Showing posts with label OBC. Show all posts
Showing posts with label OBC. Show all posts

Friday, 20 March 2026

EWS இடஒதுக்கீடு: SC, ST, OBC ஏழைகளுக்கு ஏன் இல்லை?

இந்தியாவில் இடஒதுக்கீடு என்பது கல்வி மற்றும் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசமைப்புச் சட்டப்படி வழங்கப்பட்ட ஒரு உரிமையாக இருந்து வந்தது. ஆனால், 'பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினர்' - “Economically Weaker Sections” (EWS) - என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட 10% இடஒதுக்கீடு, அந்த அடிப்படைத் தத்துவத்தையே மாற்றியமைத்துவிட்டது.

SC, ST, OBC என்கிற சமூகப் பின்னணியை அடிப்படையாகக் கொண்ட இடஒதுக்கீட்டு கொள்கைக்கு நடுவில், “பொருளாதார பலவீனம்” என்ற புதிய அளவுகோலைக் கொண்டு வந்து உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், நடைமுறையில் முற்பட்ட வகுப்பினருக்கான (OC) ஒரு பாதுகாப்புக் கவசமாகவே செயல்படுகிறது.

இது வெறும் அரசியல் வாதம் அல்ல; புள்ளிவிவரங்களே இதை வெளிப்படையாகச் சொல்லுகின்றன.

அதிர்ச்சியூட்டும் கட்-ஆஃப் தரவுகள் (2026)

சமீபத்தில் வெளியான அரசு நிறுவன ஆட்சேர்ப்பு (Artisan Recruitment) முடிவுகள் பல கேள்விகளை எழுப்புகின்றன. 120 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வில் வெளியான கட்-ஆஃப் மதிப்பெண்கள்:



BHEL,

• BAP Ranipet – Welder:
EWS கட்-ஆஃப் – 48.75
SC – 57.75
OBC – 55.50

• HPBP Trichy – Fitter:
EWS – 55.75
SC – 68.75
OBC – 73.25

இந்தத் தரவுகள் எதைக் காட்டுகின்றன?

EWS பிரிவில் குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அதே சமயம் அதிக மதிப்பெண் பெற்ற SC, ST, OBC இளைஞர்கள் கடுமையான போட்டியில் வாய்ப்பை இழக்கிறார்கள்.

நேற்றுவரை “தகுதி” மற்றும் “திறமை” பற்றி பேசிக் கொண்டிருந்தவர்கள், இன்று குறைந்த மதிப்பெண்களுடன் வாய்ப்புகளைப் பெறும் இந்த நிலைமை, அந்த வாதங்களையே கேள்விக்குறியாக்குகிறது.

சட்டச் சிக்கல்: சாதியைத் துறந்தாலும் விடுபட முடியாத கட்டமைப்பு

இங்கே ஒரு சிக்கலான கேள்வி எழுகிறது.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஒரு SC/ST/OBC இளைஞர், தனது சாதி அடையாளத்தைத் துறந்து ‘சாதியற்றவர்’ (No Caste) சான்றிதழ் பெற்றால் EWS இடஒதுக்கீட்டைப் பெற முடியுமா?

சட்டப்பூர்வமாக “இல்லை” என்பதே இதற்கான பதில்.

103-வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி, ஏற்கனவே SC, ST, OBC இடஒதுக்கீட்டிற்குள் வரும் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் EWS பிரிவுக்குத் தகுதியற்றவர்கள். ஒருவரிடம் “சாதியற்றவர்” என்ற சான்றிதழ் இருந்தாலும், அரசின் பார்வையில் அவரது பிறப்பு சார்ந்த சமூக அடையாளமே இடஒதுக்கீட்டுத் தகுதியை நிர்ணயிக்கும்.

இதனால், சாதியைத் துறக்க விரும்பும் ஒருவருக்குக்கூட அந்த சமூகப் பெட்டியிலிருந்து வெளியே வர சட்டம் அனுமதிக்கவில்லை.

