளர வேண்டும்.

"ஆண்களைப் போல பெண்களும் கருத்தாளுமைக்குச் சளைத்தவர்கள் அல்ல என்கிற நிலை உருவாக வேண்டும்."

அதற்கு, பெண்கள் சமூகப் பிரச்சினைகளில் (சாதியம், வர்க்கச் சுரண்டல், அரசியல் பொருளாதாரம்) அக்கறை செலுத்த வேண்டும். 

ஒரு பெண் வெறும் 'உடலாக' அல்லாமல், ஒரு 'சிந்தனை ஆளுமையாக'த் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும்போது, அவளது ஆளுமை ஆண்களின் வக்கிரப் பார்வைக்கு அப்பாற்பட்டதாக மாறுகிறது. அறிவு ரீதியான சமநிலை ஏற்படும்போது பாலியல் சுரண்டலுக்கான இடைவெளி குறைகிறது.

நாம் செய்ய வேண்டியவை:
  1. பொருளாதாரச் சுதந்திரம்: பெண்களுக்குச் சொத்துரிமையிலும், வாழ்வாதாரத்திலும் முழுமையான சமபங்கு வேண்டும்.
  2. கருத்தியல் பலம்: பெண்கள் சமூக விவாதங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு, ஆண்களுக்கு நிகரான - அல்லது மேலான - கருத்தாளுமையைப் பெற வேண்டும்.
  3. ஊடகக் கட்டுப்பாடு: பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் மற்றும் உள்ளடக்கங்களுக்கு எதிராக சமூக விழிப்புணர்வும் பொறுப்பான ஊடக நடைமுறைகளும் உருவாக வேண்டும்.
முடிவுரை

பாலியல் வக்கிரங்கள் ஒழிய வேண்டுமானால் தனிநபர்களை மட்டும் திருத்த முயல்வதை விட, அத்தகைய குற்றங்களை உற்பத்தி செய்யும் சமூகக் கட்டமைப்பைக் கேள்விக்குள்ளாக்க வேண்டும். பெண்கள் வெறும் 'நுகர்வுப் பண்டம்' அல்ல; அவர்கள் சமூகத்தை வழிநடத்தும் 'கருத்தியல் ஆளுமைகள்' என்பதை இந்தச் சமூகம் அங்கீகரிக்கும்போதுதான் பாலியல் குற்றங்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.

விவாதிப்போம். மாற்றத்தை நோக்கி சிந்திப்போம்.

ஊரான்

மாற்றுக் கருத்தை ஏற்க மறுக்கும் மனநிலை!

நாம் எதற்காகப் போராடுகிறோம்? எதை மாற்ற நினைக்கிறோம்? சமூகம் மாற வேண்டும், மக்கள் மாற வேண்டும், மூடநம்பிக்கைகள் ஒழிய வேண்டும் என்று மேடைகளில் முழங்குகிறோம். ஆனால், அந்த மாற்றத்தை நம்மிடமிருந்தோ அல்லது நமக்கு நெருக்கமானவர்களிடமிருந்தோ தொடங்க முற்படும்போதுதான், நாம் எவ்வளவு பெரிய முரண்பாட்டில் வாழ்கிறோம் என்பது வெளிச்சத்திற்கு வருகிறது.


'கருத்தியல் தன்னலம்' (Ideological Ego)?

தன்னைப் பற்றித் தானே ஒரு உயர்ந்த பிம்பத்தைக் கட்டமைத்துக் கொண்டு, அந்தப் பிம்பத்திற்கு எவ்விதச் சிறு பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்று நினைப்பதே கருத்தியல் தன்னலம்.

நாம் ஒரு கருத்தைச் சொல்லும்போது அது அறிவுப்பூர்வமானதா என்று பார்ப்பதைவிட, அது எனக்கு சாதகமானதா என்பதே முக்கியமாகிவிட்டது.
ஒரு சமூகச் செயல்பாட்டில் அல்லது சடங்கில் இருக்கும் அர்த்தமற்ற தன்மையை யாராவது சுட்டிக்காட்டினால், அதை ஒரு விவாதமாக எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக, அதை ஒரு தனிநபர் தாக்குதலாக (Personal Attack) கருதும் மனநிலை வளர்ந்து வருகிறது.

