Showing posts with label மருமகள். Show all posts
Showing posts with label மருமகள். Show all posts

Friday, 22 March 2013

தள்ளாடும் வயதில் தாயைத் தாங்கிப் பிடிக்க யார் இருக்கா?

“எங்கோ பிறந்தவனை இணையாய் ஏற்றதனால் கருவுற்று, ஒரு குழந்தைக்குத் தாயாகி அக்குழந்தையும் வளர்ந்து ஆளாகி தனிக்குடித்தனம் சென்ற பிறகு தாய் தள்ளாடும் வயதைத் தொடுகிறாள். தனக்கு வாய்த்த இணையே இப்போது இந்தத் தாய்க்கு மற்றொரு குழந்தையாகிறான். அன்று எட்டு மாதக் குழந்தையை பராமரித்தவள் இன்று எண்பது வயதுக் குழந்தையை பராமிரிக்க வேண்டியவளாகிறாள்”.
தள்ளாத வயதிலும் ஒரு பெண் தன் கணவனை எவ்வாறெல்லாம் பராமரிக்க வேண்டியுள்ளது என்பது பற்றி “கணவனே குழந்தையாய்...” என்கிற முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். அதே வேளையில் ஒரு கணவன் தனது மனைவியை அவ்வாறு பராமரிக்கிறானா என்கிற கேள்வியும் கூடவே எழுகிறது.
பொதுவாக மனைவியைவிட கணவனே வயதில் மூத்தவனாக இருப்பதால் முதலில் மூப்பெய்தி மரணத்தை நாடுகிறான். அதன்பிறகு அவனது மனைவி முடிந்தவரை தனியாக வாழ்ந்துவிட்டு அவளும் மரணத்தை நாடுகிறாள். ஒரு வேளை ஒப்பீட்டளவில் மனைவியைவிட கணவன் நலத்தோடு இருக்கும் போது தனது மனைவி நோய்வாய்ப்பட்டுவிட்டால் என்ன நடக்கிறது?
எங்கோ பிறந்தவளை தேடிப்பிடித்து, ஆயிரத்தெட்டு பொருந்தங்கள் பார்த்து, சொந்த பந்தங்களின் ஒப்புதலையும் பெற்று, இவளே தனக்கு ஏற்ற, உற்ற துணை என ஏற்றுக்கொள்கிறான். திருமணத்தை முடித்துக்கொண்டு பெற்றோரும் உற்றாரும் கண்கலங்கி கைவிலக இனி எல்லாமே புகுந்த வீடுதான் என கொண்டவனைப் பின்தொடர்கிறாள்.
திருமணத்திற்குப் பிறகும் தனது சொந்த பந்தங்களோடு எப்போதும் போல இயல்பாய் இருக்கிறான் ஆண். ஆனால் அவளுக்கோ கொண்டவனும் புதிது; குடிக்கும் தண்ணர், உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, அக்கம் பக்கம் வாழ்வோரின் மூச்சுக்காற்று என எல்லாமே புதிது என்பதால் அதற்கேற்ப அவள் தன்னைத் தகவமைத்துக்கொள்ள வேண்டும். அதுவரை புகுந்த வீட்டில் அவள் அனுபவிக்கும் மனவலியை, உடல் வலியை அவள் மட்டுமே அறிவாள்.
ஒரு நாள் வெளியூர் பயணத்தில் குடி நீர் மாறினாலே ஒவ்வாமை வந்துவிடுகிறது பலருக்கு. புகுந்த வீட்டிற்கு வந்தவளுக்கோ ஓராயிரம் ஒவ்வாமைகள். என்ன செய்வாள் பாவம்? உடல் நலிந்து போனால் “போய் ஒடம்ப சரிபண்ணிட்டு வா” என தாய்வீட்டிற்கே திருப்பி அனுப்புகிறான் கணவன். இப்படித்தான் தொடங்குகிறது மனைவிக்கான பராமரிப்பு.
தாய்வீடு சென்று சரியாகி வந்தாலும் வாரிசுச் சுமையை சுமந்தே ஆக வேண்டும். இது புகுந்த வீட்டின் சுமை என்றாலும்கூட அதை இறக்குவதற்கும் அவள் தாய்வீட்டிற்குத்தான் திரும்ப வேண்டும். பெற்றெடுத்த குழந்தையோடு அவள் புகுந்த வீட்டிற்குத் திரும்பினாலும் குழந்தைக்கு சீக்கு என்றால் அதற்கும் தாய்வீடுதான் கதி. இப்படி பாரத்தை சுமக்க ஓரிடம் – பாரத்தை இறக்க மற்றோர் இடம் என புகுந்த வீட்டிற்கும் தாய்வீட்டிற்குமாய் அலைந்து அலைந்து ஓய்ந்து களைத்து வாழ்க்கையை ஓட்டுகிறாள். தள்ளாடும் வயதில்கூட அவள் தாய்வீட்டின் அரவணைப்பைத்தான் நாடுகிறாள். தாய் வீட்டு உறவுகள் அற்றுப்போய் இருந்தாலும்கூட தாய் வீட்டின் நினைப்பிலேயே அவள் புதுத்தெம்மைத் தேடுகிறாள்.

