Showing posts with label ஈஷா. Show all posts
Showing posts with label ஈஷா. Show all posts

Sunday, 19 April 2020

கரோனாவும் இஸ்லாமியர்களும்: பீலாவுக்கு ஆப்பு வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்!


துபாயிலிருந்து விமானம் மூலம் இந்தியா வந்த இராணிப்பேட்டை மாவட்டம், கீழ்விசாரத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவருக்கு கரோனா இருப்பது (tested positive) வாலாசாப்பேட்டை அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் கண்டறிப்பட்டதாக மார்ச் 26 ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது.

ஒருவருக்குக் கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானால், 8 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் அனைவருக்கும் கரோனா இருக்கிறதா என்பது சோதித்தறியப்படும் என்றும் சொல்கிறார்கள். அப்படியானால் கீழ்விசாரத்தைச் சுற்றி 8 கிலோ மீட்டருக்குள் ஆற்காடு, இராணிப்பேட்டை, வாலாசாப்பேட்டை, மேல்விசாரம் ஆகிய நான்கு நகராட்சிகள் மற்றும் ஏராளமான கிராமங்களில் இலட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் அனைவரிடமும் கரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டதா? அந்த இளைஞர் மூலம் இந்த வட்டாரத்தில் கரோனா தொற்று ஏற்பட்டிருக்குமா என்பதைக் கண்டறிய வேண்டாமா?

கரோனாவைக் கண்டறிய தற்போது தமிழகத்தில் உள்ள மொத்த ஆய்வுக் கூடங்கள் - 34. அதில் அரசு - 25, தனியார் - 9. இவை அதிவிரைவு ஆய்வு (rapid test) முறைக் கூடங்கள் அல்ல. 6 மணி நேரம் முதல் 2 நாட்கள் வரை எடுத்துக் கொள்ளும் ஆய்வுமுறைகள். 18.04.2020 அன்றுதான் அதிவிரைவு அதாவது, அரை மணி நேரத்தில் கரோனா இருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்கான கருவியை சீனாவிலிருந்து இறக்குமதி செய்து ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.

ஆனால், ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானோருக்கு கரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதாக இதுவரை தமிழக அரசு அறிக்கை வாசித்து வந்தது. உதாரணமாக, 13.04.2020 அன்று மட்டும் 98 பேருக்குக் கரோனா கண்டறியப்பட்டதாகக் கூறுகிறது அரசு. அதில் 91 பேர் அதே மூலத்தைச் (same source) சேர்ந்தவர்கள் என்றும் பீலா விட்டார்கள். நம்முடைய ஆய்வு முறைகளுக்கும் வெளியிடப்படும் முடிவுகளுக்கும் இடைவெளி அதிகம் என்பது மட்டும் புரிகிறது.

தமிழகக் களநிலவரம்

தமிழகத்தில் 18.04.2020 வரை கரோனா நோய்த்தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டவர்கள் 1372 பேர். இதுவரை சிகிச்சை மூலம் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 365 பேர். சிகிச்சை பலனளிக்காமல் இறந்தவர்கள் 15 பேர்.

கரோனாவுக்கு இதுவரை மருந்து எதுவுமே கண்டறியப்படவில்லை என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே மற்றொரு பக்கம் சிகிச்சையின் மூலம் குணமடைந்து வீடு திரும்பினார்கள் என்கிறது அரசு. குணமடைந்தவர்களுக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது? மருந்துகள் ஏதேனும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டதா? அப்படி கொடுக்கப்பட்டிருந்தால் அவை என்னென்ன? மருந்து இல்லாமல் தனிமைப் படுத்தல் மற்றும் உணவு முறையால்தான் குணமடைந்தார்களா? அப்படியானால் அவர்களுடைய உணவு முறைதான் (regimen) என்ன? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.

