Wednesday, 26 August 2026

பேரிடர்!

இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன ஊர்பக்கம் சென்று. இன்று காலையில் எழுந்து கொல்லைப்பக்கம் சென்றேன். இதற்கு முன்னர் வந்தபோதெல்லாம் குதூகலத்துடன் என்னை வரவேற்ற செடிகளும் மரங்களும், இம்முறை சோகத்துடன் காட்சியளித்தன.

இலைகளின் பசுமை நிறத்திற்கேற்ப வனப்புடன் காட்சியளிக்கும் வாழை மரங்களும் அதன் கன்றுகளும் இம்முறை, உணவின்றி எலும்பும் தோலுமாய் காட்சியளிக்கும் எத்தியோப்பிய மனிதர்களைப் போல நிற்கின்றன. அனேகமாக எல்லா மரங்களின் இலைகளும் கருகி, மட்டைகள் வளைந்து நெளிந்து கிடந்தன. சில அடியோடு சாய்ந்து காய்ந்தும் விழுந்திருந்தன.

"அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு வளர்ந்து நின்ற மூத்த பையன் வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டான்; இனி கவலையில்லை, கைநிறைய பலன் கிடைக்கும்" என எண்ணிய குடும்பத்தாருக்கு, மகன் கால் உடைந்து விழுந்து கிடப்பதைப் பார்க்கும்போது ஏற்படும் சோகத்தைப் போல... பழுத்துக் கனியாகும் நிலையில் ஒரு வாழை தன் குலையோடு ஒடிந்து விழுந்து கிடந்ததைப் பார்த்தபோது சோகம் நெஞ்சை அப்பிக்கொண்டது.

குலை சாய்ந்த வாழை

உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அலங்கோலமாய்க் கிடந்த வாழை இலைச் சருகுகளைக் கழித்துவிட்டுப் பார்த்தபோது, வயிறு ஒட்டிக்கிடக்கும் ஏழைச் சிறுவனின் தலையில் தாறுமாறாக வளர்ந்திருந்த முடியை நேர்த்தியாகக் 'கிராப்' வெட்டி விட்டதைப் போலத் தோன்றியது.

அரிதினும் அரிதாக வளர்க்கப்பட்ட ஒரு செவ்வாழை, சென்றமுறை வந்தபோது ஓங்கி வளர்ந்து வனப்புடன் இருந்தது. இம்முறை நீரின்றி அதன் அடிச்சுவடுகூட இல்லாமல் அழிந்துபோயிருந்தது.

அப்படியே அடுத்த இடம் நோக்கி நகர்ந்து பார்த்தபோது, சிவப்புக் கொய்யாச் செடி காய்ந்து கிடந்தது. குடும்பத்தில் எல்லோரும் கருப்பாய் இருக்கும்போது சிவப்பாய் ஒரு பெண்பிள்ளை பிறந்துவிட்டால் அதை 'பாப்பாத்தி' என்று செல்லமாய் அழைப்பதுபோல, இந்தச் செடியை நெஞ்சோடு அணைத்து வளர்த்தோம். இன்று அந்தச் 'சிவப்புக் கொய்யா பாப்பாத்தி' எம்மோடு இல்லை.

அப்படியே அடுத்த கொல்லைக்குச் சென்றேன். பிள்ளைகள் காக்கிறார்களோ இல்லையோ, நாலு 'தென்னம்பிள்ளைகள்' இருந்தால் வயிறாவது குளிரும் என்பதனால்தானோ என்னவோ அதற்குத் 'தென்னம்பிள்ளை' என்று பெயர் வைத்திருப்பார்கள் போல! வயிறைக் குளிர வைக்கும் மூன்று தென்னம்பிள்ளைகள் நீரின்றி மாண்டுபோனது சோகத்தின் எல்லை!