கணவனுக்கு முடியாத போது மனைவியானவள் தனது கணவனை சொந்தக் குழந்தையைப் போல பராமரிக்கிறாள். பாசத்தினால் அவ்வாறு செய்கிறாளா அல்லது கணவனுக்குப் பணிவிடை செய்வது தனது கடமை என்று இச்சமூகம் ஆணாதிக்கத் திமிரோடு திணித்துள்ளதை ஏற்றதனால் அவ்வாறு செய்கிறாளா என்றெல்லாம் அவள் பார்ப்பதில்லை.

இந்தச் சேவைகளுக்கு அவள் பிரதிபலன் எதையும் எதிர்பார்ப்பதில்லை - கணவன் தன்னோடு இருந்தால் போதும் என்பதைத் தவிர! யார் ஒருவர் பிறருக்கு ஆக்கபூர்வமான சேவைகளைப் பிலதிபலன் ஏதும் எதிர் பார்க்காமல் செய்கிறார்களோ அவர்களே ஆரோக்கியமானவர்கள் என கிரேக்க நாட்டு ஹோமியோபதியர் ஜார்ஜ் வித்தல்காஸ் தனது “சைன்ஸ் ஆஃப் ஹோமியோபதி” என்கிற நூலில் ஆரோக்கியத்திற்கான அளவுகோலாக வரையறுக்கிறார். அதனால்தானோ என்னவோ இங்கே தாயானவள் தன்னுடைய தன்னமற்ற சேவையினால் ஆரோக்கியமானவளாகத் திகழ்கிறாளோ?

ஆணோ - பெண்ணோ, தங்களால் செய்து கொள்ள முடியும் என்கிற போது அவரவர் சுய பராமரிப்புகளை – தாங்கள் சாப்பிட்ட தட்டுகளைக் கழுவுவது முதல் தங்களின் துணிகளை தாங்களே துவைத்துக் கொள்வது வரை – அவரவர்களே செய்து கொள்வதுதான் நியாயமான நெறிமுறை. ஒருவர் தன்னைத்தானே சுயமாக பராமரித்துக் கொள்ள இயலாத சூழலில் அதாவது உடல் நலிவுற்றிருந்தாலோ அல்லது தவிர்க்க முடியாத வேறு சில சூழ்நிலைகளிளோ அவருக்கு மற்றவர்களின் உதவி தேவைப்படுகிறது.

ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ மற்றொரு பெண் பணிவிடை செய்வது சகஜமான இயல்பான ஒன்றாகப்படுகிறது. ஆனால் ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு அதுவும் அவள் நோயுற்று மருத்துவ மனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கிக் கிடக்கும் போது - அது தனது மனைவியாகவும் இருக்கலாம் அல்லது தனது தாயாகவும் இருக்கலாம் - அவளுக்கு பல் துலக்க, ஈரத்துணி கொண்டு உடல் கழுவ, மலம் எடுத்து குதம் துடைக்க, சிறுநீர் பிடிக்க, உணவு ஊட்ட, தேனீரோ தண்ணீரோ பருகக் கொடுக்க, மாத்திரை போட, புரை ஏறினால் தலையில் இதமாயத் தட்டிக் கொடுக்க, வாந்தி எடுத்தால் கைபிடிக்க - அப்போது அதற்குரிய கிண்ணத்தைத் தேடிக்கொண்டிருக்க முடியாது - நெஞ்சுச் சளியோ மூக்குச் சளியோ வரும் போது வழித்து துடைத்துவிட, குளிரானால் உடல் போர்த்த, வெக்கையானால் மின் விசிறியை இயக்கிவிட என இத்தனையையும் ஒரு ஆண் செய்யும் போது மூக்கின் நுனி மீது விரல் வைத்து பிரமித்து நிற்கின்றனர் மற்ற படுக்கைகளில் தங்களது உறவினர்களைப் பராமரிக்கும் பெண்கள்.

