Showing posts with label பூணூல். Show all posts
Showing posts with label பூணூல். Show all posts

Tuesday, 11 June 2024

பூணூல் கல்யாணம் ஆண்களுக்கு மட்டும் ஏன்?

வாட்ஸ்அப் குழுவில்...

கேள்வி: 

பூணூல் கல்யாணம் ஆண்களுக்கு மட்டும் எதற்காக செய்யப்படுகிறது என்ற கேள்வி எனக்கு நீண்ட காலமாக உள்ளது. தெரிந்தவர்கள்  விளக்கினால் நன்றி பாராட்டுவேன்.

பதில்:

இந்து மதத்தின் கோட்பாட்டு நூலான மனுதர்ம சாஸ்திரத்தில் பிறப்பின் அடிப்படையில் மனிதர்கள் நான்கு வருணங்களாக பகுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. 

முதல் மூன்று வருணங்களான பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகிய வருணங்களைச் சார்ந்த ஆண்கள் பூணூல் அணிய உரிமை உண்டு. சூத்திரர்களுக்கு இந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

எந்த வருணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களும் சூத்திரர்களே என்கிறது மனுதர்ம சாஸ்திரம். எனவே பெண்களுக்கு பூணூல் அணியும் உரிமை கிடையாது.

முதல் மூன்று வருணத்தார் இருபிறப்பாளர்கள் (துவிஜர்கள்). உபநயநம் என்று சொல்லக்கூடிய பூணூல் அணியும் நிகழ்ச்சி நடப்பது என்பது இரண்டாவது பிறப்பாக கருதப்படுகிறது. உபநயநம் செய்து கொண்டால்தான் அவன் அந்த வருணத்துக்குரியவன் ஆகிறான். உபநயநம் செய்து கொள்ளவில்லை என்றால் அவன் சூத்திர நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவான். சூத்திரர்களுக்கு இரண்டாவது பிறப்பு கிடையாது. பெண்களுக்கும் கிடையாது.

இந்தப் பூணூல் அணிவதில்கூட கூட மூன்று வருணத்தாருக்கிடையில் பல்வேறு வேறுபாடுகள் உண்டு.

இந்து மத சாஸ்திரப்படி தற்போது நடைபெறும் காலம் கலியுகம். கலியுகத்தில் பிராமணர்கள் சூத்திரர்கள் என்ற இரண்டு வருணங்கள் மட்டுமே உண்டு. எனவே, இன்றைய காலகட்டத்தில் சத்திரியர்கள், வைசியர்கள் ஆகிய வருணங்கள் கிடையாது என்பதாலும், இருக்கின்ற இரண்டு வருணங்களில் சூத்திரர்களுக்கு பூணூல் அணியும் உரிமை கிடையாது என்பதனாலும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே இந்த உரிமை உண்டு. 
பூணூல் அணிய உரிமை கேட்டு விஸ்வகர்மாக்கள் போராடிய சமீபத்திய வரலாறுகளும்  உண்டு. 

மனுதர்ம சாஸ்திரத்தை முழுமையாகப் படித்து உள்வாங்கிக் கொள்வதும், அதில் உள்ள பல்வேறு அம்சங்கள் எப்படி நடைமுறையில் இன்றும் தொடர்கிறது என்பது குறித்தப் புரிதலை ஏற்படுத்திக் கொள்வதும், பார்ப்பனியம் மேலாதிக்கத்தில் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானது.

விரிவஞ்சி நான் மிகச் சுருக்கமாக சொல்லி இருக்கிறேன். நான் சொல்லி உள்ள எல்லாவற்றிற்கும் மனுதர்மத்தில் ஆதாரங்கள் இருக்கிறது.

ஊரான்

Wednesday, 13 September 2023

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-3

வருணங்களில் சனாதனம்

வருண-சாதியக் கட்டமைப்பு, தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் மற்றும் உயர்வு-தாழ்வைப் போதித்து கடைபிடிக்கும் பார்ப்பன மேலாதிக்கம் ஆகிய இவைதான் சனாதனத்தின் மிக முக்கியமான நான்கு தூண்கள். அதனால், இது குறித்து இனி விரிவாகப் பார்ப்போம்.

வருணங்களின் உருவாக்கம்

நான்கு வருணங்களையும் நானே படைத்தேன் என்கிறான் பகவத் கீதையில் கிருஷ்ணன் (கீதை 4:13), அதன்படி,

பிரம்மனின் தலையிலிருந்து பிறந்தவர்கள் பிராமணர்கள், தோளிலிருந்து பிறந்தவர்கள் சத்திரியர்கள், தொடையிலிருந்து பிறந்தவர்கள் வைசியர்கள், பாதத்திலிருந்து பிறந்தவர்கள் சூத்திரர்கள் என்றும், அந்த நான்கு வருணங்களைக் குறிப்பிடுகிறான் மனு. (மனு 1:31).

