Showing posts with label #பெண்ணியம் #சமூகநீதி #பெண்கள்உரிமை #வாழ்வியல் #ஆணாதிக்கம் #WomenEmpowerment #TamilBlogger #SocialJustice. Show all posts
Showing posts with label #பெண்ணியம் #சமூகநீதி #பெண்கள்உரிமை #வாழ்வியல் #ஆணாதிக்கம் #WomenEmpowerment #TamilBlogger #SocialJustice. Show all posts

Monday, 13 April 2026

அடுப்பங்கரை என்ன கர்ப்பக்கிருகமா?

இன்று கைபேசிகளில் எப்படி கார்ட்டூன் படங்கள் சிறுவர்களை ஈர்க்கின்றனவோ, அது போல ஒரு காலத்தில் தினத்தந்தியின் சிந்துபாத் கதை. தலைமுறைகளைக் கடந்தும் லைலாவுக்காக சிந்துபாத்தின் சாகசங்கள் இன்றும் முடிவே இல்லாமல் தொடர்கின்றன. 

கைபேசியின் கார்ட்டூன் படங்களுக்கு, கண்ணும் காதும் இருந்தால் மட்டும் போதும். ஆனால் சிந்துபாத்துக்கு நாலு எழுத்து கூட்டிப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.


பள்ளிப் பருவ காலங்களில் மேல்பாலூர் சங்கரன் டீக்கடையில் தினத்தந்தி இரண்டாம் பக்கத்தைப் புரட்டாமல் இல்லம் திரும்பினால்,  லைலாவுக்கு என்ன ஆனதோ என்ற ஏக்கத்தில் அன்றைய இரவுத் தூக்கம் சற்று எட்டியே நிற்கும்.

காலையில் மொடமொடப்போடு வரும் தினத்தந்தி பகல் முழுக்க முரட்டுக் கைகளால் புரட்டப்பட்டு ஒவ்வொரு எழுத்தும் அலசப்படுவதால், மாலையில் அது சலசலத்து நைந்து போயிருக்கும். மறுநாள் அவை போண்டாக்களின் அம்மணத்தை மறைக்கும் ஆடைகளாய் மாறியிருக்கும். 

ஊருக்கு ஒரு டீக்கடை இருந்தால் போதும்,  உள்ளூர் கிசுகிசு முதல் உலக நடப்பு வரை அத்தனையையும் அசைபோட வைக்கும். 

இல்லங்களில் ‘தினமணி’யும் இளைஞர்களின் கைகளில் ‘த இந்து’ (THE HINDU) ஆங்கில நாளேடு தஞ்சமடைவதும், பெட்டிக்கடைகளில் வார மாத நாளேடுகள் சரஞ்சரமாய் தொங்குவதும், பேருந்துப் பயணங்களின் போது அவைகளைப் புரட்டுவதும் கடந்த கால நினைவலைகள். 

அறிவு ஜீவியாய் அடையாளப்படுத்திக் கொள்ள நாளேடுகளின் நடுப்பக்கக் கட்டுரைகளும், கல்லூரிக் காலங்களில் என்னதான் பாடங்களை ஆங்கில வழியில் படித்தாலும், நாட்டு நடப்புகளை ‘த இந்து’ நாளேட்டில் வாசிக்கும் போது சில சொற்களுக்கு பொருள் புரியவில்லை என்றாலும் ஆங்கிலத்தை அனாயசமாக எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்ற தருணங்களும் தன்னம்பிக்கையின் தடயங்களே.

ஆனால் இன்று டீக்கடைகளில் பெஞ்சுகள் இல்லை, வீடுகளில் நாளேடுகள் இல்லை, இளைஞர்களின் கைகளில் ‘த இந்து’வும் இல்லை. இருப்பது ஒன்றே ஒன்றுதான் கைபேசி. 

வாட்ஸப்பின் குறுஞ்செய்திகளிலும், அரை நிமிட ரீல்ஸ் வீடியோக்களிலும், AI யின் வேகத்தில் பயணிக்க விரும்புவதால்  ‘ஆஃப் பாயில்களாக’ நாம் ஆகிவிட்டோமோ என அஞ்ச வேண்டியுள்ளது. 

இதற்குமேலும் இதை நீட்டித்தால் நம் விரல்கள் அனிச்சையாக மேலே நகர்ந்துவிடும் என்பதால் மீதியை நாளை பார்ப்போம். 

தொடரும்

ஊரான்