Monday, 27 July 2026

கீழடி-இந்திய வரலாற்றின் தொடக்கப் புள்ளி?

இன்றைய நவீன யுகத்திலும் உலகின் சில பகுதிகளில் கற்கால மனிதர்களைப் போல வாழும் மனிதக் குழுக்கள் இருக்கத்தான் செய்கின்றன. 

ஆனால், இன்றைக்கு 2,600 ஆண்டுகளுக்கு முன்பே (கி.மு. 6-ஆம் நூற்றாண்டு) மேம்பட்ட, எழுத்தறிவு பெற்ற, நீர் மேலாண்மையுடன் கூடிய நகர நாகரிக வாழ்க்கையைத் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதை 'கீழடி' தொல்லியல் அகழ்வாராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் உலகுக்கு உரக்கச் சொல்லியிருக்கின்றன.


இந்த வரலாற்று உண்மையைத்தான் கீழடி அகழ்வாய்வு உலகின் முன் மீண்டும் நிறுவியுள்ளது.

ஆனால், இத்தகைய மகத்தான தொல்லியல் சான்றுகளை மறைத்துவிட்டு, வெறும் கற்பனைப் புராணங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு "இந்திய நாகரிகம் என்பது வேத நாகரிகமே" என்ற அப்பட்டமான பொய்ப் பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் ஒரு பொதுக்கருத்தாக (Common Sense) ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்க பரிவாரச் சக்திகள் கட்டமைத்து வருகின்றன.

புராணப் புனைவா? தொல்லியல் சான்றா?

வேத நாகரிகம் என்று சொல்லப்படுவதற்கு வரலாற்று ரீதியான அல்லது தொல்லியல் ரீதியான எந்தவிதமான அறிவியல் சான்றுகளும் கிடையாது. அவை முழுக்க முழுக்கக் கற்பனைகளும் புனைவுகளும் நிறைந்த புராணங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை.

பொதுவாக, மனிதகுல நாகரிகங்கள் அனைத்தும் ஆற்றுப் படுகைகளில்தான் தோன்றி வளர்ந்தன என்பது உலக வரலாற்றின் மறுக்க முடியாத உண்மை. ஆனால், வேத நாகரிகத்தை ஒரு நதி நாகரிகமாக நிறுவுவதற்கு எந்தத் தொல்லியல் ஆதாரமும் இல்லாததால், 'சரஸ்வதி' என்ற ஒரு கற்பனை நதியை உருவாக்கிக் கொண்டு, அதன் கரையில்தான் வேத நாகரிகம் தோன்றியது என்ற புனைவை இன்றளவும் கட்டமைக்க முயல்கிறார்கள்.

மாறாக, தமிழர் நாகரிகம் என்பது வெறும் இலக்கியக் கூற்று மட்டுமல்ல. அது பழந்தமிழ் சங்க இலக்கியங்களாலும், பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுகளாலும் ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட ஒன்று.

தற்போது வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கீழடி அகழ்வாய்வு, "தமிழி" (தமிழ் பிராமி) எழுத்து பொறித்த மண்பாண்டங்கள், செங்கல் கட்டுமானங்கள், சுடுமண் கழிவுநீர் குழாய்கள், நெசவுத் தொழில் சான்றுகள் மூலம் தமிழர் நாகரிகத்தின் தொன்மையையும், அதன் உயர் நகர பண்பாட்டையும் அறிவியல் பூர்வமாக உறுதி செய்துள்ளது.

எனவே, இந்திய வரலாற்றைத் தொடங்குவதற்கு சரஸ்வதி என்ற கற்பனை நதி அல்ல, கீழடி நாகரிகமே இந்திய வரலாற்றின் உண்மையான தொடக்கப்புள்ளி! இந்திய வரலாறு இனி தென்னகத்திலிருந்துதான் எழுதப்பட வேண்டும்!

வரலாறு என்பது நம்பிக்கைகளால் எழுதப்படுவதில்லை; ஆதாரங்களால் எழுதப்படுகிறது. புராணங்கள் ஒரு சமூகத்தின் பண்பாட்டு நினைவுகளாக இருக்கலாம். ஆனால் அவற்றைத் தொல்லியல் ஆதாரங்களுக்கு மாற்றாக நிறுத்த முடியாது. கீழடி போன்ற அகழாய்வுகள், இந்திய வரலாற்றை புராணங்களின் வழியாக அல்ல, மண்ணுக்குள் புதைந்திருக்கும் சான்றுகளின் வழியாக வாசிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன.

மனிதநேயச் சமத்துவமா? வர்ணாசிரமச் சுரண்டலா?