விதிவிலக்காக ஒருசில கணவன்மார்களைத் தவிர பெரும்பாலான கணவன்மார்கள் மனைவிக்குப் பணிவிடை செய்வதை மிகக் கேவலமானதாகத்தான் பார்க்கின்றனர். மனைவிக்குச் சேவை செய்வது அல்லது அவளுக்குப் பணிவிடைகள் செய்வது ஆணுக்கு இழுக்கு என சமூகம் அவனை எச்சரிக்கிறது. மீறி யாராவது ஒருசிலர் செய்தால் அவர்களை ஏளனமாகப் பார்க்கிறது. இத்தகைய ஆணாதிக்க மனப்போக்கு தனிநபர் சம்பந்தப்பட்டதல்ல. இது இந்த நாட்டில் இன்னமும் அழியாமல் நிலைநாட்டப்பட்டு வரும் நிலவுடமைச் சமூகத்தின் கேடு கெட்டப் பண்பாடு. நமது புராணங்களும், இதிகாசங்களும், கதைகளும், நாடகங்களும், திரைப்படங்களும், நெடுந்தொடர்களும், ஞானிகளின் உபதேசங்களும் இத்தகைய பண்பாட்டைத்தான் மிக உயர்ந்த இந்தியாவின் பெருமைக்குரிய பண்பாடாக சித்தரித்து வருகின்றன.

உற்ற துணையே இந்த வறட்டுக் கௌரவத்தை கைவிட மறுக்கும் போது அவள் என்ன செய்வாள் பாவம்? அதுதான் ஆணின் தன்மை என அமைதியாய் ஏற்பதைத்தவிர? ஒரு வேளை பெற்ற மகள் ஒருத்தி இருந்தால் குறைந்த பட்சம் உதவிக்கரமாவது நீட்டுவாள். அவ்வாறு யாரும் இல்லை என்றாலும் அவள் பாவப்பட்டு சோர்ந்து விடுவதில்லை. முடிந்தவரை தன்னைத்தானே பராமரித்துக் கொள்ளவே முயற்சிக்கிறாள்.

புறநிலை நிர்ப்பந்தம் காரணமாக மருமகள் சில பணிவிடைகளைச் செய்ய முன்வந்தாலும் அவள் 'மூஞ்சைக்காட்டாமல்' இருப்பதில்லை என்பதனால் அவமானத்துக்கு உள்ளாகி உதவிகளைப் பெருவதைவிட முடிந்தவரை தானே பார்த்துக் கொள்வது என்பதிலிருந்து வருவதுதான் இந்தச் சுயபராமரிப்பு. மனைவியை இழந்த மாமனாரின் சுயபராமரிப்பும் இத்தகையதே.

சொத்துடமைச் சமூகத்தின் அவலமாக இன்றுவரை நீடிக்கும் மாமியார் – மருமகள் முரண்பாட்டை தனிநபர் முரண்பாடாக்கி ஒருவரை ஒருவர் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் இன்றையச் சூழலில் கணவனும் காலமாகி, பெற்ற மகனும் கைவிடும் போது தன்னைத்தானே பராமரித்துக் கொள்ள இயலாத நிலையில் தான் யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாது என்பதால் ஒரு கட்டத்தில் தனது மூச்சைத் தானே நிறுத்திக்கொள்கிறாள் தாய்.

தொடர்புடைய பதிவுகள்:

Monday, 20 June 2011

கொடுமைக்கு ஆளாவது மருமகள்களா அல்லது முதியோர்களா?