'தோழமை' என்பது என்ன?

"வெளியாட்கள் சொன்னால் பரவாயில்லை, நீங்களே இப்படியா?" என்ற ஒரு கேள்வி அடிக்கடி எழுகிறது. உண்மையில், ஒரு தோழமை அல்லது நெருங்கிய நட்பு அல்லது நெருங்கிய உறவு என்பது எது? தவறுகளைக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதா? அல்லது முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி ஒருவரைச் செம்மைப்படுத்துவதா?
நிச்சயமாகச் செம்மைப்படுத்துவதுதான்.

ஆனால், இன்று நிலைமை தலைகீழாக இருக்கிறது. மாற்றுக் கருத்துக்களைச் செவிமடுக்கத் தயாராக இல்லாதவர்கள், சமூக மாற்றத்தைப் பற்றிப் பேசுவது ஒரு முரண்பாடு.

உறவுகளும் பிம்பங்களும்

இந்தத் தன்னலம் என்பது இயக்கங்கள் அல்லது நண்பர்களோடு நின்றுவிடுவதில்லை. குடும்பத்திற்குள்ளும் இதுவே நீடிக்கிறது. ஒவ்வொருவரும் தங்களை 'சரியானவர்களாகவும்', 'மேலானவர்களாகவும்' காட்டிக் கொள்ளவே விரும்புகிறார்கள். 

அவர்களின் செயல்களில் இருக்கும் தர்க்கப் பிழைகளைச் சுட்டிக்காட்டினால், உடனே உறவுகளில் விரிசல் விழுகிறது.
"உன் கருத்தை உன்னோடு மட்டும் வைத்துக் கொள்; அடுத்த வீட்டுக் கதவைத் தட்டி உள்ளே திணிக்காதே" என்ற மனநிலை நம்மை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைத்துவிடுகிறது. 

மற்றவர்களின் கதவைத் தட்டத் தயங்கும் அறிவு, எந்த மாற்றத்தையும் உருவாக்க இயலாது.

முடிவுரை

சமூகத்தை மாற்றப் புறப்படும் ஒவ்வொருவரும் முதலில் உடைக்க வேண்டியது தங்களின் கருத்தியல் தன்னலத்தைத்தான். நமது பிம்பங்கள் சிதைக்கப்படும்போது எழும் கோபத்தைவிட, ஒரு தவறான கருத்து நிலைபெறுவதைக் கண்டு நாம் வருந்த வேண்டும். மாற்றுக் கருத்துக்களைச் சகித்துக் கொள்ளவும், ஆரோக்கியமான விமர்சனங்களை உள்வாங்கவும் பழகாத வரை, நாம் கட்டமைக்கும் 'முற்போக்கு' என்பது ஒரு வெற்று அலங்காரமே.

சிந்திப்போம்...

ஊரான்

தொடர்புடைய பதிவு 

Friday, 20 March 2026

EWS இடஒதுக்கீடு: SC, ST, OBC ஏழைகளுக்கு ஏன் இல்லை?

இந்தியாவில் இடஒதுக்கீடு என்பது கல்வி மற்றும் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசமைப்புச் சட்டப்படி வழங்கப்பட்ட ஒரு உரிமையாக இருந்து வந்தது. ஆனால், 'பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினர்' - “Economically Weaker Sections” (EWS) - என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட 10% இடஒதுக்கீடு, அந்த அடிப்படைத் தத்துவத்தையே மாற்றியமைத்துவிட்டது.

SC, ST, OBC என்கிற சமூகப் பின்னணியை அடிப்படையாகக் கொண்ட இடஒதுக்கீட்டு கொள்கைக்கு நடுவில், “பொருளாதார பலவீனம்” என்ற புதிய அளவுகோலைக் கொண்டு வந்து உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், நடைமுறையில் முற்பட்ட வகுப்பினருக்கான (OC) ஒரு பாதுகாப்புக் கவசமாகவே செயல்படுகிறது.

இது வெறும் அரசியல் வாதம் அல்ல; புள்ளிவிவரங்களே இதை வெளிப்படையாகச் சொல்லுகின்றன.

அதிர்ச்சியூட்டும் கட்-ஆஃப் தரவுகள் (2026)

சமீபத்தில் வெளியான அரசு நிறுவன ஆட்சேர்ப்பு (Artisan Recruitment) முடிவுகள் பல கேள்விகளை எழுப்புகின்றன. 120 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வில் வெளியான கட்-ஆஃப் மதிப்பெண்கள்:



BHEL,

• BAP Ranipet – Welder:
EWS கட்-ஆஃப் – 48.75
SC – 57.75
OBC – 55.50

• HPBP Trichy – Fitter:
EWS – 55.75
SC – 68.75
OBC – 73.25

இந்தத் தரவுகள் எதைக் காட்டுகின்றன?

EWS பிரிவில் குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அதே சமயம் அதிக மதிப்பெண் பெற்ற SC, ST, OBC இளைஞர்கள் கடுமையான போட்டியில் வாய்ப்பை இழக்கிறார்கள்.

நேற்றுவரை “தகுதி” மற்றும் “திறமை” பற்றி பேசிக் கொண்டிருந்தவர்கள், இன்று குறைந்த மதிப்பெண்களுடன் வாய்ப்புகளைப் பெறும் இந்த நிலைமை, அந்த வாதங்களையே கேள்விக்குறியாக்குகிறது.

சட்டச் சிக்கல்: சாதியைத் துறந்தாலும் விடுபட முடியாத கட்டமைப்பு

இங்கே ஒரு சிக்கலான கேள்வி எழுகிறது.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஒரு SC/ST/OBC இளைஞர், தனது சாதி அடையாளத்தைத் துறந்து ‘சாதியற்றவர்’ (No Caste) சான்றிதழ் பெற்றால் EWS இடஒதுக்கீட்டைப் பெற முடியுமா?

சட்டப்பூர்வமாக “இல்லை” என்பதே இதற்கான பதில்.

103-வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி, ஏற்கனவே SC, ST, OBC இடஒதுக்கீட்டிற்குள் வரும் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் EWS பிரிவுக்குத் தகுதியற்றவர்கள். ஒருவரிடம் “சாதியற்றவர்” என்ற சான்றிதழ் இருந்தாலும், அரசின் பார்வையில் அவரது பிறப்பு சார்ந்த சமூக அடையாளமே இடஒதுக்கீட்டுத் தகுதியை நிர்ணயிக்கும்.

இதனால், சாதியைத் துறக்க விரும்பும் ஒருவருக்குக்கூட அந்த சமூகப் பெட்டியிலிருந்து வெளியே வர சட்டம் அனுமதிக்கவில்லை.

நாம் எழுப்ப வேண்டிய அடிப்படை கேள்விகள்

இந்தச் சூழ்நிலை சில முக்கியமான முரண்பாடுகளை வெளிப்படுத்துகிறது.

1. பொருளாதார அளவுகோல் என்றால் அனைவருக்கும் ஏன் இல்லை?

EWS என்பது பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு என்றால், அதில் ஏன் சமூக அடையாள அடிப்படையில் விலக்கு இருக்க வேண்டும்?

2. ஏழை என்றால் ஏழைதானே?

₹8 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் பெறும் ஒரு SC/ST/OBC இளைஞன் ஏழை இல்லையா?

3. தகுதி என்ற வாதம் எங்கே போனது?

குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது, அதிக மதிப்பெண் பெற்றவர்கள் வெளியே தள்ளப்படுவது எந்த “தகுதி”க் கொள்கையை பிரதிபலிக்கிறது?

4. சாதி ஒழிப்பு எங்கே?

ஒருவர் சாதியையும் மதத்தையும் துறக்க முன்வந்தாலும் சட்டம் அவரை மீண்டும் அதே சாதிப் பெட்டிக்குள் அடைத்து வைப்பது, சாதி ஒழிப்பின் பாதையில் ஒரு பெரிய முரண்பாடு அல்லவா?