18.04.2020 அன்று ஒரே நாளில் மட்டும் 82 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர். அப்படியானால் கரோனாவிற்கு நம்மிடம் அதிநவீன சிகிச்சை முறை இருக்கிறதா? அப்படி இருந்தால் இந்த அனுபவத்தை உலக நாடுகளுக்குத் தெரிவித்தால் அவர்களும் பயனடைவார்களே? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

கேரளாவில் முதல் கரோனா

சீனாவின் வூகான் மாநிலத்திலிருந்து கேரளா திரும்பிய மாணவர் ஒருவருக்கு கரோனா இருப்பது ஜனவரி 20 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி மாதமே கரோனா இந்தியாவிற்குள் வந்துவிட்ட பிறகு பல வெளிநாட்டினர் கலந்து கொண்ட கோவை ஈஷா மையத்தில் பிப்ரவரி 21 ஆம் தேதி மகாசிவராத்திரி விழா நடைபெற எப்படி அனுமதித்தார்கள்? குஜராத் அகமதாபாத்தில் பிப்ரவரி 24, 25 தேதிகளில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்து கொண்ட விழாவை எப்படி நடத்தினார்கள்? மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட வெளிநாட்டினருக்கு கரோனா இருக்கிறதா எனச் சோதனை செய்தார்களா? அவ்வாறு சோதனை செய்யப்பட்டதாக எந்த ஆதாரமும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் மூலமாகக்கூட ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலேயே இந்தியாவில் கரோனா பெருமளவில் பரவி இருக்கலாமல்லவா? மேலும் ஊரடங்கு அறிவித்த பிறகு, அவர்கள் கூற்றுப்படி மார்ச் 11 முதல் 15 வரை டெல்லியில் நடைபெற்ற தப்லீக் மாநாட்டின் மூலம்தான் இந்தியாவில் கரோனா பரவியது என ஒரு பக்கம் குற்றம் சாட்டிக் கொண்டே, ஏப்ரல் 2 ஆம் தேதி இராமநவமி அன்று அயோத்தியில் இராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழாவை ஏன் நடத்தினார்கள்? இதில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கானோர் மூலம் கரோனா பரவி இருக்காதா?

ஜனவரி 20 ஆம் தேதியே இந்தியாவிற்குள் கரோனா நுழைந்து விட்டது. தப்லீக் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே கர்நாடகாவில் முதியவர் ஒருவர் இறந்துள்ளார். லண்டலிருந்து அரியானாவுக்கு வந்த 23 வயதுப் பெண் ஒருவருக்கு கரோனா இருப்பது மார்ச் 15 ஆம் தேதி உறுதி செய்யப்படுகிறது. அன்றைய தேதியில் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 170 பேர், இறந்தவர்கள் 3 பேர். அப்படியானால் தப்லீக் மாநாடு முடிந்து அதில் கலந்து கொண்டவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு முன்பாகவே கரோனா இந்தியாவில் பரவிவிட்டது என்பதுதானே உண்மை.

தமிழகத்தில் கரோனா பரவலுக்கு இஸ்லாமியர்கள் காரணமா?

டெல்லி தப்லீக் மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள் மூலமாகத்தான் தமிழகத்தில் கரோனா பரவியதாக ஒவ்வொரு நாளும் பீலா விடுகிறார்கள். மார்ச் 15-க்கு முன்பாக வெளிநாடுகளிலிருந்து யாருமே தமிழ் நாட்டுக்கு வரவில்லையா? ஜனவரி 19 லேயே அமெரிக்காவில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. அதன் பிறகு உலகிலேயே கரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது அமெரிக்கா. நமது கேள்வி இதுதான். ஜனவரி 19 க்குப் பிறகு, அதாவது அமெரிக்காவில் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட தேதியிலிருந்து மார்ச் 15 வரை அந்நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு யாருமே வரவில்லையா? பிற நாடுகளிலிருந்தும் ஒருவர்கூட வரவில்லையா?