"முதியோரை கொடுமைப்படுத்துவதில் மருமகள்களுக்கே முதலிடம்!
கொல்கத்தா, ஜூன் 15: வீட்டிலுள்ள முதியோர்களுக்கு ஏற்படும் கொடுமைகளுக்கு பெரும்பாலும் அவர்களுடைய மருமகள்களே காரணம் என்பது ஹெல்பேஜ் இந்தியா என்ற தன்னார்வ அமைப்பின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 9 கோடி பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய மருமகள் அல்லது மகன்களால் கொடுமைக்கு ஆளாகின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளில் தங்களுக்கு எதிரான கொடுமை அதிகரித்திருப்பதாக 41 சதவீத முதியோர் தெரிவித்துள்ளனர். தாங்கள் மென்மையான இலக்காக இருப்பதே இதற்குக் காரணம் எனவும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் கொடுமைக்கு ஆளான முதியோர்களில் 98 சதவீதம் பேர் போலீஸிலோ அல்லது அரசு அதிகாரிகளிடமோ புகார் செய்வதில்லை. இதன் மூலம் அவர்கள் கொடுமையை அனுபவித்தபடி வேறு வழி தெரியாமல் தங்கள் மனதுக்குள்ளேயே அழுகிறார்கள் என்பதை அறியலாம் எனவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
முதியோர்களைக் கொடுமைப்படுத்துவது 63 சதவீதம் அவர்களின் மருமகள் தான். அதே நேரம் 44 சதவீத மகன்களும் அவர்களைக் கொடுமைப் படுத்துகின்றனர்.நாட்டின் தலைநகரான புதுதில்லியில் அனைத்து முதியவர்களும் தங்கள் மருமகளின் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வின் போது தெரிவித்தனர். அதாவது 100 சதவீதம் பேர் தங்கள் மருமகள்களால் கொடுமைக்கு ஆளானதாகத் தெரிவித்துள்ளனர். கொடுமைக்கு ஆளாகும் முதியோர்களில் 52 சதவீதம் பேர் படிப்பறிவு இல்லாதவர்கள். 66 சதவீதம் பேர் பொருளாதார ரீதியாக தங்கள் குடும்பத்தினரைச் சார்ந்து வாழ்கிறார்கள். பெரும்பாலானோர் தங்கள் அன்றாட செயல்பாடுகளுக்கு மருமகள்களையே நம்பியுள்ளனர். 85 சதவீதம் பேர் மருத்துவச் செலவுகளுக்கு மற்றவர்களை எதிர்பார்த்து வாழ்கின்றனர்.
முதியோருக்கு எதிரான கொடுமை என்பது மனதைக் காயப்படுத்தும் விதமாகப் பேசுவது மட்டுமின்றி உடல் ரீதியாகக் காயப்படுத்துவதும் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் முதியோர்களை சமூக, பொருளாதார, உடல்நல ரீதியாகக் காப்பாற்றுவது அவசியம் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
ஹெல்பேஜ் இந்தியா, முதியோர் நலனுக்காக கடந்த 30 ஆண்டுகளாக செயல்படும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும்."
இது 16.06.2011 அன்றைய தினமணி நாளேட்டில் வந்த செய்தி.

வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்திரவதை

”...கோவை: வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்திரவதை. 


திருமணம்
கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த சந்தியாவிற்கும், செளரிபாளையத்தைச் சேர்ந்த பாஸ்கரனுக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பாஸ்கரன் செளரிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆப்பரேட்டராகப் பணியாற்றி வருகிறார்.
திருமணத்தின் போதே 25 பவுன் நகை, ரூ. 5 லட்சம் ரொக்கம் மற்றும் மணமகனுக்கு பைக் ஆகியன சந்தியாவின் வீட்டார் சார்பில் கொடுக்கப்பட்டது.
கருவை அழி
திருமணம் ஆன சில நாட்களிலேயே பாஸ்கரனின் தாயும், தந்தையும் மருமகள் சந்தியாவை கூடுதல் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்தனர். இந்நிலையில் சந்தியா கர்ப்பம் தரித்தார்.
அவரது கர்ப்பத்தில் இருப்பது பெண் குழந்தை தான் என்பதை அறிந்து கொண்ட இருவரும் கருவைக் கலைக்கச் சொல்லி தொடர்ந்து இம்சை செய்துள்ளனர். இதனால் கணவன் வீட்டைவிட்டு வெளியேறி தாய் வீட்டில் தஞ்சம் அடைந்தார் சந்தியா. அங்கேயே தங்கி பெண் குழந்தையை பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில் கணவரோடு சேர்ந்து வாழ சந்தியா கூடுதலாக ரூ. 2 லட்சம் வரதட்சணை தரவேண்டும் என பாஸ்கரனின் வீட்டிலிருந்து தொடர்ந்து துன்புறுத்தல்கள் வந்து கொண்டிருந்ததால், சந்தியா கோவை மாநகர போலீசில் புகார் செய்தார்...”.

மருமகள்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொடுமைப் படுத்தப்படுவதற்கு இது ஒரு வகை மாதிரிதான்.

மேலே கண்ட எதிரெதிரான இரு செய்திகள் நமக்கு உணர்த்துவது என்ன? இவை பற்றி பரிசீலிக்கின்ற அதே வேளையில் இவைகளைக் களைய முடியுமா? என்பதையும் பரிசீலிக்க வேண்டும். 