முடிவுரை

இன்றைய சட்ட அமைப்பில் SC, ST, OBC சமூகங்களைச் சேர்ந்தவர்கள் EWS பிரிவுக்குள் நுழைவது நடைமுறையில் சாத்தியமற்றது. ஆனால் இந்த நிலைமை ஒரு முக்கியமான உண்மையை வெளிப்படுத்துகிறது.

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதாக இருந்தால், அது அனைத்துச் சமூகங்களிலும் உள்ள ஏழைகளுக்கும் சமமாக இருக்க வேண்டும். இல்லையெனில் அது “பொருளாதார நீதியின்” பெயரில் உருவாக்கப்பட்ட ஒரு புதிய அநீதியாகவே மாறிவிடும்.

ஒரு காலத்தில் மண்டல் கமிஷனை எதிர்த்து நாடு முழுவதும் தீவிரமான அரசியல் போராட்டங்கள் நடைபெற்றன. இன்று EWS இடஒதுக்கீட்டின் முரண்பாடுகளை எதிர்த்து அறிவார்ந்த விவாதங்களும் அரசியல் எதிர்ப்புகளும் எழுவது தவிர்க்க முடியாத ஒன்றாகத் தோன்றுகிறது.

சமூகநீதி என்பது வெறும் கோரிக்கை மட்டுமல்ல; அது நடைமுறையில் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கும் அமைப்பாக இருக்க வேண்டும்.

ஊரான்

Thursday, 19 March 2026

கோட்டு, சூட்டு, மேக்கப்: கௌரவமா அல்லது கருத்தியல் வறட்சியின் பகட்டா?

ஆடை என்பது ஒரு மனிதனை நாகரிகமாக வெளிப்படுத்துவது மட்டுமல்ல; அது அந்தந்தப் பகுதியின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப உடலைப் பாதுகாப்பதற்கான ஒரு கருவியும் ஆகும்.

ஆனால் தமிழ்நாட்டின் சுட்டெரிக்கும் வெயில் காலங்களில்கூட கழுத்தில் ‘டை’ கட்டிக்கொண்டு, உடல் முழுவதையும் மூடும் ‘கோட்டு–சூட்டு’ அணிவதும், அளவுக்கு அதிகமான மேக்கப் போடுவதும் ஒரு பெருமைக்குரிய விஷயமாகக் கருதப்படுகிறது.

இது உண்மையில் அறிவார்ந்த செயலா? அல்லது வெறும் போலி கௌரவத்தின் வெளிப்பாடா?

குளிர் தேசங்களின் கவசம்

ஐரோப்பா போன்ற நாடுகளில், கடும் குளிரிலும் பனிப்பொழிவிலும் உடலைப் பாதுகாப்பதே ‘கோட்டு–சூட்டு’ உடைகளின் அடிப்படை நோக்கம். கழுத்து வழியாகக் குளிர் காற்று உடலுக்குள் புகாமல் இருக்கவே ‘டை’ (Tie) பயன்படுத்தப்பட்டது.
அங்குள்ள காலநிலைக்கு அது ஒரு தேவையான பாதுகாப்பு. அதாவது, அந்த ஆடை அங்கே ஒரு ‘உயிர் காக்கும் கவசம்’.

நீதிமன்றங்களின் ‘நிழல்’ அடிமைத்தனம்

வழக்கறிஞர்கள் அணியும் கறுப்பு கோட், கழுத்தில் கட்டப்படும் வெள்ளை ‘நெக் பேண்ட்’ (Neck band) மற்றும் நீண்ட கவுன் போன்ற ஆடைகளும் இதே குளிர்காலச் சூழலில்தான் உருவானவை.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஆடை விதிகளை, 40°C வெயில் அடிக்கும் நம் நாட்டின் நீதிமன்றங்களிலும் இன்றும் தொடர்வது ஒரு வகையில் காலனிய மரபின் நிழலைத் தாங்கிக்கொண்டு வாழ்வதைப் போன்றதே.

கர்நாடகா, டெல்லி போன்ற சில இடங்களில் கோடை காலங்களில் கருப்பு கோட் அணிவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆடை என்பது ஒருவரின் அறிவையோ சட்டப் புலமையையோ தீர்மானிப்பதில்லை.

சிறு முதலாளிகளின் ‘பகட்டு’ மாற்றம்

இன்னொரு சமூகப் போக்கும் கவனிக்கத்தக்கது. நேற்று வரை எளிய ஆடையில் இருந்த ஒருவர் திடீரென பொருளாதார வசதி பெற்றவுடன் உடனே ‘கோட்டு–சூட்டு’ அணிந்து கொள்ளத் தொடங்குகிறார்.

ஆடை மாறினால் அந்தஸ்து உயர்ந்துவிடும் என்ற ஒரு மனப்பான்மை இதற்குப் பின்னால் செயல்படுகிறது. உண்மையில் இது ஒரு தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. 

பகட்டும் வெளிப்படையான பிம்பமும்

சமூகத்துக்குச் சேவை செய்ய வேண்டிய அரசியல்வாதிகள்கூட சில சமயங்களில் தங்களின் கொள்கைகளைவிட வெளிப்புற தோற்றத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பது கவலைக்குரியது.

கண்ணாடியின் முன் அமர்ந்து கொண்டு மணிக்கணக்காகச் செய்யப்படும் அழகு அலங்காரங்களில் ஒளிந்திருக்கும் அந்தரங்க உளவியல், மேடைகளில் முழங்கும் அவர்களின் அரசியல் உரைகளுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கின்றன.

வயதுக்கும் சூழலுக்கும் பொருந்தாத அளவுக்கு மிகைப்படுத்தப்பட்ட மேக்கப்புகளும் வெளிப்புற அலங்காரங்களும் பல நேரங்களில் ஒரு செயற்கை பிம்பத்தை உருவாக்குகின்றன. பிறரின் கவனத்தை ஈர்ப்பதற்கான இந்த வெளிப்புற முயற்சிகள் சமூகத்தில் ஒரு பகட்டுத் கலாச்சாரத்தை உருவாக்குகின்றன.


தலைமையும் – கருத்தாளுமையும்

உண்மையான ஆளுமை உடையில் இல்லை என்பதை நமது வரலாறே நமக்கு உணர்த்துகிறது.
தந்தை பெரியார், வே. ஆனைமுத்து போன்ற தலைவர்கள் ஒருபோதும் தங்களின் உடைக்கோ அலங்காரங்களுக்கோ முக்கியத்துவம் கொடுக்கவில்லை. எளிய உடைகளிலேயே வாழ்ந்த அவர்கள், கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது.
அதற்குக் காரணம் அவர்களிடம் இருந்த ‘கருத்தாளுமை’.

அவர்களின் சிந்தனைகள் கூர்மையானவை; செயல்பாடுகள் நேர்மையானவை. அந்த அறிவார்ந்த வலிமையே அவர்களை சமூகத்தின் முன்னே கொண்டு வந்தது. கருத்தியல் வறட்சி உள்ளவர்களே தங்களை வெளிப்புற அலங்காரங்களால் மறைக்க முயற்சிக்கிறார்கள்.

ஆடை என்பது ஒருவரின் அறிவையோ பண்பையோ தீர்மானிப்பதில்லை. அது ஒரு மனிதனின் வெளிப்புற வடிவம் மட்டுமே.

முடிவுரை

அறிவார்ந்த சமூகம் என்பது சூழலுக்கு ஏற்றவாறு வாழ கற்றுக்கொள்வதே. குளிருக்கான ஆடைகளை வெயிலில் அணிவதும், செயற்கை அலங்காரங்களில் பெருமை காண்பதும் ஒரு பகட்டு கலாச்சாரத்தின் அறிகுறியே.
ஆடை என்பது உடலைப் பாதுகாப்பதற்கானது; போலி கௌரவத்தை வெளிப்படுத்துவதற்கானது அல்ல. உண்மையான மரியாதை மனிதனின் உடையிலோ அலங்காரங்களிலோ இல்லை — அவனுடைய சிந்தனையிலும் செயலில்தான் இருக்கிறது.

ஊரான்


Wednesday, 18 March 2026

தியாகமா அல்லது கையறுநிலையா? – போராட்டக் களத்தில் தற்கொலைகளின் உளவியல்!

போராட்டக் களத்தில் மரணம் என்பது பல சமயங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் அந்த மரணம் எப்படி நிகழ்கிறது என்பதுதான் அந்தப் போராட்டத்திற்குத் தரும் நெறியையும் வலிமையையும் தீர்மானிக்கிறது.

அடக்குமுறைகளைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு, எதிரியின் கரங்களால் வீழ்வது ‘வீரமரணம்’. ஆனால், போராட்டத்தின் பெயரால் ஒருவன் தன் உயிரைத் தானே மாய்த்துக் கொள்வது என்பது ‘இயலாமையின் வெளிப்பாடே’ தவிர வேறல்ல.

திலீபன் மரணமும் – தற்கொலை அரசியலும்

சமீபத்தில் (மார்ச் 11, 2026) சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களை அகற்றும் மே 17 இயக்கத்தின் போராட்டத்தின் போது, சிவா திலீபன் “தமிழ் வாழ்க, இந்தி ஒழிக” என முழங்கியவாறு ரயில் முன் பாய்ந்தார். அவரது முகநூல் பதிவில் “உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு” என்று எழுதப்பட்டிருந்தது. தீவிர சிகிச்சையில் இருந்த அவர் மார்ச் 18/19 அன்று உயிரிழந்தார்.

சிவா திலீபன்

மொழிப்பற்று என்பது போற்றுதலுக்குரியது. ஆனால் அந்தப் பற்றின் பெயரால் ஒருவர் தற்கொலை செய்து கொள்வது, அந்தப் போராட்டத்தின் நோக்கத்தையே சிதைக்கும் செயல்.

இந்த மரணத்தை ஒரு தியாகமாகப் பார்ப்பதைவிட, ஒரு உளவியல் சிக்கலாகவே அணுக வேண்டியுள்ளது. ஆணாதிக்கக் கொடுமையைத் தாங்க முடியாமல், அதை எதிர்த்து வெல்ல வழியறியாமல், இறுதியில் உயிரை மாய்த்துக் கொள்ளும் ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலைக்கும் இதற்கும் அடிப்படையான வேறுபாடு இல்லை. இது வீரமல்ல; மாறாக எதையுமே எதிர்கொள்ள முடியாத ஒரு கையறுநிலையின் வெளிப்பாடு.

அமைப்புகளின் பொறுப்புத் துறப்பு

ஒரு பாதிக்கப்பட்ட பெண் தற்கொலைக்குத் தள்ளப்படுவதற்கு இந்தச் சமூகம் எவ்வாறு காரணமோ, அதுபோலவே போராட்டக் களத்தில் ஒரு தொண்டன் இப்படிப்பட்ட முடிவை எடுப்பதற்கும் அவரை வழிநடத்தும் அமைப்புகள் பொறுப்பேற்க வேண்டியிருக்கிறது.

ஒரு இயக்கத்தின் கடமை என்ன?

தன் தொண்டர்களுக்கு எதிரியை எப்படி எதிர்கொள்ள வேண்டும், களப் போராட்டங்களை எப்படி முன்னெடுக்க வேண்டும், அரசியல் உத்திகளை எப்படி வடிவமைக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுக்க வேண்டும். 

ஆனால் சில சமயங்களில் அமைப்புகள் உணர்ச்சியைத் தூண்டி, தொண்டர்களை ஒரு சின்னமாக மாற்றிக் கொள்ளும் அபாயகரமான நிலை உருவாகிறது. ஒரு தொண்டனின் உயிரைக் காக்க முடியாத அமைப்பு, எப்படி ஒரு சமூகத்தின் உரிமையைப் பாதுகாக்க முடியும்?

ஜூலியஸ் பூசிக் முதல் பகத்சிங் வரை – மற்றும் 1965 சின்னசாமி

நாம் ஏன் இன்னமும் பகத்சிங்கையும், ஜூலியஸ் பூசிக்கையும் முன்னுதாரணங்களாகப் போற்றுகிறோம்? அவர்கள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர்கள் தங்கள் கொள்கைக்காக எதிரியின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் நின்றார்கள்; தூக்குக் கயிற்றைத் தைரியமாக எதிர்கொண்டார்கள். அவர்களின் மரணம் என்பது ஒரு போராட்டத்தின் முடிவு அல்ல; அது ஆயிரக்கணக்கான புதிய போராட்டக்காரர்களை உருவாக்கிய விதை.

1965 ஆம் ஆண்டின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது கீழப்பழுவூர் சின்னசாமி தீக்குளித்து உயிரிழந்தார். அப்போதும் அது ‘தியாகம்’ என்று கொண்டாடப்பட்டது. ஆனால் அத்தகைய உணர்ச்சி வெடிப்புகள், நீண்டகால அரசியல் உத்திகளை உருவாக்குவதற்குப் பதிலாக, போராட்டத்தை ஒரு உணர்ச்சி அலைகளாக மட்டுமே மாற்றிவிடும் அபாயம் கொண்டவை என்பதை வரலாறு காட்டுகிறது.

தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளும் மரணங்கள் மக்களை ஊக்குவிப்பதற்குப் பதிலாக அச்சமடையச் செய்யும். அது போராட்ட உணர்வை வளர்ப்பதற்குப் பதிலாக, இயலாமை மற்றும் விரக்தியின் மனநிலையைப் பரப்பும்.

முடிவுரை

போராட்டம் என்பது வாழ்வதற்காகத்தான் — சாவதற்காக அல்ல. தற்கொலைகளைத் தியாகங்களாகச் சித்திரிப்பது ஒரு ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளமாக இருக்க முடியாது. உணர்ச்சிவசப்பட்டு உயிரை விடுவதைவிட, அறிவார்ந்த முறையில் களத்தில் நின்று போராடுவதே இன்றைய காலத்தின் அவசியம்.

மாவீரர்களை உருவாக்குவோம்; தற்கொலைகளுக்குத் தார்மீகச் சாயம் பூசுவதைத் தவிர்ப்போம்.

ஊரான்

Monday, 16 March 2026

ஊரான் – ஒரு வலைப்பூ எழுத்துப் பயணம்!

தமிழில் இணைய எழுத்து வளரத் தொடங்கிய காலப்பகுதியில் உருவான முக்கியமான வெளிப்பாடுகளில் ஒன்று வலைப்பூ (Blog) எழுத்தாகும். அச்சு இதழ்கள் மற்றும் பதிப்பகங்களின் வரம்புகளை மீறி, தனிநபர்கள் தங்கள் சிந்தனைகளை நேரடியாக வாசகர்களிடம் பகிரும் வாய்ப்பை வலைப்பூக்கள் உருவாக்கின. 

இந்த இணைய எழுத்துப் பரப்பில் கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து செயல்பட்டு வரும் எழுத்தாளர்களில் ஒருவர் “ஊரான்”.
ஊரான் தனது எழுத்துப் பயணத்தை 2010 ஆம் ஆண்டில் தொடங்கினார். Blogger தளத்தை ஆதாரமாகக் கொண்டு, அவர் தனது சிந்தனைகளை வலைப்பூ வடிவில் பதிவு செய்யத் தொடங்கினார்.


ஆரம்பத்தில் தனிப்பட்ட சிந்தனைகள் மற்றும் சமூகக் கருத்துக்கள் எனத் தொடங்கிய இந்த எழுத்து, பின்னர் சமூக விமர்சனம், தத்துவ சிந்தனை, அறிவியல் பார்வை மற்றும் தமிழ் இலக்கிய ஆய்வு போன்ற பல துறைகளில் விரிந்தது.

ஊரான் எழுதும் கட்டுரைகளின் முதன்மைச் சிறப்பு, அவை வாசகர்களிடம் கேள்விகளை எழுப்புகின்றன என்பதுதான். சமூகத்தில் வழக்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பல கருத்துக்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் குறித்து அவர் பகுத்தறிவு அடிப்படையில் சிந்திக்கத் தூண்டும் வகையில் எழுதுகிறார். மரபாக நிலைத்த கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அவற்றை ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கமே அவரது எழுத்தின் மையக் கருத்தாக அமைகிறது.

இந்த எழுத்துப் பயணத்தின் வழியில் இரண்டு முக்கிய வலைப்பூக்கள் உருவாயின:
https://hooraan.blogspot.com
https://ethirthunil.blogspot.com
முதல் வலைப்பூ அவரது தொடக்ககால எழுத்துக்களின் சான்றாக திகழ்கிறது. பின்னர் உருவான இரண்டாவது வலைப்பூவில் சமூக அரசியல் மற்றும் சமகாலச் சிந்தனைகள் குறித்து அவர் தொடர்ந்து தனது கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்.

ஊரானின் கட்டுரைகள் பல்வேறு தளங்களைத் தொட்டுச் செல்கின்றன. சமூக சமத்துவம், மனிதநேயம், பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மை, அரசியல் விமர்சனம், தமிழ் இலக்கிய விளக்கம் ஆகியவை அவற்றில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. 

இந்த எழுத்துக்கள் வாசகர்களை சிந்திக்கத் தூண்டும் ஆற்றல் கொண்டவை. இதன் விளைவாக, அவரது வலைப்பூக்களுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வாசகர்கள் ஈர்க்கப்படுகின்றனர்.

ஜெர்மனி, அமெரிக்கா, பின்லாந்து, இந்தியா, சிங்கப்பூர், கனடா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து வாசகர்கள் தொடர்ந்து அவரது பதிவுகளை வாசித்து வருகின்றனர். இது தமிழ் இணைய எழுத்து உலகளாவிய வாசகர்களை அடையக்கூடிய திறன் கொண்டதற்கான தெளிவான சான்றாக அமைகிறது.

ஊரானின் பதிவுகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக 2015 ஆம் ஆண்டு வெளியான “ஆவினில் பசு இருப்பதால் ஆவின் பால் எல்லாம் பசும்பாலாகிவிடுமா?” என்ற கட்டுரை கருதப்படுகிறது. சமூகத்தில் பரவலாக நிலவும் ஒரு கருத்தை பகுத்தறிவு அடிப்படையில் ஆராய்ந்த இந்தப் பதிவு ஆயிரக்கணக்கான வாசிப்புகளைப் (page views) பெற்று பரவலான கவனத்தை ஈர்த்தது.

வலைப்பூ எழுத்து என்பது வெறும் கருத்துப் பகிர்வு மட்டுமல்ல; அது ஒரு தன்னிச்சையான அறிவு வெளிப்பாடாகும். பதிப்பகங்கள் அல்லது இதழ்களின் கட்டுப்பாடுகளுக்கு உட்படாமல், எழுத்தாளர் நேரடியாக வாசகருடன் உரையாடும் ஒரு திறந்த மேடையாக அது செயல்படுகிறது. இந்தத் தன்னிச்சையையே ஊரான் தனது எழுத்தின் முக்கிய பலமாகக் கருதுகிறார்.

பதினைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதுவது என்பது எளிதான செயலல்ல; அது ஓர் இடையறாத சிந்தனைப் பயணம். சமூகத்தில் நிகழும் மாற்றங்களை அவதானித்து, அவற்றை ஆராய்ந்து, வாசகர்களுடன் பகிரும் ஒரு தொடர்ச்சியான முயற்சியாக ஊரானின் வலைப்பூ எழுத்துப் பயணம் திகழ்கிறது.

சமூகத்தில் தெளிவான சிந்தனையும், பகுத்தறிவும் வலுப்பெற வேண்டும் என்ற இலக்குடன் இந்த எழுத்துப் பயணம் முன்னெடுக்கப்படுகிறது. வாசகர்களை சிந்திக்கத் தூண்டும் எழுத்தே உண்மையான எழுத்து என்ற நம்பிக்கையுடன், ஊரான் தனது எழுத்துப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டு செல்கிறார்.

– செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தொகுக்கப்பட்டது