தூய்மைக்கு பார்ப்பனர்கள், வீரத்திற்கு சத்திரியர்கள், தானத்திற்கு வைசியர்கள், சேவை செய்வதற்கு சூத்திரர்கள் என்று அவர்களுக்கான குணங்களையும் வகுத்ததோடு,

பிராமணர்கள் வேதங்களை ஓதவும், சத்திரியர்கள் நாட்டையும் மக்களையும் காக்கவும், வைசியர்கள் வியாபாரம் மற்றும் விவசாயம் செய்யவும், சூத்திரர்கள் மேலே உள்ள மூன்று வருணத்தாருக்குப் பணிவிடை செய்யவும் வேண்டுமென அவர்களுக்கான தொழிலையும் இறுதி செய்கிறான் மனு. (மனு 1: 88-91)

அவரவர் தொழிலை, அவரவர் தனித்தனியாக செய்ய வேண்டும் என்றும், ஒருவர் தொழிலில் மற்றவர்கள் ஈடுபடக்கூடாது என்றும் முன் நிபந்தனை விதிக்கிறான் மனு (மனு 1: 87)

வேதங்கள் மற்றும் ஸ்மிருதிகளில் சொல்லப்பட்டுள்ள எல்லா தருமங்களும், ஒழுக்கங்களும், இந்த மனுதரும சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன (மனு 1: 101, 102). இந்த தருமங்களைக் கடைபிடித்தால் சொர்க்கத்தை அடைய முடியும் என்கிறான் மனு (மனு 2: 9)

பெயர் சூட்டல்

பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் போது அது மூன்று பகுதிகளாக இருக்க வேண்டும் எனவும், அவ்வாறு பெயரிடும் போது, பிராமணன் பெயர் மங்களகரத்தைக் குறிப்பதாகத் தொடங்கி இறுதியில் சர்மா எனவும், சத்திரியன் பெயர் நலத்தைக் குறிக்கும் வகையிலான தொடங்கி வர்மா எனவும், வைசியன் பெயர் செல்வத்தைக் குறிக்கும் வகையில் தொடங்கி பதி எனவும், சூத்திரன் பெயர் தாழ்வைக் குறிக்கும் வகையில் தொடங்கி தாசன் எனவும் முடிய வேண்டும் என கட்டளையிடுகிறான். (மனு: 2: 31, 32)

சங்கர் தயாள் சர்மாவும், ராம் கோபால் வர்மாவும், குமுத் பல்லவ் பதியும், சித்த ரஞ்சன் தாசும் இன்றளவும் இருப்பதற்குக் காரணம் மனு இன்றும் உயிரோடு இருக்கிறான் என்பதைத்தானே காட்டுகிறது!

ஆனால், பெண்கள் இத்தகையப் பெயர்களை சூட்டிக் கொள்ள முடியாது. மாறாக, பெண்களின் பெயர்கள் சுகமாக கூப்பிடத்தக்கதாயும், கொடுமை இல்லாததாயும், அர்த்தமுள்ளதாயும், மங்களமாயும் ஆசீர்வாதத்தைக் கொடுக்கிறதாயும் இருக்க வேண்டும் என்கிறான் மனு. (மனு 2:33) அதாவது நெடில் எழுத்துகளில் (long vowels: a, e, I, o, u) முடிய வேண்டும் என்பதைத்தான் இப்படிச் சொல்லுகிறான். தெரிந்தோ தெரியாமலோ இன்றும்கூட, இந்துப் பெண்களின் பெயர்கள் பெரும்பாலும் இப்படித்தான் வைக்கப்படுகின்றன.

பூணூல் கல்யாணம்

என்னதான் முதல் மூன்று வருணத்தார் தலையிலும் தோளிலும் தொடையிலும் பிறந்தாலும், அவர்கள் மீண்டும் ஒருமுறை (துவிஜர்கள்-இருபிறப்பாளர்கள்)  பிறந்தால்தான் அவர்களை மனிதர்களாகக் கருத முடியும் என்பதால்,

பிராமணர்கள் 8 வயதில் பஞ்சு நூலாலும், சத்திரியர்கள் 11 வயதில் சனப்பை நூலாலும், வைசியர்கள் 12 வயதில் வெள்ளாட்டு மயிரினால் ஆன நூலாலும் பூணூல் அணிய வேண்டும் என்கிறான் (மனு 2: 36, 44).