ஒருவேளை, சனாதனவாதிகள் கூறுவது போல வேத நாகரிகம் என்பதை உண்மை என்று தர்க்கத்திற்காக ஏற்றுக்கொண்டாலும், அது மனிதகுலத்திற்கு அளித்த கொடை என்ன?
  • வேத நாகரிகம் என்பது பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை நால்வர்ணங்களாகப் பிரித்தது.
  • சாதி, தீண்டாமை, பாலின அடிமைத்தனம் மற்றும் மூடநம்பிக்கைகளைச் சமூகத்தில் சட்டப்பூர்வமாக்கியது.
  • உழைக்கும் மக்களை 'சூத்திரர்கள்' என்றும் 'பஞ்சமர்கள்' என்றும் தாழ்த்தி, சடங்கு ஆதிக்கத்தையும் பார்ப்பனிய மேலாதிக்கத்தையும் நிலைநிறுத்தியது.
ஆனால், அதே காலகட்டத்தில் தென்னகத்தில் உருவான தமிழர் நாகரிகமோ, "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற உன்னதமான சமத்துவக் கோட்பாட்டை உலகிற்குப் பறைசாற்றியது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற மனிதநேயத்தைச் சமூகத்தின் அடித்தளமாகக் கொண்டிருந்தது. கீழடியில் தெய்வச் சிலைகளோ, வழிபாட்டுத் தலங்களோ கண்டெடுக்கப்படவில்லை என்பது, தமிழர் நாகரிகம் மதச்சார்பற்ற, மனித மையச் சமூகமாகத் திகழ்ந்தது என்பதற்கான வரலாற்றுச் சான்றாகும்.

மோடி அரசின் சதியும் அமர்நாத் ராமகிருஷ்ணன் இடமாற்றமும்!

தமிழர் நாகரிகத்தின் இந்த வரலாற்று உண்மைகளும், சனாதனப் பொய்யுரைகளின் உடைவுகளும் இந்துத்துவ வாதிகளுக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால்தான், கீழடியின் உண்மைகளை உலகறியச் செய்யாமல் மூட முயல்கிறது பாஜகவின் மோடி அரசு.

கீழடியில் முதற்கட்ட அகழ்வாராய்ச்சியைச் சிறப்பாக நடத்தி, தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டிய தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களின் விரிவான அறிக்கையை வெளியிடாமல் ஒன்றிய மோடி அரசு முடக்கியது. அதில் தங்களின் சனாதன விருப்பத்திற்கு ஏற்ப மாற்றங்களையும் திருத்தங்களையும் செய்யுமாறு நெருக்கடி கொடுத்தது. அதற்குத் நேர்மையான அதிகாரியான அமர்நாத் ராமகிருஷ்ணன் இணங்க மறுத்ததால், அவர் உடனடியாக அஸ்ஸாம் மாநிலத்திற்குப் பழிவாங்கும் நோக்கில் இடமாற்றம் செய்யப்பட்டார்.

வரலாற்றைத் திரித்து, தங்கள் அரசியல் ஆதாயத்திற்கு ஏற்ப மாற்றி எழுதத் துடிக்கும் பார்ப்பனியச் சக்திகளின் அப்பட்டமான பாசிச நடவடிக்கை இது!

கீழடியை உயர்த்திப் பிடிப்போம்; வேத நாகரிகத்தைத் துரத்தியடிப்போம்! 

இன்று 'ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே தேர்தல்' என்ற பாசிச முழக்கத்தின் வழியே, இந்தியத் துணைக் கண்டத்தின் பல்வகைத் தன்மையை அழித்து, பார்ப்பனிய சனாதன மேலாதிக்கத்தை மக்கள் மீது திணிக்க ஆர்.எஸ்.எஸ் - பாஜக கூட்டணி தீவிரமாக முயன்று வருகிறது.

இந்தச் சனாதனப் பாசிசத்தை அரசியல் ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் வீழ்த்துவதற்கு 'கீழடி' என்ற வரலாற்று ஆயுதத்தை நாம் கையில் எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்!
அதனை உணர்ந்துதான், மக்கள் கலை இலக்கியக் கழகம் (ம.க.இ.க) இந்த வரலாற்றுப் பூர்வமான பண்பாட்டுப் போரை முன்னெடுத்துள்ளது.

"கீழடியை உயர்த்திப் பிடிப்போம்! வேத நாகரிகத்தைத் துரத்தியடிப்போம்!
இந்திய வரலாற்றைத் தென்னகத்திலிருந்து திருத்தி எழுதுவோம்!"

என்ற வீரியமிக்க முழக்கத்தின் அடிப்படையில், வரும் ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி தஞ்சை மண்ணில் மாபெரும் "தமிழ் மக்கள் இசை விழா" நடைபெறவுள்ளது.

சனாதன இருளை விரட்டி, தமிழ் பண்பாட்டுத் தன்மானத்தையும், சமத்துவத்தையும் நிலைநிறுத்தும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள் இசை விழாவில் முற்போக்குச் சிந்தனையாளர்களும், ஜனநாயகச் சக்திகளும், உழைக்கும் மக்களும் பெருந்திரளாகப் பங்கேற்போம்! தமிழர் வரலாற்றை உலக அரங்கில் கம்பீரமாக உயர்த்திப் பிடிப்போம்!

தமிழ்மணி 

No comments: