Tuesday, September 19, 2023

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-9

கிரகப்பிரவேசமும் கும்பாபிஷேகமும்

ஒருவன் தனது வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்வதும் மற்றும் சொந்தமாக வீடு ஒன்றைக் கட்டிக் கொள்வதும் அவ்வளவு சுலபமானதல்ல. அதனால்தான் "வீட்டைக் கட்டிப்பார் கல்யாணத்தை பண்ணிப்பார்" என்பார்கள். 

பணம் இருந்தால் மட்டும் போதாது; பலரது கடினமான உழைப்பும் ஒன்று சேர்ந்தால்தான் ஒரு இல்லத்தை உருவாக்க முடியும். வீட்டின் தரத்தை அதன் கட்டுமானம்தான் உறுதி செய்யும் என்றாலும், குடும்பத்தின் நல்லவை-கெட்டவைகளை, வீட்டின் அமைப்போடு, முடிச்சுப் போட்டு, வீட்டை இப்படி அமைத்தால்தான் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நல்லது நடக்கும் என பயமுறுத்தி "வாஸ்து சாஸ்திரம்' என்கிற சனாதனத்தைப் புகுத்தி, மக்களை முட்டாளிக்கி வைத்துள்ளனர். 

மக்களை முட்டாளாக்கியதோடு நில்லாமல், வீட்டை நிர்மாணிக்க உழைத்த உழைப்பாளிகளை அசிங்கப்படுத்துகிறது சனாதனம். சண்டாளன், பறையர் போன்றவர்கள் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருப்பார்கள், மண்ணை மிதித்திருப்பார்கள் என்பதால், இல்லம் தீட்டாகி இருக்கும் என்று சொல்லி, பசுமாட்டை ஓட்டி வந்து, கோமியம் தெளித்து, மந்திரம் ஓதி, கிரகப்பிரவேசம் என்ற பெயரில் ஒரு தீட்டுக் கழிப்பு நிகழ்வை அரங்கேற்றுகின்றனர் நம் மக்கள், அது இன்னதென்று தெரியாமலேயே! தீண்டத்தகாத மக்களும் இதைச் செய்வதுதான் காலக் கொடுமை. 

சென்னை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் அடித்தளமாக இருந்தாலும், ஐந்தாவது தளமாக இருந்தாலும், பசுவைக் கொண்டு வர சில ஆயிரங்கள் செலவழித்து, மாடி ஏற பசு அடம் பிடித்தாலும், மல்லுக்கட்டியாவது வீட்டிற்குள் இழுத்துச் செல்கின்றனர். தீண்டாமை எவ்வளவு வலுவானது என்பதை இந்த மல்லுக்கட்டிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.

சிறிய கோவிலோ, பெரிய கோவிலோ அங்கும் தீண்டத்தகாதவர்கள் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருப்பார்கள், மண்ணை மிதித்திருப்பார்கள், அதனால் கோவில் தீட்டுப்பட்டிருக்கும் என்பதனால் "மகா சம்ரோட்சணம்" என்கிற "மகா கும்பாபிஷேகம்" என்கிற "குடமுழுக்கு" எனும் தீட்டுக் கழிப்பு நிகழ்ச்சியை செய்கின்றனர். 

"வீடு முதலானவற்றிற்கு சண்டாள சாதிகளால் அசுத்தம் நேரிட்டபோது, விளக்குதல், மெழுகுதல், கோமூத்திரம் தெளித்தல், கொஞ்சம் மேல்மண்ணை எடுத்து அப்பால் போடுதல், பசுமாட்டை ஒரு நாள் வசிக்கும் படி செய்தல் இவை ஐந்தாலும் அந்த பூமி பரிசுத்தப்படுகிறது. (மனு 5: 124)".

தன் கனவு இல்லத்தைக் கட்டியவனை, ஆண்டவன் உறையும் ஆலயத்தை  எழுப்பியவனை, தீண்டத்தகாதவன் என்று இழிவுபடுத்தி, அவனால் இல்லமும் ஆலயமும் தீட்டாகி விட்டது என்று சொல்லி, கிரகப்பிரவேசம், கும்பாபிஷேகம் என்ற பெயரில் தீட்டுக் கழிப்பு செய்யும் நபர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஏன் கைது செய்யக் கூடாது?

வீடு தேடி வரும் தீண்டத்தகாதவர்களை, வீட்டு வாசலில் நிற்க வைத்துப் பேசுவதும், ஆண்டவனை வழிபட வந்தால் ஆலயத்தின் வாசலிலேயே தடுத்து நிறுத்துவதும் எதனால்? தீண்டத்தகாதவர்கள் பாதம் பட்டால் மண்ணும் தீட்டாகிவிடும் என்கிற சனாதனம்தானே? 

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களும் அவரது மனைவியும் 2019 ஆம் ஆண்டு பூரி ஜெகநாதர் ஆலயத்திற்குள் நுழைந்து வழிபட அனுமதி மறுக்கப்பட்டது எதனால்?  அவர் தீண்டத்தகாத சாதி, என்பதனால்தானே? 

ராம்நாத் கோவிந்த்

இந்த ஆண்டு ஜூன் 23 அன்று டெல்லியில் உள்ள ஜெகநாத் கோயிலின் கருவறைக்குள் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான் ஆகிய இருவரும் அனுமதிக்கப்பட்டபோது, இன்னாள் குடியரசுத் தலைவர் துரௌபதி முர்மு மட்டும் வெளியிலேயே நிறுத்தப்பட்டாரே? எதனால்? 

புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவிற்கு முர்மு அழைக்கப்படவில்லையே? எதனால்? அவர் பழங்கடி இனத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவர் ஒரு விதவை என்பதும்தானே காரணம்?

முர்மு

தீண்டத்தகாதவர்கள் நுழைந்து கோவில் மண்ணை மிதித்து விட்டால், அம்மண் தீட்டாகிவிடும்; பிறகு தீட்டுக் கழிப்பு செய்ய வேண்டும். அதற்கு, கால விரயமும் பணமும் செலவாகும் என்பதனால் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் திண்டாமையை இன்றளவும் கடைபிடிக்கின்றனர். குடியரசுத் தலைவர்களுக்கே இந்த நிலை என்றால், சாமானியர்களின் நிலையை சற்றே எண்ணிப் பார்த்தால் குலை நடுங்குகிறது. 

விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமம் திரௌபதி அம்மன் கோயில் நுழைவு (2023) உள்ளிட்ட எண்ணற்ற கோயில்களில் தீண்டத்தகாதவர்கள், அவர்கள் இந்துக்களாக இருந்த போதிலும், உள்ளே நுழைந்து வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்படுவதற்கு அடிப்படைக் காரணம் இந்தத் தீண்டாமைதானே?

இலை சாப்பாட்டில் ஒளிந்திருக்கும் தீண்டாமை

பலரது வீடுகளில் இலையில் சாப்பாடு போடுவதை, தனக்குக் கிடைக்கும் மரியாதை எனக் கருதி பெருமைப்படுகிற விருந்தினர்களும் இருக்கத்தானே செய்கின்றனர். தனது கணவனோ அல்லது மகனோ அழைத்து வருகின்ற நண்பன் என்ன சாதி என்பது தெரியாது. அதனால் மகனுக்குத் தட்டிலும், நண்பனுக்கு இலையிலும் சாப்பாடு போடுவார்கள். நண்பனுக்கும் தட்டில் சாப்பாடு போட்டு விட்டால் தீண்டாமை ஏற்பட்டு விடும் என்கிற ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் இந்த இலை சாப்பாடு. எவ்வளவுதான் சுத்தம் செய்தாலும் பறையன் தீண்டின பாத்திரம் சுத்தமாகாது என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். 

எதற்கு வம்பு என்று இரண்டு பேருக்கும் இலையிலேயே சாப்பாடு போடுவதும் உண்டு. மேலும், தரையில் உட்கார்ந்து இலையில் சாப்பாடு போடும்போது, சாப்பிட்ட பிறகு அந்த இடத்தை சாணம் கொண்டோ அல்லது தண்ணீர் கொண்டோ மெழுகுவார்கள். இது ஒரு தீட்டு கழிப்பு நிகழ்ச்சி என்பது சாப்பிட்டவருக்குத் தெரியாது. தெரிந்தால், வித விதமாய் நீங்கள் சாப்பிட்ட அனைத்தும் ஒரு நொடியில் வெளியே வாந்தியாய் வந்துவிடும், ரோசம் இருந்தால்!

நமது அன்றாட வாழ்வில், இப்படி எண்ணற்ற தீண்டாமைச் சடங்குகளை சனாதனம் புகுத்தி இருக்கிறது. இன்று வரையிலும் அது தொடர்கிறது. 

ஆம்! சனாதன தருமம், அழிவில்லாதது, it is eternal என்று அவர்கள் சொல்வதில் உண்மை இருக்கத்தானே செய்கிறது. தீண்டாமை எனும் சனாதன தருமம் அழிவில்லாமல் இன்றும் நீடிக்கத்தானே செய்கிறது.

அடுத்து பெண்கள் மீதான சனாதன தருமம் குறித்துப் பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

****"

தொடர்புடைய பதிவுகள்

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-1

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-2

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-3

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-4

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-5

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-6

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-7

No comments:

Post a Comment