மருமகள்கள் மீது.... 

மாமியார் கொடுமை தாங்காமல் மருமகள் தற்கொலை, வரதட்சணை கேட்டு துன்புறுத்தப்பட்டதால் மனமுடைந்த இளம் பெண் தற்கொலை, வரதட்சணை கேட்டு மருமகள் சித்திர வதை-தீயிட்டுக் கொலை, மருமகளிடம் மாமனார் சிலுமிசம், நாத்தனார் கொடுமை என புகுந்தவீட்டில் மருமகள்கள் மீது ஏவப்படும் வன் கொடுமைகளை பட்டியலிட்டு மாளாது.

இத்தகைய துன்புறுத்தல்களின் போது கட்டிய மனைவியை காக்கின்ற கணவன்மார்கள் எத்தனை பேர்?  இங்கே மருமகள்களை துன்புறுத்துகிற நிகழ்வுகள் பெரும்பாலும் பொருள் மற்றும் பணம் சார்ந்ததாகவே இருக்கின்றன. எவ்வளவுக்கு எவ்வளவு நகையும் பணமும் பொருளும் (சீர் - செனத்தை) கொண்டு வருகிறார்களோ அதைப்பொருத்தே சித்திரவதைகள் தீர்மானிக்கப் படுகின்றன.

நகை-பணம்-பொருள் இவற்றில் திருப்தியடைந்தாலும் மருமகள் பெண்குழந்தை ஒன்றைப் பெற்றுவிட்டால் அவள் சுடுகாடு செல்லும் வரை கொத்திக் குதறி விடுகிறார்கள். குழந்தைப்பேரில் ஆணா பெண்ணா என தீர்மானிப்பது ஆண்களின் விந்தணுவில் உள்ள செயல்பாடே காரணம் என மருத்துவ உலகம் திரும்பத் திரும்பச் சொன்னாலும் இவர்களின் காதுகளை அது எட்டுவதில்லை. ஆண் வாரிசுக்காக கட்டிய மனைவியை துரத்திவிட்டு மற்றொருத்திய கூட்டிக் கொள்ளும் கணவன்மார்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். இதற்கு தூபம் போட்டு உசுப்பேத்துபவர்கள் மாமியாரும் நாத்தனார்களும்தானே.

சமைக்கத் தெரியாததால் சில சமயம் சிறிதளவு பொருள் வீணாகிவிட்டால் அதற்காக மருமகளைக் கடித்துக் குதறி அமர்க்களப் படுத்திவிடுவார்கள். மருமகள்கள் எப்படி நடத்தப் படுகிறார்கள் என்பதற்கு மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம் என்கிற பழமொழி ஒன்று போதுமே. இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும்?   

வேலைக்குப் போகும் மருமகள் என்றால் சம்பளப் பணத்தை கணவனிடமோ அல்லது மாமியாரிடமோ கொடுத்துவிட வேண்டும். மறுக்கின்ற மருமகள்கள் வாழ்நாள் முழுக்க தூக்கத்தை தொலைக்க வேண்டும். மன உலைச்சலில் தூக்கம் மட்டும் எப்படி வரும்?

அங்கே உட்காராதே-இங்கே உட்காரதே, அங்க என்ன வேடிக்கை-இங்க என்ன வேடிக்கை, அங்க என்ன பேச்சு, யாருகிட்ட போன்ல பேசின, தலை வாருவதற்கு இதுவா இடம்? இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்டு மிகச்சாதாரண உரிமைகளைக்கூட தரமறுப்பது புகுந்த வீடுகளில் அன்றாடம் நடந்து கொண்டுதானே இருக்கிறது. மொத்தத்தில் மருமகள்கள் சூழ்நிலைக் கைதிகளாகவே வாழ்கிறார்கள்.
மருமகள் என்பவள் புதிதாக அமர்த்தப்படும் ஒரு வைலைக்காரி. ஊதியம் இல்லாத இந்த வேலைக்கு இலட்சக் கணக்கில் இலஞ்சம் கொடுக்க வேண்டும். இந்த இலஞ்சத்தில் நகை, பணம், பொருள், சொத்து-பத்து, சீர்-செனத்தை எல்லாம் அடங்கும். பெண் மற்றும் ஆண் இருவரின் படிப்புக்கு ஏற்ப இலஞ்சத் தொகை மாறுடும்.இலட்சக் கணக்கில் அள்ளித் தரும் பன்னாட்டுக் கம்பெனிகள்கூட 'கேம்பஸ் இன்டர்வியூவ்' மூலம் ஒருசில மணி நேரத்தில் தங்களுக்குத் தேவையான வேலைக்காரர்களை கல்லூரிகளுக்குச் சென்றே தேர்வு செய்துவிடுகிறார்கள்.ஆனால் ஊதியமே இல்லாத மருமகள் வேலைக்கு ஆள் எடுக்க மிக நீண்ட நெடிய சிக்கலான 'புராசஸ்' கையாளப்படுகிறது. இங்கே ஆள் எடுக்க குறைந்தபட்சம் சில மாதங்களாவது தேவைப்படும். ஆண்டுக் கணக்கில் தேடுவோரும் உண்டு. பணியில் அமர்த்துவதற்கு முன்பு ஐயரின் 'கன்கரன்ஸ்' கட்டாயம் தேவை. இல்லை என்றால் 'அப்பாய்ன்ட்மெண்ட் ஆர்டர்' கிடைக்காது.

வேலைக்காரிகள்கூட உடல் நிலை சரியில்லை என்றால் ஒன்றிரண்டு நாட்களுக்கு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். வேலை பிடிக்கவில்லை என்றால்  வேலையை விட்டு நின்று விடலாம்.ஆனால் மருமகள் என்கிற வேலைக்காரிக்கு விடுப்பு என்பதே வாழ் நாளிலேயே கிடையாது. வேலையை விட்டு நிற்கவும் முடியாது. இது இறக்கும் வரை 'ரிட்டையர்மெண்ட்டே' இல்லாத நிரந்தர வேலை.

மருமகள் என்கிற வேலைக்காரிக்கு உடல் நிலை மிகவும் மோசமாகி மருத்துவம் பார்க்கும் நிலைக்கு ஆளாகி, பிறர் உதவி கண்டிப்பாக தேவைப்படும் என்றால் அவளது தாய்வீட்டுக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்படும். தாய்வீட்டார் வந்து அழைத்துச் சென்று மருத்துவம் பார்த்து சரிசெய்து குணமான பிறகு மீண்டும் புகுந்த வீட்டில் விட்டுவிட்டு வரவேண்டும். மருத்துவ செலவுக்கு எம்ளாயரிடமிருந்து 'ரீஇம்ர்ஸ்மெண்ட்' எல்லாம் கிடைக்காது.  'டிலாவலிங் அலவன்சும்' கிடையாது. இதெல்லாம் எழுதப்படாத 'செர்வீஸ் ரூல்ஸ்'. குணப்படுத்த முடியாது, இனி நிரந்தர சீக்காளி என்றால் 'வித்தவுட் நோட்டீஸ் டிஸ்மிஸ்தான்'.

இப்படி வேலையை பறிகொடுத்துவிட்டு நடுத் தெருவில் நிற்கும் மருமகள்களை மீண்டும் அதே வேலையில் அமர்த்துவதற்கு உறவினர்கள் நடத்தும் கட்டப் பஞசாயத்துக்கள் ஒருபுறம். பஞ்சாயத்து 'ஒர்க்அவுட்' ஆகவில்லை என்றால் காவல் நிலையங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் மனு மேல் மனு போட்டு அல்லாடும் அவலம் மறுபுறம். இவற்றையெல்லாம் 'எம்ளாயர்கள்' பொருட்படுத்துவதே கிடையாது. வெகு விரைவிலேயே வேறு ஒரு வேலைக்காரியை மருமகளாக வேலைக்கு அமர்த்திக் கொள்வார்கள். ஆனால் வேலையிலிருந்து விரட்டப்பட்ட மருமகளுக்கு வேறு வேலை கிடைத்து விடுமா என்ன? கையறு நிலையில் அவள் என்ன செய்வாள்? அதுவும் பிள்ளை குட்டிகளோடு விரட்டப் பட்டு விட்டால் குளமோ-குட்டையோ, ஆறோ-ஏரியோ, பாலிடாலோ-பாயிசனோ, தாம்புக் கயிரோ-கெரெசினோதான் இவளை அணைத்துக் கொள்ளும்.

போதும். இதோடு நிறுத்திக் கொள்கிறேன். இதற்கு மேலேயும் எமுத வேண்டுமா என்ன? 

இப்படி நசுக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு, உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்ட மருமகள்களா முதியோர்களை துன்புறுத்துகிறார்கள்?
...................தொடரும்