நாம் எழுப்ப வேண்டிய அடிப்படை கேள்விகள்

இந்தச் சூழ்நிலை சில முக்கியமான முரண்பாடுகளை வெளிப்படுத்துகிறது.

1. பொருளாதார அளவுகோல் என்றால் அனைவருக்கும் ஏன் இல்லை?

EWS என்பது பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு என்றால், அதில் ஏன் சமூக அடையாள அடிப்படையில் விலக்கு இருக்க வேண்டும்?

2. ஏழை என்றால் ஏழைதானே?

₹8 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் பெறும் ஒரு SC/ST/OBC இளைஞன் ஏழை இல்லையா?

3. தகுதி என்ற வாதம் எங்கே போனது?

குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது, அதிக மதிப்பெண் பெற்றவர்கள் வெளியே தள்ளப்படுவது எந்த “தகுதி”க் கொள்கையை பிரதிபலிக்கிறது?

4. சாதி ஒழிப்பு எங்கே?

ஒருவர் சாதியையும் மதத்தையும் துறக்க முன்வந்தாலும் சட்டம் அவரை மீண்டும் அதே சாதிப் பெட்டிக்குள் அடைத்து வைப்பது, சாதி ஒழிப்பின் பாதையில் ஒரு பெரிய முரண்பாடு அல்லவா?

முடிவுரை

இன்றைய சட்ட அமைப்பில் SC, ST, OBC சமூகங்களைச் சேர்ந்தவர்கள் EWS பிரிவுக்குள் நுழைவது நடைமுறையில் சாத்தியமற்றது. ஆனால் இந்த நிலைமை ஒரு முக்கியமான உண்மையை வெளிப்படுத்துகிறது.

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதாக இருந்தால், அது அனைத்துச் சமூகங்களிலும் உள்ள ஏழைகளுக்கும் சமமாக இருக்க வேண்டும். இல்லையெனில் அது “பொருளாதார நீதியின்” பெயரில் உருவாக்கப்பட்ட ஒரு புதிய அநீதியாகவே மாறிவிடும்.

ஒரு காலத்தில் மண்டல் கமிஷனை எதிர்த்து நாடு முழுவதும் தீவிரமான அரசியல் போராட்டங்கள் நடைபெற்றன. இன்று EWS இடஒதுக்கீட்டின் முரண்பாடுகளை எதிர்த்து அறிவார்ந்த விவாதங்களும் அரசியல் எதிர்ப்புகளும் எழுவது தவிர்க்க முடியாத ஒன்றாகத் தோன்றுகிறது.

சமூகநீதி என்பது வெறும் கோரிக்கை மட்டுமல்ல; அது நடைமுறையில் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கும் அமைப்பாக இருக்க வேண்டும்.

ஊரான்

Monday, 16 December 2024

வகுப்புவாரியிலிருந்து சாதிவாரியை நோக்கி.. - 13

வகுப்புவாரியிலிருந்து சாதிவாரியை நோக்கி.. 

இந்தத் தொடரின் முதல் பகுதியில் குறிப்பிட்டதைப் போல, 

தமிழ் நாட்டில், அருந்ததியருக்குத் தனி உள் ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிரான பள்ளர், பறையர் சாதி மக்களின் கோபம், 

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து (MBC) வன்னியர்களுக்கு என தனி உள் ஒதுக்கீடு கோரிக்கைக்கு எதிரான மிகவும் பிற்படுத்தப்பட்ட பிற சாதி மக்களின் கோபம், 

மத்திய அரசுப் பணிகளில் பார்ப்பனர் உள்ளிட்ட உயர் சாதியினருக்கு வழங்கப்பட்ட தனி EWS ஒதுக்கீட்டுக்கு எதிரான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதி மக்களின் கோபம், 

மேலும்,

கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள பஞ்சமசாலி லிங்காயத்துகள் தங்களுக்குத் தனி ஒடுக்கீடு கோரி, 

மகாராஷ்டிராவில் மராத்தாக்களுக்குத் தனி ஒதுக்கீடு கோரி,

ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் ஜாட்டுகளுக்குத் தனி ஒதுக்கீடு கோரி,

என நாடெங்கிலும் ஒவ்வொரு சாதியினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 


தற்போது இந்தியாவில் உள்ள எல்லாச் சாதியினரும், வகுப்புவாரி அடிப்படையிலும், EWS  அடிப்படையிலும் இட ஒதுக்கீடு 
பெற்று வரும் சூழலில், எதற்காகத் தற்போது ஒவ்வொரு சாதியினரும் தங்களுக்கு எனத் தனி ஒதுக்கீடு கேட்டுப் போராடுகின்றனர்?

ஏற்கனவே நாம் குறிப்பிட்டதைப் போல கல்வியிலும் பொருளாதாரத்திலும் சமுதாய அளவிலும் சாதிகளுக்கிடையில் சமனற்ற நிலையே இன்றும் நீடிக்கிறது. 

எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் (MBC) உள்ள  கள்ளர், மறவர், வன்னியர் போன்ற சாதிகளோடு ஒப்பிடும் பொழுது நாவிதர், வண்ணார், குறவர், ஒட்டர் போன்ற சாதிகளின் கல்வி பொருளாதார சமூகநிலையும் சமமானதல்ல. இவர்கள் அனைவரையும் ஒரே தொகுப்பில் வைத்திருப்பதால், இந்தத் தொகுப்பிலேயே உள்ள மிகவும் கீழ்நிலையில் உள்ள நாவிதர், வண்ணார், குறவர், ஒட்டர் போன்ற சாதிகளுக்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கும். 

அதேபோல, மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (OBC) உள்ள கொங்கு வெள்ளாளர், நாயுடு, ரெட்டி, முதலியார், வன்னியர், கள்ளர், மறவர் போன்றச் சாதிகளின் கல்வி பொருளாதார சமூக நிலையும் சமமானதல்ல. கொங்கு வெள்ளாளர், முதலியார் ஆகியச் சாதிகளோடு ஒப்பிடும் போது வன்னியர்களுக்கான வாய்ப்பும்; நாயுடு, ரெட்டி போன்றச் சாதிகளோடு ஒப்பிடும் பொழுது கள்ளர், மறவர் சாதிகளுக்கான வாய்ப்பும் மிகவும் குறைவாகவே இருக்கும்.

பட்டியல் சாதி வகுப்பில் உள்ள பள்ளர், பறையர், அருந்ததியர் ஆகிய மூன்று சாதிகளும் கல்வி பொருளாதார சமூக நிலையில் சமமாக இல்லை. விகிதாச்சார அடிப்படையில் தங்களுக்கு உரிய பங்கைப் பட்டியல் வகுப்பிலிருந்து 
அருந்ததியர்களால் பெற முடிவில்லை. ஆகையால்தான் அவர்களுக்குத் தனி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

அருந்ததியர்கூட தனி ஒரு சாதி அல்ல. அதுவும் சில சாதிகளை உள்ளடக்கிய ஒரு வகுப்புதான் (Category). உள் ஒதுக்கீடு வந்த பிறகு, அருந்ததியர் சாதிகளுக்குள் இட ஒதுக்கீடு குறித்து இப்போதைக்குப் பிரச்சனை எதுவும் எழவில்லை என்றாலும் எதிர்காலத்தில் இவர்களுக்கிடையில்கூட, இட ஒதுக்கீடு தொடர்பாகப் பிரச்சனைகள் வரக்கூடும். 

அப்படியானால், வகுப்புவாரி விதாச்சாரப் பிரதிநிதித்துவ கோரிக்கை (Class based reservation) என்பது, சாதிவாரி விகிதாச்சாரப் பிரதிநிதித்துவக் கோரிக்கையாக
(Caste based reservation) உருவெடுத்து வருகிறதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

அலுவலகங்களில் நிலவும் சாதிய முரண்கள் குறித்து அடுத்து பார்ப்போம். 

