ஆனால், "தகுதி, திறமை" என்ற போலிப் 'புனிதங்களை' முன்வைத்து ஒன்றிய பாஜக அரசால் திணிக்கப்படும் நீட் (NEET - National Eligibility cum Entrance Test) நுழைவுத் தேர்வு, இன்று லட்சக்கணக்கான ஏழை மாணவர்களின் கனவுகளைப் பலிவாங்கும் ஒரு கொடூரமான வர்த்தகக் கருவியாகவும், ஆளும் வர்க்கத்தின் அதிகார மையமாகவும் உருவெடுத்துள்ளது.
தலைநகர் டெல்லி முதல் தமிழ்நாடு வரை இன்றைக்கு நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் இடதுசாரி அமைப்புகள் நடத்தும் தொடர் போராட்டங்கள் வெறும் தேர்வுக்கான எதிர்ப்பு மட்டுமல்ல; அது கல்வி உரிமையைப் பறிக்கும் ஒன்றிய அமைப்பிற்கு எதிரான தத்துவார்த்தப் போர்க்குரல்.
1. 'தகுதி' எனும் போலி முகமூடியும் வினாத்தாள் கசிவு வியாபாரமும்
நீட் தேர்வு கொண்டுவரப்பட்ட போது, அது "மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்தும்", "முறைகேடுகளையும் லஞ்சத்தையும் ஒழிக்கும்" என்று ஆளும் வர்க்கத்தால் கதையாடல்கள் கட்டமைக்கப்பட்டன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகத் தேசியத் தேர்வு முகமை (NTA) நடத்திய தேர்வுகளில் அம்பலமாகியுள்ள மோசடிகள், இந்தத் தகுதி முகமூடியை அடியோடு கிழித்தெறிந்துள்ளன.
பீகார், குஜராத், ராஜஸ்தான் எனப் பல மாநிலங்களில் ரூ.30 லட்சம் முதல் 50 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்ட வினாத்தாள்கள், வணிக ரீதியிலான கும்பல்களின் கைகளில் விளையாடியது அம்பலமானது. வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகளுடன், சில தேர்வு மையங்களில் அசாதாரண அளவில் அதிக மதிப்பெண்கள் பதிவானதும், ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த பலர் உச்ச மதிப்பெண்கள் பெற்றதும் நாடு முழுவதும் கடும் சந்தேகங்களை எழுப்பின. இவை அனைத்தும் நீட் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை மேலும் வலுப்படுத்தின.
"பணம் இருந்தால் வினாத்தாளை விலைக்கு வாங்கி மருத்துவர் ஆகலாம்; உழைப்பும் அறிவும் மட்டும் இருந்தால் நீட் தேர்வின் வாசலில் வீழ்ந்து மடிய வேண்டும்" என்ற அநீதியைத் தவிர நீட் சாதித்தது என்ன?
2. பயிற்சி மையங்களின் சுரண்டல் சந்தை
பள்ளிக் கல்வியை முற்றிலுமாகச் செல்லாக்காசாக்கி, "பயிற்சி மைய வணிகத்தை" (Coaching Industry) ஊக்குவிப்பதே நீட்டின் முதன்மை நோக்கமாகும்.
ஆண்டுக்கு ரூ.2 லட்சம் முதல் 5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கும் தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்கக் கூடிய நகர்ப்புற, மேல்தட்டு பொருளாதாரப் பின்புலம் கொண்டவர்களுக்கே நீட் கதவுகளைத் திறந்துவிடுகிறது. நாள் முழுவதும் கழனிகளிலும் ஆலைகளிலும் உழைக்கும் ஏழை எளிய விவசாயிகளின், தொழிலாளர்களின் பிள்ளைகளால் லட்சக்கணக்கில் பணம் கொட்டிப் பயிற்சி மையங்களில் படிக்க முடியுமா? இரண்டு, மூன்று ஆண்டுகள் 'ரிப்பீட்டர்ஸ்' ஆக தங்கிப் படிக்கும் வசதி படைத்தவர்களே 70% இடங்களைக் கைப்பற்றுகிறார்கள் என்று ஏ.கே. ராஜன் குழு அறிக்கையின்படி தெள்ளத் தெளிவாக நிறுவப்பட்டுள்ளது.