பூணூல் அணியவில்லை என்றால் அவர்களை சாதி விலக்கம் செய்து அவர்களை விராத்திய ஜாதி என்று சொல்லி  வருணத்திற்கு வெளியே விரட்டுகிறான் மனு (மனு 2: 39). சாதி விலக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள, இன்றும் கூட, இந்தியா முழுக்க பார்ப்பன குடும்பங்களிலும் தங்களை  சத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் என்று கருதிக் கொள்பவர்கள் வீடுகளிலும் பூணூல் கல்யாணம் நடந்து கொண்டுதானே இருக்கிறது. 

இரு பிறப்பாளர்கள் உயர்ந்தவர்கள் (மனு 2-169) என்றும், சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும் (மனு 2-66) பூணூல் அணிகிற உரிமை கிடையாது என்பதனால் அவர்கள் இழிவானவர்களாகக் கருதப்படுகிறார்கள். 

பூணூல் அணிவது ஒரு வருணத்திற்கான அடையாளம் அல்ல, மாறாக அது தாங்கள் உயர்ந்தவர்கள் என்பதை காட்டிக் கொள்வதற்கான அடையாளம் என்று மகாத்மா காந்தி பூணூல் அணிவதைச் சாடுகிறார்.

திருமணம்

அவரவர், அவரவர் வருணத்திலேயே, தந்தையின் அனுமதியைப் பெற்று திருமணம் செய்து கொள்ள வேண்டும். (மனு 3-11, 12).

ஏராளமான பார்ப்பன வீட்டுப் பெண்கள் மற்ற சாதிப் பையன்களை திருமணம் செய்து கொள்வதை இன்று அதிகமாகக் காண முடிகிறது. அதனால்தான் பிராமணப் பெண்கள் மற்ற சாதிப் பையன்களை திருமணம் செய்து கொள்ளக் கூடாது; பிராமணப் பையன்களைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பார்ப்பனர்கள் கதருகிறார்கள். 

ஆணவப் படுகொலை

கீழ் சாதிப் பையன்கள், மேல் சாதிப் பெண்களை திருமணம் செய்து கொள்வதும் அதிகரித்து வருவதால், மற்ற சாதிகளிலும் இத்தகையக் கதரல்களைக் காணமுடிகிறது. மீறி திருமணம் செய்வோரை, ஒன்று சாதி விலக்கம் செய்வது, இல்லை என்றால் நாயக்கன் கொட்டாய் இளவரசனைப் (திவ்யா) போல, உடுமலை சங்கரைப் (கௌசல்யா) போல  படுகொலை செய்வது சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது.

இதுபோன்று வருணக் கலப்பு மற்றும் சாதிக் கலப்புத் திருமணங்கள் நடைபெறுவதால், திருமணங்களை எட்டாக வகைப்படுத்தி அதில் சிலவற்றை இழிவானத் திருமணங்கள் என முத்திரை குத்துகிறான் மனு (மனு 3: 21, 41).

வருணக் கலப்பில் பிறந்த வாரிசுகளை, புதிய சாதிகளாக எப்படி வகைப்படுத்துகிறான் மனு என்பதை அடுத்து பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Monday, 3 February 2020

காந்தியும் பூணூலும்!

ஒருமுறை காந்தி கங்கையில் நீராடிவிட்டு வரும்பொழுது அவர் தலையில் உச்சிக்குடுமியும் உடம்பில் பூணூலும் இல்லாததைப் பார்த்து “இந்து தர்மத்தில் நம்பிக்கை உள்ள நீங்கள் பூணூல் அணியாமலும் உச்சியில் குடுமி இல்லாமலும் இருப்பதைக் காண என் மனம் வேதனைப்படுகிறது. இவை இரண்டும் இந்து தர்மத்தின் புறச் சின்னங்கள், ஒவ்வொரு இந்துவுக்கும் அவை இருந்தாக வேண்டும்” என்று ஒரு சன்னியாசி கேள்வி எழுப்புகிறார்.

முதல் மூன்று வருணத்தாரும் பூணூல் அணிய வேண்டியது அவசியம் என்று வற்புறுத்தும் இயக்கம் ஒன்று அப்பொழுதுதான் ஆரம்பமாகி இருந்தது. இதன் காரணமாக காந்தி சாதியைச் சேர்ந்த பலர் பூணூல் போட்டுக் கொண்டனர்.
“சூத்திரர்கள் பூணூல் போட்டுக் கொள்ளக்கூடாது என்றால் மற்றவர் இனத்துக்கு மாத்திரம் அதை போட்டுக் கொள்வதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று விவாதித்தேன். பூணூல் போட்டுக் கொள்வது அநாவசியமான பழக்கம் என்பது என் கருத்து. ஆகையால் அதை அணிய வேண்டும் என்பதற்குப் போதுமான நியாயம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.”