அதை அடுத்து அப்படியே நகர்ந்தபோது, மூன்று மாஞ்செடிகள் காய்ந்து கிடந்தன. "மாதா ஊட்டாத சோற்றை மாம்பழம் ஊட்டும்" என்பார்கள். காய்ந்து கிடந்த மாஞ்செடிகளைப் பார்த்தபோது, ஏதோ பெற்ற மாதாவையே இழந்தது போன்றதொரு சோகம் கவ்வியது.

"பப்பாளி இருந்தால் உடல் நலனுக்குப் பயமில்லை" என்பார்கள். பப்பாளி தருவதோ இரும்புச் சத்து. ஆனால், அதன் இலை அமைப்போ பஞ்சு போன்றது. சற்று வேகமாக கை பட்டாலே அதன் இலைகளும் காம்புகளும் பட்டென உடைந்து விழும். ஐம்பதுக்கும் மேற்பட்ட செடிகளில் ஒன்றிரண்டு செடிகளே வளர்த்தவனுக்கு நன்றிக்கடன் செலுத்த இன்றைக்குத் தாக்குப்பிடித்து நிற்கின்றன.

பிள்ளை இல்லாமல் இருப்பது ஒரு தனிச் சோகம். ஆனால், பெற்று வளர்த்துப் பேணிக்காத்த பிள்ளை பாதியிலேயே மாண்டுபோனால் எழும் சோகம் அதைவிடக் கொடியது!

எனினும், வலுவாக வேர்பிடித்த சில மாஞ்செடிகளும் தென்னைகளும் "எதுவரினும் எதிர்கொள்வோம்" என அழுத்தமாகக் காலூன்றி நிற்கும் இளங்காளைகளை நினைவூட்டின.

வாழ்க்கையில் வரவுகள் மட்டுமல்ல, இழப்புகளும் இருக்கும். இருப்பதைக் காப்பதே பெரும் போராட்டமாக மாறிவிட்ட இக்காலகட்டத்தில், மனிதர்களே திண்டாடும்போது பாவம் மழையின்றி வாடும் வாயில்லா மரம், செடி, கொடிகள் என்னதான் செய்யும்?

மனிதர்களுக்கே நீர் எட்டாத போது, செடி கொடிகளுக்கு நீர் ஊற்ற யார்தான் முன்வருவர்?

இலையில் ஒட்டியிருக்கும் சோற்றுப் பருக்கைகளை நம்பி உயிர்வாழும் ஏதுமற்றோரைப் போல... இந்த மரங்களுக்குக் களனித் தண்ணியை ஊற்றியிருந்தாலாவது சில செடிகள் பிழைத்திருக்குமோ?

புயல், பெருவெள்ளம் மட்டும் பேரிடர் அல்ல! மழை இல்லா கோடை வறட்சியும் ஒரு பேரிடர்தான்!

ஊரான்

தொடர்புடைய பதிவு
படங்கள்

குலை சாய்ந்த வாழை

அலங்கோலத்தில் வாழை

'கிராப்பு' வெட்டிய பிறகு வாழை

பலன் தரும் பருவத்தில் மௌனமான செவ்வாழை

நீரின்றி மாண்டுபோன தென்னம் பிள்ளை 


எம்மை விட்டுப் பிரிந்த 'பாப்பாத்திக்' கொய்யா

பரிதாப நிலையில் பப்பாளி

மரணித்துவிட்ட 'மாதா' மா

எஞ்சி நிற்கும் பப்பாளி




2 comments:

Anonymous said...

உண்மையிலும் ஏ பார்க்க பார்க்க வாசிக்க எங்களுக்கே தாக்கமாக வேதனை அளிக்கிறது.
முன்பு செழுமையாக பகிர்ந்த படங்கள் அருமையாக ஆனந்தமாக இருந்தது.

Anonymous said...

எத்தியோப்பிய ஒப்பிடும் , வயிறு ஒட்டிய, அலங்கோலத் தலை சிறுவன் உவமையும் சிறப்பு.

சோகத்திலும் கவித்துவம்.

கருத்துகளுக்குள் ஒரு கருத்து இருப்பது எத்தனை பேருக்கு தெரியும். உங்களுடன் நெருக்கமானவர்களை தவிர