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து ஏராளமானோர் வந்துள்ளனர் என்பதுதான் உண்மை. அப்படி வந்தவர்களை சோதனைக்குப் பிறகுதான் தமிழ்நாட்டிற்குள் அனுமதித்தார்களா? வந்தவர்கள் கரோனாவையும் கொண்டு வந்திருக்க மாட்டார்களா? இவற்றை எல்லாம் மூடி மறைத்துவிட்டு மார்ச் 15 க்குப் பிறகு டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்களால்தான் தமிழகத்தில் கரோனா பரவி வருகிறது என்று பேசுவதும், கரோனா அதிகரித்து வருவதால்தான் ஊரடங்கை நீட்டிக்க வேண்டி உள்ளது என்கிற கருத்தை உருவாக்குவதும் யாரைத் திருப்திப் படுத்த? உண்மை என்னவென்றால் மார்ச் 7 ஆம் தேதியே தமிழகத்தில் முதல் கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லிக்குச் சென்று வந்தவர்கள் மொத்தம் எத்தனை பேர் என்பதை உங்களால் கண்டறிய முடியவில்லையா? டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்ததாக, தாமாக முன்வந்த 1103 பேரில் 110 பேருக்கு மட்டுமே கரோனா இருப்பதாக ஏப்ரல் 1 அன்று அறிவித்த அரசு, அதே மூலத்தைச் (same source) சேர்ந்த 91 பேருக்கு கரோனா இருப்பதாக ஏப்ரல் 13 அன்று அறிவிக்கிறது. அப்படியானால், டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்துவதில் தமிழகம் தோற்று விட்டதா? இதில் எங்கோ இடிக்கிறது என்பது மட்டும் புரிகிறது.

மேற்கண்ட கேள்விகளுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் தமிழக சுகாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். “வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் 95 சதவீதம் பேர் எவ்வித அறிகுறிகளும் இல்லாதவர்கள்” என்கிறார் அமைச்சர். (செய்தி ஆதாரம் - இந்து தமிழ் திசை, வேலூர், 19.04.2020). அதாவது, தொற்று இருப்பதாகக் கூறப்படும் 1372 பேரில் 69 பேருக்கு மட்டுமே கரோனா இருப்பதாகக் கூறுகிறார். அப்படியானால் டெல்லி தப்லீக் மாநாட்டுக்குச் சென்று வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்குக் கரோனாத் தொற்று இருப்பதாகவும், அவர்களால்தான் தமிழகத்தில் கரோனா பரவி வருவதாகவும் இதுவரை கூறப்பட்டவை அனைத்தும் பீலாதான் என்பது உறுதியாகி விட்டது.

தொடரும் ஊரடங்கு

அன்றாட வருவாயைக் கொண்டு வாழ்க்கை நடத்தும் லட்சக் கணக்கானோர் ஒரு வேலை உணவுக்கே வழி இன்றி பரிதவிக்கின்றனர். ஏற்கனவோ உதவி செய்வோர் கரோனா விதிமுறைகளை சரியாக கடைபிடிக்கிறார்களா என்பதை மட்டும் சோதித்தறிவதற்குப் பதிலாக, தனிப்பட்ட முறையில் யாரும் உதவியே செய்யக் கூடாது என்று சொல்வதன் மூலம் ஏழை எளிய மக்களைச் சாவச் சொல்கிறதா அரசு? உதவி செய்ய விரும்புவோர் அரசு மூலமாகத்தான் செய்ய வேண்டும் என்கிறார்கள். ஊரடங்கு காலத்தில் வறுமையில் வாடுவோர் பற்றிய விவரங்களை அரசு கணக்கெடுத்துள்ளதா? இரண்டாம் கட்ட ஊரடங்கின் போதாவது பசியால் வாடுவோரின் வாட்டத்தைப் போக்க ஏதாவது திட்டம் வைத்திருக்கிறதா அரசு? அரசே உதவி செய்தால் மற்றவர்கள் உதவி செய்ய வேண்டிய அவசியம் இருக்காதே? உதவி செய்வதற்குக்கூட நீதிமன்றத்தை நாடவேண்டிய அவல நிலையில் தமிழகம் உள்ளது.