“இந்து சமயத்திலிருந்து தீண்டாமை ஒழிந்து, உயர்வு தாழ்வு என்ற பேதங்கள் எல்லாம் போய் அதில் இப்பொழுது மலிந்து கிடக்கும் பலவிதமான தீமைகளும் விஷயங்களும் நீங்கிய பிறகு இந்துக்களுக்கு அந்த உரிமை ஏற்பட முடியும். ஆகையால் பூணூல் போட்டுக் கொள்வது என்ற கருத்தையே என் மனம் வெறுக்கிறது.”

“அந்தச் சின்னமே பிரமாதமாக்கப்பட்டு இன்னொரு மதத்தை விட தன் மதமே உயர்வானது என்று காட்டுவதற்கு அது பயன்படுத்தப்படுமாயின் அப்போது அச்சின்னம் புறக்கணிக்கப்படுவதற்கே ஏற்றதாகும். இந்து சமயத்தை மேம்படுத்துவதற்கான சாதனமாகப் பூணூல் இன்று எனக்குத் தோன்றவில்லை.”

ஆம்! ஒருவன் பூணூல் அணிந்து கொள்வது, தான் மற்றவர்களைவிட உயர்ந்தவன் என்பதற்கான அடையாளம்தானே தவிர, வேறு ஒன்றும் இல்லை. தனது பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை ஒட்ட வைத்துக் கொள்வதும் இத்தகைய குணாம்சம் உடையதே! எனவே, பூணூல் அணிந்து கொள்வதும், பெயருக்குப் பின்னால் சாதியை சேர்த்துக் கொள்வதும் வேறு வேறு அல்ல.

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை என்ற நூலிலிருந்து.

ஊரான்

Saturday, 25 April 2015

நாம் நம்மைப் பற்றி எப்போது பேசப் போகிறோம்?

கடந்த பத்து மாதங்களாக பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் முதல் சமூக வலைதளங்கள் வரை நாம் எதைப் பற்றி அதிமாகப் பேசிக் கொண்டிருக்கிறோம்?

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு பற்றிப் பேசுகிறோமா? 

நோக்கியா போன்ற ஆலைகள் மூடப்பட்டு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ வழியின்றி நடுத்தெருவில் நிற்கிறார்களே! அது பற்றி பேசுகிறோமா?

ஆலை விபத்துகளால் ஆன்றாடம் பலியாகும் தொழிலாளர்கள் பற்றி பேசுகிறோமா?

படித்த இளைஞர்கள் வேலை தேடி அலையும் அவலம் பற்றி பேசுகிறோமா?

பெருகி வரும் கல்விக் கட்டணங்கள் பற்றி பேசுகிறோமா?

அதிகரித்து வரும் நோய்கள் பற்றியோ அதற்கான மருத்துவச் வசதிகள் மற்றும் செலவு குறித்தோ பேசுகிறோமா?

ஒருபக்கம் கடும் வறட்சி! குடிநீருக்கே மக்கள் அல்லல்படும் துயரமான சூழலில். காலிக் குடங்களுடன் ஆங்காங்கே தாய்மார்களின் போராட்டம் நடக்கிறதே! அதைப்பற்றி பேசுகிறோமா?

பருவம் தவறி பெய்த மழையால் வடஇந்திய மாநிலங்களில் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதாரம் குறித்து பேசுகிறோமா?

பெரும் கடன் சுமையில் சிக்கி மீளமுடியாமல் தொடரும் விவசாயிகளின் தற்கொலைகள் பற்றி பேசுகிறோமா?

பருவ காலத்தில்கூட மழை பொய்த்து விடுகிறது. ஆனால் தமிழக வீதிகளில் எப்பொழுதும் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும் சாராயம் பற்றியோ, இந்தச் சாராயத்தால் அன்றாடம் தாய்மார்களின் தாலி அறுக்கப்படுவது பற்றியோ பேசுகிறோமா?

வாழ்வாதாரத்திக்காகப் போராடும் மக்கள் மீது ஏவப்படும் காவல்துறையின் அடக்குமுறைகள் பற்றி பேசுகிறோமா? 

இப்படி மக்கள் அன்றாடம் சந்திக்கும் பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சனைகள் பற்றி பேசாமல்..........

கோட்சே பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்

பகவத் கீதையைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்

சமஸ்கிருதம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்

மாட்டிறைச்சி பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்
.
கிருஸ்தவ தேவாலயங்கள் மீதான தாக்குதல் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.