இது கல்வியை பொதுப்பட்டியலிலிருந்து பறித்து, முழுக்க முழுக்கக் காசாக்கும் கார்ப்பரேட் சந்தை அன்றி வேறென்ன?
3. 'தகுதி'யா? சமூக வாய்ப்பா?
நீட் என்பது வெறும் நுழைவுத் தேர்வு அல்ல. "தகுதி" (Merit) என்ற பெயரில் சமூக ஏற்றத்தாழ்வுகளை மூடி மறைக்கும் அரசியல் கருவியாகவும் அது செயல்படுகிறது. பல தலைமுறைகளாக தனியார் பள்ளிகள், உயர்தரப் பயிற்சி மையங்கள், நகர்ப்புறக் கல்விச் சூழல் ஆகியவற்றை அணுகிய சமூகங்களுக்கு நீட் கூடுதல் முன்னுரிமையை வழங்குகிறது. அதே நேரத்தில், அரசுப் பள்ளிகள், கிராமப்புறங்கள், உழைக்கும் வர்க்கம், பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது சமூக-பொருளாதாரச் சூழலை மீறிப் போட்டியிட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்.
எனவே, நீட் என்பது சந்தை வர்த்தகத்தின் கருவி மட்டுமல்ல; சமூக நீதியையும் இடஒதுக்கீட்டின் நோக்கத்தையும் பலவீனப்படுத்தும் சாதிய-வர்க்க மேலாதிக்கத்தின் கருவியாகவும் செயல்படுகிறது.
4. மாநில சுயாட்சியின் மீதான தாக்குதலும் கூட்டாட்சியும்
கல்வி தற்போது அரசமைப்புச் சட்டத்தின் பொதுப்பட்டியலில் இருந்தாலும், மொழி, சமூக அமைப்பு, பிராந்தியத் தேவைகள் ஆகியவற்றுடன் நேரடியாக தொடர்புடைய துறையாகும். எனவே, மாநிலங்களின் கல்விக் கொள்கை வகுக்கும் உரிமையை ஒன்றிய அரசு பறிப்பது கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதலாகும்.
தமிழ்நாட்டின் கிராமப்புற மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்க வேண்டுமெனில், மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் உள்ளூர் மாணவர்களே மருத்துவப் படிப்பிற்குள் வர வேண்டும். ஆனால், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் நீட் தேர்வு, மாநில வாரியங்களில் படிக்கும் லட்சக்கணக்கான கிராமப்புற மாணவர்களைத் திட்டமிட்டுப் புறக்கணிக்கிறது. மாநிலங்களின் நிதியில் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை உரிமை மாநில அரசுகளுக்கே இல்லை என்பது கூட்டாட்சியின் மீதான கொடூரமான தாக்குதலாகும்.
5. சமூக நீதிக்கான கல்லறையும் மாணவர் தற்கொலைகளும்
அனிதா தொடங்கி இன்று வரை நீட் பலிகொண்ட எளிய மாணவர்களின் உயிர்கள் வெறும் எண்கள் அல்ல; அவை இந்தச் சந்தை-சாதிய கட்டமைப்பின் நிகழ்த்திய படுகொலைகள்.
12 ஆண்டுகள் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற பிறகும், ஒரே ஒரு மூன்று மணி நேர நுழைவுத் தேர்வுதான் ஒருவனின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பது மனிதநேயமற்ற, அறிவியலற்ற அணுகுமுறையாகும். பிறப்பின் அடிப்படையிலும், வர்க்க அடிப்படையிலும் உழைக்கும் மக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியை, சமூக நீதியின் மூலம் இடஒதுக்கீடு வழியே நாம் மீட்டெடுத்தோம். அந்த சமூக நீதியை அடியோடு அறுத்தெறிவதே நீட்டின் மறைமுக நோக்கமாகும்.
6. 12 ஆண்டு பள்ளிக் கல்வியா? 3 மணி நேர மோசடியா?
ஒரு மாணவனின் கல்வி அறிவையும், சிந்திக்கும் திறனையும், பாடப் புரிதலையும் தீர்மானிப்பது ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அவன் தொடர்ச்சியாகப் பெற்ற அறிவுதான். அந்த மதிப்பெண்களே அவன் உயர்கல்வி பெறுவதற்கான தகுதியைத் தீர்மானிக்கக் கூடிய உண்மையான, அறிவியல் பூர்வமான அளவுகோல்.
மாறாக, "நுழைவுத் தேர்வு" என்ற ஒன்றை இடையில் புகுத்தினால், அடிப்படைப் பாடப் புரிதல் இல்லாதவர்கள் கூடக் குறுக்கு வழியில் தேர்வு பெற்று உயர்கல்வி வாய்ப்பைப் பெற முடியும். இன்று அம்பலமாகியுள்ள வினாத்தாள் கசிவு மோசடிகள் உணர்த்துவது என்ன? லட்சக்கணக்கில் பணம் கொடுத்துக் கேள்வித்தாள்களை முன்கூட்டியே வாங்கி, அந்தக் குறிப்பிட்ட கேள்விகளுக்கு மட்டும் விடைகளை மனப்பாடம் செய்து அதிக மதிப்பெண் பெறுவது சாத்தியமாகிறது. எங்கெல்லாம் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றனவோ, அங்கெல்லாம் வினாத்தாள் விற்பனை மோசடிகளும், பயிற்சி மைய மாஃபியாக்களுமே கோலோச்சுகின்றன.
எனவே, உண்மையிலேயே திறமையான, உழைக்கும் வர்க்கச் சமூகத்தின் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு உயர் மருத்துவக் கல்வி வாய்ப்பை வழங்குவது பிளஸ் 2 மதிப்பெண்கள் மட்டுமே அன்றி, மோசடிகளின் பிறப்பிடமான நுழைவுத் தேர்வுகள் அல்ல.
7. மாநிலப் பட்டியலுக்கு மாற வேண்டும் கல்வி உரிமை
மாநிலங்களின் மொழி, பண்பாடு, மற்றும் உள்ளூர்ச் சமூக யதார்த்தங்களுக்கு ஏற்பக் கல்வித் திட்டத்தை வடிவமைக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே உண்டு. உழைக்கும் மக்களின் பிள்ளைகளுக்குச் சமமான உயர்கல்வி வாய்ப்பு கிடைக்க வேண்டும் எனில், கல்வி மீண்டும் முழுமையாக மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். மாநிலப் பாடத்திட்டத்தின் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்.
முடிவுரை
நீட் தேர்வில் சில சீர்திருத்தங்களைச் செய்வதால் பிரச்சனை தீர்ந்துவிடாது. தேசியத் தேர்வு முகமையை (NTA) கலைப்பதோ, கமிட்டிகளை அமைப்பதோ இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்காது. பிரச்சனை நீட் தேர்வின் செயல்பாட்டில் இல்லை; அதன் கட்டமைப்பிலேயே உள்ளது.
எனவே: மருத்துவ மாணவர் சேர்க்கையை மீண்டும் மாநில அரசுகளின் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படைக்கே மாற்ற வேண்டும்; கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்; மாநிலங்களின் நீட் விலக்கு மசோதாக்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
கல்வியை சந்தைப் பொருளாகவும், "தகுதி" என்ற பெயரில் சமூக நீதியை மறுக்கும் கருவியாகவும் மாற்றும் நீட் முறை ஒழிக்கப்பட வேண்டும். டெல்லியிலும் தமிழகத்திலும் மாணவர்கள் நடத்தும் போராட்டம், ஒரு தேர்வுக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல; கல்வி உரிமை, சமூக நீதி, கூட்டாட்சி ஆகியவற்றைக் காக்கும் ஜனநாயகப் போராட்டமாகும்.
தமிழ்மணி

.jpeg)
No comments:
Post a Comment