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்
















Thursday, 5 December 2024

பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீடு: அம்பேத்கர் துரோகம் இழைத்தாரா? - 5

சென்னை மாகாணத்தில்,   ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் முதல் 
பிற்படுத்தப்பட்டோருக்கு
கல்வியிலும் இருந்து வந்த இட ஒதுக்கீட்டை, ஒழித்துக்கட்ட பார்ப்பனர்கள் தருணம் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த 1950 ஆம் ஆண்டில்அடுத்த சில மாதங்களிலேயே பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வியில் இருந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, அதில் வெற்றியும் பெற்றனர். உச்சநீதிமன்றமும் பார்ப்பனர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பை உறுதி செய்தது

இந்தத் தீர்ப்புக்கு எதிராகப் பெரியார் முன்னெடுத்த போராட்டத்தின் விளைவாக, இந்திய அரசமைப்புச் சட்டம் முதன் முறையாக திருத்தப்பட்டு, விதி 15(4) உட்பிரிவின் கீழ் சென்னை மாகாணத்தில் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வியில் இருந்து வந்த
இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.

அம்பேத்கர்

ஆதிதிராவிட மக்களுக்கு 1943 இல் அம்பேத்கர் பெற்றுத் தந்த இட ஒதுக்கீடு, இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 16(4) இன் கீழ் உறுதி செய்யப்பட்டதால், விடுதலைக்குப் பிறகும் அவர்களுக்கான இட ஒதுக்கீடு மத்திய அரசுப் பணிகளில் தொடர்ந்தது. 1935 இல் தாழ்த்தப்பட்டவர்களுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்தாலும் அரசமைப்புச் சட்டம் 16(4) இல் கூறப்பட்டுள்ள "எந்த ஒரு பிற்பட்ட வகுப்பும்" (any backward class) என்பதை அடிப்படையாகக் கொண்டு, மீண்டும் 1951 இல் தாழ்த்தப்பட்டோருக்கான பட்டியலும் (SC) பழங்குடியினருக்கான (ST) பட்டியலும் தயாரிக்கப்பட்டு இட ஒதுக்கீடு முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது

அப்படியானால் தனது சாதி மக்களுக்கு மட்டும் இட ஒதுக்கீட்டை உறுதி செய்து கொண்டு, இதர பிற்பத்தப்பட்ட மக்களுக்கு (OBC) அம்பேத்கர் துரோகம் இழைத்து விட்டாரா? அப்படித்தானே OBC பிரிவு மக்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. இது உண்மையா? 

"எந்த ஒரு பிற்பட்ட வகுப்பு" என்பதில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி பிரிவினர் அடங்குவர். இவர்களுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்ட பிறகுதான் அது SC / ST என்று அறியப்பட்டு வருகிறது. இவர்களைத் தவிர, சமுதாயத்திலும் கல்வியிலும் பின்தங்கியவர்கள் யாருமே இல்லையா? இருக்கிறார்கள் அவர்கள்தான் இன்று இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவினர் என்று அழைக்கப்படும் OBC (Other Backward Class) மக்கள். 

இந்தச் சட்டப்பிரிவிலேயேஇதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்குமான இட ஒதுக்கீட்டையும் அம்பேத்கர் உறுதி செய்திருக்கிறார். இதன் அடிப்படையில் இவர்கள் யார் யார் என்பதைக் கண்டறிய 1953 இல் அமைக்கப்பட்ட காகா கலேல்கர் தலைமையிலான "முதலாவது பிற்படுத்தப்பட்டோர் குழுவின்" அறிக்கையை  பரிசீலனைக்கே எடுத்துக் கொள்ளாமல், 25 ஆண்டுகள் கிடப்பில் போட்டது காங்கிரஸ் அரசு. கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எந்த ஒரு அரசியல் கட்சியும் இது குறித்து கவலைப்பட்டதாகவும் 
தெரியவில்லை