“விழித்திருங்கள், விலகி இருங்கள், வீட்டில் இருங்கள்” என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு மக்களை வெளியே வரவழைப்பது எப்படி சரியாக இருக்க முடியும்? காலை நேரத்தில் பல நகரங்களில் அத்தியாவசியப் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதில் ரேசன் கடைகளில் ஆயிரம் ரூபாய்க்காக கூட்டப்படும் கூட்டம் தனி. பொருட்கள் கிடைக்காமல் போய்விடுமோ என்கிற அச்சம்தான் இதற்கு மிக முக்கியக் காரணம். எனவே அத்தியாவசியப் பொருட்களை வீடு வீடாகச் சென்று ஏன் வழங்கக் கூடாது? அதற்கு ஏன் அரசு முயற்சிக்கவில்லை? இரண்டாம் கட்ட ஊரடங்கின் போது, வரும் மே 3 வரையிலாவது இந்த முறையைப் பின்பற்றினால் புதிதாக நோய்த் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பை பெருமளவில் கட்டுப்படுத்த முடியும். அதன் பிறகு ஊரடங்கை நீட்டிப்பதற்கான அவசியமும் இருக்காது. 

ஆனால் கடந்த இரண்டு நாட்களாக, "காய்கறிகள் வீடு தேடி வரும், மளிகைப் பொருட்களை ஆப்ஸ் மூலமாக வாங்கிக் கொள்ளுங்கள்" என விளம்பரம் செய்கின்றனர். ஆப்ஸை பதிவிறக்கம் செய்து முயற்சி செய்தால் நம்மை வெளியே துரத்துகிறது. கடைகளும் திறந்திருக்காது. ஆப்ஸூம் வேலைக்கு அகாது என்றால் மளிகைக்கு என்ன செய்வது? அவற்றையும் - அதிலும் குறிப்பாக - அத்தியாவசியமானவற்றை மட்டும், காய்கறிகளைப் போல குடியிருப்புப் பகுதிகளுக்கு எடுத்துச் சென்றால் மக்கள் வெளியில் வருவதை முற்றிலுமாகத் தவிர்க்கலாமே? 

எனவே, இஸ்லாமியர்கள் மீது பழி சுமத்துவதைவிட்டுவிட்டு கரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்குவதே சாலச்சிறந்தது. இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புக்குப் பின்னால் CAA, NPR, NRC எதிர்ப்புப் போராட்டங்கள் நம் கண்முன்னே வந்து போவதைத் தவிர்க்கமுடியவில்லை. 

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்



Tuesday, 20 August 2013

மூத்திரக்காடு!

அது ஓங்கி வளர்ந்த பெருங்காடு. அந்தக் காட்டிற்குள் நுழையும் போது நம்மை அறியாமலேயே நமது கண்கள் விரிந்து விடும். வகை வகையான மரங்கள், செடிகள், கொடிகள், புற்கள் என பரந்து விரிந்த காட்டைக் காண நாலா பக்கமும் நம் கண்கள் சுழலும். பார்த்ததையே மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும். ஆனால் இந்தக் காட்டை பார்க்கவே நமது கண்கள் கூசும். பாதி மூடிக் கொண்டு ஓரக்கண்ணால், ஒற்றைப் பார்வையுடன்தான் இந்தக் காட்டில் நுழைய முடியும். அக்கம் பக்கம் எட்டிப் பார்ப்பது அபாயகரமானது.
அந்தக் காட்டில் சிறகடிக்கும் பறவைகளும், வண்ண வண்ணப் பூச்சிகளும் எழுப்பும் ரீங்கார ஓசைகள் நம் காது மடல்களை இதமாய் வருடிச் செல்லும். பூத்துக் குலுங்கும் மலர்களின் வாசத்தை உள்ளிழுக்க நாசித் துவாரம் போதாது என்பதால் நம்மை அறியாமலேயே வாய் பிளந்து நிற்போம். உடன் வந்தவர் குரல் கொடுக்கும் வரை எத்தனை நேரம் வாய் பிளந்து நின்றோம் என்பதே தெரியாது. ஆனால் இந்தக் காட்டில் நுழையும் போதே கட்டை விரலும், ஆட்காட்டி விரலும் கூட்டணி அமைத்துக் கொண்டு மூக்குத் துளையை அடைக்க முற்படும் போதே பற்கள் இறுகி தொண்டைக் குழியும் ஒட்டிக் கொள்ளும். இந்தக் காட்டின் வாசம் மூக்கைத் துளைத்து குடலைப் புரட்டி வாந்தி எடுப்பதற்குள் காட்டை விட்டு வெளியேறி விட வேண்டும். இல்லை எனில் எந்த உறவுகளைப் பார்க்கச் சென்றோமோ அந்த உறவுகள் நம்மைப் பார்க்க மருத்துவ மனை நோக்கி வர நேரிடும்.
அந்தக் காட்டில் முட்களும், கற்களும் நமது கால்களை பதம் பார்த்து விடலாம் என்பதால்தான் காலணி தேவைப்படுகிறது. இல்லை எனில் வெறுங்காலால் நடப்பதே சுகமானது. அதுவும் ஈர மண்ணில் நடக்கும் போது பாலில் ஊறிய பிஸ்கட்டின் மென்மையை உணர முடியும். ஆனால் இந்தக் காட்டில் காலணி இல்லாமல் நடக்க முயற்சிப்பது தற்கொலை முயற்சியே. காலணி இருந்தால் கூட சில நேரங்களில் ஆளையே கவிழ்த்து விடும். திருடர்கள் ஜாக்கிரதை என்பதைப் போல காலணிகள் ஜாக்கிரதை என எழுதி வைப்பது நலம் பயக்கலாம்.
அந்தக் காட்டில் வழுக்கி விழுந்தால் மண்ணைத் தட்டி விட்டு பயணத்தைத் தொடரலாம். ஆனால் இந்தக் காட்டில் வழுக்கி விழுந்தால் பயணம் அதோ கதிதான்.
அந்தக் காட்டில் புலி, சிங்கம், கரடி, யானை, குரங்கு, முயல், பன்றி, மான், பாம்பு என வித விதமான மிருகங்கள் - விலங்குகள் உண்டு. அவற்றில் சில ஆபத்தானவை என்றாலும் ஆயுதம் கொண்டு நம்மை தற்காத்துக் கொள்ளலாம். இந்தக் காட்டிலும் மிருகங்கள் உண்டு. மஞ்சளாய், வெள்ளையாய் நெளியும் கொழுத்த புழுக்களை பார்த்த மாத்திரத்திலேயே நம் நெற்றிப் பொட்டு தானே சுறுங்கும். நம் உதட்டின் ஈரத்தை ஈர்ப்பதற்கு படை எடுக்க அணி வகுத்து நிற்கும் பருத்த ஈக்களும், தடித்த கொசுக்களும் நம்மை அச்சுறுத்தும். இந்தக் காட்டு மிருகங்கள் வடிவத்தில் சிறிதென்றாலும் சற்று நேரத்தில் நம்மை கிலி கொள்ள வைத்து விடும்.