மசூதிகள் ஆன்மீகத் தலங்கள் இல்லை என்பதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.

இந்துப் பெண்கள் குறைந்தது நான்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.

தாலி பற்றியும் பூணூல் பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறோம்.

மக்களின் நலன் புறம்தள்ளப்பட்டு பார்ப்பனர்களின் நலனை மட்டும் முன்னெடுக்கும் தற்போதைய இந்துத்துவவாதிகளின் ஆட்சி தொடருகிறவரை நாம் இப்படித்தான் பேசிக் கொண்டிருப்போம்!

Sunday, 9 June 2013

பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... இறுதிப் பகுதி


பாடலில் பொருள் இல்லை என்றாலும் ஒரு சில பாடகர்களின் பாடலை கேட்டுக் கொண்டே இருக்கலாம் எனத் தோன்றும். அந்த அளவிற்கு அவர்களின் குரல் வளம் அனைவரையும் ஈர்க்கக் கூடியதாக இருக்கும். சிறந்த குரல் வளம் உள்ள பாடகர்களை பிறவிப் பாடகர்கள் என்று சொல்வதை நாம் கேள்விப்படத்தானே செய்கிறோம். அவ்வாறு சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. பயிற்சியின் மூலம் இசை நுணுக்கங்களை கற்றுக் கொண்டாலும், குரல் வளம் சரியாக அமையவில்லை என்றால் ஒரு சிலரின் பாடல்கள் நம்மை ஈர்ப்பதில்லை. இசை நுணுக்கங்களை தெரிந்து கொள்ளாமல் சிறந்த குரல் வளத்தைக் கொண்டிருந்தாலும் ஒருவர் சிறந்த பாடகர் ஆகிவிட முடியாது. அதற்கு இசை நுணுக்கங்கள் குறித்த அறிவும், பயிற்சியும் தேவை. ஒரு சிலரின் குரல் வளம் சிறப்பாக இருப்பதற்கு மிக முக்கியக் காரணம் பிறவியிலேயே அவர்களுக்கு அமைந்திருக்கும் குரல்வளை அதிர்வு நாளங்கள்தான் (vocal chord).

குரல்வளை அதிர்வு நாளங்கள் சரியாக அமையாததால்தான் ஒரு சில ஆண்கள் பெண்களைப் போன்ற குரல் அமைப்பையும், ஒரு சில பெண்கள் ஆண்களைப் போன்ற குரல் அமைப்பையும் கொண்டிருக்கின்றனர். பெண்களின் குரல் மெண்மையானதாகவும், ஆண்களின் குரல் தடிமனானதாகவும் நமக்கு பதிவாகிவிட்டதால்தான் மாறுபட்ட குரல் அமைப்பைக் கொண்டோரை நாம் பரிகாசத்தோடு பார்க்கிறோம். பெண்களின் குரல் அமைப்பு ஆண்களிடமும், ஆண்களின் குரல் அமைப்பு பெண்களிடமும் இருந்திருந்தால் அதையும் ஏற்றுக் கொண்டுதான் இருப்போம்.

இப்படி பிறப்பால் தீர்மானிக்கப்படுகின்ற பல்வேறு அம்சங்களை உடல் கட்டமைவு சார்ந்த கூறுகளாகக் கொள்ளலாம். இவைகள் சாதி – மதங்களுக்கு அப்பாற்பட்டு பொதுவாக அமைகின்ற அம்சங்களாகும்.

சாதி - மதம் சார்ந்த அடையாளங்களும் பண்புகளும்

ஒரு மனிதன் தனது வளர்ச்சிப் போக்கில் சாதி – மதம் உள்ளிட்டு தான் சந்திக்கின்ற பல்வேறு விசயங்கள் குறித்து, பல்வேறு விதமான பண்புக் கூறுகளை தனதாக்கிக் கொள்கிறான். அதற்கேற்றவாறு சில புறத் தோற்ற அடையாளங்களையும் ஒருவன் ஏற்படுத்திக் கொள்கிறான்.

பூணூல், குடுமி, பஞ்சகச்சம், மடிசார் புடவை போற்ற அடையாளங்கள் ஐயர் – ஐயங்கார் உள்ளிட்ட பார்ப்பனர்களின் அடையாளங்களாகவும்; இடப்புற சேலை மாராப்பு இடையர் குலப் பெண்களின் அடையாளமாகவும் இன்றளவும் நீடிக்கின்றன. இத்தகைய அடையாளங்கள் ஒருவன் தான் சார்ந்திருக்கின்ற சாதி மற்றும் மதத்தைப் பொருத்து மாறுபடுகின்றன. அவன் தன்னை இவ்வாறு அமையாளப்படுத்திக் கொள்வதில் பெருமை கொள்ளும் மனநிலையையும் வளர்த்துக் கொள்கிறான்.

இந்து மத ஆண்கள் நெற்றியில் விபூதி, குங்குமம் வைத்துக் கொள்வதும் பெண்கள் பூவும், பொட்டும், தாலியுமாக இருப்பதும் இந்து மத அடையாளங்களாக தொடர்கின்றன. இதில் ஆண்கள் முன்ன – பின்ன இருந்தாலும் பெண்களின் அடையாளங்கள் அவசியம் என அன்றாடம் உணர்த்தப்படுகிறது. இவற்றை மீறுவது பெண்மைக்கு அழகல்ல என்கிற மனநிலைக்கு மக்கள் ஆட்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

தான் பழகுகிற மனிதர்கள், படிக்கிற நூல்கள், பார்க்கிற சம்பவங்கள் மூலம் பெறக்கூடிய கருத்துக்களை சுயபரிசீலனை செய்வதன் மூலம் ஒரு சிலர் சாதி – மத வட்டத்திற்கு புறம்பான அல்லது நேர் எதிரான சில பண்புகளை வளர்த்துக் கொள்வதும் உண்டு. இத்தகையவர்களே பகுத்தறிவாளர்களாக - சீர்திருத்தவாதிகளாக அறியப்படுகிறார்கள். மற்றபடி ஆகப் பெரும்பான்மையினர் தாங்கள் சார்ந்திருக்கிற சாதி மற்றும் மத வட்டத்திற்கு ஏற்புடைய பண்புகளையே கொண்டிருக்கின்றனர்.

மனம் சார்ந்த தனி மனிதப் பண்புகள்

மேலும் ஒவ்வொருவனும் சுயேச்சையான சில தனி மனிதப் பண்புகளையும் கொண்டிருக்கிறான்.இவைதான் ஒருவனை மற்றவனிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட உதவுகின்றன.

சாதி - மதம் சார்ந்த பண்புகளில் ஒன்றுபட்டிருக்கும் அதே வேளையில் தனிமனிதப் பண்புகளில் வேறுபட்டே காணப்படுகின்றனர்.

சமூகத்தில் நிலவும் அரசியல் – பொருளாதார – பண்பாட்டுச் சூழலுக்கு ஏற்பவும், ஈடுபடும் தொழிலுக்கு ஏற்பவும் ஒவ்வொரு தனிமனிதனும் சில தனி மனிதக் குணங்களை வளர்த்துக் கொள்கிறான்.

இது கோபக்காரர்கள் நிறைந்த உலகம். ஒருவர் மீது ஒருவர் வெறுப்பு காட்டாமல் வாழ்வதென்பது அரிதாகிவிட்டது. இந்த வெறுப்பு தனி மனிதன் சார்ந்த வெறுப்பாகவோ அல்லது சாதிமதம்இனம்தேசம் சார்ந்த வெறுப்பாகவோ இருக்கிறது.

இருட்டில் இருக்கப் பயம், தனியாக இருக்கப் பயம், விலங்குகளைக் கண்டு பயம், பறவைகளைக் கண்டு பயம், மரணத்தைக் கண்டு பயம், நோயை நினைத்தால் பயம், தண்ணீரைப் பார்த்தால் பயம், வேலையைக் கண்டு பயம் என பலர் பயபீதியிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

எதிலும் நாட்டமின்றி வேண்டா வெறுப்பாக நடந்து கொள்வதும், எதற்கெடுத்தாலும் எரிச்சலடைவதும், சிடுசிடுப்பாக நடந்து கொள்வதும், எளிதில் சீற்றமடைவதும், முரட்டுத்தனமாய் இருப்பதும், பிறர் மீது பொறாமை கொள்வதுமாய் பலர் இருப்பதையும் நாம் காண்கிறோம்.

பக்திப் பரவசமாய் இருப்போரும், காமக் குரோதத்துடன் நடந்து கொள்வோரும் நம்மைச் சுற்றிதான் வாழ்கின்றனர்.

படு கஞ்சத்தனமும், சுயநலமும் நம்மைச் சுற்றிதான் உலவுகின்றன.

வாயடிப்போரும், பேசா மடந்தைகளும், நாணுவோரும், அழுமூஞ்சிகளும் நம் அக்கம் பக்கத்தில்தான் வாழ்கின்றனர்.

ஒருவன் தனது வாழ்க்கையின் போக்கில்தான் இத்தகைய மனம் சார்ந்த குணங்களை (mind symptoms) வளர்த்துக் கொள்கிறான்.

அதுபோலத்தான் காதல், வாடகை வீடு, கோவில் வழிபாடு, பொதுக்குழாய் – கிணற்று நீர் போன்றவற்றில் கடைபிடிக்கப்படும் சாதித் தீண்டாமை, உணவு – மொழித் தீண்டாமை, பூணூல் உள்ளிட்ட சாதி மத அடையாளங்களை அணிந்து கொள்வதிலும் தனது பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை போட்டுக் கொள்வதிலும் பெருமிதமடைதல், அடக்கி ஆள வேண்டும் என்கிற ஜனநாயகத்திற்கு எதிரான ஆதிக்க மனநிலை, இடஒதுக்கீடு போன்ற சலுகைகள் மீதான காழ்ப்புணர்ச்சி, ஜாதகம் – ஜோதிடத்தின் மீதான நம்பிக்கை, சடங்குகள் – சம்பிரதாயங்களை கடைபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு விதமான பார்ப்பனிய பண்புகளையும், குணங்களையும் ஒருவன் வளர்த்துக் கொள்கிறான்.

எனது பார்ப்பனத் தோழி ஐந்து வயதிலிலேயே மாமியானது இப்படித்தான்? அவள் முதல் வகுப்பைத் தாண்டும் போதே பார்ப்பனியத்தை கைப்பற்றிக் கொள்கிறாள். இப்படித்தான் ஒவ்வொரு சாதியைச் சார்ந்த மற்றும் மதத்தைச் சார்ந்த குழந்தைகளும் அந்தந்த சாதி, மதத்திற்கான குணங்களை வளர்த்துக் கொள்கின்றனர். சாதிகளும், மதங்களும் நிறுவனங்களாய் அதாவது அமைப்புகளாய் இருப்பதனால் அத்தகைய அமைப்புகளுக்குள் ஒருவர் இருக்கும் வரை அதன் பண்புகளையும் குணங்களையும்தான் கொண்டிருக்க முடியும்.

எங்க லேங்வேஜ கிண்டல் பண்றீங்காளா? இரு எங்கப்பாகிட்ட சொல்றேன்?” என கோபத்தோடு எழுந்து சென்ற போதுஅடியேய்! எங்கள பார்க்க வருவீயாடி?” என எனது துணைவியார் கேட்ட போதுஎங்க மாமா வீட்டுக்கு எப்பவாவது வருவோம். அப்படி வரும்போது நேரம் கெடச்சா, ஆண்ட்டி! உங்கள மட்டும்தான் வந்து பார்ப்பேன். இந்த அங்க்கிள கண்டிப்பா பார்க்க மாட்டேன்என்று சொன்னவள் மீண்டும் வருவாள்; அவள் மடிசார் மாமியானது பற்றி புரிய வைக்க!

எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே...

முற்றும்.
நன்றி!
ஊரான்

தொடர்புடைய பதிவுகள்


Saturday, 27 April 2013

பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 4


பூணூல்

பார்ப்பனியப் பழக்கவழக்கங்கள் ஆண் பெண் இருபாலருக்கும் சிறு வயது முதலே பார்ப்பனக் குடும்பங்களில் புகுத்தப்பட்டு வருகிறது. பார்ப்பனிய ஆண் குழந்தைகளுக்கு நடத்தப்படும் பூணூல் கல்யாணம் அவர்களது வாழ்க்கையில் மிக முக்கியமானது. பூணூல் அணிவது ஏதோ அவர்களது சொந்த விவகாரம் என்று கருதிவிட முடியாது. தனது பெயருக்குப் பின்னால் ஒருவன் தனது சாதிப் பெயரை சேர்த்துக் கொள்வதன் மூலம் எப்படி தனது சாதிப் பெருமையை பறைசாற்றிக் கொள்கிற அதே வேளையில் தனக்குக்கீழே ஒருவன் இருக்கிறான் என்று கருதிக் கொள்கிறானோ அதைப் போல பூணூல் போட்டுக் கொள்வதன் மூலம் மற்றெல்லோரையும்விட தானே உயர்ந்தவன் என்பதை பறை சாற்றிக் கொள்கிறான் ஒரு பார்ப்பனன்.

பூணூல் போட்டுக் கொண்டிருப்பவனை உயர்ந்தவனாக சமூகம்  கருதுவதால்தான் பார்ப்பனரல்லாத செட்டியார் முதல் விஸ்வகர்மா வரை பலரும் பூணூல் அணிந்து கொண்டு தங்களை மேன்மையானவர்களாக காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். அதனால்தான்  ஒரு சில கருத்த சூத்திரர்கள்கூட பூணூல் அணிந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இது பார்ப்பனியமயமாதலின் ஒரு வகைப்பாடு. வரைமுறையின்றி எல்லோரும் பூணூலை அணிந்து கொண்டுவிட்டால் எங்கே தங்களுக்கான மரியாதை கிடைக்காமல் போய்விடுமோ என்பதால், தங்களைத் தவிர வேறுசாதியினர் யாரும் பூணூல் அணியக்கூடாது என விஸ்வகர்மாக்களுக்கு எதிராக நீதிமன்றம்வரை சென்று பார்ப்பனர்கள் போராடியிருக்கிறார்கள். ஏனோ அவர்களால் அதில் வெற்றி பெறமுடியவில்லை. என்னதான் முயற்சி செய்தாலும் ஒரு பார்ப்பனனின் வெள்ளை மேனியில் உள்ள பூணூல் அழுக்கேறி கருத்திருந்தாலும் அதற்குரிய மரியாதை கருமேனியில் பளிச்செனத் தெரியும் விஸ்வகர்மாவின் பூணூலுக்குக் கிடைப்பதில்லை.

இடஒதுக்கீடும் திறமையும்!

இப்படியாக வளர்க்கப்படும் பார்ப்பனர்கள் கல்வி, வேலைவாயப்பு, பதவி உயர்வு என வரும் போது இட ஒதுக்கீட்டு முறையால் தாங்கள் வஞ்சிக்கப்படுவதாகக் குமுறுகிறார்கள். இட ஒதுக்கீட்டினால் திறமையற்றவர்கள் பதவிக்கு வந்துவிடுவதால் நாட்டின் வளர்ச்சி வெகுவாகப் பாதிக்கப்படுவதாகக் கூக்குரலிடுகிறார்கள். இடஒதுக்கீடு வருவதற்கு முன்னர் இவர்கள் மட்டுமே அரசின் அனைத்துப் பதவிகளையும் ஆக்கிரமித்திருந்த போது பாலாறும் தேனாறும் ஓடியதைப்போல ஒப்பாரி வைக்கிறார்கள். இவர்கள் அரசின் பெரும்பான்மையான பதவிகளை ஆக்கிரமித்திருந்தபோது இன்றைய பாலாறு போலத்தான் இருந்தது அன்றைய மக்களின் வாழ்வும் என்பதுதானே வரலாற்று உண்மை!

திறமை அடிப்படையில் பொதுப்பிரிவில் வேலைக்கு வந்தவர்களிலும், இடஒதுக்கீட்டின் மூலம் வேலைக்கு வந்தவர்களிலும் திறமைசாலிகளும் இருக்கிறார்கள்; மொக்கைகளும் இருக்கிறார்கள். அரசு அலுவலகங்களில் ஒருவனின் திறமையை பெரும்பாலும் கையூட்டுகளே தீர்மானிக்கின்ற இன்றைய காலகட்டத்தில் எவன் மொக்கை? எவன் திறமைசாலி? என்பதைக் கண்டறிவது அவ்வளவு சுலபமானதல்ல. பதவி உயர்வுகளும் இவர்களின் திறமையை தீர்மானிக்கிற மற்றொரு முக்கிய காரணியாகவும் இருக்கிறது. கல்வித் தகுதி ஒன்றுதான் இங்கே வேலையில் நுழைவதற்கான தகுதியாக வரையறுக்கப்படுகிறது. அது மட்டுமே வேலையை உத்தரவாதம் செய்துவிடுவதில்லை. சத்துணவு ஆயா முதல் ஐ.ஏ.எஸ்/ஐ.பி.எஸ் வரை பொதுப்பிரிவு – இடஒதுக்கீடு அது எதுவாக இருந்தாலும் வேலையை உத்தரவாதம் செய்வது இலட்சங்களும் கோடிகளுமாய் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் திறமை பற்றிப் பேசுவது பொருளற்றதாகிவிட்டது.

இட ஒதுக்கீட்டின் மூலம் வேலைக்கு வந்தவர்களை – பிற்படுத்தப்பட்டவர் முதல் தாழ்த்தப்பட்டவர் வரை - ‘கோட்டா’ என கிண்டல் செய்கின்றனர் பார்ப்பனர்கள். அதே ‘கோட்டாவில்’ வேலைக்கு வந்த பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களைப் பார்த்தும் ‘கோட்டா’ எனக் கிண்டல் செய்கின்றனர். இத்தகைய மனோநிலை தீண்டாமை மற்றும் ஆதிக்க மனப்பான்மையின் ஒரு வகை வெளிப்பாடேயன்றி வேறென்னவாக இருக்க முடியும்? இதுதான் பார்ப்பனியத்தின் நீட்சியோ?.

தொடரும்......


தொடர்புடைய பதிவுகள்