பூணூல்
பார்ப்பனியப் பழக்கவழக்கங்கள் ஆண் பெண் இருபாலருக்கும் சிறு வயது
முதலே பார்ப்பனக் குடும்பங்களில் புகுத்தப்பட்டு வருகிறது. பார்ப்பனிய ஆண்
குழந்தைகளுக்கு நடத்தப்படும் பூணூல் கல்யாணம் அவர்களது வாழ்க்கையில் மிக
முக்கியமானது. பூணூல் அணிவது ஏதோ அவர்களது சொந்த விவகாரம் என்று கருதிவிட
முடியாது. தனது பெயருக்குப் பின்னால் ஒருவன் தனது சாதிப் பெயரை சேர்த்துக்
கொள்வதன் மூலம் எப்படி தனது சாதிப் பெருமையை பறைசாற்றிக் கொள்கிற அதே வேளையில்
தனக்குக்கீழே ஒருவன் இருக்கிறான் என்று கருதிக் கொள்கிறானோ அதைப் போல பூணூல்
போட்டுக் கொள்வதன் மூலம் மற்றெல்லோரையும்விட தானே உயர்ந்தவன் என்பதை பறை சாற்றிக்
கொள்கிறான் ஒரு பார்ப்பனன்.
பூணூல் போட்டுக் கொண்டிருப்பவனை உயர்ந்தவனாக சமூகம் கருதுவதால்தான்
பார்ப்பனரல்லாத செட்டியார் முதல் விஸ்வகர்மா வரை பலரும் பூணூல் அணிந்து கொண்டு
தங்களை மேன்மையானவர்களாக காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். அதனால்தான் ஒரு சில
கருத்த சூத்திரர்கள்கூட பூணூல் அணிந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இது
பார்ப்பனியமயமாதலின் ஒரு வகைப்பாடு. வரைமுறையின்றி எல்லோரும் பூணூலை அணிந்து
கொண்டுவிட்டால் எங்கே தங்களுக்கான மரியாதை கிடைக்காமல் போய்விடுமோ என்பதால்,
தங்களைத் தவிர வேறுசாதியினர் யாரும் பூணூல் அணியக்கூடாது என விஸ்வகர்மாக்களுக்கு
எதிராக நீதிமன்றம்வரை சென்று பார்ப்பனர்கள் போராடியிருக்கிறார்கள். ஏனோ அவர்களால்
அதில் வெற்றி பெறமுடியவில்லை. என்னதான் முயற்சி செய்தாலும் ஒரு பார்ப்பனனின் வெள்ளை
மேனியில் உள்ள பூணூல் அழுக்கேறி கருத்திருந்தாலும் அதற்குரிய மரியாதை கருமேனியில்
பளிச்செனத் தெரியும் விஸ்வகர்மாவின் பூணூலுக்குக் கிடைப்பதில்லை.
இடஒதுக்கீடும் திறமையும்!
இப்படியாக வளர்க்கப்படும் பார்ப்பனர்கள் கல்வி, வேலைவாயப்பு, பதவி
உயர்வு என வரும் போது இட ஒதுக்கீட்டு முறையால் தாங்கள் வஞ்சிக்கப்படுவதாகக்
குமுறுகிறார்கள். இட ஒதுக்கீட்டினால் திறமையற்றவர்கள் பதவிக்கு வந்துவிடுவதால்
நாட்டின் வளர்ச்சி வெகுவாகப் பாதிக்கப்படுவதாகக் கூக்குரலிடுகிறார்கள்.
இடஒதுக்கீடு வருவதற்கு முன்னர் இவர்கள் மட்டுமே அரசின் அனைத்துப் பதவிகளையும்
ஆக்கிரமித்திருந்த போது பாலாறும் தேனாறும் ஓடியதைப்போல ஒப்பாரி வைக்கிறார்கள்.
இவர்கள் அரசின் பெரும்பான்மையான பதவிகளை ஆக்கிரமித்திருந்தபோது இன்றைய பாலாறு
போலத்தான் இருந்தது அன்றைய மக்களின் வாழ்வும் என்பதுதானே வரலாற்று உண்மை!
திறமை அடிப்படையில் பொதுப்பிரிவில் வேலைக்கு வந்தவர்களிலும்,
இடஒதுக்கீட்டின் மூலம் வேலைக்கு வந்தவர்களிலும் திறமைசாலிகளும் இருக்கிறார்கள்;
மொக்கைகளும் இருக்கிறார்கள். அரசு அலுவலகங்களில் ஒருவனின் திறமையை பெரும்பாலும்
கையூட்டுகளே தீர்மானிக்கின்ற இன்றைய காலகட்டத்தில் எவன் மொக்கை? எவன் திறமைசாலி?
என்பதைக் கண்டறிவது அவ்வளவு சுலபமானதல்ல. பதவி உயர்வுகளும் இவர்களின் திறமையை
தீர்மானிக்கிற மற்றொரு முக்கிய காரணியாகவும் இருக்கிறது. கல்வித் தகுதி ஒன்றுதான்
இங்கே வேலையில் நுழைவதற்கான தகுதியாக வரையறுக்கப்படுகிறது. அது மட்டுமே வேலையை உத்தரவாதம்
செய்துவிடுவதில்லை. சத்துணவு ஆயா முதல் ஐ.ஏ.எஸ்/ஐ.பி.எஸ் வரை பொதுப்பிரிவு –
இடஒதுக்கீடு அது எதுவாக இருந்தாலும் வேலையை உத்தரவாதம் செய்வது இலட்சங்களும்
கோடிகளுமாய் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் திறமை பற்றிப் பேசுவது
பொருளற்றதாகிவிட்டது.
இட ஒதுக்கீட்டின் மூலம் வேலைக்கு வந்தவர்களை – பிற்படுத்தப்பட்டவர்
முதல் தாழ்த்தப்பட்டவர் வரை - ‘கோட்டா’ என கிண்டல் செய்கின்றனர் பார்ப்பனர்கள். அதே
‘கோட்டாவில்’ வேலைக்கு வந்த பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களைப்
பார்த்தும் ‘கோட்டா’ எனக் கிண்டல் செய்கின்றனர். இத்தகைய மனோநிலை தீண்டாமை மற்றும்
ஆதிக்க மனப்பான்மையின் ஒரு வகை வெளிப்பாடேயன்றி வேறென்னவாக இருக்க முடியும்?
இதுதான் பார்ப்பனியத்தின் நீட்சியோ?.
தொடரும்......
தொடர்புடைய பதிவுகள்
பார்ப்பனியம் பிறவிக் குணமா? ... பகுதி-1