Showing posts with label நித்யானந்தா. Show all posts
Showing posts with label நித்யானந்தா. Show all posts

Thursday, 19 October 2023

பங்காரு அடிகளார் மரணம்: உணர்த்தும் பாடம் என்ன?

"1980 களில் மேல் மருவத்தூர் 'அம்மா' பிரபலமானபோது, இவரைத் தூக்கி நிறுத்தியவர்கள் வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் அவரது சாதியைச் சேர்ந்த வன்னிய சமூகத்தினர்."

2011 ஆண்டு, பிப்ரவரி மாதம் சாமியார்கள் குறித்த எனது கட்டுரையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டேன்.

தற்போது பங்காரு அடிகளார் மறைந்து விட்ட நிலையில், அரசு மரியாதையோடு அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளதால் அவரது மறைவு குறித்து பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
பங்காரு அடிகளார்

ஒரு நபர் சமூகத்தில் பிரபலமடைந்துவிட்டால், அவரது கடந்த காலத்தையும் மறந்து, அவரது தொழில் இரகசியத்தையும் கண்டு கொள்ளாமல் கடந்து செல்ல மக்கள் பழகிக் கொண்டு விட்டார்கள். தொடக்க காலத்தில் கொலைக் குற்றசாட்டுக்கு ஆளான பங்காருவும் இதில் அடக்கம். 

பெண்கள் சூத்திரர்களுக்கு ஒப்பானவர்கள், மாதவிடாய் பெண்கள் தீட்டுக்குரியவர்கள் என்று எந்த சனாதன இந்து மதம் பெண்களை இழிவுபடுத்தி ஓரங்கட்டியதோ, அதே இந்துப் பெண்களை நேரடியாக பூஜை செய்வதற்கு அனுமதித்ததன் மூலம் பங்காரு அடிகளார் இந்து மதத்தில் ஒரு 'புரட்சியை' ஏற்படுத்தினார் என்பதனால் அவரை ஏன் ஆதரிக்கத் கூடாது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. பங்காரு அடிகளாருக்கு முன்பிருந்தே எண்ணற்ற குல தெய்வங்களுக்கு பெண்கள் பூஜை செய்வது நடந்து கொண்டுதான் இருந்தது; தொடர்ந்து நடக்கவும் செய்கிறது.

மக்களின் உளவியலைப் புரிந்து கொண்டவர்கள்தான் சாமியார்களாக வளர முடிகிறது. அந்த வகையில் வட மாவட்டங்களில் குறிப்பாக வன்னியர் சாதிப் பெண்களின் உளவியலை நன்றாகப் புரிந்து கொண்ட பங்காரு அடிகளார் அதை அறுவடை செய்து கொண்டார். 

பூஜை செய்கிற பெண்கள், தாங்கள் சனாதனத்திற்கு எதிராகச் செயல்படுகிறோம் என்பதும் அவர்களுக்குத் தெரியாது; பங்காருவும் அத்தகைய எண்ணத்தோடு பெண்களை பூஜையில் ஈடுபடுத்தவில்லை. அப்படி ஒரு எண்ணம் அவருக்கு இருந்திருக்குமேயானால் சங் பரிவார கும்பலுக்கு எதிராக தன்னுடைய பக்தர்களை வளர்த்திருக்க முடியும். ஆனால் அவர் அப்படி எதுவும் செய்ததாகச் சான்றுகள் இல்லை. மாறாக,  வன்னிய சாதி மக்கள் சங் பரிவாரக் கும்பல் பக்கம் சாய்ந்து வருவதுதான் மிச்சம். இதில் அன்புமணியின் பங்கும் உண்டு என்பதையும் மறந்து விடக்கூடாது.

ஏராளமான கல்வி நிறுவனங்களைத் தொடங்கி, அதன் மூலம் எண்ணற்ற ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கல்வி-மருத்துவச் சேவையை செய்துள்ளார் என்றும் பங்காருவைப் புகழ்கின்றனர். இது உண்மை என்றாலும்கூட அவரால் இதை எப்படிச் செய்ய முடிந்தது என்பதை பரிசீலிக்க வேண்டும். ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் கல்வி-மருத்துவம் வழங்க வேண்டியது அரசினுடைய கடமை. அதை ஒரு சாமியார் செய்கிறான் என்பதற்காக நான் வெட்கப்பட வேண்டுமே ஒழிய பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை.

ஏழை எளிய மக்கள் அன்றாடம் பல்வேறு துன்ப துயரங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். அதிலிருந்து விடுபட வேண்டுமானால், ஏதாவது பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே மூடநம்பிக்கைகள் அவர்களிடைய ஆழமாக ஊன்றப்பட்டுள்ளது. தங்களது துன்ப துயரங்களுக்கு நிரந்தரமானத் தீர்வு கிடைக்காதா என்ற ஏக்கப் பெருமூச்சோடு காணிக்கைகளை அள்ளிக்கொண்டு சாமியார்களை நோக்கி ஓடுகிறார்கள் அப்பாவி மக்கள். அங்கே, சாமியார்களின் உண்டியலும் தொந்தியும் பெருகுகிறது. மனதை மட்டும் நிறைத்து கொண்டு பக்தர்கள் வீடு திரும்புகிறார்கள்; வந்த பிறகு மீண்டும் அதே வாழ்க்கை. 

