Showing posts with label பிண்டம் bjp அதிமுக எடப்பாடி எம்ஜிஆர் ஜெயலலிதா ஸ்டாலின் கலைஞர் தமிழ்நாடு. Show all posts
Showing posts with label பிண்டம் bjp அதிமுக எடப்பாடி எம்ஜிஆர் ஜெயலலிதா ஸ்டாலின் கலைஞர் தமிழ்நாடு. Show all posts

Wednesday, 9 July 2025

பிண்டங்கள் ஜாக்கிரதை!

நேற்றுவரை ஏதோ சமூக நீதிக்காக அதிமுக செயல்பட்டது போலவும் அது இன்று எடப்பாடி போன்றோரால்  மதிப்பிழந்து போனதாகவும் சிலர் அங்கலாய்க்கின்றனர். சனாதனத்திற்கு எதிரான சிந்தனை கொண்டுள்ள ஒரு சில பகுத்தறிவு அதிமேதாவிகளும் இதில் அடங்குவர் என்பதுதான் மிகப்பெரிய அவலம்.  

சனாதன எதிர்ப்பில் பார்ப்பனர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த கலைஞரை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே சோ போன்ற பார்ப்பன 'அறிவாளி'களால் உருவாக்கப்பட்டதுதான் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக. எம்ஜிஆரின் மறைவிற்குப் பிறகு ஜெயலலிதாவை முன்னிறுத்தி அதிமுகவை பாதுகாத்து வந்தனர். எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் மக்களை ஈர்க்கக்கூடிய கவர்ச்சியானத் தலைவர்களாக இருந்ததனால் பார்ப்பனர்களுக்கு அவர்கள் தேவைப்பட்டனர்.

பிண்டம்

ஏற்கனவே பெரியார், அண்ணா இருவரின் திராவிடக் கருத்தியல் மற்றும் சமூக நீதிக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டிருந்த தமிழக மக்களை நம்பவைப்பதற்காகவே திராவிடத்தையும் சமூக நீதியையும்  அரிதாரமாக அதிமுக அன்று பூசிக் கொண்டது என்பதைத் தாண்டி அன்றிலிருந்து இன்று வரை திராவிடம் மற்றும் சமூக நீதிக்கும் அதிமுகவுக்கும் எள்ளவும் தொடர்பில்லை. ‘திராவிடம்னா என்னன்னு படிச்சவங்களதான் கேட்கணும்’ என்று எடப்பாடி போட்டுடைத்த அன்றே அதிமுகவின் திராவிடம் அம்பலத்தில் ஏறியது. 

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவால் முன்னிறுத்தப்பட்டவர்கள் அனைவரும் பிழைப்புவாத தற்குறிகள் மட்டுமே. பதவி சொத்து சுகத்தைத் தவிர வேறெதுவும் அவர்களுக்கு எப்போதும் தேவைப்பட்டதில்லை. பதவிக்காக இவர்கள் மேசைக்கடியில் தவழ்ந்த காட்சிகளை தமிழகமே பார்த்து கெக்களித்தது. சசிகலாவிடமே இப்படி என்றால் ஜெயலலிதாவிடம் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.

இன்றைய எடப்பாடி தலைமையிலான அதிமுகவோ கலைஞர் வழியிலான ஸ்டாலினை வீழ்த்துவதற்கான ஆற்றலை இழந்துவிட்டதால் அது இனிமேலும் பார்ப்பனர்களுக்குத் தேவைப்படாத ஒரு அழுகிய பிண்டம். எனவே, தேவையில்லாத இந்தப் பிண்டத்தை அறுத்தெறிந்து விட்டு அந்த இடத்தில் வேறு ஒரு பிண்டத்தை ஒட்ட வைப்பதற்கு பார்ப்பனர்கள் முயல்கின்றனர். 

தாதுபுஷ்டி லேகியம் எல்லாம் கொடுத்து வத்திப்போன ‘பாட்சா’வின் பிண்டத்திற்கு பசை ஏற்ற பலமுறை முயன்றார்கள். ஆனால் அது பளபளப்பாவதற்குப் பதிலாக கடைசியில் உப்புகண்டமாய் உலர்ந்து போனது. 

வேறு பிண்டம் எதுவும் அப்போதைக்குக் கிட்டவில்லை. வேறு வழி இல்லாததால், தமிழ்நாட்டில் குறைப் பிரசவத்தால் நைந்து கிடக்கும் தங்களின் ‘டிமோ’ வின்  பிண்டத்திற்கு நாலுகால பூசை செய்து வேதமந்திரம் ஓதி 'அரோகரா' போட்டு உசுப்பிக்க முயல்கின்றனர். அதற்காக அக்காவையும் ஆட்டுக்குட்டியையும் இறக்கி வேலி தாண்டி மேய்ந்து வந்தாலாவது நைந்துபோன பிண்டத்தில் குருதி ஏறும் என்று எதிர்பார்த்தனர். வேலி தாண்டி ஆடு மேய்ந்ததே ஒழிய பிண்டம் பிதுங்கியதாகத் தெரியவில்லை. அக்காவும் எம்பி எம்பிப் பார்த்தது. எதிரில் இருந்தவர்களுக்கோ 'போடிய'த்திற்கு மேலே பரட்டைதான் தெரிந்ததே ஒழிய பிண்டம் தெரியவில்லை. 

குறைப் பிரசவம்  குறைப் பிரசவம்தான். நோஞ்சான் நோஞ்சான்தான். நைந்து போனது நைந்து போனதுதான். 

இனி இதை நம்பிப் பயனில்லை என்பதனால் கொஞ்சம் தசைப் பிடிப்பான மினுமினுப்பான ஒரு பிண்டத்தைக் கண்டெடுத்து புறவாசல் வழியாக பாலும் பழமும் ஊட்டி உசுப்பேற்றி வருகின்றனர். ஊட்டம் அதிகம் கிடைப்பதனால் இந்த சதைப் பிண்டமும் ‘கில்லி’யாய் துள்ளாட்டம் போட்டு வருகிறது. 

‘கில்லி’கள் திரையில் ஜொலிக்கலாம் ஆனால் நிஜத்தில்…?

பார்ப்போம்! 2026க்குப் பிறகு வேறு ஒரு பிண்டம் அவர்களுக்குத் தேவைப்படலாம்!

பிண்டங்கள் ஜாக்கிரதை!

ஊரான்