1976-77 இல் தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி நிலவிய போது, கல்வியில் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வரும் சூழ்நிலை ஏற்பட்ட போது, இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கக் கோரி 1978 இல் பிரதமர் இந்திரா காந்திக்கு ஆனைமுத்து அவர்கள் கடிதம் எழுதினார்

பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஏற்கனவே இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உரிமை வழங்கப்பட்டிருக்கும் பொழுது, பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை பாதுகாக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும் என்று தானும் தவறாகப் புரிந்து கொண்டதாகவும், இப்புரிதல் பிழையானது என்றும் ஆனைமுத்து அவர்கள் பதிவு செய்கிறார்

அரசமைப்புச் சட்டம் மூலம் பிற்படுத்தப்பட்டோருக்கு 
அம்பேத்கர் வழங்கிய 
இடஒதுக்கீட்டு உரிமையை அமல்படுத்த ஆட்சியாளர்களும் முன்வரவில்லை; அதைச் சரியாகப் புரிந்து கொண்டு
நடைமுறைப் படுத்தக்கோரி அரசியல்  கட்சிகளும், பிற்படுத்தப்பட்டோர் இயக்கங்களும் கோரவில்லை என்பதுதான் வரலாற்று உண்மை

பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான உரிமையை அரசமைப்புச் சட்டத்திலேயே வழங்கிய அம்பேத்கர் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரானவராகச் சித்தரிக்கப்படுகிறார். ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது என்று செயல்பட்டு வந்த / செயல்பட்டு வரும் அரசியல்வாதிகளை (அன்று காங்கிரசைச் சார்ந்த பலரும் இன்று பாஜகவை சேர்ந்த பலரும் இதில் அடங்குவர்) தங்களது தலைவர்களாக பிற்படுத்தப்பட்ட மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர். இது ஒரு நகை முரண். 

மத்திய மாநில அரசுகளில் பிற்பட்டோருக்கு 60% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஏற்ப அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று, நாடாளுமன்றத்தில் பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு உறுப்பினர்கள், 1978 இல் தனிநபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்திருந்த விவரம் ஆனைமுத்து அவர்களின் பார்வைக்கு வந்தபிறகு, இட ஒதுக்கீடு குறித்த விவரங்களை ஆய்வு செய்து, அறிக்கை தயாரித்து, டெல்லி சென்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், பிரதமர் இந்திரா காந்தி, குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி ஆகியோரைச் சந்தித்து, கோரிக்கை மனுவை நேரில் கொடுத்து பிற்படுத்தப்பட்டோருக்கு 
அரசமைப்புச் சட்டப்படி உள்ள இடஒதுக்கீடு உரிமை குறித்து விவாதிக்கிறார்

காகா கலேல்கர் குழு பரிந்துரையை அமல்படுத்துவோம் என்று 1977 தேர்தலில் ஜனதா கட்சி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி, 1978 மார்ச்சில் பீகாரில் பெருங்கிளர்ச்சி தொடங்கப்பட்டிருந்தது

1978 இல் பீகாரின் 32 மாவட்டங்களில் பெரியார் நூற்றாண்டு விழாக் கூட்டங்களில் பங்கேற்று, பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார் ஆனைமுத்து. பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பீகாரில் 1978 அக்டோபரில் நடைபெற்ற பாட்னா சிறை நிறப்புப் போராட்டத்தில் பத்தாயிரம் பேர் சிறைப்பட்டனர்

கலேல்கர் பரிந்துரையை அமல்படுத்தக் கோரி ஆனைமுத்து அவர்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதியபோது, அந்தப் பரிந்துரை 20 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்று நிராகரித்து விட்டார் பிரதமர் மொரார்ஜி தேசாய்

1978 இறுதியில் பீகாரில் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்தது பீகார் அரசு. அதை எதிர்த்து உயர் சாதியினர் செய்த கிளர்ச்சி நிலவிய சூழலில், கலேல்கர் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்குப் பதிலாக, கோரிக்கையை திசை திருப்பும் நோக்கில், இரண்டாவது பிற்பட்டோர் குழுவை, 1978 டிசம்பரில் மொராஜி தேசாய் அமைத்தார். அதுவே மண்டல் குழுவானது

அடுத்து என்ன நடந்தது?

தொடரும் 

ஊரான்

Tuesday, 28 October 2014

தொடப்பக் கட்டையும் தூய்மை இந்தியாவும்!



விரைந்து செல்லும் வாகனங்களால் சட்டெனப் பறந்து மறையும் இலைச் சரகுகள் அக்டோபர் 2 அன்று மட்டும் எப்பொழுதும் தூய்மையாக காணப்படும் டெல்லி பாராளுமன்ற வளாக சாலைகளிலும், சென்னையின் ராஜ்பவன் சாலைகளிலும் அகல மறுத்து அடம் பிடித்தன. காய்ந்த பின் உதிரவேண்டிய பச்சை இலைகள்கூட அன்று சரகாய் மாறி சாலைகளை அலங்கறித்தன. மோடியின் துடைப்பம் மயிலிரகாய் சரகுகளை இதமாய் வருடியபோது “ஆனந்த யாழை மீட்டுகிறாய்” என முணுமுணுத்தவாறு ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி மெய்சிலிர்த்து குதூகலித்தன சரகுகள்.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தி,  மக்களிடம் கொள்ளை நோயை உண்டு பண்ணும் பாலிதின் பைகளும், பிளாஸ்டிக் பாட்டில்களும், ஆலைகளின் இரசாயணக் கழிவுகளும், ஊராட்சி - நகராட்சிகளின் கக்கூசு – சாக்கடைக் கழிவுகளும் மலை மலையாய்க் குவிந்து கோபுரம் கட்டி வாழும் போது அவைகளைச் சீண்டுவதற்கு திராணி இன்றி, செடி - கொடி - மரங்களுக்கு எருவாய், பயிர்களுக்கு உரமாய், ஏன் எதிர்கால சந்ததிக்கு நிலக்கறியாய் மாறி பன்முகப் பயன்பாட்டைத் தரும் தம்மை, ஏன் இவர்கள் ஊர்கூடி ஒழிக்க நினைக்கிறார்கள் என்கிற ஐயம் மட்டும் சரகுகளுக்குள் எழுந்த வண்ணம் இருந்தன.

வீட்டுக் குப்பையைக் கூட்டுவதற்கே வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ளும் கோமான்களும் சீமாட்டிகளும் தெருவைக்குகூட்ட துடைப்பம் ஏந்தி  “வாருங்கள்! பாரதத்தை தூய்மைப்படுத்துவோம்!” என வானதியாய்-லட்சுமியாய் வடிவெடுத்து மெரினாவை மென்மையாய் வருடுவதைப் பார்க்கும் போது இவர்கள் “சொல்வதெல்லாம் உண்மை” தானா என்கிற ஐயம் உயிரற்ற சரக்குகளுக்கே எழும் போது ஆறறிவு படைத்த மனிதனுக்கு மட்டும் எழாதா என்ன?

இந்த பேஷன் ஷோ பெரேடில் ஒய்யாரம் காட்ட தேச பக்தர்கள் துடைப்பக் கட்டையோடு பூங்காக்களை மொய்க்கிறார்கள்; பீச்சுகளை மேய்கிறார்கள். வேலூர் கோட்டைப் பூங்காவில்  வி.ஐ.டி யின் இளவலும், ஐதராபாத் சினிமா ஸ்டுடியோவில் சிரஞ்சீவியும் இதில் முந்திக் கொண்டனர்.

இதே நிலை நீடித்து பேஷன் ஷோவில் எதிர்க்கட்சிக்காரன் பரிசு பெற்றுவிட்டால் அது முதலுக்கே மோசம் என்பதால் இது குறித்து நடுவண் அரசின் அமைச்சரவை உடனடியாகக்கூடி ஆலோசித்ததாம். குப்பை கூட்டுபவர்களுக்கு படிப்பறிவும் போதாது; திறமையும் போதாது எனவே குறைந்த பட்ச கல்வித்தகுதியுடைய திறமையானவர்களைக் கொண்டு குப்பை கூட்டினால் மட்டுமே இந்தியாவைத் தூய்மைப்படுத்த முடியும் என முடிவெடுத்து குப்பை மேலாண்மை குறித்த படிப்பை பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப் பள்ளிக் கல்வி அளவில் அறிமுகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். சி.பி.எஸ்.சி பள்ளிகளிலும் இந்தப்பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுமாம்.

மேல்நிலைப் பள்ளிக் கல்வி அளவில் ஒவ்வொரு சாதியிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு மதிப்பெண் சான்றிதழ் பெறும் போதே வேலையில் சேருவதற்கான ஆணையும் கையோடு வழங்கப்படுமாம். பாரத தேசத்தை குப்பையற்ற தேசமாக மாற்றும் வல்லமை 60 லட்சம் இளைஞர்களின் கையில்தான் இருக்கிறது என ராஜ்நாத் சிங் கண்டறிந்துள்ளதால்தான் இந்த வேலையை இளைஞர்கள் கையில் ஒப்படைப்பதோடு அதைக் கட்டாயப் பணியாகவும் அறிவித்துள்ளார்களாம். மீறுவோர் நாடற்றவர்கள்களாக அறிவிக்கப்பட்டு பாரதத்தை விட்டே விரட்டப்படுவார்களாம்.

இந்த வேலை வாய்ப்பில் திறமைக்கு மட்டுமே முன்னுரிமை என நடுவண் அரசு அறிவித்த போது அதற்கு இதர பிற்பட்ட வகுப்பினரிமிருந்து (OBC) கடுமையான எதிர்ப்பு கிளம்பியதாலும் குப்பை கூட்டும் இந்தப் பணி புனிதமானது என்பதாலும் விகிதாச்சார அடிப்படையில் அனைத்து சாதியினருக்கும் வேலை வாய்ப்புகள்  பகிர்ந்து அளிக்கப்படும் என நடுவண் அரசு தெளிவு படுத்தி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றனவாம். அனைத்து சாதிகளிலும் உள்ள பெண்களுக்கும் இந்த வேலை வாய்ப்பில் 50 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. மேலும் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள ஒருவர்  இந்த வேலை வாய்ப்பினை பெறுவதற்கு ஏற்ப சுழற்சி முறையும் கடைபிடிக்கப்படுமாம். இளைஞர்கள் இல்லாத குடும்பங்களிலிருந்தும் ஒருவர் கட்டாயமாக இந்தப் பணியை செய்ய வேண்டுமாம். அவர்கள் பிற பணிகளில் இருந்தாலும்கூட டெப்புடேஷனில் வந்து இப்பணியை மேற்கொள்ள வேண்டுமாம்.

தெருவோர சாக்கடைகளை சுத்தம் செய்தல், ஊராட்சி – நகராட்சி, ரயில் நிலைய – பேருந்து நிலைய கழிவறைகளை கழுவுதல், பாதாள சாக்கடை கழிவு நீர்த்தொட்டிகளில் மூழ்கி அடைப்புகளை அகற்றுதல் போன்ற வேலைகளைச் செய்ய தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மூன்று மாதம் முறையான பயிற்சி அளிக்கப்படுமாம். ஓராண்டு வேலை செய்த பிறகு இவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்களாம். இவர்கள் விட்டுச் சென்ற பிறகு, இப்பணியை தொடர மேற்கண்டவாறு புதியவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்களாம்.