ஒவ்வொரு முறையும் தனக்குத் துன்ப துயரம் நேரும் பொழுது, மீண்டும் மீண்டும் சாமியார்களையும் கோவில்களையும் நோக்கி ஓடுகிறார்கள். ஆனால், அவர்களின் துன்ப துயரங்கள் முடிவுக்கு வந்தபாடில்லை. மாறாக, ஆழமான மூடநம்பிக்கைகள் மேலும் மேலும் அவர்களை ஆட்கொண்டு விடுகிறது. மக்களின் மூடநம்பிக்கைகள்தான் சாமியார்களின் மூலதனம். மூடநம்பிக்கைகள் பெருகப் பெருக மூலதனமும் பெருகத்தானே செய்யும். அப்படித்தான் கோடிக்கணக்கிலே பங்காருவிடம் சொத்துக்கள் குவிந்தன.

மக்களின் சிந்தனை மட்டத்தை எவன் உயர்த்துகிறானோ அவனது மரணத்தைத்தான் பேரிழப்பாகக் கருத முடியும். பரோபகாரியாக இருப்பதனால் மட்டும் ஒருவன் போற்றுதலுக்கு உரியவனாகிவிட மாட்டான். 

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Sunday, 27 February 2011

சாமியார்கள் அத்துப் போனால் இந்து மதம் இத்துப் போகுமா?

ஆதிசங்கரன் முதல் நித்யானந்தா வரை இந்து மதத்தை தாங்கி நிற்க இம் மண்ணில் தோன்றிய அவதாரப் புருஷர்கள் ஏராளம். அத்வைதம் முதல் ஆத்ம ஞானம் வரை இவர்கள் போதிக்காத தத்துவங்களே கிடையாது. சிலர் தத்துவங்களை உபதேசிக்க மட்டுமே செய்தார்கள். ஆனால் இறந்து போன பிரேமானந்தா முதல் காஞ்சி சங்கரன், நித்தியானந்தா வரை பலர் நடைமுறையில் பல தத்துவங்களை சோதித்தறிந்தவர்கள். அதிலும் குறிப்பாக காமத்துப் பாலை முந்திரி, பாதாம் பருப்புகளை அரைத்துச் சேர்த்து சுண்டக் காய்ச்சி கரைத்துக் குடித்து கரை கண்டவர்கள்.

முற்றும் துரந்த இந்த முனிவர்களுக்கு உல்லாசமாய் உலவ ஆசிரமங்களும், உலவிய பின் ஓய்வெடுக்க ஏ.சி. அறைகளும், ஏ.சி.அறையின் குளிரை சமாளிக்க காமக் களியாட்டங்களும் கட்டாயம். இவற்றில் எது வேண்டுமானாலும் குறையலாம். ஆனால் இரவு நேர லீலைகள் மட்டும் கண்டிப்பாய் நடக்க வேண்டும்.

இந்திய ஜனாதிபதியைக்கூட தீவிரவாதிகள் எளிதில் நெருங்கிவிடுவார்கள். ஆனால் ஒசாமா பின்லேடனே நினைத்தாலும் இந்தச் சாமியார்களை நெருங்க முடியாது. பாதுகாப்பு வளையங்களைத் தாண்டுவது அவ்வளவு எளிதானதல்ல. அதையும் தாண்டி ஒருவன் நித்யானந்தா-இரஞ்சிதாவின் காமக் களியாட்டத்தைச் சுட்டிருக்கிறான் என்றால் அவன் பின் லேடனுக்கேத் தலைவனாகும் தகுதி படைத்தவன்.

போலிச் சாமியார்கள்தான் கேடானவர்கள். நல்ல சாமியார்களும் இருக்கத்தானே செய்கிறார்கள் என நீங்கள் முனுமுனுப்பது எனது காதுகளில் விழுகிறது. நேற்று வரை 'ஒரிஜினல்' என்று நம்பியவன்தானே மறுநாள் காலையிலேயே போலி என்று நாறுகிறான். 'ஒரிஜினல்' என்று நம்புவதற்கான உத்தரவாதத்தை யாராவது 'பாண்டு பேப்பரில்' எழுதிக் கொடுக்கத் தயாரா?

எப்வளவுதான் நாறினாலும் சாமியார்கள் செல்வாக்கோடு உலாவுவதற்கான பலம் எங்கிருந்து கிடைக்கிறது? நீண்ட நாட்களாக இந்தக் கேள்விக்கு விடை கிடைக்காமல் நான் திணறிய போது நித்தியானந்தா சிக்கியதும் எனக்கு விடை கிடைத்து விட்டது. தமிழகத்தின் திருவண்ணாமலை,  வேலூர் மாவட்டங்களிலும், கர்நாடகாவின் மைசூரிலும் இவருக்கு செல்வாக்கு அதிகமாக இருப்பதற்குக் காரணம் இவர் அகமுடைய முதலியார் சாதியைச் சேர்ந்தவர் என்பதுதான். இப்பகுதிகளில் அகமுடைய முதலியார்கள் அதிகமாக வசிப்பது நித்தியானந்தாவின் பலம்.

1980 களில் மேல் மருவத்தூர் 'அம்மா' பிரபலமானபோது இவரை தூக்கி நிறுத்தியவர்கள் வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் அவரது சாதியைச் சேர்ந்த வன்னிய சமூகத்தினர்.

சைவ வேளாள முதலியார்கள் வேதாத்திரி மகரிஷியை தூக்கி நிறுத்தினார்கள். அவர் இறந்த பிறகு இவர்களது சாதிப் படிநிலையில் ஒரே 'குரூப்பில்' இருக்கும் நித்தியானந்தாவை ஆதரிக்கத் தொடங்கினார்கள். நித்தியானந்தாவும் அம்பலப்பட்டுப் போன பிறகு வேலூர் ஸ்ரீபுரம் சக்தி 'அம்மாவை' இப்போதைக்குப் பிடித்துக் கொண்டார்கள். எக்காரணத்தைக் கொண்டும் ஒரு முதலியார் பக்தனின் காணிக்கை தங்களது பரம எதிரிகளான வன்னியர்களின் மருவத்தூர் அம்மாவிடம் சென்று விடக்கூடாது.

மைசூரைப் பூர்வீகமாகக் கொண்ட தெலுங்கு மொழி பேசும் வைசியா பிரிவில் வரும் ஷெட்டி சாதியைச்  சேர்ந்த ஜக்கி வாசுதேவ், கோவை, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் வெள்ளாளக் கவுண்டர்களின் ஆதர்ஷ சாமியாராக அவதாரம் எடுத்ததோடு, பிற இடைநிலைச் சாதி மக்களையும் வெகுவாகக் கவர்ந்து வருகிறார்.

திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் பெரும்பான்மையாக வசிக்கும் கள்ளர் சாதி மக்களின் ஏகோபித்த சாமியாராக விளங்கிய அச்சாதியைச் சேர்ந்த பிரேமானந்தா மண்டையைப் போட்டுவிட்டார். இப்பொழுது அங்கே ஒரு 'வேக்கன்சி' ஏற்பட்டுள்ளது. வாய்ப்புள்ளவர்கள் முயற்சிக்கலாம்.

தென் மாவட்ட நாடார்களுக்கும், தேவர்களுக்கும் என அந்தந்த சாதிகளைச் சேர்ந்த சாமியார்கள் இருக்கக்கூடும். எனக்குத் தெரியவில்லை. ஆனால் பெரிய அளவில் பிரபலமாகவில்லை என்றே கருதுகிறேன். 

பார்ப்பனர்களுக்கு?... சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. நாறிப்போன சங்கராச்சாரி முதல் வாழும் கலை ஸ்ரீ.ஸ்ரீ. இரவிசங்கர் வரை பிரபலங்கள் ஏராளம் உண்டு. மற்ற சாதிக்காரர்களாவது பக்தி பெருக்கெடுக்கும் போது பிற சாதி சாமியாரர்களைக்கூட ஒருசிலர் ஏற்றிப் போற்றுவதுண்டு;  வணங்குவதுண்டு. ஆனால் பார்ப்பனர்கள் பிற சாதி சாமியார்கள் ஒருவரைக்கூட அங்கீகரித்ததில்லை. அங்கீகரிக்கவும் மாட்டார்கள்.

பாவம் தாழ்த்தப்பட்டவர்கள். பக்தியிருந்தும் தங்களுக்கென இதுவரை ஒரு சாமியைரைக்கூட உருவாக்க முடியவில்லை. கோயிலுக்கு நுழையவோ சாமியை வழிபடவோ உரிமை இல்லாத போது சாமியார்களை எங்கே உருவாக்கவது? இதுதான் சாதி இழிநிலைக்கு எடுப்பான ஆதாரம்.

சாமியார்களின் உயிரும் பலமும் சாதியில் ஒளிந்திருக்கிறதேயொழிய பக்தியில் அல்ல. தங்களது சாதிக்காரனின் பணம் பக்தியின் பேரால் மற்றொரு சாதி சாமியாரிடம் சென்றுவிடக்கூடாது என்பதில் ஒவ்வொரு சாதியினரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். அதுவே சாமியார்களின் பலமாகவும் இருக்கிறது.

சாதி எங்கும் வியாபித்திருக்கிறது. இதுவே இந்து மதத்தின் வேராகவும் இருக்கிறது. வேருக்கு நீர் பாய்ச்சும் சாமியார்கள் இத்துப் போனால் இந்து மதம் அத்துப் போகுமே என்ற கவலை இந்து மதவாதிகளுக்கு. அதனால்தான் சாமியார்களுக்கு பாதிப்புகள் வரும் போதெல்லாம் அர்ஜீன் சம்பத்துக்கள் குரல் கொடுக்கிறார்கள்.