அந்தக் காட்டில் மிருகங்கள் பெய்யும் மூத்திரத்தால் காடு செழிக்கும். மரங்கள் வான் முட்ட ஓங்கி உயர்ந்து வளரும். ஆனால் இந்தக் காட்டில் மனித(மிருகங்கள்)ர்கள் பெய்யும் மூத்திரத்தால் தாவரங்கள் பட்டுப் போகும். நெடிதுயர்ந்த இலுப்ப மரத்தின் வேர் நூறு அடி ஆழத்தில் ஒளிந்திருந்தாலும் தேடிப் பிடித்து கருவறுக்கும் ஆற்றல் மனித மூத்திரத்திற்கு உண்டு. வீட்டின் கேட்டையும், நாட்டின் எல்லையையும் காக்கும் இரும்புக் கம்பிகளே இத்துப் போகும் போது காங்கிரீட் காடுகள் மட்டும் தப்புமா என்ன? 
அந்தக் காட்டில் வானம் பொழிந்தால் எட்டுத் திக்கும் மண் வாசம் வீசும். இந்தக் காட்டில் மண்ணைத் தொடும் முன் ஒரு வாடையும், மண்ணைத் தொட்டபின் மற்றொரு வாடையும், நனைந்த மண் காய்ந்த பிறகு புதியதொரு வாடையும், குட்டையில் தேங்கி புழுக்கள் நெளியும் போது மற்றொரு வாடையும் என மூத்திரத்திற்குத்தான் எத்தனை எத்தனை வாடைகள். பேஷினோடு இணைக்கப்பட்ட குழாய் இல்லாததால் பாதி மூத்திரம் நம் முழங்காலை நனைத்திருப்பது அப்போது தெரியாது. பேண்ட் காய்ந்த பிறகு வரும் வாடையைத் தேடும் போதுதான் நம் முழங்கால் நனைந்தது நினைவுக்கு வரும். நினைவாற்றல் அற்றவர்களையும் ஆற்றல் உள்ளவர்களாக மாற்றும் வல்லமை இந்த வாடைக்கு உண்டு.
அந்தக் காடுகளுக்குள் நுழையக் கட்டணம் ஏதுமில்லை. பயணச் செலவு மட்டும்தான். ஆனால் இந்தக் காடுகளே கட்டணக் காடுகள்தானே! இந்தக் காடுகளைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குள் ஆடை நனைந்து விடுமோ என்கிற அச்சத்தில் பேருந்திலிருந்து இறங்கி அவசர அவசரமாக அருகில் உள்ள சுவற்றின் ஓரமாய் ஒதுங்கினால் “மிருகங்கள் மட்டுமே இங்கே….- என்கிற வரவேற்பு அர்ச்சனையால் வெளியேர முனைந்த மூத்திரம் கூட வற்றி விடுகிறது. ஆத்திரத்தை அடக்கலாம். ஆனால் மூத்திரத்தை அடக்க முடியுமோ! என்ன செய்ய? இதுதானே இந்தியா!
ஏழை – நடுத்தரவாசிகளே இந்தக் காடுகளில் அடிக்கடி சிக்குபவர்கள். மேட்டுக் குடி மகிழுந்துக்காரர்கள் இந்தக் காட்டில் கால் வைப்பது அரிது என்பதால் இதன் அருமை பெருமைகள் அவர்களுக்கு அவ்வளவாகத் தெரியாது; புரியாது.
ஆண்களுக்கு கூச்சமில்லை. எங்கு வேண்டுமானாலும் மூத்திரம் போவார்கள். நின்றபடியே போவதால் மூத்திரத் தொற்று (urinary infection) தாக்குதல் நடத்த கால தாமதமாகலாம். ஆனால் பெண்களின் பாடோ பெரும் பாடு. இவர்கள் உட்கார்ந்தே போவதால் மூத்திரத் தொற்றின் அதிரடித் தாக்குதல் உடனே தொடங்கும்.  
அந்தக் காடுகள் முதுமலை, ஜவ்வாது மலை, கல்ராயன் மலை, சேர்வராயன் மலை, கவுத்தி மலை, நீலகிரி - ஏலகிரி மலை என தமிழகத்தில் தொடங்கி ஏழுமலை, தண்டகாரண்யா, நியாம்கிரி, விந்திய - சாத்பூரா என படர்ந்து விரிந்து இமயமலையாய் உயர்ந்து நிற்கின்றன. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பேருந்து நிறுத்தங்கள் - நிலையங்கள் என கன்யாகுமரி முதல் காசுமீரம் வரை நீண்ட நெடிய அடர்ந்த பெருங்காடுகள் இந்தக் காடுகள். தொடர் வண்டி நிலையங்கள், விமான நிலையங்கள், திரையரங்குகள் என இந்தக் காடுகள் பல்கிப் பெருகவேச் செய்கின்றன.
அந்தக் காடுகளிலிருந்து மனிதர்களை விரட்டுகிறார்கள் மன்மோகனின் ஏஜெண்டுகள். கோடிகளைச் சுருட்ட அவர்களுக்குத் தேவை கனிம வளங்கள். ஆனால் இந்தக் காடுகளுக்கோ மனிதர்களை அழைக்கிறார்கள் ஆளும் கட்சியின் ஏஜெண்டுகள். நமது கோவணத்திலிருந்தே இவர்கள் இலட்சங்களைப் பார்ப்பவர்களாயிற்றே!.
இத்தனை சிறப்பு வாய்ந்த இந்தக் காடுகளில் சிறந்ததைத் தேர்வு செய்ய நடுவர்களையும் தாண்டி சிறப்பு வல்லுனர்களை நாடினாலும் போட்டி மிகக் கடுமையானது என்பதால் பொது வாக்கெடுப்புக்குச் செல்வதே சாலச் சிறந்தது. இன்றைய நிலவரப்படி எட்டுத் திக்கும் நாற்றமடித்து பயணிகளை திக்கு முக்காடச் செய்யும் வேலூர் பேருந்து நிலையக் காடுதான் தமிழகத்தின் முன்னணி மூத்திரக் காடாகத் திகழ்வதாக பயணிகள் கருதுகிறார்கள். சுவாசச் காற்றை நுரையீரலுக்குள் அடைத்து வைக்கும் மூச்சுப் பயிற்சி கலையை கற்க வேண்டுமா? ஒரு முறை வேலூர் மூத்திரக்காட்டிற்கு விஜயம் செய்யுங்கள். ஈஷா யோகிகளைத் தேடி நீங்கள் வெள்ளியங்கிரி போக வேண்டிய அவசியமிருக்காது.
நிலத்தடி நீரைக் கொண்டுதான் அவ்வப் பொழுதாவது இந்தக் காடுகளைக் கழுவுகிறார்கள். அந்த நீருக்கும் இனி ‘ரேட்டு’ வைக்கப் போகிறது தேசிய நீர்க் கொள்கை. எலவசனூர் கோட்டையிலேயே இப்போது ஆறு ரூபாய் எனில் இனி கட்டணம் இரட்டிப்பானால் எவனுக்கய்யா மூத்திரம் வெளியே வரும்? தேசிய நீர்க் கொள்கையால் இனி நமது வீடுகளிலும் இந்தக் காடுகள் முளைக்கப் போகின்றன. குடிக்கவே தண்ணீர் இல்லாத போது மூத்திரத்தையா அலச முடியும்?
இந்தக் காட்டில் பெய்யும் மழையில் 95% தண்ணீர் போக மீதி யூரியா, குளோரைடு, சோடியம், பொட்டாசியம் என கனிமங்கள் உண்டு. இக்கனிமங்களை பிரித்தெடுத்தால் தோல் தொழிற்சாலைகள் (tanning), நெசவாலைகள் (textiles), வெடி மருந்து (gun powder) ஆலைகளுக்குத் தேவையான நீரை இந்தக் காடுகளிலிருந்தும் பெற முடியும் என அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். மாணாக்கர்களுக்கு மூத்திர மேலாண்மை (Urine Management) குறித்து வகுப்பெடுக்க கலாம்கள் வருவார்களா? 

தொடர்புடைய பதிவுகள்: