Sunday, 1 March 2026

வயிறு என்ன குப்பைத் தொட்டியா? – தீவிரமாகும் 'தீனி' கலாச்சாரம்

இன்றைய நுகர்வோர் உலகில், காலையில் எழுந்ததிலிருந்து இரவு உறங்கும் வரை ஏதோ ஒரு உணவுப் பண்டத்தைச் சுற்றியே மனித வாழ்க்கை சுழல்கிறது. மாலை நேரங்களில் கடைவீதி வழியாகச் செல்லும்போது கண்ணில் படும் போண்டா, பஜ்ஜி, சமோசா, சிக்கன் பக்கோடா, பானிபூரி, மசாலா மீன் வருவல், கொத்து பரோட்டா எனப் பலவண்ணப் பலகாரங்கள் நம் நாவிற்குச் சவால் விடுகின்றன. காற்றில் மிதந்து வரும் அந்தப் பலகாரங்களின் மணமும், கண்ணைக் கவரும் நிறமும் முறையே நம் மூக்கையும் நாவையும் சுண்டி இழுத்து நம்மை அலைமோத வைக்கின்றன.


கால மாற்றம்: பசி முதல் பழக்கம் வரை

முந்தைய காலங்களில் பசி எடுத்தால் மட்டுமே உரிய நேரத்தில் உணவு அருந்துவார்கள். இடையில் எதையாவது தின்ன வேண்டும் என்று மனம் விரும்பினாலும், தின்பண்டங்கள் அவ்வளவு எளிதாகக் கிடைக்காது. முன்பெல்லாம் நகரங்களுக்குச் சென்று வந்தாலோ அல்லது வாரச் சந்தைக்குச் சென்று வந்தாலோதான் நொறுக்குத் தீனிகளைக் காண முடியும். அன்றைய தீனிகளும் பெரும்பாலும் பொரிகடலை, பட்டாணி, முறுக்கு போன்ற எளிய மற்றும் ஆரோக்கியமான வகைகளாகவே இருந்தன. திருவிழாக் காலங்களில் மட்டுமே இனிப்பு வகைகள் அரிதாகத் தட்டுப்படும்.

ஆனால் இன்று, உணவு என்பது 'அவசியம்' என்பதைத் தாண்டி ஒரு 'பழக்கமாக' மாறிவிட்டது. திரும்பும் திசையெல்லாம், குக்கிராமங்கள் வரை இன்று விதவிதமான நொறுக்குத் தீனி கடைகள் முளைத்துவிட்டன.

போதாக்குறைக்கு, ஆன்லைன் மூலம் 'ஆர்டர்' செய்தால் தீனிகள் நம் கதவைத் தட்டுகின்றன. ஒத்தையடிப் பாதையில் கூட இன்று ஒய்யாரமாய் வந்து சேருகின்றன 'பார்சல்' தீனிகள்.

நினைத்தபோதெல்லாம் அவை நம் வயிற்றுக்குள் தள்ளப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அன்று செரிமான மண்டலத்திற்குப் போதுமான ஓய்வு கிடைத்தது; ஆனால் இன்று, நம் வயிறு ஓய்வில்லாமல் இயங்கும் இயந்திரமாக மாற்றப்பட்டுவிட்டது.

குப்பைத் தொட்டியாகும் வயிறு

நகராட்சி ஊழியர்கள் தெருவெங்கும் சிதறிக் கிடக்கும் பல்வேறு வகையான குப்பைகளையும் அள்ளிக் கொண்டு போய் ஒரு குப்பைத் தொட்டியில் கொட்டுவதைப் போல, நாமும் பலவண்ணப் பலகாரங்களையும், கண்ட கண்ட எண்ணெய்ப் பண்டங்களையும் நம் வயிற்றில் கொட்டுகிறோம். 

வயிறு என்பது நம் உயிரை இயக்கும் ஓர் உயரிய இடம் என்பதை மறந்து, அதை எதை வேண்டுமானாலும் கொட்டும் நகராட்சிக் குப்பைத் தொட்டியாக மாற்றிவிட்டோம்.

உழைப்பு குறைவு - உணவு அதிகம்: பேராபத்து

இந்தத் தீனி கலாச்சாரம் ஒருபுறம் இருக்க, நவீன இயந்திரமயமான உலகில் நம்முடைய உடல் உழைப்பு முற்றிலுமாகக் குறைந்து போய்விட்டது. அன்று வயலில் வேலை செய்வதும், நடந்தே பயணம் செய்வதும் இயல்பாக இருந்தது. ஆனால் இன்று அமர்ந்த இடத்திலேயே வேலை, பயணத்திற்கு வாகனம் என உடலுக்கான வேலைகள் பெருமளவில் குறைந்துவிட்டன.
போதிய உடற்பயிற்சியும் இல்லை; 

ஆனால் உள்ளே தள்ளும் உணவின் அளவு மட்டும் பலமடங்கு அதிகரித்துவிட்டது. உழைப்பின் மூலம் எரிக்கப்படாத இந்த உபரி கலோரிகள், காலப்போக்கில் உடலில் நஞ்சாக உருமாறி பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கின்றன.

நுகர்வோர் வெறியும் உடல்நலமும்

"எதையும் அனுபவித்துவிடு, சேர்த்து வைத்து என்ன செய்யப்போகிறாய்?" என்கிற நுகர்வு வெறியின் வெளிப்பாடாகவே இன்றைய ருசி மோகம் இருக்கிறது. வயிற்றில் இடம் இருக்கிறதோ இல்லையோ, நாவின் ருசிக்காக எதையும் உள்ளே தள்ளுகிறோம். வாரம் ஒருமுறை என்பது மாறி, அடிக்கடி இப்படித் தின்பதனால் உடல் எடை கூடாமல் என்ன செய்யும்? இதயம் பலவீனமடையாமல் என்ன செய்யும்?

அதிகப்படியான மசாலாக்களும், தரமற்ற எண்ணெய்களும் நம் உடலை மெல்ல மெல்லச் சிதைக்கின்றன. ருசி என்பது சில நிமிடங்களோடு முடிந்துவிடுவது, ஆனால் அதன் விளைவாக வரும் நோய்கள் வாழ்நாள் முழுக்க நம்மை வதைப்பவை.

முடிவுரை

உணவு என்பது உடல் உழைப்பின் போது இழந்த சக்தியை மீட்பதற்காகவும், இயல்பான உடல் வளர்ச்சிக்காகவும் மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, அதைச் சிதைக்கும் குப்பையாக மாறிவிடக் கூடாது. 

ருசிக்காக வாழ்வதை விடுத்து, உடல் நலனுக்காக உண்பதே அறிவுடைமை. "என் வயிறு குப்பைத் தொட்டியல்ல" என்கிற தெளிவு நமக்கு இருந்தால் மட்டுமே, நோயற்ற வாழ்வை நாம் பெற முடியும்.

பசி என்றால் என்னவென்று நீ உணராத வரை உன் வயிறு குப்பைத் தொட்டிதான்!

ஊரான்